பக்தர்களிடம் நடக்குது பகல் கொள்ளை கண்டுகொள்ளாத அழகர்கோவில் நிர்வாகம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஏப் 2013 10:04
அழகர்கோவில்: அழகர்கோவிலில் அர்ச்சனை தட்டுகளுக்கு, கூடுதல் விலைக்கு விற்று சில கடைக்காரர்கள் அடாவடி வசூலில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது.தமிழ் புத்தாண்டான நேற்று அதிகாலையே ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்தனர். நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து மலை மீது உள்ள ராக்காயி அம்மன் கோயிலுக்கு சென்று தீர்த்தமாடி, ராக்காயி அம்மனை தரிசித்தனர். பின், சோலைமலை முருகன் கோயிலில் தரிசனம் செய்தனர்.அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோயிலில் உள்ள கடைகளில் அர்ச்சனை தட்டு வாங்கினர். கூட்டத்தை பயன்படுத்திக் கொண்ட கடைக்காரர்கள் பக்தர்கள் வாங்கும் அர்ச்சனை தட்டிற்கு ரூ.90 ரூபாய் என கூடுதல் விலை வைத்து விற்கின்றனர். கோயில் தரப்பில் அதிகபட்சம் ரூ.50 வரை மட்டுமே வசூலிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால், கடைக்காரர்களிடம் பக்தர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கூறியதாவது: ஒரு தேங்காய், பத்தி, பன்னீர் பாட்டில் கொண்ட தட்டு வெளியில் ரூ.35க்கு விற்கப்படுகிறது. கோயிலில் அதையே ரூ. 90க்கு விற்கின்றனர். கேட்டால், "கோயிலில் கடை வைக்க ஆண்டிற்கு ரூ.25 லட்சம் கட்ட வேண்டி உள்ளது. தவிர அதிகாரிகள், பணியாளர்களுக்கு அவ்வப்போது "கப்பம் கட்ட வேண்டி உள்ளது என்கின்றனர். இதை கோயில் நிர்வாகமும் கண்டுகொள்வதில்லை. கோயிலுக்கு வரும் பக்தர்கள் பாவம் செய்தவர்களா? என்றனர்.