பதிவு செய்த நாள்
12
ஜூன்
2013
10:06
ஸ்ரீரங்கத்தில், பல்வேறு வசதிகளுடன், 1,000 பேர் தங்கும் வகையில், கட்டுமானப் பணி மேற்கொள்ளப்படும், "ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் அடுத்த தமிழ் புத்தாண்டில் செயல்படும் என, தெரிகிறது.
பக்தர்கள் விடுதி: ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில், அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜம்புகேஸ்வரர் கோவில் மற்றும் சமயபுரம் மாரியம்மன் கோவில் ஆகிய கோவில்களுக்கு வரும் பக்தர்கள் தங்க, ஸ்ரீரங்கத்தில் உள்ள, வெள்ளி திருமுத்தம் கிராமத்தில், 6,48 ஏக்கரில் நிலப்பரப்பில், 42.23 கோடி ரூபாயில் மதிப்பீட்டில், பக்தர்கள் விடுதி அமைய உள்ளது. இதில், உணவு விடுதி, தங்கும் அறைகள் என, பல வசதிகள் கொண்ட அறைகள் அமைய உள்ளன. மேலும், தனி நபர்கள் தங்கும் விடுதிகள், குடும்பத்துடன் தங்கும் விடுதிகள் என, இரண்டு வகையான அறைகள் அமைய உள்ளன. இதுதவிர, பொதுக் கழிப்பறைகள், கடைகள், முடி காணிக்கை செலுத்தும் அறைகள், 10க்கும் மேற்பட்ட தொகுப்புகளுடன் கூடிய, 20 கட்டடங்கள் அமைய உள்ளன. இதில், 1,000 பேர் தங்கும் வகையில், வடிவமைக்கப்பட்டுள்ளது.
அனுமதி: இத்திட்டத்தைச் செயல்படுத்த, தேவைப்படும் தொகையை, ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில், அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜம்புகேஸ்வரர் கோவில் மற்றும் சமயபுரம் மாரியம்மன் கோவில் ஆகிய கோவில்களில் இருந்து செலவிட, இந்து சமய அறநிலையத் துறைக்கு, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, திருச்சி மண்டல பொதுப்பணித் துறை கட்டட பிரிவு உயர் அதிகாரிகள் கூறுகையில், "தமிழ் புத்தாண்டில் திறக்கும் வகையில், கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன என்றனர்.