பதிவு செய்த நாள்
15
ஏப்
2013
10:04
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில், சித்திரை திருவிழா (ஏப்.,14ல்)கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சிகளான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் ஏப்.,23, ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சி ஏப்.,25ல் நடக்கிறது. நேற்று காலை ஆடி வீதிகளில் வழியாக சுவாமி சன்னதி கொடி மரத்திற்கு யானை மீது கொடி கொண்டுவரப்பட்டது. பச்சை பட்டில் அம்மனும், வெண்பட்டில் சுவாமியும் வீற்றிருக்க, சங்கர் பட்டர் தலைமையில் ரிஷப யாகம் மற்றும் பூஜைகள் நடந்தன. காலை 10.47 மணிக்கு கொடியேற்றப்பட்டு, அபிஷேகம், தீபாராதனைகள் நடத்தப்பட்டன. வேத மந்திரங்கள், திருமுறைபாராயணம் பாடப்பட்டது. கொடியேற்றத்தை முன்னிட்டு, ரூ. 3 லட்சம் செலவில் கம்பத்தடி மண்டபம், அம்மன், சுவாமி சன்னதிகள் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
பின், கோயில் இரண்டாம் பிரகாரத்தில் அம்மனும், சுவாமியும் வலம் வந்து, குலாலர் மண்டபத்தில் எழுந்தருளினர். இரவு 7 மணிக்கு மேல் சுவாமி கற்பகவிருட்சம் வாகனத்திலும், அம்மன் சிம்ம வாகனத்திலும் மாசிவீதிகளில் உலா வந்தனர். தமிழ் புத்தாண்டையொட்டி, நேற்று அம்மனுக்கு வைரக்கிரீடம், சுவாமிக்கு வைர நெற்றிப்பட்டை சாத்தப்பட்டிருந்தது.
ஏப்.,23ல் திருக்கல்யாணம்: ஏப்.,21 இரவு 7.35 மணி முதல் 7.59 மணிக்குள் அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது. ஏப்.,22ல் மதுரை வடக்குமாசிவீதி, கீழமாசிவீதி சந்திப்பில், லாலாஸ்ரீ ரங்கசத்திரம் திருக்கண் மண்டபத்தில் அம்மனின் திக்குவிஜயம் நடக்கிறது. ஏப்.,25ல் ஆற்றில் இறங்குதல்: ஏப்.,23ல் காலை 8.17 மணி முதல் 8.41 மணிக்குள் திருகல்யாணம் நடக்கிறது. அன்றிரவு அம்மன் புஷ்ப பல்லக்கில் மாசி வீதிகளில் உலா வருகிறார். ஏப்.,24ல் தேரோட்டமும், அன்று காலை மதுரை மூன்றுமாவடியில் கள்ளழகரை வரவேற்கும் எதிர்சேவையும் நடக்கிறது. ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காக, ஏப்.,23ல் மாலை 5 மணிக்கு கள்ளழகர் வேடத்தில், தங்கப்பல்லக்கில் மதுரைக்கு கோயிலில் இருந்து அழகர் புறப்படுகிறார். ஏப்.,25ல் தங்க குதிரை வாகனத்தில் புறப்படும் அழகர், காலை 7.30 மணிக்குள், வைகை ஆற்றில் இறங்குகிறார். அங்கிருந்து வண்டியூர் செல்கிறார். அழகர்கோவிலில் இருந்து புறப்படும் கள்ளழகர், வண்டியூர் வீரராகவ பெருமாள் கோயில் செல்லும் வரை, பக்தர்களின் மண்டகப்படிகளில் எழுந்தருளுகிறார்.
ஏப்.,20 ல் வைகை அணை திறப்பு: மதுரை சித்திரை திருவிழாவிற்காக, வைகை அணையில் இருந்து இம்மாதம் 20ம் தேதி தண்ணீர் திறக்கப்படும், என பொதுப் பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்தாண்டில் தென்மேற்கு, வடகிழக்கு பருவ மழை பொய்த்ததால், வைகை அணைநீர் மட்டம், நவ.,.29 ல் 59.19 அடி வரை மட்டுமே உயர்ந்தது. அணை உயரம் 71 அடி. குடிநீருக்கு தேவை என்பதால், பாசனத்திற்கு நீர் திறக்கப்படவில்லை. மதுரை, சேடபட்டி-ஆண்டிபட்டி குடிநீருக்காக, வினாடிக்கு 60 கன அடி வீதம் தொடர்ந்து தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால், அணை நீர் மட்டம் நாளுக்கு நாள் குறைந்து, நேற்று காலை 45.60 அடியானது. நீர் வரத்து இல்லை. அணையின் நீர் இருப்பை பொறுத்து, ஆண்டுதோறும் மதுரை சித்திரை திருவிழாவுக்கு, குறிப்பிட்ட அளவு தண்ணீர் திறக்கப்படும். இந்த ஆண்டு ஏப்., 25ல், கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குகிறார். இந்த நிகழ்ச்சிக்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். அணையில் இருந்து,4 அல்லது 5 நாட்களுக்கு முன்பு தண்ணீர் திறந்தால் தான், ஏப்., 25 க்குள் தண்ணீர் மதுரை சென்றடையும். பாதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது: சித்திரை திருவிழாவுக்கு, அணையில் தண்ணீர் திறப்பது குறித்து,ஓரிரு நாட்களில் அரசு உத்தரவு கிடைக்கும். ஏப்., 20 ல் அணை திறக்க வாய்ப்புள்ளது,என்றனர்.