பதிவு செய்த நாள்
02
மே
2013
10:05
கம்பம்: கம்பம் கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவில்,அலை,அலையாய் ஆயிரக்கணக்கான பக்தர்கள், அக்னி சட்டி எடுத்து வேண்டுதலை நிறைவேற்றினர்.கம்பம் கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கடந்த 16 முதல் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சமூகத்தவர்கள், மண்டகப்படி நடத்தி வருகின்றனர். விதவிதமான அலங்காரத்தில் அம்மன் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் வீதி உலா வந்து அருள் பாலிக்கிறார்.சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான, அக்னி சட்டி எடுக்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் மாலை துவங்கியது.ஒவ்வொன்றாக வந்த அக்னி சட்டிகள், நள்ளிரவில் நூற்றுக்கணக்காகி,அதிகாலை 4 மணிக்கு கோயில் வளாகம் முழுவதும் அக்னி சட்டிகளாக இருந்தது. அலகு குத்தியும், பால்குடம் எடுத்தும், பிறந்த குழந்தைகளை முதுகிலும், வயிற்றிலும் கட்டிக் கொண்டும் அக்னி சட்டி எடுத்து வந்தனர். கோயில் வளாகத்தில் உருண்டு கொடுத்தல், ஆயிரம் கண்பானை எடுத்தல், காவடி எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு வேண்டுதல்களை பக்தர்கள் நிறைவேற்றினர்.நேற்று காலை கொளுத்தும் வெயிலில், அக்னி சட்டி எடுக்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நீர்மோர் பந்தல்கள், அன்னதான நிகழ்ச்சிகள் நடைபெற்றது.நேற்று பிற்பகல் 3 மணிக்கு ஆயிரக்கணக்கான பெண்கள், முளைப்பாரி எடுத்து வந்தனர்.திரளான பக்தர்கள் அம்மனை தரிசிக்க,கோயிலுக்கு வந்து சென்றதால் கம்பம் நகரமே விழாக்கோலம் பூண்டது.