திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி பிறவிமருந்தீசர் திருக்கோவில் சித்திரை திருவிழா கொடியிறக்கத்துடன் நிறைவு பெற்று சர்வபிராயசித்த அபிஷேகம் நடந்தது. வில்வாரண்ய ஷேத்திரம் என அழைக்கப்படும் திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீசர் கோவில் சித்திரை திருவிழா கடந்த மாதம் எட்டாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 22 நாட்கள் நடந்த திருவிழா நேற்று முன்தினம் கொடியிறக்கப்பட்டது. ஸ்வாமி பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்து பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி, புனித நீர் கொண்டு கொடிமரம் சுத்தம் செய்யப்பட்டு நந்தி பெருமானின் கொடி இறக்கப்பட்டது. கொடியுடன் பஞ்சமூர்த்திகள் வீதியுலாவந்து விழா நிறைவு பெற்றது. நேற்று ருத்திரஹோமம் செய்யப்பட்டு ஸ்வாமி அம்பாளுக்கு பிராயசித்த அபிஷேகம் நடந்தது. விழா ஏற்பாடுகளை செயல்அலுவலர் நீதிமணி, கணக்கர் சீனிவாசன் ஆகியோர் செய்திருந்தனர். நேற்று மாலை ருத்ரஹோமம் நடந்து திருவிழா பிராயசித்த அபிஷேகத்துடன் நிறைவடைந்தது. சிறப்பு பூஜைகளை சிவாச்சாரியார்கள் பாலு, மகாதேவன், சோமாஸ்கந்தன் ஆகியோர் செய்திருந்தனர்.