பதிவு செய்த நாள்
09
மே
2013
10:05
தேனி:வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலில், ஏராளமான பக்தர்கள் வந்ததால் நெரிசல் அதிகரித்தது. 4 கி.மீ., தூரத்திற்கு பொதுமக்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலில், நேற்று அதிகாலை 3 மணிக்கு கோயில் வீட்டில் இருந்து அம்மன் கோயிலுக்கு வந்து தங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று மாலை முதல் நள்ளிரவு வரை மட்டும் சில மணி நேரத்தில், 10 ஆயிரம் அக்னிசட்டிகள் குவிந்தன. 2 ஆயிரம் பேர் ஆயிரங்கண்பானை எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ஐயாயிரத்திற்கும் மேற்பட்டோர் மாவிளக்கு எடுத்தனர். மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆடு வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர். ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர், முக்கொம்புக்கு தண்ணீர் ஊற்றி வழிபாடு நடத்தினர். தவிர விழா திடலில், 4 கி.மீ., தூரத்திற்கும் நெரிசல் காணப்பட்டது. ஆடு வெட்ட பக்தர்கள் குவிந்ததால், குச்சனூர் விளக்கில் இருந்து, தப்புக்குண்டு விலக்கு வரை, 4 கி.மீ., நீளத்திற்கு ரோட்டின் இருபக்கமும் உள்ள தோட்டங்களில் பக்தர்களுக்கு இடம் ஒதுக்கித்தரப்பட்டது. இடத்தின் தன்மைக்கு ஏற்ப 10 அடி நீளம் 10 அடி அகலத்திற்கு, 6 மணி நேரத்திற்கு குறைந்த பட்சம் 400 ரூபாய் முதல் அதிகபட்சம் ஆயிரம் ரூபாய் வரை வசூலிக்கப்பட்டது. மண்டபங்களில் 4 மணி நேரத்திற்கு 2 ஆயிரம் ரூபாய் வாடகை வசூலிக்கப்பட்டது. ஒரே மண்டபத்தில், ஒரே நேரத்தில் நான்கு முதல் ஐந்து பேருக்கு இடம் ஒதுக்கப்பட்டது. இந்த குறிப்பிட்ட நேரத்திற்குள் பக்தர்கள் கிடா வெட்டி, விருந்து முடித்து விட வேண்டும். திண்டுக்கல்லில் இருந்து வந்து முகாமிட்டுள்ள தோல் வியாபாரிகள், வெட்டப்பட்ட ஆடுகளின் தோல்களை சேகரித்து சென்றனர்.