Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருக்களிற்றுப்படியார் பகுதி2
முதல் பக்கம் » திருக்களிற்றுப் படியார்
திருக்களிற்றுப்படியார் பகுதி1
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜூன்
2013
12:06

மெய்கண்ட சாத்திரங்கள் பதினான்கனுள் திருவுந்தியாரை அடுத்துத் திருக்களிற்றுப்படியார் இடம் பெறுகிறது. இவ்விரண்டு நூல்களும் மெய்கண்ட தேவ நாயனாரின் காலத்துக்கு முற்பட்டவை என்பதை ஆராய்ச்சி அறிஞர்கள் ஏற்றுக் கொள்ளுகிறார்கள்.

திருவுந்தியாரின் ஆசிரியராகிய திருவியலூர் உய்யவந்ததேவ நாயனார் ஆளவந்த தேவ நாயனார் என்ற பெரியாரைத் தமது மாணவராக ஏற்றுக் கொண்டார் என்பர். ஆளவந்ததேவ  நாயனார் இயற்றியதாக நமக்கு எந்த நூலும் கிடைக்கவில்லை. இவருடை மாணவரே திருக்கடவூர் உய்யவந்த தேவ நாயனார். தம் ஆசிரியரிடத்திலே திருவுந்தியாரை முறைப்படி பாடம் கேட்ட திருக்கடவூர் உய்யவந்ததேவ நாயனார் திருஉந்தியாரில் கூறப்பட்ட செய்திகளை விளக்கியும் சில புதிய செய்திகளை இணைத்தும் இயற்றியருளினார்.

தில்லையிலே அம்பலவாணப் பெருமான் ஆனந்தக் கூத்து ஆடு கின்ற பொன்னரங்கினை ஏறிச் சென்று அடைவதற்கு ஐந்து படிகள் உள்ளன. இவை பஞ்சாக்கரப் படிகள் எனப்படும். அப்படிகளின் இருபக்கங்களிலும் பக்கத்திற்கு ஒன்றாகக் கல்லால் வடிக்கப்பட்ட இரு களிறுகள் துதிக்கையை நீட்டிஇருப்பது போல அமைக்கப்பட்டுள்ளன. ஆதலால் அப்படிகள்  திருக்களிற்றுப்படி என்றும் வழங்கும் சுந்தரமூர்த்தி நாயனார் தில்லைப் பெருமானை வழிபட அங்குச் சென்று நின்ற நிகழ்ச்சியைச் சேக்கிழார் பெருமான் பெரிய புராணத்தில் குறிப்பிடுகின்ற பொழுது

செய்தவப் பெரியோன் சென்று தாழ்ந்து எழுந்தான்
திருக்களிற்றுப்படி மருங்கு (தடுத்தாட். 105)
என்று கூறுவது நினையத்தகும்.

திருக்கடவூர் உய்யவந்த தேவ நாயனார் தில்லையில் சென்று தில்லைக் கூத்தப் பெருமானை வணங்கி இந்நூலைத் திருக்களிற்றுப் படியில் வைக்க அதனைக் கல்லால் இயன்ற களிறு தன் துதிக்கையால் எடுத்துக் கூத்தப் பெருமானின் திருவடி மலர்களில் வைத்தது எனவும், அதிலிருந்து இந்நூல் திருக்களிற்றுப்படியார் என்னும் பெயரினைப் பெற்றது எனவும் கூறுவர்.

கடவுள் வாழ்த்து

1 அம்மையப்பரே உலகுக்கு அம்மையப்பர் என்று அறிக
அம்மையப்பர் அப்பரிசே வந்து அளிப்பர்  அம்மையப்பர்
எல்லா உலகுக்கும் அப்புறத்தார் இப்புறத்தும்
அல்லார்போல் நிற்பர் அவர்.

உமையொரு பாகராகிய சிவபெருமானே இவ் உலகிற்குத் தாயும் தந்தையும் என்று அறிக. உயிர்களுக்கு அருள் பாலிக்கும் பொருட்டு அம்மையப்பராக விளங்குகின்ற சிவபெருமான் திருவருளாகிய சத்தியுடன் தோன்றிப் பாச வீடும் சிவப்பேறும் அளித்தருளுவார். தன்னை விட்டு ஒரு போதும் நீங்காத அம்மையுடன் சிவபெருமான் எல்லா உலகங்களுக்கும் அப்பாற்பட்டவராய்த் திகழ்வார் எனினும் இந்த உலகத்திலும், உயிர்களின் உள்ளும் நீக்கமற நிறைந்து நிற்பார் அவர்.

உலகத்திலுள்ள சமயங்களில் எல்லாம் கடவுள் வழிபாடு என்பது அவனை ஆணாகக் கொண்டு அல்லது பெண்ணாகக் கொண்டு வழிபடுவதாகவே அமைவதைக் காண்கிறோம். சைவசமயத்தில் மட்டிலுமே வலப்பாகம் பெருமானும் இடப்பாகம் பிராட்டியுமாய் விளங்குகின்ற தொன்மைக் கோலத்தை வழிபடுகின்ற முறைமை பல நூற்றாண்டுகளாக இருந்து வருகின்றது. உமையொரு பாகன் தாயும் ஆனவன், அர்த்தநாரீசுவரன் என்றெல்லாம் வழங்குகிற பெயர்களை விடுத்து ஆசிரியர் அம்மையப்பர் என்ற திருப்பெயரைக் கூறி இறைவனை வழிபடுகிறார். எளிமையும் அழகும் நிறைந்த திருப்பெயர்  இப்பாடலில் நான்கு முறை பயன்படுத்தப் பட்டுள்ளமை ஒரு நயம்

சங்க நூல்களிலும், திருமுறைகளிலும் பல இடங்களில் இறைவனின் பெண் உரு ஒரு திறன் ஆகிய இவ்வருள் வடிவம் பலமுறை போற்றி அருளாளர்களால் வணங்கப்பட்டுள்ளது. உலக மாந்தர்க்கு அறைகூவி அறிவுறுத்துவதைப் போல இப்பாடலின் முதல் அடி அம்மையப்பரே உலகுக்கு அம்மையப்பர் என்று அறிக என்று அமைந்துள்ளது. சிவனோடு ஒக்கும் தெய்வம் தேடினும் வேறில்லை என்பதையும், அவன் தன் அருட்சத்தியை விட்டுப் பிரிவிலாக் கோமான் என்பதையும் தென்னாடுடைய சிவன் எந்நாட்டவருக்கும் இறைவன் என்பதையும் ஒரு வெண்பாவில் முதல் நான்கு சீர்களில் தெளிவுறுத்திக் கூறிய திறம் வியந்து போற்றுதற் குரியது.

தன் கருணைத் திறத்தினால் உயிர்களுக்கு அருள் பாலிக்கும் பொருட்டு இறைவன் எழுந்தருளுகிற போது தன் அருட் சத்தியோடு கூடவே தோற்றமளிப்பான் என்பது அதனை அடுத்த அடியில் எடுத்துரைக்கப்பட்டது. உயிர்களின் பக்குவத்துக்கு ஏற்றவாறும் வரிசையறிந்தும் அருள் வழங்குவான் என்பது குறிப்பால் உணர்த்தப்பட்டது.

அம்மையப்பராகிய இறைவன் யாவற்றையும் கடந்து நிற்பவன் யாவற்றையும் கடந்து எங்கோ தொலைதூரத்தில் உள்ளனன் என்று கருதல் வேண்டா. உலகிலும் உயிர்களிலும் உள்நிறைந்து. உயிர்க்கு உயிராகி அவற்றின் தன்மை தனக்கு எய்தலின்றி விளங்குகிறான் இறைவன் என்பதனை இப்புறத்தும் அல்லார் போல் நிற்பர் என்று குறித்தார். கடந்த நிலையும் ஒவ்வொரு பொருளின் உள்ளே நிறைந்த நிலையும் உடையவன் இறைவன். எனவே அவன் கடவுள் நிறைந்த நிலையும் உடையவன் இறைவன். எனவே அவன் கடவுள் எனப்பட்டான் . எவ்வௌர் தன்மையும் தன்வயிற்படுத்துத் தானே ஆகிய தயாபரன் எம் இறை என்ற மாணிக்கவாசகப் பெருமான் திருவாக்கும் நினைதற்குரியது. அண்டங்கடந்தும் அணுவுக்குள் அணுவாகியும் இறைவன் நிற்பான் என்பது இப்பாடலால் உணர்த்தப்பட்டது. அம்மையோடு அப்பனாகிச் செறிவு ஒழியாது நின்ற சிவனடி சென்னி வைப்பாம் என்ற அருள்நந்தி சிவனாரின் திருவாக்கும் காண்க.

2 தம்மில் தலைப்பட்டார் பாலே தலைப்பட்டுத்
தம்மில் தலைப்படுதல் தாம் உணரின் தம்மில்
நிலைப்படுவர் ஓரிருவர் நீக்கி நிலை ஆக்கித்
தலைப்படுவர் தாம் அத்தலை.

உயிரின் பக்குவம் அறிந்து திருமேனி தாங்கி, அதற்கு அருள் பாலிக்கும் பொருட்டு வந்த ஞான ஆசிரியனின் திருவடிகளை வணங்கி உயிர் இறைவனோடு பொருந்தும் முறைமையினை அவரிடத்திலே உபதேச வழியால் பெற்று அவ்வழியிலே தவறாது ஒழுகி வந்தால் சத்தியும் சிவமுமாகிய இறைவன் உயிரை ஆட்கொள்ளுவான். அப்போது உயிரைப் பற்றியிருந்த தளைகள் நீங்கித் திருவருள் உயிரின் கண் நிலை பெறும். அதனால் சிவஞானமும் அதன் வழி மெய்ப்பொருளாகிய சிவமும் அப்பொழுதிலேயே அறியப்படும்.

இப்பாடலில் தம் தாம் தலை என்ற மூன்று சொற்களும் சொற்பின் வரும் நிலையாக ஆசிரியரால் அமைக்கப்பட்டன. தம்மில் தலைப் பட்டார் என்ற இடத்து தம் என்ற சொல்லால் குறிக்கப்பட்டது உயிர். உயிர் தன் சிற்றறிவினால் இறைவனை அடைய இயலாது. எனவே இறைவனே உயிரின் பக்குவ நிலை அறிந்து அதற்கு உண்மை ஞானம் உணர்த்துவதற்காக ஆசிரியத் திருமேனி தாங்கி எழுந்தருளுவான். அவருடைய திருவடியை உறுதியாகப் பற்றிக் கொண்டு உயிரும் சிவமும் பொருந்தும் நிலையை ஞான ஆசிரியன் உணர்த்த உயிர் உணருமாகில் அதனிடத்தே சத்தியும் சிவமுமாய ஒன்றே ஆகிய இருவர் நிலைத்து நிற்பர். உலகத்துப் பொருள்கள் மீது எழுகின்ற விருப்பம் தளைகளினால் உண்டாவது. அத்தளைகள் யாவற்றையும் நீக்கி உயிரைத் திருவருளிலே நிலைபெறுமாறு செய்து அந்நிலையிலேயே  உயிர்களுக்குக் காட்சி கொடுத்து அருளுவான். தாம் உணரின் என்ற இடத்து தாம் என்பது உயிரையும், தலைப்படுவர் தாம் அத்தலை என்ற இடத்துத் தாம் என்ற சொல் இறைவனையும் குறிக்கின்றன.

இப்பாடல் ,தலைப்பட்டார் நீர்த் துறந்தார் மயங்கி வலைப்பட்டார் மற்றை யவர்  என்ற திருக்குறளை நினைவூட்டுவதாகும்.

3 என்னறிவு சென்றளவில் யான் நின்று அறிந்தபடி
என்னறிவிலார் அறிக என்றொருவன்  சொன்னபடி
சொல்லக்கேள் என்று ஒருவன் சொன்னான் எனக்கு அதனைச்
சொல்லக்கேள் யான் உனக்கு அச் சொல்.

நான் அறிகிறேன் என்று எண்ணும் தன் முனைப்பு என்னை விட்டு நீங்கிய அளவில் எனக்கு ஒருவன் ஞான ஆசிரியனாக எழுந்தருளி அறிவுறுத்தினான். அந்நிலையில் அதனைப் பின்பற்றி நின்று நான் அறிந்த வற்றை ஆன்ம போதம் கெட்டுத் திருவருள் வழிப்பட்டு நின்றவர்கள் எல்லாம் கேட்டுப் பயன்  படும்படி யான் கேட்டவற்றை உனக்குச் சொல்லுவேன் என்று என் ஆசிரியப் பெருமான் எனக்கு உணர்த்தினான் . அதனை அம் முறைமையிலேயே உனக்கு நான் உணர்த்துவேன். அதனைக் கேட்டு நீ பயன் பெறுவாயாக.

திருக்களிற்றுப்படியாராகிய இந்நூல் எழுந்த வரலாற்றைக் கூறுவது இப்பாடல் தன்முனைப்பற்றவராகிய திருவியலூர் உய்யவந்த தேவ நாயனார் இறைவன் திருவருள் வழிநின்று பக்குவம் பெற்றவராகிய ஆளவந்த தேவ நாயனாருக்குத் திருவுந்தியார் என்ற ஞான நூலை வழங்கி அறிவுறுத்தினார். ஆளவந்த தேவ நாயனார் திருவுந்தியார்ப் பொருளை தம் மாணவராகிய திருக்கடவூர் உய்யவந்த தேவ நாயனாருக்கு உபதேசித்தார். அம்முறையிலே பிறழாது அவர் தமது மாணவர்க்குத் திருக்களிற்றுப் படியாராகிய இந்நூலை அருளிச் செய்தார் என்பது இப்பாடலின் திரண்ட பொருள்.

என் அறிவு சென்ற அளவில் யான் நின்று அறிந்தபடி சொன்ன ஒருவர் திருவியலூர் உய்யவந்த தேவ நாயனார். சொன்னபடி சொல்லக் கேள் என்ற ஒருவன் ஆளுடைய தேவ நாயனார். யான் உனக்கு அச் சொல் சொல்லக் கேள் என்று அருளியவர் இந்நூல் ஆசிரியர்.

இதுவரை வந்த மூன்று பாடல்களும் கடவுள் வாழ்த்தாகவும். நூற் பயனாகவும், நூல் வரலாறு ஆகவும் அமைந்துள்ளன. இதன் பின்னர் வரும் பாடல்கள் திருவுந்தியாகப் பாடல்களை அடியொற்றி அவற்றின் தெளிபொருள் விளக்கமாக அமைகின்றன.

4 அகளமய மாய்நின்ற அம்பலத்து எம் கூத்தன்
சகளமயம் போல் உலகில் தங்கி  நிகளமாம்
ஆணவ மூல மலம் அகல ஆண்டான் காண்
மாணவக என்னுடனாய் வந்து.

வடிவம் குறியும் அற்ற பரம்பொருளாகிய அழகிய சிற்றம்பல முடைய கூத்தப் பெருமான் தனது பேரருளால் திருமேனி தாங்கி ஞான ஆசிரியனாக என்முன் தோன்றி என்னைப் பிணித்திருந்த மூலமலமாகிய ஆணவ மலம் என்னை விட்டு நீங்குமாறு என்னைத் தளையிலிருந்து விடுவித்து மாணவனே, என்னுடனே நின்று என்னை ஆண்டு கொண்டான்.

இப்பாடல் ஆசிரியராகிய திருகடவூர் உய்யவந்த தேவநாயனார் தம் மாணவனை முன்னிலைப்படுத்தி விளித்து எல்லையற்ற பரம் பொருள் தன் பெருங்கருணையால் திரு உருத் தாங்கி ஞான ஆசிரியனாய் எழுந்தருளி வந்து ஆணவமாகிய மூலமலத்தினை அகற்றிப் பாச விலங்கொடித்துத் தன்னை ஆட்கொண்ட கருணைத் திறத்தைப் போற்றுகிறார்.

அகளம், உருவற்று எல்லையற்று விளங்கும் தன்மை. சகளம், உருவம் கொண்டதனால் எல்லைக்கு உட்பட்ட திருமேனி சகளமயம் என்பது நம் போலும் மாயையின் காரியங்களால் ஆன உடம்பு அன்று என்று உணர்த்துவதற்குச் சகள மயம் போல உலகில் தங்கி என்றார். எனவே தோற்றத்தில் சகளமும் உண்மையால் அகளமும் என்று தெளிவுறுத்தினார். நிகளம் சங்கிலி, விலங்கு. ஆணவமாகிய மூலமலம் உயிரைப் பிணிந்து உள்ளதனால் நிகளமாம் ஆணவ மூலமலம் என்று குறிப்பிட்டார். ஒரு நாளும் அழியாத் தன்மையுடையதாகிய ஆணவ மலத்தை அதன் வலிகெடச் செய்து உயிருக்கு உண்மை ஞானத்தை அருளுவதை இப்பாடலில் போற்றினார்.

5 ஆகமங்கள் எங்கே அறுசமயம் தான் எங்கே
யோகங்கள் எங்கே உணர்வு எங்கே  பாகத்து
அருள் வடிவம் தானுமாய் ஆண்டிலனேல் அந்தப்
பெருவடிவை யார் அறிவார் பேசு

அம்மையப்பராகிய இறைவன் தன்னை விட்டுப் பிரியாத திருவருளும் தானுமாக எளிவந்து பக்குவம் பெற்ற உயிர்களை ஆண்டிலனேல் அண்டங்கடந்து நிற்கும் அவனுடைய பெருவடிவை யாரால் அறிய இயலும்? அவ்வாறே இறைவன் அருளே திருமேனியாகக் கொண்டு ஆக மங்களை அருளிச்  செய்யாவிடிலோ, அகச் சமயங்கள் ஆறினையும் உணர்த்தாவிடிலோ, யோகியாய் இருந்து உயிர்களுக்கு யோகத்தை உணர்த்தாவிடிலோ இப்பெருமை மிக்க அருள் நூலும் அருள் வழியும் உலகில் எவ்வாறு நிலைபெறும்?  சைவ ஆகமங்கள் இருபத்து எட்டும் சிவபெருமான் திருமுகங்கள் ஐந்திலிருந்தும் தோன்றின என்பர் பெரியோர். ஆறு சமயத்து அவரவரைத் தேற்றியவனும் சிவபெருமானே என்பது அப்பர் பெருமான் அருள்வாக்கு சிவபெருமான் யோகியாய் இருந்து உயிர்களுக்கு யோகத்தை உணர்த்தியும், போகிறாய் இருந்து உயிர்களுக்கு போகத்தை வழங்கியும் அருள் பாலிக்கிறான் என்பது அருளாளர்கள் கூறும் உண்மை. உயிர் உணர்ந்த உணரும் இயல்பினை உடையது. எனவே கட்டு நிலையில் உயிர்கள் அறியாவண்ணம் உள்நின்று உணர்த்தியும், வீட்டு நிலையில் உயிர்களின் பக்குவத்திற்கு ஏற்பத் தன்மை முன்னிலை படர்க்கை ஆகிய மூவிடங்களில் நின்று உணர்த்தியும் அருள்பவன் சிவபெருமானே ஆதலால் உணர்வு எங்கே என்றும் வினவினார்.

தானே வந்து இரங்கித் தலையளித்து ஆட்கொண்டு அருளும் சத்தி சிவத்தின் கருணையினால் உலகில் ஆகமங்களும் அறுவகைச் சமயங்களும் யோக நெறியும் பயிற்சியும் இறை உணர்வும் திகழ்கின்றன. என்பது இப்பாடலில் விளக்கப்பட்டுள்ளது.

6 சாத்திரத்தை ஓதினார்க்குச் சற்குருவின் தன்வசன
மாத்திரத்தே வாய்க்கும்நலம் வந்துஉறுமே  ஆர்த்தகடல்
தண்ணீர் குடித்தவர்க்குத தாகம் தணிந்திடுமோ
தெள்நீர்மையாய் இதனைச் செப்பு.

ஞானாசிரியரின் துணையின்றி ஞான நூல்களைக் கற்கப் புகுவார் அந்நூற்களின் மெய்ப்பொருளை உணர இயலாது. அவ்வாறின்றி நல்ல ஞானாசிரியனை அடுத்து உபதேசம் பெறுவார் அவ்வுபதேசத்தைக் கேட்ட மாத்திரத்திலேயே நன்னலம் பெற நிறைந்த ஞானத்தைப் பெறுவார்கள். அலைகள் ஆரவாரிக்கின்ற பெருங்கடல் ஆயினும் அதில் உள்ள நீரைக் குடித்தவர்க்கு நீர்வேட்கை தணிந்திடாது. தெளிந்த அறிவினை உடைய மாணவனே இதனை அறிவாயாக.

ஆரணமும் அருள் நூல்களும் கடல் போல் விரிந்துள்ளன. தக்க ஆசிரியரின் துணையின்றி அந்நூல்களைக் கற்க முற்படுகிறவர்களுக்கு அவற்றின் தெளித்த பொருள் விளங்குவதில்லை. ஆனால் ஞானாசிரியர் ஒருவர் உணர்த்துகிற மொழியைக் கேட்ட அளவிலேயே பிறவி வெப்பத்தினால் தோன்றிய மயக்கங்கள் எல்லாம் அற்றுத் தெளிவு பிறக்கும்.

சாத்திரக் கடலுக்கு ஒப்பாக ஆர்க்கின்ற அலைகடல் உவமை கூறப் பட்டது. எல்லையற்ற பெருங்கடல் போன்றன எல்லையற்ற ஞான நூல்கள். கடல் நீரை அள்ளிப்பருகினால் அதன் உவர்ப்புத் தன்மையினால் நீர் வேட்கை தணியாது. ஆனால் அருகிலுள்ள சிறிய ஊற்றின் தண்ணீர் விடாய் தீர்ப்பது போன்று ஞான ஆசிரியரின் அருள் மொழி ஞான வேட்கையைத் தணிக்கும்.

கடல் பெரிது. தண்ணீரும் ஆகாது. அதன் அருகே சிறு ஊறல்  உண்ணீரும் ஆகிவிடும் என்ற அறநூல் கருத்தும்,உண்ணீர் மருங்கின் அதர் பலவாகும் என்ற புறநானூற்றுப் பாடல் வரியும் இங்கு நினைதற்குரியன.

இப்பாடலால் வெறும் நூலறிவு பயன் தராது என்பதும் ஞானாசிரியன் வழிகாட்ட, அவனது உபதேச மொழிகளைக் கேட்ட அளவிலே பயன் விளையும் என்பதும் உணர்த்தப்பட்டன. தெண்ணீர்மையாய் என்று மாணவனை விளித்தார். அவன் தெளிந்த  அறிவினை உடையவன் என்பதை உணர்த்துவதற்காக.

7 இன்று பசுவின் மலம் அன்றே இவ்வுலகில்
நின்ற மலமனைத்தும் நீக்குவதிங்கு  என்றால்
உருவுடையான் அன்றே உருவழியப் பாயும்
உருவருள வல்லான் உரை.

நம் போலவே மாயையின் காரியங்களாகிய உடல் கருவி முதலியவற்றில் கட்டுண்டு காட்சி தரும் குரு நம்மில் ஒருவராதல் அன்றி நம்மைக் கட்டியிருக்கும் மலங்களை விடுவிக்க வல்லவரோ என்ற ஐயத்தைத் தீர்ப்பது இந்தப் பாடல்.

இவ்வுலகில் பசுவின் சாணம் இடங்களைத் தூய்மைப்படுத்துவதற்கும். அனைந்து ஆட்டுதற்கும், திருநீற்றினை விளைவிப்பதற்கும் பயன் படுத்தப்படுகிறது. பசுவின் சாணம் அழுக்கு எனக் கூறப்படுமாயினும் புற அழுக்கையும் அக அழுக்கையும் போக்குவதற்குப் பயன்படுத்துவது போல ஞானாசிரியன் மேற்கொண்ட உருவம் மாணவரது பாசங்கள் அனைத்தையும் அகற்றும். ஞானமே வடிவாக உடைய உருவினை வழங்க வல்லது ஆகும்.

கோமயம் என்று உயர்த்து வழங்கப்படுகிற ஆன் சாணம் இறைவனுக்கு உகந்தது என்பது திருநாவுக்கரசு நாயனார் ஆவினுக்கு அருங்கலம் அரன் அஞ்சு ஆடுதல் என்று அருளியமையால் விளங்கும். ஆன்சாணமே பராவணமாகிய திருநீற்றை விளைவிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது. திருநீற்றின் பெருமையைத் திருஞானசம்பந்த நாயனார் ஒரு பதிகம் முழுவதும் எடுத்துக் கூறிப் பாராட்டுகிறார். திருநீறு புறத்தூய்மை மட்டுமின்றி அகத்தூய்மையையும் தரும். பூசும் நீறுபோல் உள்ளும் புனிதர்கள் என்பது சேக்கிழார் திருவாக்கு. அழுக்கைக் கொண்டு அழுக்கைப் போக்குவது போல உயிர்களின் அழுக்கைப் போக்குவதற்காக அவற்றைப் போலவே உடல் தாங்கி ஞான ஆசிரியனாகி இறைவன் எழுந்தருளுவான். இதில் மாறுபாடு உண்டா கூறுவாயாக என்று கேட்கும் முறையில் இப்பாடல் அமைந்துள்ளது. இப்பாடலில் உரு என்ற சொல் மூன்று இடங்களில் வந்தது. முதலில் வருகிற உரு ஆசிரியன் திருமேனி தாங்கி வருவதையும் இரண்டாவது உரு மாயைத் தொடக்கால் ஆன உயிர்களது உடலையும், மூன்றாவது உரு ஞானமே வடிவான நிலையினையும் குறிக்கின்றன.

8 கண்டத்தைக் கொண்டு கருமம் முடித்தவரே
அண்டத்தின் அப்புறத்தது என்னாதே  அண்டத்தின்
அப்புறமும் இப்புறமும் ஆரறிவுஞ் சென்றறியும்
எப்புறமும் கண்டவர்கள் இன்று.

காணப்பட்ட திருமேனியுடைய ஞான ஆசிரியனின் உபதேச மொழிகளைக் கடைப்பிடித்து, தன் முனைப்பற்றுத் திருவருளில் ஒடுங்கி நின்றார்களே தமது வினைத் தொடக்கை அறுத்தவர்கள் ஆவார்கள். அத்தகையவர்களே பரம்பொருளை உலகின் உள்நின்றது என்றும், உலகைக் கடந்து நின்றது என்றும் பலவாறு ஊசலிடாமல் அப்பரம்பொருள் அண்டத்தின் உள்ளும் இருக்கும் புறம்பும் இருக்கும் எப்புறத்தும் இருக்கும். அறிவுக்கு அறிவாகவும் அறிவைக் கடந்ததாகவும் இருக்கும் என்று அறிந்தவர்கள் ஆவார்கள்.

முன்னே வந்து எதிர் தோன்றும் ஞான ஆசிரியன் வழங்கியருளுகின்ற மெய்ஞ்ஞானப் பொருள் மொழிகளை அவன் வழங்கியவாறே கேட்டுச் சிந்தித்துத் தெளிந்து நிட்டை கூடி அருளில் தலைப்பட்டுத் தமதுவினைத் தொடர்பை அறுத்துக் கொண்டவர்கள் பரம்பொருளின் உண்மை நிலையை ஐயம் திரிபற உணர்ந்தவர்கள் ஆவார்கள். ஞானாசிரியன் வழங்கும் முறை உயிரின் பக்குவத்திற்கேற்பப் பல்வகைப்படும். திரு நோக்கால் , தொட்டருள்வதால், திருவாக்கால், மானதத்தால் இன்னபிற வகைகளால் உணர்த்தும் முறைமைகளை எல்லாம் இதனுள் அடக்கிப் பொருள் கொள்க.

கருமம் முடித்தது என்பது வினைத் தொடர்பை அறுத்ததோடு பாச நீக்கம் முழுவதையும் உணர்த்திற்று. பரம்பொருள் அண்டத்தின் இப்புறமும் அறிவில் கலந்து உயிருக்கு உயிராகியும் சொல்லும் மனமும் கடந்தது என்றும் திருவருள் பெற்ற பேரறிவாளர்கள் தெளிய உணர்வார்கள் என்பதை இப்பாடல் உணர்த்திற்று .

9 அன்று முதல் ஆரேனும் ஆளாய் உடனாகிச்
சென்றவர்க்கும் இன்னது எனச் சென்றதில்லை  இன்று இதனை
எவ்வாறு இருந்த தென்று எவ்வண்ணஞ் சொல்லுகேன்
அவ்வாறு இருந்தது அது.

பரம்பொருளாகிய சிவபெருமானுடைய திருவடிக்கு ஆளாகி அவன் ஆணைக்கு ஆட்பட்ட பெரியவர்கள் யாராயினும் அவர்கள் அனைவரும் இறைவனின் பேரின்பம் இத்தன்மையது என்று முற்ற அறிந்த தில்லை அவ்வாறு இருக்க அப்பரம் பொருள் வழங்குகின்ற திருவடி இன்பம் எவ்வாறு இருக்கும் என்று நான் எப்படிக் கூறுதல் கூடும்? அப்பேரின்பம் தனக்கு ஒப்பும் உவமையும் இல்லாமல் அத்தன்மையதாகவே இருந்தது என்பதன்றி வேறு என்ன சொல்ல முடியும்?

உலகில் தோன்றிய உயிர்கள் எண்ணிறந்தன. அவ்வாறே இறை வனின் திருவடிப்பேறு பெற்ற உயிர்களும் கணக்கற்றன.  பிறந்தநாள் மேலும் பிறக்கும் நாள் போலும் துறந்தோர் துறப்போர் தொகை  என்று திருவருட் பயன் (பாடல் 11) உணர்த்துகிறது. அவ்வாறு திருவடிப்பேறு அடைந்தோர் யாரே ஆயினும் அவர்கள் இறைவனுக்கு ஆட்பட்டு உடனாகி எல்லையில்லாப் பேரின்பம் துய்த்தனரேயன்றி, அதனை அளவிட்டு அறிந்தார்கள் அல்லர். பேசுவதற்கரிய பேரின்ப வெள்ளத்தை எவ்வாறு இருந்தது என்று எப்படிச் சொல்லுவேன் அது அப்படித்தான் இருந்தது என்பது அன்றி ஒப்பிடுவதற்கோ உவமை சொல்லுவதற்கோ இயலாது.

சிவானந்தப் பெருவெள்ளம் அகத்தில் கண்கொண்டு அனுபவிக்கப்படுகிற ஆனந்தமேயன்றி விண்டுரைக்க முடியாத தன்மை உடையது என்பதைத் திருமந்திரத்தில் திருமூல தேவநாயனார் மகட்குத் தாய்தன் மணாளனோடு ஆடிய சுகத்தைச் சொல் எனில் சொல்லுமாறு எங்ஙனம் என்று கூறியருளுகிறார். சிவானுபவம் சொற்பதம் கடந்தது என்பதை இந்த அரிய பாடலால் உணர்த்தினார் ஆசிரியர்.

ஆரேனும் ஆளாய் உடனாகி என்பதற்குத் திருமாலும் நான்முகனுமாகிய தேவர்களும் கூட இறைவனுக்கு ஆட்பட்டு அவன் ஏவல் வழி ஒழுகினார்களேயன்றி அவன் இன்ன தன்மையன் என்று அறிந்தாரில்லை என்று பொருள் கொள்வர் சில உரையாசிரியர்கள்.

10 ஒன்றுங் குறியே குறியாத லால் அதனுக்கு
ஒன்றுங்குறி யொன்று இலாமையினால்   ஒன்றோடு
 உவமிக்க லாவதுவும் தானில்லை ஓவாத்
தவமிக்கா ரே இதற்குச் சான்று.

சிவபெருமானுக்கு அவனுடன் நீக்கமின்றி நிற்கும் அவனது திருவருளே வடிவமாகும். அத்திருவருளைத் தவிரப் பரம்பொருளோடு பொருத்திக் கூறக் கூடிய அடையாளம் வேறு ஒன்றும் இல்லை. பெருமானுக்கு உவமை காட்டிச் சொல்லத் தக்க பொருளும் உலகத்தில் வேறு எதுவுமில்லை. எனின் அத்தகையதொரு செம்பொருள் உண்டு என்பதற்குச் சான்று எதுவெனின் அவனோடு ஒற்றித்திருந்து இடைவிடாத தவத்தினை உடைய திருவருட் செல்வர்களேயாவர்.

ஒன்றுதல்  பொருந்துதல். குறிகளும் அடையாளமும் குறித்துக் சொல்லுவதற்கரிய பரம்பொருளுக்கு அவனது திருவருளையன்றித் திரு மேனி என்ற வேறு ஒன்று இல்லை. இதனையே சிவஞான சித்தியாரில்

உருஅருள் குணங்களோடும் உணர்வு அருள் உருவில் தோன்றும்
கருமமும் அருள் அரன்தன் கரசரணாதி சாங்கம்
தரும் அருள் உபாங்கம் எல்லாம் தான் அருள் தனக்கு ஒன்று (இன்று)
அருள்உரு உயிருக்கு என்றே ஆக்கினன் அசிந்தன் அன்றே (பாடல்67)

என்னும் திருப்பாடலில் ஆசிரியர் அருள்நந்தி சிவம் எடுத்துரைத்தார். எனவே சிவபெருமானோடு பொருந்திய அருளே அவனுக்கு அடையாளமாகி வேறு ஒன்றும் அடையாளமாகப் பொருந்துவதில்லை என்றார். அடையாளம் இல்லையேனும் உவமை கூறத்தகுமோ எனின் அதுவும் இல்லை என்பதை அறுதியிட்டுக் கூறினார். தனக்கு உவமை இல்லாதான் என்று திருவள்ளுவரும், ஒப்புடையன் அல்லன்... ஓர் உவமன் இல்லி என்று திருநாவுக்கரசு நாயனாரும், ஒப்பு இன்மையான் (திருவருட்பயன்3) என்று உமாபதி சிவனாரும் அருளியவற்றை இங்கு நினைவு கூர்க.

ஒப்பற்ற பரம்பொருளை உணர்வதுதான் எப்படி? அதற்குச் சான்று ஏது? என்று கேட்பாருக்கு ஓயாத பெருந்தவத்தில் உள்ளம் திளைத்து அவனோடு ஒன்றியிருக்கும் சிந்தையுடைய அவனது மெய்யடியார்களே இதற்குச் சான்று என்று கூறினார்.

11 ஆற்றால் அலைகடற்கே பாய்ந்த நீர் அந்நீர்மை
மாற்றி அவ் வாற்றான் மறித்தாற்போல்  தோற்றிப்
புலன்களெனப் போதம் புறம்பொழியும் நந்தம்
மலங்களற மாற்றுவிக்கும் வந்து.

ஆற்றின் வழியே சென்று அலைகடலில் பாய்ந்த நீர் தன் இயல்பான தன்மை கெட்டுக் கடல் நீரின் தன்மையை ஏற்கும். ஏதேனும் ஒரு காரணத்தால் அந்நீர் மீண்டும் ஆற்றின் உள்ளே மறித்துப் பாய நேரிட்டாலும் அது மீண்டும் ஆற்று நீரின் தன்மையைப் பெறாது கடல் நீரின் தன்மையையே கொண்டு இருக்கும். அதுபோலத் தன் முனைப்பற்றுச் சிவபரம் பொருளோடு ஒன்றி அவன் திருவடிகளையே சிந்தித்திருப்பார்க்கு அவர்களது அறிவு புலன்வழிச் செல்லாமலும் பசுகரணங்களாக அல்லாமலும் சிவகரணங்களாகவே விளங்கும். அன்றியும் அது நமது மலங்களையெல்லாம் அறவே மாற்றியருளும்.

இப்பாடல் அணைந்தோர் தன்மை என்ற சீவன் முத்தரது நிலையை எடுத்து விளக்குகிறது. முந்தியபாடலில் மெய்யடியார்களே இறைவனுடைய திருவருட் பெருக்கை நமக்கு உணர்த்தும் சான்றுகளாவர் எனக் கூறிய ஆசிரியர் இப்பாடலில் அதன் தொடர்ச்சியாக மேலும் சிலவற்றைக் கூறலுற்றார். சீவன் முத்தர்கள் சில நேரங்களில் புலன் வழிச் செல்லும் உணர்வோடுகூடக் காட்சியளிக்கிறார்களே என்ற வினாவிற்கு , சீவன் முத்தர்கள் புறத்தே செல்லும் புலன் உணர்வு கொண்டவர்கள் போல் தோன்றினும் அவர்களின் பசுகரணங்கள் யாவும் சிவ கரணம் ஆனதால் உலகில் தோய்வற நிற்பர் என்றார்.

ஆற்றலிருந்து கடலில் பாய்ந்த நீர் , உவா நாட்களிலும், கடல் பொங்கும் காலத்தும் மீண்டும் ஆற்றுக்குள்ளேயே புகும். அவ்வாறு நிகழும் போதும் அப்படிப் புகுந்த நீர் கடல் நீரின் தன்மையையே கொண்டிருக்குமே அல்லாமல் ஆற்று நீராக இருக்காது என்ற உவமையை எடுத்துக் காட்டுகிறார். இங்கே கடல் நீர் இறைவனது திருவருட் பெருக்கையும் ஆற்று நீர் அவனது திருவடியை அடைந்த மெய்யடியார்களையும் குறித்தன.

புலன்வழிப்படர்வது போன்ற மெய்யடியார்களின் உணர்வும் நம் போல் வாரது மலப்பிணிப்பை அறவே மாற்றுவிப்பதற்குப் பயன்படுமே யன்றி வேறன்று என்றும் உறுதிபடக் கூறினார்.

12 பாலை நெய்தல் பாடியதும் பாம் பொழியப் பாடியதும்
காலனை அன்று ஏவிக்கராம் கொண்ட பாலன்
மரணந் தவிர்த்ததுவும் மற்றவர்க்கு நந்தம்
கரணம்போல் அல்லாமை காண்.

சிவபெருமான் திருவருளால் அவனுடைய அடியார்களாகிய மூவர் முதலிகளும் பாலை நிலத்தை நெய்தல் நிலமாகும்படி திருப்பதிகம் பாடியதும், பாம்பு கடித்து இறந்த சிறுவனை மீளவும் உயிர்ப்பித்ததும், பல் லாண்டுகளுக்கு முன்பு முதலையால் விழுங்கப்பெற்ற பாலனைத் திருப்பதிகம் பாடி உயரோடு மீட்டுக் கொடுத்தும் ஆகிய இத்தகைய பல அற்புதச் செயல்களைச் செய்தனர். இது எவ்வாறு நிகழ்ந்தது எனில் அந்த அருளாளர்களின் கரணங்கள் யாவும் நம் போல்வார் கரணங்களைப் போலப் பசு கரணமாய் நில்லாமல்  சிவகரணங்களாய்த் திகழ்ந்தமையினாலேதான் இவ்வற்புதச் செயல்கள் நிகழ்ந்தன என்பதை அறிவாயாக.

திருஞான சம்பந்த நாயனார் மூவாண்டில் ஞானப்பால் அருந்தித் திருப்பெருகு சிவஞானம் கைவரப்பெற்றார் . அவர்தம் தாயார் தோன்றிய பதியாகிய திருநனி பள்ளிக்குச் செல்லும்போது அப்பதி பாலை நிலமாக இருப்பதைக் கண்டார். காரைகள் கூகை முல்லை  என்று தொடங்கும் திருப்பதிகத்தை அவர் அருளிச் செய்யப் பாலை நிலம் நெய்தல் நிலமாக மாறியது.

திருநாவுக்கரசு நாயனார் திங்களூரில் அப்பூதியடிகளின் மூத்த திருமகன் பாம்பு தீண்டி இறந்த போது ஒன்றுகொலாம் என்று தொடங்கும் திருப்பதிகம் பாடி அவன் மீண்டும் உயிருடன் எழுமாறு இறைவன் திருவருளால் வியத்தகு செயலைச் செய்தார்.

சுந்தரமூர்த்தி நாயனார் திருப்புக்கொளியூர் அவிநாசியிலே பல்லாண்டுகளுக்கு முன் முதலையால் விழுங்கப் பெற்ற சிறுவன் ஒருவனை  எற்றான் மறக்கேன் என்று தொடங்கும் பதிகத்தைப் பாடி அப்பதிகத்தின் நான்காவது பாடலில் கரைக்கால் முதலையைப் பிள்ளை தரச் சொல்லு காலனையே  என்று வேண்டவே ,மாண்ட சிறுவன் இறைவன் திருவருளால் மீண்டும் எழுந்த அற்புத நிகழ்ச்சி நிகழ்ந்தது.

இம்மூன்றும் அற்புதங்களும் திகழ்ந்தமைக்குக் காரணம் நாயன்மார் மூவரின் கரணங்கள் யாவும் சிவகரணங்களாகத் திகழ்ந்தமையே என்று விளக்குகிறார் ஆசிரியர். அருளாளர்கள் மூவரும் தற்போதம் நீங்கித் தம் முனைப்பற்று இறைவன் திருவருள் வழியிலே ஒழுகியவர் ஆதலால் வியத்தகு செயல்களை ஆற்றினார்கள்,

சங்கரர் திக்கு விசயம் பற்றிக் கூறும் நூலில் ஆதிசங்கரர் இறந்து போன ஒரு சிறுவனைத் தாம் மீட்டுத் தருவதாக மும்முறைமந்திரம் செபித்து நீர் தெளித்தும் அவன் உயிர் பெற்று  ஏழவில்லை என்பதும், வானிலிருந்து எழுந்த அசரீரி வாக்கு அவரை அம்முயற்சியில் ஈடுபடலாகாது என்று தடுத்தமையும் இங்கு நினைவு கூரற்பாலன. நான்செய்கிறேன் என்னும் தன் முனைப்புப் பசுகரணமாய் நிற்பதையும் இறைவன் திருவருள் வழி நடந்தேறட்டும் என்ற நினைப்பு பசு கரணங் கெட்டுச் சில கரணமாய் நிற்றலையும் இப்பாடலில் உணர்த்தினார்.

13 தூங்கினரைத் தூய சயனத்தே விட்டதற்பின்
தாங்களே சட்ட உறங்குவர்கள்  ஆங்கது போல்
ஐயன் அருட்கடைக்கண் ஆண்டதன் பின் அப்பொருளாய்ப்
பைய விளையுமெனப் பார்.

உறக்கம் வந்தவர்களைத் தூய்மையான படுக்கையிலே விட்டதன் பின் அவர்கள் தூங்குகிறோம் என்ற உணர்வின்றி எவ்வித முயற்சியுமின்றித் தாமாகவே ஆழ்துயில் கொள்ளுவார்கள். அதுபோலவே சரியை, கிரியை, யோகம் என்ற மூவகைத் தொண்டாற்றிப் பக்குவப் பட்ட உயிர்கள் ஞான ஆசிரியரது திருக்கடைக்கண் நோக்கம் வாய்க்கப் பெற்ற அளவிலே இறைவனுக்கு மீளா அடிமைத்திறம் பூண்டு, அவன் திருவருள் வழி எந்த முயற்சியும் இன்றி நிற்பார்கள். அதன் பின்னர் அவர்களிடத்துச் சிவபெருமானின் திருவருள் ஞான விளக்கமும் மெல்ல மெல்ல விளையும். இதனை முன் பாடலில் கூறிய அருளாளர்களின் வாழ்வில் பார்த்துத் தெளிந்து கொள்க.

தூங்குதல் என்பது இங்கே உயிர் தன் செயலற்றுத் தான் அற்று, உணர்வு புறத்தே செல்லாது சிவபெருமானின் திருவருளிலே ஒடுங்கி இருப்பதை உணர்த்துகிறது.  தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவது எக்காலம் என்ற தாயுமானவர் வாக்கும் இந்த நிலையையே உணர்த்திற்று.

திருவருட் பயனில் ஆசிரியர் உமாபதி சிவம் அணைந்தோர் தன்மை கூறுமிடத்து, ஓங்கு உணர்வின் உள் அடங்கி உள்ளத்துள் இன்பு னையே ஒடுங்கத் தூங்குவர் மற்று ஏது உண்டு சொல்  என்று இக்கருத்தினையே விளக்குகின்றார்.

சட்ட உறங்குவார்கள் என்பது செம்மையாகத் தூங்குவார்கள் என்ற பொருளை உணர்த்திற்று. பிறர்தலையீடும், தமது முயற்சியுமற்றுத் தாமே துயில் கொள்ளுவர் என்பதாம்.

அவ்வாறே தலைவனாகிய ஞான ஆசிரியன் திருக்கடைக்கண் சாத்தி ஆண்டு கொண்டதன் பின் தன் முனைப்பற்றுத் திருவருளிலே உறைத்து நின்று ஒழுகுவார்க்கு  அப்பொருளாய் என்று குறிக்கப்பட்ட சிவபரம் பொருளின் திருவடி ஞானம் மெல்ல விளையும். இதற்கு எடுத்துக் காட்டு முன் கூறப்பட்ட பாடலில் குறிப்பிடப்பட்ட அடியார்களின் வரலாறே.

14 உள்ள முதலனைத்தும் ஒன்றாய் உருகவரின்
உள்ளம் உருகவந்து உன்னுடனாம் தெள்ளி
உணருபவர் தாங்கள் உளராக என்றும்
புணரவர நில்லாப் பொருள்.

தத்துவங்கள் யாவும் உயிரை விட்டு நீங்கிய நிலையிலே திருவருள் சத்தி உயிர் மீது பதியும் அந்த நிலையில் சிவபரம் பொருள் உயிரின் உள்ளம் உருக அதனுடன் வந்து பொருந்தும் அதுவல்லாமல் பரம் பொருளை இத்தன்மையது என்று நான்தெளிந்து உணர்வேன் என்று முயலுகின்ற உயிருக்குச் சிவபரம் பொருள் எட்டாமல் நிற்கும்.

முதல் என்ற சொல் இங்குத் தத்துவங்களைக் குறித்தது. இத்தத்து வங்கள் யாவும் மாயையிலிருந்து விரிந்து காரியப்பட்டு உயிருக்குத் துணை செய்வன. இவை காரண நிலையிலிருந்து வெளிப்பட்டுத் தோன்றி, ஒடுக்க நிலையில் மறைந்து போகும் இயல்புடையன. ஆயினும் அவை இல்லாமல் போகாமல் மாயையின் உள்ளே காரண வடிவாய் நிற்றலின் உள்ள முதல் என்று கூறினார். மாயையை உள்பொருள் என்றே சைவசித்தாந்தம் கொள்ளுகிறது.

இத்தத்துவங்களில் இருந்து முற்றிலும் நீங்குவது அனைத்தும் ஒன்றாய் உருகுதல் என்று குறிப்பிடப்பட்டது. அவ்வாறு நீங்கிய நிலையில் ஆன்மா இறைவனின் பெருங்கருணையை நினைத்து நெகிழ்ந்து உருகும். அந்த நெகிழ்ச்சி உயிருக்குத்திருவருள் வந்து பொருந்தியதனால் தோன்றியதாகும். அந்நிலையில் இறைவன் ஆன்மாவும் தானும் வேறில்லை என்னும் வண்ணம் உடனாய் நிற்பான். இவ்வாறு இல்லாமல் இறைவனை நானே தெளிந்து அறிவேன் என்று முற்படுகிற ஆன்மா தன் முனைப்போடு செயல்படுவதனால் மெய் பொருளாகிய இறைவன் அதற்கு அகப்படாமல் விலகியே நிற்பான்.

யான் எனது என்று கருதும் நிலை அற்றுப் போனாலன்றி இறைவனை உணர்தல் உயிரால் ஆகாது என்பதை இப்பாடலில் வலியுறுத்தினார்.

15 நல்லசிவ தன்மத்தால் நல்லசிவ யோகத்தால்
நல்லசிவ ஞானத்தால் நான் அழிய  வல்லதனால்
ஆரேனும் அன்புசெயின் அங்கே தலைப்படும் காண்
ஆரேனும் காணா அரன்.

முறையே நன்மையைத் தரும் சிவதருமத்தினாலும், சிவ யோகத்தினாலும் சிவ ஞானத்தினாலும் உயிர் படிப்படியே முன்னேறிப் பக்குவப்பட்ட காலத்து நான் என்னும் உணர்வு அழியும். அத்தகைய வன்மை கிட்டுவதனால் யார் ஒருவர் சிவபெருமானிடத்து அன்பு செய்வாரோ அவருக்கு யாராலும் காண்பதற்கரிய சிவபெருமான் எளிவந்து வெளிபட்டுத் தோன்றுவான்.

தவம் மேற்கொண்டு ஒழுகுவார்க்கு இறைவனின் திருவருள் கிடைக்கும் என்பது எல்லாச் சமயத்தாராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்து. ஆயினும் தவத்தின் இலக்கணம் ஒவ்வொரு சமய நெறியிலும் வேறுபடும். பட்டினிகிடத்தல் , உடம்பை ஒறுத்தல் , வெயில் காலத்தில் சுடுபாறையில் கிடத்தல் , கடும் குளிரில் தண்ணீரினுள் நின்று நோற்றல் என்று தவமுயற்சி சமயங்களால் வேறு வேறாகக் கொள்ளப்பட்டன.

சரியை என்பது மெய்த் திருத்தொண்டு. திருக்கோயில் அலகிடுதல், பூத்தொடுத்தல் முதலிய தொண்டுகளாகும். கிரியை என்பது சிவபெருமானுடைய அருஉருவத் திருமேனியைத் திருமஞ்சனம் ஆட்டுதல் , திருப்பள்ளித் தாமம் சாத்தி உள்ளம் உருகி வழிபடுதல். யோகம் என்பது உயிர்ப்பை அடக்கி உள்ளக்கிழியில் உரு எழுதிச் சிவபெருமானைச் சிந்தையில் கொண்டு வழிபடுவது. ஞானம் என்பது கேட்கும் சிந்தித்தும் தெளிந்தும் நிட்டை கூடியும் சிவபரம் பொருளை வழிபடுவது.

இந்தப் பாடலில் சரியை நிலையும் கிரியை நிலையும் நல்ல சிவதன்மம் என்று ஒன்றாகக் குறிப்பிடப்பட்டன. அதனை அடுத்த யோகம் என்ற நெறி நல்ல சிவ யோகத்தால் எனப்பட்டது . அட்டாங்க யோகம் சிவ பெருமானை நோக்கியே இயற்றப்படுதல் வேண்டும் என்பதைத் திருமூல தேவநாயனார் அருளிச் செய்த திருமந்திரத்தில் தெளிவாக எடுத்துரைத்தார். இந்த மூன்று படிநிலைகளையும் முறையே கடந்து வந்த உயிர்களுக்குச் சிவஞானம் தைவாப்பெறும் திருவடி ஞானமே சிவஞானம் என்பதை உணர்தல் வேண்டும்.

யார் ஒருவர் இந்தப் படிமுறையை மேற்கொண்டு ஒழுகினாலும் அவர்களுக்குச் சிவபெருமானிடத்து அன்பு தோன்றி மேன்மேல் வளர்ந்து வரும். அத்தகையோருக்குச் சிவபெருமான் தன் பெருங்கருணையால் எழுந்தருளி வந்து அவரோடு ஒன்றாய் நிற்பான் என்பதனை இப்பாடலில் ஆசிரியர் உணர்த்துகிறார்.

யாவர்க்கும் காண்பரிய ஈசன் அன்பு செய்வாரிடத்து எளிதில் வெளிப்பட்டுத் தோன்றுவான் என்பதனை அங்கே தலைப்படுங்காண் யாரேனும் காணா அரன் என்ற சொற்களால் விளக்கினார்.

யார் ஒருவர் உள்குவார் உள்ளத்துள்ளே அவ்வுருவாய் நிற்கின்ற அருளும் தோன்றும் என்று திருப்பூவணத் திருத்தாண்டகத்திலும் , எவரேனும் தாமாக கவராதே தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே, என்று திருக்கன்றாப்பூர்த் திருத்தாண்டகத்திலும் அப்பர் அடிகள் அருளிச் செய்த திருவாக்குகள் இங்கு நினையத் தக்கன.

16 மெல்வினையே என்ன வியனுலகில் ஆற்றரிய
வல்வினையே என்ன வரும் இரண்டும் சொல்லில்
சிவதன்மம் ஆம் அவற்றிற் சென்றதிலே செல்வாய்
பவகன்மம் நீங்கும்படி.

முந்திய பாடலில் கூறப்பட்ட சிவதருமம் மெல்வினை என்றும், பரந்த உலகில் செய்வதற்கரிய வல்வினை என்றும்  இரண்டு வகைப்படும். இவ்விரண்டினுள் உன்னால் இயற்றக்கூடிய சிவதருமத்தைக் கடைப்பிடித்து நின்று உறைத்த அன்போடு இருந்தால் உனது பிறப்புக்குக் காரணமாகிய வினைப்பயன்கள் யாவும் சிவபெருமான் திருவருளாலே உன்னை விட்டு நீங்கும் . எனவே ஏதாவது ஒரு நெறியிலே நிலைத்து நின்று தொண்டு செய்வாயாக.

சிவதருமம் என்று கூறப்பட்டதனை ஆசிரியர் மெல்வினை என்றும் வல்வினை என்றும் இரண்டு பிரிவுகளாக அமைத்துக் காட்டுகிறார். ஆயினும் இரண்டு நெறிகளும் அன்பு நெறிகளே என்பது இதற்கு முந்திய பாடலில் யாரேனும் அன்பு செய்யின் அங்கே தலைப்படுங்காண் யாரேனும் காணா அரன் என்று கூறுவதனாலே விளக்கப்பட்டது. மெல்வினை என்பது யாது? வல்வினை என்பது யாது? என்பவற்றைப் பற்றிய விளக்கம் இதனைத் தொடர்ந்து வரும் பாடல்களில் ஆசிரியரால் விளக்கப்படுகின்றன.

இரண்டில் ஒன்றைப் பற்றி அதிலே நிலைத்து நிற்கின்ற உயிர்களுக்குப் பிறப்புக் காரணமாகிய வினைத் தொடர்பு நீங்கும் என்பது இப்பாடலில் கூறப்பட்டது.

17 ஆதியை அர்ச்சித்தற்கு அங்கமும் அங்கங்கே
தீதில் திறம்பலவும் செய்வனவும்  வேதியனே
நல்வினையாம் என்றே நமக்கும் எளி தானவற்றை
மெல்வினையே என்றது நாம் வேறு.

வேதங்களில் வல்லமாணவனே, இறைவனை அர்ச்சித்து வழிபடுவதற்கு உரியன என்று ஆகமங்கள் முதலியவற்றுள் விதிக்கப்பட்டுள்ள உறுப்புக்களும் அதனை இயற்றும் வகையால் தீமையை அகற்றுவதற்கு உரிய திறங்களும் நல்வினையே ஆதலினால் அவை நம் போன்றார்க்கும் எளிதானவையே. அத்தகைய வழிபாட்டு முறைமைகளையே இங்கு நாம் மெல்வினை என்று வகைப்படுத்திக் கூறியனவாம்.

இறைவழிபாட்டில் கைக்கொள்ளுவதற்கு உரியன என்று ஆகமங்களில் விதிக்கப்பட்டுள்ளவை அங்கங்கள் எனப்பட்டன. வழிபாட்டிற்கான மலரும் நீரும் திரு அமுதும் போன்றவை . இவை தவிரப் பூசையின் போது இயற்றப்படும் பஞ்சசுத்தி முதலியனவும் வழிபாட்டின் அங்கங்களே ஆம். எனவே இவை யாவும் சேர்ந்து ஆதியை அர்ச்சித்தற்கு அங்கமும், தீதில் திறம்பலவும் செய்வனவும் எனப்பட்டன.

யாவர்க்குமாம் இறைவற்கு ஒரு பச்சிலை என்பது போல இவ்வழி முறை எளியது. ஆயினும் தீமையை விலக்குவதும் நன்மையை விளைவிப்பதுவும் இதன் பயன்கள். ஆதலால் இவ்வாறு செய்யும் வழிபாட்டை மெல்வினை என்ற வகையுள் அடக்கிக் கூறினார்.

வல்வினை பற்றிய ஆசிரியர் கருத்து இதன் பின்னர் வரும் பாடல்களில் விளக்கப்பட்டுள்ளன.

18 வரங்கள் தரும் செய்ய வயிரவர்க்குத் தங்கள்
கரங்களினால் அன்றுகறி யாக்க  இரங்காதே
கொல்வினையே செய்யும் கொடுவினையே ஆனவற்றை
வல்வினையே என்றது நாம் மற்று.

வரங்களை அருள வல்லவராய் சிவந்த திருமேனியோடு காட்சி அளித்த வயிரவ வேடம் தாங்கிய சிவபெருமானுக்காகக் கறிய முது ஆக்கும் பொருட்டுத் தங்களுடைய கைகளினாலே தாம் பெற்ற மகனை அரிய முன் வந்த சிறுத் தொண்ட நாயனாரைப் போன்று இறைவன் பொருட்டுக் கொடுந் தொழிலும் இயற்ற முற்படுகின்றவர்களையே நாம் வல்வினை செய்ய வல்ல அடியார்கள் என்று இதற்கு முன் வந்த பாடலில் குறிப்பிட்டோம்.

சிறுத்தொண்ட நாயனார் சிவனடியார் ஒருவருக்கு நாள்தோறும் தவறாமல் திருஅமுது ஊட்டி அதன் பின்னரே தாம் உணவு உண்பதை நோன்பாகக் கடைப்பிடித்து வந்தார். நாயனாருடைய மெய்த்தன்மை நிறைந்த அன்பினை நேரில் நுகர்ந்து அருளுவதற்காகச் சிவ பெருமான் வயிரவ அடியார் திருவேடம் தாங்கி நாயனார் வாழ்ந்த திருச்செங்காட்டங்குடிக்கு எழுந்தருளினார். அன்றைக்கு அமுதூட்ட சிவனடியார் யாரையும் காணாது சிறுத்தொண்ட நாயனார் மனம் நொந்து இருந்தார். வயிரவ வேடம் தாங்கிய சிவபெருமான் அவரிடத்து  ஆறு மாதத்திற்கு ஒரு முறை உணவு உண்ணும் பழக்கம் உடையேன் யான். அப்போது நாம் உண்பது நரப்பசு. ஒரு குடிக்கு நல்ல ஒரு மகனைத் தந்தை அரியத் தாய் பிடிக்க இருவரும் மனமுவந்து சமைத்த கறியினையே யாம் உண்பது என்று உரைத்தார்.

அதற்கு உடன்பட்டுச் சிறுதொண்ட நாயனாரும் அவர் மனைவி யாராகிய திருவெண்காடு நங்கையும் தம்முடைய ஒரே மகனான சீராளதேவனைத் தொண்டர்க்கு அமுதூட்டும் நல்வாய்ப்புக் கிடைத்ததே என்னும் ஒரே கருத்துடன் சிந்தனையில் தடுமாற்றம் இன்றி மகிழ்ச்சியுடன் அரிந்து கறியமுது சமைத்து வயிரவக் கோலம் தாங்கி வந்த சிவபெருமானை அமுதுண்ண அழைத்தனர் வயிரவரோ நம்மோடு உடன் உண்பதற்கு உமக்கு ஒரு மைந்தன்  இருந்தால்  அவனையும் அழையும்  எனப்பணித்தார். பெற்ற மகனையே அரிந்து கறி சமைத்த தந்தையார் இப்போது அவன் இங்கு உதவான் எனக் கூற அடியார் அவன் வந்தாலன்றி உண்ணோம் எனவே கட்டளையை மறுப்பதற்கு அஞ்சி, நாயனார் சீராளனைப் பேர் சொல்லி அழைக்க, அவனும் பரமன் அருளால் பள்ளியினின்று ஓடி வருவான் போல உயிர்பெற்று வந்தனன்.

இந்தச் செயற்கரும் செயலை இப்பாடலில் வல்வினை என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார். உலக வழக்கத்திற்கு மாறாக இரக்கமின்றிச் செய்யப்பெற்ற வன்கொலை போலவும் ஆகிய இந்த அருஞ்செயல் மனதில் செற்றம் இல்லாமல் அடியாருக்கு உணவு அளிக்க வேண்டும் என்ற அன்பின் உறைப்பாலே செய்யப்பட்டது. ஆதலின் இது பாதகமாகாது பத்திமை ஆயிற்று.

வயிரவர் என்னும் அகச் சமய நெறி நிற்கின்ற அடியவர்கள் உடம்பில் சட்டை அணிந்து கையில் சூலம் ஏந்திக் கடுமையான நோன்புகள் மேற்கொண்டு வாழ்ந்த கூட்டத்தைச் சேர்ந்தவர்கள்.

19 பாதகம் என்றும பழி என்றும் பாராதே
தாதையை வேதியனைத் தாளிரண்டும்  சேதிப்பக்
கண்டுஈசர் தாமாம் பரிசளித்தார் கண்டாயே
தண்டீசர் தஞ்செயலால் தான்.

தன் தந்தையும் தனக்கு மறைபயிற்றுவித்த ஆசிரியனுமாகிய எச்சதத்தனைச் சிவபூசைக்கு இடையூறு விளைவித்தான் என்ற காரணத்தால் பாதகத்தையும் பழியையும் பாராமல் சேய்ஞலூர்ப் பிள்ளையார் அவனது இரண்டு கால்களையும் வெட்டி எறிந்தார். இதனைக் கண்ட இறைவன் அவருக்குச் சண்டீசப்பதம் தந்து ஆட்கொண்டான். இந்நிகழ்ச்சியை நீ அறிந்துள்ளாய் அன்றே.

சேய்ஞலூர்ப் பிள்ளையாராகிய விசாரசருமர் தம் அன்பின் மேலீட்டால் ஊர்ப்பசுக்களை மேய்த்து வந்தார். அப்பசுக்கள் மடிநிறைந்து பால் சுரத்தன. விசாரசருமர்  மணலால் லிங்கத் திருமேனியை அமைத்து வழிபட அப்பசுக்கள் தாமாகவே பால் சுரந்து திருமஞ்சனம் ஆட்டின. ஊரார் சொல்லை நம்பிய எச்சதத்தன் தன் மகனைப் பாலைக் கறந்து மண்ணில் சொரிந்ததாகக் கருதி மணலால் ஆன லிங்கத்தை எற்ற முற்பட்டான்.  வழிபாட்டில் அமைந்திருந்த விசாரசருமர் கண்விழித்துப் பார்த்து சிவ அபராதம் செய்தவரின்  காலை அருகில் கிடந்த கழி ஒன்றை எடுத்து வீசினார். அக்கழியே மழுவாகி எச்சதத்தனின் கால்கள் இரண்டையும் துண்டித்தன. சிவபெருமான் விசாரசருமர் முன்பு திருக்காட்சி நல்கி அவருக்குச் சண்டீசப்பதமும் அருளினார்.

தந்தையும்,தனக்கு வேதம் ஒதுவித்த ஆசிரியனும் ஆகிய உண்மை மறந்து சிவ அபராதம் ஒன்றனையே மனதில் கொண்டு அது செய்தவனைத் தாள் அற எறிந்த செயல் உலகர் முன் பாதகம் என்று கருதப்படும். பாதகத்தால் தீராப் பழி வந்து சேரும். இவற்றை நினையாது சேய்ஞலூர்ப் பிள்ளையார் செய்த வன்செயலை இறைவன் கண்டு உவந்து அருள் புரிந்தது வல்வினையின் பாற்பட்டது என்று ஆசிரியர் கூறுகிறார்.

தீதில்லை மாணி சிவகருமஞ் சிதைத்தானைச்
சாதியும் வேதியன் தாதைதனைத் தாளிரண்டும்
சேதிப்ப ஈசன் திருவருளால் தேவர் தொழப்
பாதகமே சோறு பற்றியவா தோ ணோக்கம்
என்ற வரும் திருவாசகப் பாடல் இங்கு நினையத்தக்கது.

20.செய்யில் உகுந்த திருப்படி மாற்றதனை
ஐயஇது அமுது செய்க என்று  பைய இருந்து
ஊட்டி அறுத்தவர்க்கே ஊட்டி அறுததவரை
நாட்டியுரை செய்வது என்னோ நாம்.

அரிவாட்டாய நாயனார் இறைவனுக்குப் படைப்பதற்காகச் செந்நெல் அரிசியும் செங்கீரையும் மாவடுவும் தமது தலைமீது சுமந்து சென்றார். பல நாள் பட்டினி இருந்த களைப்பினால் கால் இடறி நன்செய் வயலிலே வீழ்ந்தார். தலையில் சுமந்து சென்ற திரு அமுது படிக்கான பொருள்களும் வெடித்துக் கிடந்த வயலின் கமர்களிலே சிந்திப் போயின. இறைவனுக்கான அமுது படியை நிலத்தில் உகுத்தற்காக வருந்தித் தம் கையிலிருந்த அரிவாளால் தம் கழுத்தை அரியலுற்றார் அரிவாட்டாய நாயனார் அந்நிலையில், சிவபெருமானின் திருக்கரம் வயல் வெடிப்பினின்றும் வெளிப் பட்டு அரிவாளைத் தாங்கிய நாயனாரின் கையப் பிடித்துத் தடுத்தது. அதனோடு நாயனார் வேண்டிக் கொண்ட வண்ணமே சிவபெருமான் திருஅமுது கொண்டு அருளினார் எனபதற்கு அடையாளமாக மாவடுவைக் கடித்ததனால் உண்டாகிய விடேல் விடேல் என்னும் ஓசையும் நாயனார் காதில் ஒலித்தது. இறைவன் அம்மையப்பனாகக் காட்சி தந்து நாயனாரையும் அவரது மனைவியாரையும் ஆட்கொண்டு அருள் பாலித்தான். இத்தகைய தன்மை உடைய நாயனாரின் பெருமையை நாம் எவ்வாறு எடுத்துரைப்பது.

திருப்படி மாற்று என்பது திரு அமுதுபடியைக் குறிக்கும்.ஊட்டி என்ற சொல் முறையே கழுத்தையும்  பெருமானுக்கு அமுதுபடி ஊட்டியதையும் குறிக்கும்.

இதற்கு முன் வந்த மூன்று பாடல்களிலும் வல்வினை செய்த அடியார்களின் பேரின்பத் திறனை ஆசிரியர் எடுத்துரைத்தார் அதற்கு முந்திய பாடலில் மெல்வினை என்பது யாது என்பதை விளக்கினார். சிறுத் தொண்ட நாயனார். சண்டேசுவர நாயனார் போன்ற அடியார்களின் தொண்டு உலகத்தவர் பழிப்புக்கு இடந்தருமேனும் உறைத்த அன்பின் அடியார்கள் வல்வினை செய்யத் தயங்கார் என்பதனை எடுத்துக் காட்டின.

21 செய்யும் செயலே செயலாகச் சென்று தமைப்
பையக் கொடுத்தார் பரங்கெட்டார்  ஐயா
உழவும் தனிசும் ஒரு முகமே யானால்
இழவுண்டே சொல்லாய் இது.

தன்முனைப்பற்ற அடியவர்கள் தாம் செய்யும் செயல் யாவும் இறைவன் செயலே ஆகத் தம்மை இறைவனின் உடைமை ஆக்கித் தமது சுமை கெடுமாறு நிற்பர். உழவுத் தொழிலும் அதனை மேற்கொள்ளுவதற்காகப் பெற்ற கடனும் ஒருவரிடத்திலே அமையுமானால் அதனால் இழப்பு வருமோ? வருவதில்லை. அவ்வாறே தம்மை இழந்த அடியார்கள் வினைச்சுமை தீர்ந்து வீடு பேற்றினை அடைவார்கள்.

செய்யும் செயல் என்பது உயிர்கள் தன் முனைப்புடன் யான் என்றும் எனது என்றும் கருதிச் செய்யும் வினைகளை. அடுத்து வரும் செயலாக என்பதற்கு இறைவனின் செயலாகுமாறு என்று  சொல் வருவித்துப் பொருள் கொள்ளுக. இந்நிலை விரைவில் கை வருவதில்லை படிப்படியே வருவது என்பதனைக் குறிக்கப் பையக் கொடுத்தார் என்று கூறினார். பரம் கெட்டார் என்பது சுமையினின்றும் நீங்கினார் என்ற பொருளைத் தரும்,

உழவுத் தொழிலை மேற்கொண்ட ஒருவன் கடன் பெற்று விதையும் உரமும் வாங்கிப் பயிரை விளைவிக்கும் முயற்சியிலே ஈடுபடுகிறான். அவனே நிலத்திற்கு உடைமையாளன் ஆயின் விளைவின் பயனை அவனே உறுதி யாகப் பெறுவான். ஆதலால் அவனுக்கு இழப்பு நேராது. தனிசு என்ற சொல் கடன் என்ற பொருளைத் தரும்.

22 ஆதார யோகம் நிராதார யோகம் என
மீதானத்து எய்தும் விதியிரண்டே  ஆதாரத்து
ஆக்கும் பொருளாலே ஆக்கும் பொருளாம் ஒன்று
ஆக்காப் பொருளேயொன் றாம்.

யோகப் பயிற்சி என்பது ஆதாரயோகம் என்றும் நிராதாரயோகம் என்றும் இரு வகையாகச் சொல்லப்படும். இருவகை நிலையிலும் நின்றவர்கள் மிக மேலான இறைவன் திருவடியிலே சென்று கூறுவது உறுதி. இவற்றுள் ஆதார யோகம் என்பது ஞான ஆசிரியனால் கற்பிக்கப்பட்ட ஆறு ஆதாரங்களிலும் இறைவனது அந்தந்த இடத்துக்குரிய திருமேனிகளை உள்ளக்கிழியில் உரு எழுதி வழிபட்டுப் பயன் பெறுவதாகும். நிராதார யோகம் என்பது இவை யாவற்றிலும் உயர்ந்ததாய் மனத்தின் அசைவும் அற்றதாய்ப் பற்றுக் கோடும் இல்லாததாய் இறைவனது திருவடியைப் பொருந்துவதாய் அமைவது.

இரண்டு வகையாகப் பயின்றாலும் எய்தும் பொருள் இறைவன் திருவடி ஆகிய ஒன்றே. முதல் நெறியில் உடம்பின் ஆதாரங்களைப் பற்றி அதன் மேலும் சென்று ஆக்கும் பொருள் என்பதும் . இரண்டாம் நெறியில் படிநிலைகள் எதுமில்லாமல்  கைகூடுகிற திருவருள் ஆக்கப் பொருள் என்றும் உணர்த்தினார்.

ஆறு ஆதாரங்கள் என்பன மூலாதாரம். சுவாதிட்டானம், மணி பூரகம், அநாகதம், விசுத்தி, ஆஞ்ஞை ஆகியன. இவை ஒவ்வொன்றுக்கும் அதி தெய்வங்கள் முறையே விநாயகர், அயன் , திருமால், உருத்திரன், மகேசன், சதாசிவன் ஆவர். இந்த ஆறு ஆதாரங்களுக்கும் வடிவங்களாக மூலாதாரத்துக்கு நான்கு இதழ்த் தாமரையும் சுவாதிட்டானத்துக்கு ஆறு இதழ்த் தாமரையும், மணிபூரகத்துக்குப் பத்து இதழ்த் தாமரையும், அநாகதத்திற்குப் பன்னிரண்டு இதழ்த் தாமரையும் விசுத்திக்குப் பதினாறு இதழ்த் தாமரையும், ஆஞ்ஞைக்கு இரண்டு இதழ்த் தாமரையும் கூறப்படும்.

ஆஞ்ஞை என்பது புருவ நடுவில் நிலைபெறுவதாகக் கொள்ளுவர். மீதானம் என்ற நிலை நிராதாரம் எனப்படும். இது உச்சிக்கு மேல் பன்னிரண்டு அங்குல உயரத்தில் ஆயிரம் இதழ்த் தாமரை வடிவாக அமைந்தது என்பர். இது பிரமரந்திரம் என்றும் கூறப்படும். இவ்விடத்தில் சிவசத்தியுடன் பிரியாது நின்ற சிவபெருமானை வழிபடுதல் வேண்டும். ஆதார யோகம் பயிற்சி முறை என்றும் நிராதார யோகம் பயிற்சியின் பயன் எனவும் கொள்ளப்படும்.

23 ஆக்கி ஒரு பொருளை ஆதாரத்து அப்பொருளை
நோக்கி அணுவில் அணுநெகிழப் பார்க்கில்
இவனாகை தானொழிந்திட்டு ஏகமாம் ஏகத்து
அவனாகை ஆதார மாம்.

முன் பாடலில் கூறப்பட்ட ஆறு  ஆதாரங்களிலும் ஞானாசிரியன் கற்பித்த நெறியிலே இறைவனை வழிபட்டு அதனதனுக்குரிய திருவடிவத் தை உளத்துள் பதித்து தியானம் செய்து அதிலேயே நெடுநாள் நிலைத்திருந்தால் தன் முனைப்புக் கெட்டுச் சிவபரம் பொருள் ஒன்றே முதிர்ந்து உயிரில் ஒங்கித் தோன்றும். வழிபடுவானும் வழிபடப் பெறும் பொருளும் வழிபடுகிறேன் என்ற உணர்வும் நெகிழ்ந்து போக ஒன்றேயாகிய சிவபரம் பொருள் இவனோடு பிரிப்பின்றி நிற்கும் நிலை ஆதார யோகமாகும்.

ஆதாரத்தினைப் பற்றி ஒரு பொருளை ஆக்கி அதனால் கைவந்த அப்பொருளை நோக்கி அணுவாகிய ஆன்மா தற்போதம் கெடப்பார்க்கின் இவன் என்ற பொருள் ஒழிந்திட்டு ஒப்பற்ற பரம்பொருள் ஆகிய அவனே ஏகமாய்த் தோன்றுவான். அதுவே ஆதார யோகம் ஆகும். தன் முனைப்பற்ற நிலையில் சிவம் விளங்கித் தோன்றும் இந்நிலையே இடைவிடாத ஆதார யோகப் பயிற்சியின் சிறந்த பயனாகும்.

24 கொண்டது ஒரு பொருளை கோடிபடக் கூறுசெயிற்
கொண்டவனும் அப்பரிசே கூறுபடும்  கொண்ட
இரு பொருளும் அன்றியே இன்னது இது என்னாது
ஒரு பொருளேயாய் இருக்கும் உற்று.

தியானிப்பதற்காக மனதுட் கொண்ட பரம் பொருளையும் அதன் இயல்புகளையும் நுணுகி நுணுகி ஆராய்ந்து அதன் எண்ணிறந்த இயல்புகளைப் பல்கோடி முறை சிந்தித்து வழிபட்டால் அந்த வழிபாட்டைச் செய்பவன் தானும் அவ்வாறு நுண்மையுடையவன் ஆவான். அதனோடு தியானிப்பவன் தியானிக்கப்படும் பொருள் என்ற வேறுபாடுகள் மறைந்து இன்னது இது என்று புரிந்து கொள்ளவும் விளக்கிச் சொல்லவும் இயலாத வாக்குமனம் கடந்த இறைவன் வழிபடுவோனாகிய இவனுடன் கூடி ஒரு பொருளாகவே விளங்குவான்.

முந்திய பாடலில் ஆதார யோகத்தைப் பயில்கின்ற முறையை அணுவாகிய ஆன்மா நெகிழ்வுறுமாறு பார்த்தல் என்பதனை விளக்கிய ஆசிரியர் இந்தப் பாடலில் வழிபடப் பெறுகின்ற பரம் பொருளின் இயல்புகளை பல்கோடி விதமாக நீள நினைத்து உருகும் நுட்பத்தை அறிவுறுத்துகிறார். கொண்ட பொருள் பரம் பொருளாகவும் கொண்டவன் வழிபாடு இயற்றுபவனாகவும் பொருள் காணப்படும். இரு பொருளாக இருக்கின்ற நிலை மாறிப் பரம் பொருளோடு ஒன்றி ஒரு பொருளேயாகும் இயல்பு இப் பாடலில் எடுத்துரைக்கப்பட்டது.

25 அஞ்செழுத்துமே அம்மை அப்பர்தமைக் காட்டுதலால்
அஞ்செழுத்தை ஆறாகப் பெற்றறிந்தே  அஞ்செழுத்தை
ஓதப்புக்கு உள்ள மதியுங்கெடில் உமைகோன்
கேதமற வந்தளிக்கும் கேள்.

திருவைந்தெழுத்தே ஓதுவார் தமை அம்மையப்பராக விளங்குகின்ற இறைவனின் திருவடி இன்பத்தை நோக்கி இட்டுச் செல்லும் வல்லமையுடையது. எனவே ஞானாசிரியனும் திருவைந்தெழுத்தை உபதேசிக்க அதனைப் பெற்று முறைப்படி ஓதி வந்தால் தற்போதம் கெடும். கெடவே அம்மையப்பனாகிய இறைவன் உயிரோடு கூடவே நின்று துன்பம் அனைத்தையும் துடைத்து, எல்லையில்லாப் பேரின்பத்தை வழங்கியருளுவான்.

திருவைந்தெழுத்தில் ஒவ்வொரு எழுத்தும் ஒவ்வொரு பொருளைக் குறிக்கும். எனவே அதனை அஞ்சுபதம் என்று சுந்தரமூர்த்தி நாயனார் குறிப்படுகிறார். அந்தியும் நண்பகலுங் அஞ்சுபதம் சொல்லி என்பது அவர் திருவாக்கு. சிகரம் சிவத்தையும், வகரம் திருவருளையும், யகரம் உயிரையும் , நகரம் திரோதத்தையும், மகரம் மலத்தையும் குறிப்பனவாகும் . இவ்வைந்து பொருள்களுள் சிவத்தைக் குறிப்பதாகிய சிகரமும் திருவருளைக் குறிப்பதாகிய வகரமும் பெருமை பெற்று விளங்குவன ஆதலால்  அஞ்செழுத்துமே அம்மையப்பர் தமைக் காட்டுதலால் என்றார் ஆசிரியர். நடுவில் நின்ற உயிர் அதனை அடுத்து நின்ற நகர மகரங்களாகிய மலங்களிலிருந்து விடுபட்டுச் சிவமும் சத்தியுமாகிய உமையொரு பாகனது திருவடிப் பேரின்பத்தை எய்துதற்கு உரிய சாதகன். அதனைத் தகுந்த ஞானாசிரியன் வழிப்பெற்று ஓதும் முறைமையிலும் நிற்கும் முறைமையிலும் பிறழாது ஒழுகினால் தன் முனைப்பு அறும். இறைவன் அருள் பாலித்து உயிரை தன்னடிக்கீழ்க் கூட்டுவிப்பான் என்பதனை இப்பாடலில் விளக்கினார்.

26 ஆக்கப்படாத பொருளாய் அனைத்தினிலும்
தாக்கித்தான் ஒன்றொடும் தாக்காதே  நீக்கியுடன்
நிற்கும் பொருளுடனே நிற்கும் பொருளுடனாய்
நிற்கை நிராதார மாம்.

வாக்கும் மனமும் கடந்து நிற்கும் பரம்பொருள் இன்னதன்மையன் என்று அறியொண்ணாதவன் . ஆதலால் ஆன்மாவின் அறிவினால் கற்பித்துக் கொள்ளப்படும் கற்பனைக்கும் அப்பாலானவன். உலகத்துப் பொருள்கள் அனைத்திலும் கலந்து நின்ற போதிலும் எவற்றிலும் தோய் வற்று நிற்கும் தானேயாகிய தயாபரன். ஆதலால் உயிர்களின் துயரங்களைத் தன் பெருங்கருணையால் அறிந்து நீக்கும் பரம் பொருள் அவன். அப்பரம் பொருளோடு பிரிவின்றி நிற்கும் திருவருளில் திளைத்து நிற்றலே நிராதார யோகம் எனப்படும்.

எவ்வௌர் தன்மையும் தன் வயிற்படுத்துத் தானேயாகிய தயாபரன் எம் இறை  என்ற மணிவாசகரின் அருள்மொழிக்கு ஏற்ப இறைவன் உலகத்துப் பொருள்கள் யாவற்றிலும் கலந்து நின்றும், அவற்றில் தோய்வின்றி விளங்குவான். மனம் வாக்குக்கு எட்டாத அவனுக்கு வடிவும் நிறமும் கற்பித்து மனத்து இருத்துதல் ஒருவராலும்  இயலாததாகும். உடன் நிற்கும் பொருளுடனே நிற்கும் பொருள் என்பது இறைவனோடு நீக்கமின்றி நிற்பதாகிய அவனது சத்தியாகிய திருவருளை. அதன் வழி நின்று முழு முதற் பொருளை அடைவதே நிராதார யோகம்.

27 காண்கின்றது ஓர் பொருளைக் காண்கின்ற யோகிகளே
காண்கின்றார் காட்சியறக் கண்ணுதலைக் காண்கின்றார்
காண்பானுங் காணப் படும்பொருளும் அன்றியே
காண்கையினாற் கண்டனரே காண்.

ஆன்மா காணும் இயல்புடையது. எனினும் அது தானே காணும் இயல்புடையது அன்று. இறைவன் காட்டவே ஆன்மாக்கள் காணும்திறன் பெறுகின்றன. மெய்ப்பொருளைக் காண்பதற்கும் சிவபெருமானின் திருவருளே துணையாக வேண்டும். மேலே கூறப்பட்ட ஆதார யோகம், நிராதர யோகம் என்ற இரண்டு நெறிகளிலும் ஒழுகிய சிவயோகியர்களுக்கு இறைவனின் திருவருள் துணை நின்று காண்கிறோம் என்ற சுட்டறிவும் நீங்கச் சிவபெருமானைக் காட்டும். அத்தகையவர்கள் காண்பவர்களாகிய தாமும் காணப்படுவதாகிய சிவமும் வேறு வேறு எனக் காணாமல் தற்போம் இழந்து சிவத்துடன் ஒன்றிவிடுவார்கள். ஆதலால் அம்மெய்ப்பொருளை உள்ளவாறு உணர்ந்து நுகர்பவர்கள் இவர்களே யாவர்.

சத்தினால் சத்தினை அறிந்தும் சத்தின் கண் அழுந்தியும், அசத்தினால் அசத்தினை அறிந்தும் அசத்தின் கண் அழுந்தியும் அனுபவித்து வரும் இயல்புடைய ஆன்மா சதசத்து எனப்படும். அது சார்ந்ததன் வண்ணமாம் தன்மை உடையது. அறிவிக்க அறிவது. யோக நிலையிலும் உயிர்களுக்குத் திருவருள் உடன் நின்று உணர்ந்த வேண்டும். அவ்வாறு உணர்த்தப் பெற்ற யோகியர்களே இறைவனாகிய மெய்ப்பொருளின் தன்மையைத் தெளிய உணரும் பேறு பெற்றவர்களாவார்கள்.

இந்த உணர்வு நிலையில் உயிரினிடத்து நான் காண்கின்றேன் என்னும் தன் முனைப்பு அற்றுப் போகும். அறவே, திருவருளோடு ஒன்றி நின்று அறிவதாகிய மேலான நிலை உயிருக்குவாய்க்கும். இவ்வாறு கண்டவரே மாசு அறு காட்சியவர்.

பேசாமை பெற்று அதனிற் பேசாமை கண்டனரைப்
பேசாமை செய்யும் பெரும் பெருமான்  பேசாதே
எண்ணொன்றும் வண்ணம் இருக்கின்ற யோகிகள் பால்
உள்நின்றும் போகான் உளன்.

உரைக்கு அடங்காத திருவருள் கைவரப்பெற்று, அதன் வழியே ஒழுகி, இன்னதன்மையன் என்று பேசுவதற்கு அரிய பரம் பொருளைக் கண்டவர்களுக்கு வெளியிட்டுச் சொல்ல முடியாத சிவப் பேரின்பத்தை அருளி அவரைப் பேசாத மோன நிலையில் இருந்துவான் சிவபெருமான். நினைவுகள் புறத்தே போகாது எண்ணம் பரம்பொருளையே பற்றி ஒற்றித்து நிற்கும் சிவயோகியர்களிடத்து அவர்களின் நெஞ்சத் திருக்கோயில் என்றும் நீங்காத நிலையில் இறைவன் கோவில் கொண்டிருப்பான்.

பேசாமை என்பது மோன நிலை. யோகப் பயிற்சியில் மோன நிலையின்  இயல்புகளை உணர்த்துவது இத்திருப்பாடல். முதலில் கூறப்படும் பேசாமை திருவருளைக் குறிப்பதாகும் . திருவருள் இத்தன்மையுடையது என்று எடுத்துரைக்க இயலாதது. அதனைப் பெற்றவர்கள் மாற்றம் மனம் கழிய நின்ற சிவபரம் பொருளைக் கண்டவர் ஆவார். அந்நிலையில் அவர்களுக்கு வாய்க்கும் பேரின்பம் இத்தகையது என்று எடுத்துரைக்க இயலாததாகும் . இங்ஙன் இருந்ததென்று எவ்வண்ணம் சொல்லுகேன். அங்ஙன் இருந்தது என்று திருஉந்தியாரில் இத்தன்மை விளக்கப்படுகிறது .வாக்கு இறந்த பூரணமாய் மறைக்கு அப்பாலாய், எல்லாமாய் அல்லவுமாய் இருந்ததனை இருந்தபடி இருந்து காட்டிச் சொல்லாமல் சொன்னவர் என்ற ஆலமர் செல்வனின் வழிபாட்டுப்  பாடல் பகுதி இங்கு நினையத்தக்கது. மோனம் என்பது ஞானவரம்பு என்று நீதி நூலும் கூறும். உரை அவிந்து இருத்தல் என்பது தானாக மேற்கொள்ளாது அதுவாக வந்து வாய்க்கும் என்பது இப்பாடலில் விளக்கப்பட்டது. இத்தன்மை வாய்க்கப்பெற்ற அடியார்கள் நெஞ்சத்தில் சிவ பெருமான் கோவில் கொண்டிருப்பான் . அவரைவிட்டு நீங்கான் என்பதனையும் ஆசிரியர் வலியுறுத்தினார்.

29 ஓட்டற்று நின்ற உணர்வு பதிமுட்டித்
தேட்டற்று நின்ற இடஞ்சிவமாம்  நாட்டுற்று
நாடும் பொருளனைத்தும் நானா விதமாகத்
தேடுமிடம் அன்று சிவம்

பரபரப்போடு அங்குமிங்கும் அலைகின்ற இயல்புடைய மனம் திருவருள் ஞானம் கைவரப் பெற்ற அளவில் சலனமற்று நிற்கும். அதன் பின் ஒன்றை விட்டு ஒன்றைப் பற்றுதல் என்னும் இயல்புகெட்டுச் சிவப்பேரின்பத்திலே அழுந்தி வேறு தேட்டம் இல்லாதிருக்கும். அதுவே சிவபரம் பொருள் உயிர்களுக்கு வெளிப்பட்டு அருளும் நிலையாகும். உயிர்களால் சுட்டியறிதற்கு உரிய உலகத்துப் பொருள்களைப் பல்வகையாகத் தேடி அலைபாய்கின்ற வரம்புக்குள் நில்லாத தனிப்பொருள் சிவபெருமான் ஆவன்.

உலகத்துப் பொருட்கள் யாவும் உயிர்களால் சுட்டியறியும் எல்லைக்கு உட்பட்டவை. அவை நிறைவைத் தராததால் உயிர்கள் ஒன்றை விட்டு ஒன்றைப் பற்றி நாலா பக்கங்களிலும் தடுமாறி உழல்கின்றன. அதுவுமின்றி அறிவினால் அறிந்த யாவும் அசத்தாதல் அறிதி என்ற சிவப்பிரகாச உண்மைக்கு ஏற்ப உயிரறிவினால் அறியப்பட்ட பொருள்கள் யாவும் நிலையற்று அழிந்து போகும் இயல்பினை உடையன. இந்த எல்லைக்குள் சிவபெருமான் நிற்பவனல்லன்.

மெய்பொருளிய சிவபெருமான் உயிர்களால் அறிதற்கு அரியவன் என்றால் அவன் முயற்கோடு போலவும் ஆகாயத் தாமரை போலவும் இல்பொருள் ஆவானோ எனில், அதுவன்று பாசஞானத்தாலும் பசுஞானத்தாலும் அறியப்படாத சிவன் பதிஞானம் ஒன்றினாலேயே அறியப்படுபவன். அவ்வாறு பதிஉணர்வு நேர்பட்ட போது உயிரறிவு சலனமற்று இருந்து இறைவன் திருவடிகளைப் பற்றிக் கொண்டு பேரின்ப வெள்ளத்தில் திளைத்திருக்கும் என்பதனை இந்தப் பாடலில் எடுத்து விளக்கினார். தேடும் இடம் சிவனன்று என்றும் தேட்டற்று நின்ற இடம் சிவம் என்றும் இருவகையால் ஆசிரியர் வலியுறுத்தினார்.

30 உணராதே யாதும் உறங்காதே உன்னிப் பு
ணராதே நீ பொதுவில் நிற்கில்  உணர்வரிய
காலங்கள் செல்லாத காதலுடன் இருத்தி
காலங்கள் மூன்றினையும் கண்டு.

பரம்பொருளை உன் சிற்றறிவினால் அறிவேன் என்று முயலாமலும் உலக வாழ்க்கையின் நிலையற்ற தன்மைகளில் தன்மைகளில் மயங்காமலும், தன் முனைப்பற்றுக் திருவருளாகிய ஞானத்தில் பொருந்திப் பொதுமையில் நிற்பாயானால் முக்காலங்களையும்  கண்டு அழிவின்றிக் கால தத்துவத்தைக்  கடந்த இறைவனுடன் என்றும் கூடி இருக்கின்ற இன்பத்தைப் பெற்றிருப்பாய்.

உணர்த்தல் எனப்படுவது தன் முனைப்போடு மெய்ப்பொருளைத் தேட முற்படுதல்.  உறங்காதே என்பது உலகியலில் ஈடுபட்டு மயங்கா திருத்தல். உன்னிப் புணராதே என்பது மல வாதனையால் மீண்டும் உலகியலில் பொருந்தாமை. பொதுவே நிற்றல் என்பது தனக்கெனச் செயல் வேறு இன்றி எல்லாம் சிவன் செயல் என்றுதெளிந்து, திருவருள் செலுத்திய வழிச் செல்லுதல்.  இந்த நெறியிலே நிற்பதனால் விளையும் பயன்களைப் பாடலின் பின் இரண்டு அடிகளால் ஆசிரியர் எடுத்துரைக்கிறார். உலகு கால தத்து வத்துக்கு உட்பட்டது. இறைவன் ஒருவனே கால தத்துவத்தைக் கடந்து நிற்பவன். உடலில் நிலை பெற்றாலன்றிச் செயலற்று  இருக்கும் உயிர். மெய்யின் வழியாகத் தோன்றவும் செயல்படவும் வேண்டியிருப்பதால் அதுவும் கால தத்துவத்திற்கு உட்பட்டதாகிறது. இந்நிலையில் உயிருக்கு இறந்த காலம்,நிகழ்காலம், எதிர்காலம் என்ற மூன்றும் உளவாகின்றன. கால அதீதனாகிய இறைவனோடு ஒன்றிவிட்ட நிலையில் முக்காலம் என்னும் பாகுபாடும் கால எல்லைக்கு உட்படுவதும் இன்றி உயிர் அழிவில்லாப் பேரின்பத்தில் திளைத்து இருக்கும்.

 
மேலும் திருக்களிற்றுப் படியார் »
31 பற்றினுட் பற்றைத் துடைப்பதொரு பற்றறிந்துபற்றிப் பரிந்திருந்து பார்க்கின்ற பற்றதனைப் பற்று விடில் ... மேலும்
 
66 ஆதனமும் ஆதனியுமாய் நிறைந்து நின்றவனைச் சேதனனைக் கொண்டே தெளிவுற்றுச் சேதனனைச்சேதனனிலே செலுத்திச் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar