Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருக்களிற்றுப்படியார் பகுதி2
முதல் பக்கம் » திருக்களிற்றுப் படியார்
திருக்களிற்றுப்படியார் பகுதி3
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜூன்
2013
12:06

66 ஆதனமும் ஆதனியுமாய் நிறைந்து நின்றவனைச்
சேதனனைக் கொண்டே தெளிவுற்றுச் சேதனனைச்
சேதனனிலே செலுத்திச் சிற்பரத் தராய் இருப்பர்
ஏதமறக் கண்டவர்கள் இன்று.

தத்துவக் கூட்டங்களையே இருக்கையாகக் கொண்டு அவற்றில் விளங்கும் உயிர்களை நீக்கமறப் பொருந்தி இருக்கும் சிவபெருமானை அவனுடைய கருணை திருஉருவாய்க் காசியினில் தோன்றும் குருவினால் தெளிய அறிந்து அறிவுடைப் பொருளாகிய தம்மைப் பேரறிவாளனாகிய இறைவன் திருவடியிலே செலுத்திச் சிவபரமாகவே நிற்பார்கள். தமது குற்றங்களை அறுத்தவர்களாகிய சிவஞானிகள்.

ஆதனம் என்பது இருக்கை என்று பொருள்தரும். ஆதனி என்பது இருக்கையில் அமர்ந்தவரைக் குறிக்கும் தத்துவக் கூட்டங்களை இருக்கை யாகவும் அவற்றில் தங்கிச் செயல்படும் உயிர்களை இருக்கையில் அமர்ந்தவர் ஆகவும் ஆசிரியர் குறிப்பிடுகின்றார். தத்துவக் கூட்டங்களிலும் அவற்றோடு பொருந்திய உயிர்களிடத்தும் நீக்கமற நிறைந்திருப்பவன் சிவபெருமான். ஆயினும் அவற்றுள் தோய்வற்றும் நிற்கிறான். எனவே ஆதனமும் ஆதனியுமாய் நிறைந்து நிற்பவன் என்று இறைவனைக் குறிப்பிட்டார்.

பாடலில் சேதனன் என்ற சொல் மூன்று இடங்களில் வருகிறது. சேதனன் என்ற சொல்லுக்கு அறிவுடையவன் என்று பொருள் இச்சொல் ஒவ்வோரிடத்தும் ஒவ்வொரு பொருள் தந்து பாடலில் இடம் பெறுகிறது. முதலில் வருகிற சேதனன் என்ற சொல் பக்குவமடைந்த உயிர்களுக்கு மெய்ப் பொருளை உணர்த்த வந்த ஞான ஆசிரியனைக் குறிப்பிடுகிறது. இரண்டாவது வருகிற சேதனனை என்ற சொல் , உணர்ந்த உணரும் இயல்புபடையதாகி அறிவுடைப் பொருள் ஆகிய உயிரைக் குறித்தது. மூன்றாவது வருகின்ற சேதனனிலே என்ற சொல் பேரறிவினனாகிய சிவ பெருமானைக் குறித்தது. எனவே அறிவு வடிவாகிய ஞானாசிரியன் மெய்யுணர்வை உபதேசிக்க அதனைப் பற்றிக் கொண்டு உயிர்கள் அறிவே வடிவாகிய இறைவனிடத்தில் தம்மை முழுக்க ஆட்படுத்தி இருப்பர் என்ற திரண்ட பொருளை ஆசிரியர் உணர்த்துகிறார்.

இவ்வாறு தெளிவுற்று, அறிவினைச் சிவபரம் பொருளிடத்திலே செலுத்தியவர்கள் தன் முனைப்பு அற்று இறைவனுக்கு மீளா அடிமை பூண்டவர்கள் தம்முடைய உயிரைப் பிணித்த குற்றங்கள் எல்லாம் நீங்கப் பெற்று விளங்குவார்கள். ஏதம்  குற்றம்.

67 விரிந்தும் குவிந்தும் விழுங்குவர்கள் மீண்டும்
தெரிந்தும் தெரியாதே நிற்பர் தெரிந்தும்
தெரியாது நிற்கின்ற சேயிழைபால் என்றும்
பிரியாது நின்றவனைப் பெற்று. 

உலகமெங்கும் நீக்கமற நிறைந்திருந்தும் உயிர் உணர்வுக்கு வெளிப்படாமல் இருக்கிற தன் திருவருளோடு நீக்கமின்றி நிற்பவன் சிவ பெருமான். அப்பெருமானுடைய அடியவர்கள் திருவருளின் வழி நின்று தற்போதம். இழந்தவர்கள். ஆகையினால் இறைவன் யாவற்றிலும் பரந்து நிற்கிறான் என்பதை உணர்ந்தும் தம்மை உணர்ந்து அதனுள் அடங்கியும் இறைவன் என்னும் பேரமுதை விழுங்கியும் திளைப்பார்கள். அந்நிலையில் யாவற்றையும் அறிந்து அறியாதவர் போல் எதனிலும் தோய்வற்று நிற்பார்கள்.

தெரிந்தும் தெரியாது நிற்கும் சேயிழை ஆகிய திருவருளின் வழியாக அவளை என்றும் பிரியாது நிற்கும் இறைவனைப் பெற்று விரிந்தும் குவிந்தும் விழுங்குவார்கள் ஆகிய அடியார்கள் அவனை அறிந்தும் அவனோடு ஒன்றுதலால் தன் முனைப்பு இல்லாது நிற்பர் என்று பொருள் கொள்வர். தெரிந்தும் தெரியாது நிற்கும் சேயிழை என்று திருவருளைக் குறிப்பதற்குக் காரணம் என்ன வெனின் எங்கும் நிறைந்த திருவருள் யாருக்கும் புலப்படாது நிற்றல் ஆதலின். மற்றொன்று யாவற்றொடும் பொருந்தி இருந்தும் அவற்றுள் எல்லாம் தோய்வற நிற்றலினால் என்க.விரிந்தனை குவிந்தனை விளங்கு உயிர் உமிழ்ந்தனை  எனத் தொடங்கும் திருஞான சம்பந்த நாயனார் தேவாரப் பாடல் ஆசிரியரால் எடுத்தாளப்பட்டுள்ளது. அநிந்து மகிழற்கு உரியது. விரிதல் சிவத்தோடு பொருந்தி வியாபகத் தன்மை அடைதல். குவிதல் உணர்வுகள் உலகத்துப் பொருள்களில் படராமல் சிவபரம் பொருளிடத்தே மட்டிலும் செல்லுதல். விழுங்குதல், பருகுதல் போன்ற ஆர்வத்தோடு சிவப் பேரின்பத்தை நுகர்தல், வழங்குகின்றாய்க்கு உன் அருளார் அமுதத்தை வாரிக்கொண்டு விழுங்குகிறேன்  என்று திருவாசகத்தின் அடைக்கலப்பத்தில் மணிவாசகப் பெருந்தகை அருளியது காண்க.

68 தாமடங்க இந்தத் தலமடங்கும் தாபதர்கள்
தாமுணரில் இந்தத் தலமுணரும் தாமுனியில்
பூ மடந்தை தங்காள் புகழ் மடந்தை போயகலும்
நாமடந்தை நில்லாள் நயந்து.

சிவதோடு ஒன்றிய சிவஞானச் செல்வார்கள் உள்ளதை உள்ளவாறு அறிவார்கள். அவர்கள் அறிவு தனக்கென அறியும் அறிவன்று ஆதலால் அவர்களின் ஞானத்தின் பயன் உலகத்தார் அனைவருக்கும் அறிவை விளக்கி நடத்திக் கொடுக்கும். அவகளின் அடக்கம்  உலகத்தார் அனைவருக்கும் பொறியடக்கத்தினைக் கற்பிக்கும். அத்தகைய ஞானிகள் வெகுளியை வென்றவர்கள். ஆயினும் ஏதேனும் ஒரு காரணத்தால் யாரேனும் இச்சீரியர்களுக்குச் சீற்றம் வருமாறு நடந்து கொண்டார் எனின், அச்சீற்றத்திற்கு ஆளானவர்களிடத்துத் திருமகள் தங்கமாட்டாள். புகழ் மடந்தையும் போய் அகலுவாள். நாமகளாகிய கல்வியும் அவர்களிடத்து நில்லாள்.

உணர்ந்தும் அடங்கியும் வாழுகின்ற சிவஞானிகள் ஒரு நாட்டில் இருப்பது நாட்டுக்கும் மக்களுக்கும் நலம் பயக்கும். அவர்கள் அறிவும் அடக்கமும் மற்றையோருக்கும் வழிகாட்டுவதால் அனைவரும் அப்பெருமக்கள் வழிப் பின்பற்றித் தாமும் அறிந்தும் அடங்கியும் ஒழுகிப் பயன்பெறுவர்.

அறுபகை செற்ற இச் சிவஞானியர் சிவத்தைக் கடிந்து வென்ற வர்கள் எனவே அவர்கள் யாரிடத்தும் எப்போதாயினும்  யாரே ஆயினும் அவர்களுக்கு சினமூட்டும் வண்ணம் தவறு இழைப்பார்கள் ஆயின் சிவ ஞானியர்க்கு ஓர் கணமே வெகுளி தோன்றி மின்னல்போல் மறைந்து விடும். எனவே தான் திருவள்ளுவர், குணம் என்னும் குன்பேறி நின்றார் வெகுளி, கணமேயும் காத்தல் அரிதுஎன்றார். நொடிப்பொழுதே ஆயினும்,விற்பிடித்து நீர் கிழிய எய்த வடுப் போல மாறுமே சீர் ஒழுகு சான்றோர் சினம் என்பது உண்மையே ஆயினும், அதனால் சின மூட்டிய வருக்கும் நேரும் கேடு அளவிடற்கரியது. தவறு இழைத்தவர்களுக்குச் செல்வம் அகலும் புகழ் அழியும் கல்வியும் நீங்கும் என்று சிவஞானியிரின் பெருமையை ஆசிரியர் எடுத்துரைத்தார்.

69 துரியம் கடந்தசுடர்த் தோகையுடன் என்றும்
பிரியாது நிற்கின்ற பெம்மான் துரியத்தைச்
சாக்கிரத்தே செய்தருளித் தான் செய்யும் தன்மைகளும்
ஆக்கியிடும் அன்பர்க்கு அவன்.

ஒளியே வடிவான அருட்சத்தியுடன் என்றென்றும் பிரிப்பின்றி நிற்கின்ற சிவபெருமான் தன்னிடத்து மீளாத அன்பு பாராட்டும் மெய் அடியார்களுக்குச் சிவப் பேரின்பத்தை அவர்கள் இவ்வுலகில் வாழ்கின்ற போதே வழங்கியருளுவான். அருள்பெற்ற அடியவர்கள் நனவு நிலையிலேயே துரிய நிலை எய்துவார் அந்நிலையில் சிவபெருமானின் திருவருட் செயல்கள் அவன் அடியார்களின் செயலாகவே நிகழும் வண்ணம் தன் திருவருட் சத்தியினை அவர்களிடத்துத் திகழச் செய்வான்.

இறைவன் உயிர்களின் சுட்டறிவிற்கும் சிற்றறிவுக்கும் எட்டாத நிலையிலே உள்ளவன் என்பதை துரியம் கடந்த...... பெம்மான் என்பதனால் உணர்த்தினார். யாவர்க்கும் அரியவனாகிய தன்னைப் பிரியாத திருவருட் சத்தியுடன் மெய்யடியவர்களுக்கு எளிவந்து அவர்களுக்கு உடனாய் நின்று அவர்களின் வாயிலாகத் தன் அருட்செயல்களை நிகழ்துவிப்பான். அப்போது மெய்யடியார்கள் நனவு நிலையிலேயே துரிய நிலை கைவரப் பெறுவார்கள். இறைவனின் ஆற்றல் அடியவர்களின் ஆற்றலாகவே விளங்கித் தோன்றும். சிவஞான சித்தியார் இப்பெருமக்களை சாக்கிரத்தே அதீதத்தைப் புரிந்தவர்கள் எனவும் சர்வ சங்க நிவர்த்தி வந்த போதனர்கள் எனவும் பராவு சிவர் எனவும் குறிப்பிட்டுப் போற்றும்.

இத்தகைய மெய்யடியார்கள் இறைவன் திருவருளால் நிகழ்த்திய அற்புதச் செயல்களை நால்வர் வாழ்க்கையில் நிகழ்ந்தவற்றை எடுத்துக் காட்டி இதனை அடுத்துவரும் நான்கு பாடல்களிலும் ஆசிரியர் விளக்குகிறார்.

70 ஓடம் சிவிகை உலவாக் கிழியடைக்கப்
பாடல் பனைதாளம் பாலை நெய்தல்  ஏடெதிர் வெப்பு
என்புக்கு உயிர் கொடுத்தல் ஈங்கிவைதாம் ஓங்கு புகழ்த்
தென்புகலி வேந்தன் செயல்.

தென்புகலி என்று புகழ் பெற்று ஓங்கிய சீர்காழிப்பதியிலே அவதரித்தவர் திருஞான சம்பந்தப் பெருமான். அவர் திருக்கொள்ளம் பூதூர் என்ற திருப்பதிக்குச் செல்லுங்கால் ஓடக்காரன் இல்லாமையால் ஓடத்தில் ஏறித் திருப்பதிகம் பாடி அக்கரை சேர்ந்தார். அவருடைய திருப் பாடல்களைக் கேட்டு நுகர்ந்த சிவபெருமான் அவருக்கு திருஅரத்துறையிலே முத்துச் சிவிகை ஒன்று வழங்கினான். அவருடைய தந்தையார் வேள்வி நடத்த விரும்பினார். திருஞானசம்பந்தர் திருவாவடுதுறைப் பெருமான் முன்னிலையில் இடரினும் தளரினும் எனத் தொடங்கும் திருப்பதிகத்தை  விண்ணப்பிக்க சிவபெருமான் எடுக்கக் குறையாத பொற்கிழி ஒன்றை அவருக்கு வழங்கினார் திருமறைக்காட்டில் மறைக்கதவம் அடைக்க சதுரம் மறைதான்  என்று தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடினார். ஞான சம்பந்தர் தன்னுடைய மென்மலர்க் கைகளால் தாளம் இட்டுப் பாடியதைக் கே ட்ட இறைவன் திருக்கோலக்காவிலே அவருக்குப் பொற்றாளம் வழங்கினாள்.பாலை நிலமாக இருந்த திருநனிபள்ளியைத் தமது அருட் பதிகத்தால் நெய்தல் நிலமாக மாற்றினார். சமணரோடு நடந்த வாதிலே, திருஞானசம்பந்தர் இட்ட  திருப்பதிக ஏடு வெள்ளத்தைக் கிழித்துக் கொண்டு எதிர் ஏறிச் சென்றது. மதுரையை ஆண்ட கூன் பாண்டியன் வெப்பு நோயினால் துயருற்ற போது, திருஞான சம்பந்தர் திருநீற்றுப் பதிகம் பாடி நோய் தீர்த்தருளினார். மயிலாப்பூரிலே மட்டிட்ட புன்னையம் கானல் எனக் தொடங்கும் திருப்பதிகத்தை இசைக்க எலும்புகள் பெண் உருப்பெற்றுப் பூம்பாவையாக விளங்கும் அற்புதத்தைத் திருவருளால் நிகழ்த்தினார். இத்தகைய அற்புதங்கள் எல்லாம் திருஞானசம்பந்தர் நிகழ்த்திய செயற்கரிய செயல்களாகும்.

71 கொல்கரியின் நீற்றறையின் நஞ்சின் கொலை தவிர்த்தல்
கல்லே மிதப்பாய்க் கடல் நீந்தல்  நல்ல
மருவார் மறைக்காட்டில் வாசல் திறப் பித்தல்
திருவாமூ ராளி செயல்.

நடுநாட்டில் திருவாமூரில் அவதரித்தவராகிய திருநாவுக்கரசு நாயனார் சமணத்திலிருந்து சைவ  சமயம் திரும்பியதைப் பொறாத சமணர்கள் அக்காலத்து ஆண்டுவந்த பல்லவ மன்னனைத் தூண்டி அவருக்குப் பல இடையூறுகளை விளைவித்தார்கள் . திருநாவுக்கரசரை பட்டத்து யானையைக் கொண்டு தலையை இடற முயன்றனர். சுண்ணாம்புக் காளவாயில் இட்டும், பாற்சோற்றில் நஞ்சு கலந்து ஊட்டியும் கல்லிலே பிணித்துக் கடலில் இட்டும் ஆளுடைய அரசைக் கொல்ல முயன்றனர். இறைவன் திருவருளால் அப்பர் பெருமான் இந்தக் கொலை முயற்சிகளையெல்லாம் வென்றார். திருமறைக் காட்டில் மறைகள் பாடி அடைப்பித்த கதவை பண்ணின் நேர் மொழியாள் உமை பங்கரோ என்று தொடங்கும் திருப்பதிகம் பாடித் திறப்பித்தார். இவை இறைவன் திருவருளால் திருநாவுக்கரசு நாயனார் நிகழ்த்திய அற்புதச் செயல்கள்.

72 மோகம் அறுத்திடின் நாம் முத்தி கொடுப்பதென
ஆகமங்கள் சொன்ன அவர் தம்மைத் தோகையர்பால்
தூதாகப் போகவிடும் வன்றொண்டன் தொண்டுதனை
ஏதாகச் சொல்வேன் யான்.

சுந்தரமூர்த்தி நாயனார் புத்தூர் சடங்கவி சிவாச்சாரியர் திருமகளை மணப்பதற்காக மணக்கோலம் கொண்டிருந்த போது, சிவ பெருமான் கிழவேதியர் உருவில் வந்து அற்பதப் பழ ஆவணம் காட்டி அவரைத்தடுத்து ஆட்கொண்டார். அப்போது சுந்தரமூர்த்தி நாயனார்வன் மைகள் பேசி வாதாடியதனால் வன் தொண்டர் என்ற பெயரைச் சிவ பெருமான் அவருக்குச் சூட்டினான். அத்தகைய சிவபெருமான் உரைத்த ஆகமங்கள் மோகத்தை அறுத்தாலே இறைவன் முத்தி கொடுப்பான் என்று முழங்குகின்றன. ஆயினும் வன் தொண்டர் ஆகிய சுந்தர மூர்த்தி நாயனாரின் பொருட்டுப் பரவையார், சங்கிலியார் ஆகிய இருவரிடத்தும் சிவபெருமானே வன் தொண்டருக்காகத் தூது நடந்தான் அத்தகைய நம்பி ஆரூரரின் தொண்டுகளை என்னால் எவ்வாறு எடுத்துரைக்க இயலும்?

73 பாய்பரியோன் தந்த பரமானந்தப் பயனைத்
தூய திருவாய் மலராற் சொற்செய்து மாயக்
கருவாதை யாம் அறியாவாறு செய்தான் கண்டாய்
திருவாதவூர் ஆளும் தேன்.

வேதத்தினையே தனக்குரிய குதிரையாகக் கொண்டு அதன் மேல் தாவி ஏறி வருபவன் சிவபெருமான். அந்தப் பேரின்ப வெள்ளமாகிய பெருமானை தனது தூய திருவாயில் மலர்ந்த மலர்களாகிய சொற்களால் மாலை தொடுத்துச் சூட்டி அந்தப் பாமாலையை எம்போல்வார் மனம் கசிந்து ஓதுவதனால் அதன் பயனாக எமது பிறவிப் பிணியை திருவாதவூரர் ஆகிய தேனனைய மாணிக்கவாசகப் பெருமான், தீர்த்தருளினார். திருவாசகத்தைத் தேன் என வழங்குதல் அறிஞர் மரபு. ஆசிரியர் திருவாசத்தை அருளிய மணிவாசகப் பெருமானையே தேன் என்று பாராட்டினார். மாணிக்கவாசகர் தமது தூய்மையான திருவாய் மலரினாலே சொல் மாலை செய்தார். அத்தகைய திருவாசகத்தை ஓதியதால் என்போல் அடியார்கள் கருவாதை  உட்பட்டுக் கலங்காதவாறு செய்தார் என்று நன்றி பாராட்டுகிறார்.

74 அம்மையிலும் இம்மையிலும் அச்சந் தவிர்த்தடியார்
எம்மையுமாய் எங்கும் இயங்குதலான் மெய்ம்மைச்
சிவயோகமே யோகம் அல்லாத யோகம்
அவயோகம் என்றே அறி.

இப்பிறப்பிலும் இனிவரும் பிறப்புக்களிலும் தோன்றுகின்ற அச்சத்தைத் தவிர்த்து என்றென்றும் எங்கெங்கும் அடியார்களின் துன்பத்தைத் துடைப்பது உண்மையான சிவயோக மேயன்றி வேறில்லை. சிவபெருமானைக் கருத்தில்  இருத்திச் செய்கின்ற யோகத்தைத் தவிர மற்றைய யோக முறைகள் யாவும் பயனற்றவை என்று அறிவாயாக.

யோக நெறிகள் எனப்படுவன பலவகை. அவை எட்டு உட்பிரிவுகளை கொண்டன. ஆதலால் அட்டாங்க யோகம் எனப்படும். இந்த நெறியில் பயில்வோர் சிவபெருமானைப் பற்றுக் கோடாகக் கொண்டு ஒழுகினாலன்றி யோகநெறி தானே பயன்தரவல்லதன்று. ஆதலால் பிற வகை யோகப் பயிற்சிகளை அவயோகம் என்று குறித்தார்.

சிவயோகப் பயிற்சி இம்மை மறுமை அம்மை எனப்படும் மும்மையிலும் பயன் தருவதனால் அதன் வழி ஒழுகிய மெய்யடியார்க்கும் அவர்களைச் சார்ந்தார்க்கும் பிறப்பினால் வருகின்ற அச்சம் விளையாது என்று உறுதிபடக் கூறினார்.

75 மன்னன் அருள் எவ்வண்ணம் மானுடர்பால் மாணவக
அன்ன வகையே அரன் அருளும்  என்னில்
அடியவரே எல்லாரும் ஆங்கவர்தாம் ஒப்பில்
அடியவரே எல்லாம் அறி.

நாடாளும் மன்னவன் தன் குடிகளிடத்து ஒத்த அருள் கொண்டு அவர்களை முறை செய்து செங்கோல் செலுத்துவான். அது போலவே உலகத்து உயிர்கள் யாவற்றையும் நடுவு நிலை பிறழாமல் சிவபெருமானும் காத்து அருள் புரிவான். உலகத்து உயிர்கள் யாவும் சிவ பெருமானின் அடியவரே. ஆயினும் அவனிடத்து மிக்க அன்பு கொண்டு ஒழுகி அவன் திருவடியை அன்றிப் பிறிதொன்றினை நினையாதவர்க்கு அவன் மிகுந்த அருள்பாலிப்பான் . அத்தகைய அடியவர்களே அவனோடு ஒத்து நிற்றலால் யாவையுமாய்த் திகழ்வார்கள் என்று அறிவாயாக.

வேண்டுதல்  வேண்டாமை இலான் ஆகிய இறைவன் தன் அடியவரிடத்து மட்டிலும் அன்பு பூண்டு அருள்பாலிக்கிறோன் என்பது நடுவு நிலைமை  திறம்பிய செயல் ஆகாதோ? அவனது அருட் குணத்திற்கு இழுக்கன்றோ? என்று  மாணவர் வினாவிய வழி அவருடைய ஐயத்தைத் தீர்த்து விளக்கம் சொல்லுவது போல அமைந்தது இந்தப் பாடல் .

மண்ணுலகத்து வேந்தர் தம் குடிமக்கள் யாவரையும் தண்ணளியோடு புரந்து வரும் கடப்பாடு உடையவர்கள். அவ்வாறே தீமை காணுங்கால் ஒப்ப நாடி அந்தக ஒறுத்தலும் வேந்தர்கள் கடமை. இதனால் வேந்தர்கள் தம் ஆணை வழி ஒழுகினார்க்குப் பரிசுகள் தந்து சிறப்பித்தும் ஒழுகா தார்க்குத் தண்டம் விதித்தும் நடக்கின்ற முறைமை நடுவு நிலைமை திறம்பிய செயலாகாது அறமேயாகும்.

அது போன்றே இறைவனும் வேண்டுதல் வேண்டாமை இலான் ஆயினும் அவனோடு ஒற்றித்து நிற்கும் அடியார்களுக்குப் பேரின்பத்தை வழங்கியும், அவன் ஆணை வழி நில்லாதார்க்கு அவ்வவர் தகுதிக்கேற்பப் படி நிலையிலே வைத்தும் முறை செய்வான். இதுவும் ஒரு பால் கோடுதல் ஆகாது. நீதிமுறைமையாகவே கொள்ளப்படும். அவ்வாறு நிகழ்வது அவனது ஆணையே அன்றி விருப்பு வெறுப்புக்களால் அன்று. அவனோடு ஒற்றித்த அடியவர்கள் இவ்வுலகில் மிக்க பெருமைக்கு உரியவர்கள்.

76 உடம்புடைய யோகிகள் தாம் உற்ற சிற்றின்பம்
அடங்கத்தம் பேரின்பத்து ஆக்கில்  தொடங்கி
முளைப்பதும் ஒன்றில்லை முடிவதும் ஒன்றில்லை
இளைப்பதும் ஒன்றில்லை இவர்.

அணைந்தோர் ஆகிய சீவன் முத்தர்கள் எனப்படுவோர் இவ்வுலகில் உடம்போடு வாழ்கிற காலத்திலேயே சிவபெருமானதுபேரருளுக்கு உரியவர்கள் ஆகிறார்கள்.  அவர்களுக்கு உலகியல் இன்பங்கள் வரினும் அவை இறைவனுக்கே உரியன என்று கருதுவர். விருப்பு வெறுப்பு இரண்டு மின்றி வாழ்ந்தால் அவர்களை ஏறுவினை பற்றுவதில்லை. எனவே இனியும் பிறப்பிற்கு ஆட்பட மாட்டார்கள் இறப்பு என்பதும் அவர்களுக்கு இல்லை அவர்கமுக்குத் தளர்ச்சியும் வருவல்தில்லை.

உடம்புடைய யோகிகள் என்பது இங்கு சீவன் முத்தரைக் குறித்தது. அவர்கள் தன் முனைப் பற்று இன்பத்தில் மகிழ்தலும் துன்பத்தில் வாடுதலும் இன்றி இருப்பதனால் அவர்களுக்குப் பிறவி முளைப்பதில்லை என்றார். அவர்கள் மும்மலங்களும் நீங்கியவர்கள் ஆதலால் முடிவதும் ஒன்றில்லை என்றார். அவர்களுக்கு இன்பத்தால், வரும் மயக்கமும் துன்பத்தால் வரும் சோர்வும் தளர்ச்சியைத் தருவது இல்லை எனவே இளைப்பதும் ஒன்றில்லை என்றார்.

77 பேரின்பமான பிரமக் கிழத்தியுடன்
ஓரின்பத்து உள்ளானை உள்ளபடி பேரின்பம்
கண்ட வரே கண்டார் கடலுயிர்த்த இன்னமுதம்
உண்டவரே உண்டார் சுவை.

பேரின்ப வெள்ளமாகிய சிவபெருமான் தன்னுடைய திருவருளோடு கூட நீக்கமின்றி நின்று இவ்வுலகத்திற்கு அருள்பாலித்து வருகிறான். இன்பக்  கடலான இறைவனை அவனது திருவருள் செலுத்திய வழியிலே சென்று கண்டு அவனோடு ஒன்றிய அடியவர்களே உண்மையான இன்பத்தை உணர்ந்தவர்கள் ஆவர். பாற்கடலில் தோன்றிய அமுதத்தை மாந்தியவர்களே அதன் சுவையை உணர்ந்தாற்போல சிவப் பேரின்பத்தை அருந்தியவர்களே அதன் இயல்பை உணர்ந்தவர்கள் ஆவார்.

உள்ளதனை உள்ளபடி காணுவதற்கு உபாயம் ஒன்றுதான் என்பது இப்பாடலில் வலியுறுத்தப்பட்டது. தம் முனைப்பு அற்று தலைவன் தான் சேர்ந்தார் மட்டிலுமே அவனுடைய பேரின்பத்தை நுகர்ந்தவர் ஆவார்.நுகர்ச்சி இத் தன்மையது என்று சொல்லுவதும் இயலாது. மற்றையோர்க்கு அச்சுவை தெரியவும் வாராது. படி நிலைகளிலே பயின்று திருவடியிலே திளைத்து அப் பேரின்பத்தை நுகர்தல் வேண்டும் என்பதை ஆசிரியர் உணர்த்தினார்.

78 நங்கையினால் நாமனைத்தும் செய்தாற் போல் நாடனைத்தும்
நங்கையினாற் செய்தளிக்கும் நாயகனும்நங்கையினும்
நம்பியாய்த் தான்நடுவே நாட்டப் பெறுமிதுகாண்
எம்பெருமானார் தம் இயல்பு.

நாம் நமது கையினால் விரும்பியவற்றைச் செய்கிறோம். இறைவன் தன்னோடு பிரிப்பின்றி நிற்கின்ற சத்தியாகிய நங்கையினால் உலகனைத்தும் காத்தும் படைத்தும் கரந்தும் செயலாற்றுகிறான். அத்தகைய அப்பனும் அம்மையும் உயிர்களின் உள்ளத்திலே என்றும் பிரியாது விளங்குகின்றனர். இதுவே சிவபெருமானது உண்மை இயல்பாகும்.

முதலில் வருகிற நங்கையினால் என்ற சொல்லை நம் கையினால் என்று பிரித்துப் பொருள் கொள்ளவேண்டும். இந்த உலகில் நாம் இயற்றும் எல்லாச் செயல்களையும் நமது கையினாலேயே இயற்றுகிறோம். மனிதனின் கை நுட்பமான காரியங்களுக்கும் பயன்படுகிறது என்பதை உயிரியலாளர்கள் ஆராய்ந்து தெரிவித்துள்ளார்கள். அதற்குக் காரணமாக அவர்கள் சொல்லுவது, மனிதக் கை ஒன்றில் தான் பெருவிரல் மற்றைய எல்லா விரல்களோடும் எளிதில் பொருந்திப் பணியாற்ற முடியும் என்பதாகும். இந்த அமைப்பு , பிற உயிரினங்களிடத்து இல்லை, இந்த அமைப்பை தி ஆப்போசிங் தம்ப் என வழங்குவர்.

இறைவனோ உலக முழுவதையும் ஆக்கவும் காக்கவும் ஒடுக்கவும் மறைக்கவும் அருளவும் நங்கையைக் கொண்டு இயற்றுகிறான். இவ்விடத்தில் நங்கை என்பது இறைவனோடு நீக்கமின்றி நிற்கும் சிவ சத்தியைக் குறித்தது. அருளது சத்தியாகும் அரன் தனக்கு. அருளை இன்றித் தெருள் சிவம் இல்லை. அந்தச் சிவமின்றிச் சத்தி இல்லை  என்பது அருள் நந்தி சிவனார் சிவஞான சித்தியாரில் எடுத்துரைக்கும் உண்மை.

சிவமும் சத்தியுமாக இணைந்து உயிர்களின் உள்ளம் தோறும் எழுந்தருளி விளங்குவதாய், உயிர்களுக்குப் பாச நீக்கமும் சிவப்பேறும் வழங்குவதாய் அந்தப் பேற்றினை வழங்குவதற்குத் தம் ஒப்பற்ற கருணையினால் ஐந்தொழிலும் நடத்துவதாய் உள்ளதே அம்மையப்பரின் இயல்பு என்பதனை இப்பாடல் தெளிவுறுத்தினார்.

79 பொன்னிறம் கட்டியினும் பூணினும் நின்றாற்போல்
அந்நிறம் அண்ணலும் அம்பிகையும் செந்நிறத்தள்
எந்நிறத்த னாயிருப்பன் எங்கள் சிவபதியும்
அந்நிறத்த னாயிருப்பன் ஆங்கு.

கட்டிப் பொன்னின் இயல்பும் நிறமும் அதனால் செய்யப் பெற்ற வகை வகையான அணிகலன்கள் யாவற்றிலும் மாற்றமின்றி அப்படியே இருக்கும் . அதுபோலவே சிவமும் சத்தியும் பொன்னும் அணிகலனும் போல  வேறுபாடு அற்று விளங்கும். திரு நின்ற செம்மையாளனாகிய சிவ பெருமானின் ஆற்றலே வடிவாகிய சிவசத்தி எங்கு எப்படி எந்நிறத்ததாய் இருக்குமோ அங்கு அப்படி அந்நிறத்தனாய் எங்கள் இறைவனாம் சிவ பெருமாவுனும் நிற்பன்.

சத்திக்கும் சிவத்துக்கும் இயல்பிலும் மாறுபாடு இல்லை. இருப்பும் மாறுபடாது. சத்தியைத் தனியே வழிபடும் கொள்கை சைவ சமயத்திற்கு ஏற்புடையதன்று. அவ்வாறே சத்தியை விடுத்துச் சிவத்தை மட்டும் வழிபடுவதையும் சைவ சமயம் ஏற்காது. தோலும் துகிலும் குழையும் சுருள் தோடும் பால் வெள்ளை நீறும் பசுஞ் சாந்தும் சூலமும் தொக்க வளையும் உடைய தொன்மைக் கோலமே சைவ சமயத்தவர் வழிபடும் திருக்கோலமாகும்.

பொன்னின் மாற்றும், நிறமும் அதனால் செய்யப்பெற்ற அணிகலன்களிடத்தும் மாறாதிருப்பது போலக் கட்டிப் பொன்னாகிய சிவபெருமானும் அணிகலனாகிய திருவருளும் தமக்குள் வேறுபாடுஅற்றுத் திகழும். இப்பாடலில் செந்நிறத்தாளகிய அன்னை எந்நிறத்தாளாயிருப்பள் எங்கள் சிவபதியும் அந்நிறத்தனாய் இருப்பன் என்று இத்தன்மை அம்மையின் மீது வைத்துக் கூறப்பட்டது. இதே கருத்து சிவஞான சித்தியார் சுபக்கத்தில் , எத்திறம் நின்றான் ஈசன் அத்திறம் அவளும் நிற்பாள் என்று அப்பன் மீது வைத்து உணர்த்தப்பட்டது.

80 தாரத்தோடு ஒன்றாவர் தாரத் தோர் கூறுவர்
தாரத்தோடு எங்கும் தலை நிற்பர் தாரத்தின்
நாதாந்தத்தே இருப்பர் நாற்றானத்தே இருப்பர்
வேதாந்தத்தே இருப்பர் வேறு.

சிவபிரான் தன் துணைவியாகிய அருட்சத்தியுடன் நீக்கமின்றி நிலைத்து ஒன்றாகவே இருப்பான். அவன் தன் சத்தியைத் தனது உடலின் இடப்பாகத்திலே கொண்டு பெண் உடல் ஒருதிறமாகவும் நிற்பன். சிவமும் சத்தியும் எல்லாவிடத்திலும் நிகழும் வண்ணமும் எங்கும் நிறைந்தும் நிற்பன். சிவமும் சத்தியும் எல்லாவிடத்திலும் திகழும் வண்ணமும் எங்கும் நிறைந்தும் நிற்பன். நாததத்துவத்தின் முடிவிலே தன் துணைவியாகிய சிவசத்தியுடன் எழுந்தருளி விளங்குவன் . நின்மல துரியம் என்னும் நான்காம் நிலையிலே சத்தியுடன் விளங்குவான். வேதத் தலை தருபொருளாகி அதற்கும் மேம்பட்டு சத்தியும் சிவமுமாய் நிற்பான். இவ்வாறு எல்லாம் நிற்பினும் எதனினும் தோய்வின்றித் தத்துவங்களை எல்லாம் கடந்து தனித்த பொருளாகவும் விளங்குவான்.

நாதாந்தத்தே இருப்பர் என்பது நாததத்துவத்தின் முடிவிலே இருப்பன் என்ற பொருளைத் தந்தது. நாற்றானம் என்பது பிரமரந்திரப் பெருவெளியைக் குறித்தது. வேதாந்தம் என்பது வேதத்தின் முடிவு என்ற பொருளைத் தந்து அவன் மறையின் ஈறு தொடர ஒண்ணாத தன்மை யாளன் என்பதைக் குறித்தது.

81 ஒன்றுரைத்தது ஒன்றுரையார் சாத்திரங்கள் ஒன்றாக
நின்றுரைத்து நிச்சயிக்க மாட்டாவால் இன்றுரைக்க
என்னால் இயன்றிடுமோ என் போல்வார் ஏதேனும்
சொன்னால் தான் ஏறுமோ சொல்.

உலகில் உள்ள சாத்திர நூற்கள் யாவும் தமக்குள் மாறுபட்டு இறைவனின் இயல்பைப் பற்றி வெவ்வேறு கருத்துக்களைச் சொல்லும். இவற்றுள் எந்த நூலில் கூறப்பட்ட செய்தியும்  இறைவன் இன்ன தன்மையன் இப்படியன் என்று உறுதிப்படுத்திக் கூற இயலாது தடு மாறுவதைக் காண்கிறோம் . இப்படி இருக்க அப்பெருமானின் பெருமையை இன்னதென்று என்னால் அளவிட்டு உரைத்தற்கு இயலுமோ உலக வயப்பட்ட மக்கள் நடுவிலே நான் கூறும் மொழிகள்தாம் அவர் காதிலே ஏறுமோ?

சொல்லுக்கும் மனத்துக்கும் எட்டாத பரம்பொருளை பரந்து பட்ட சாத்திரங்களால் இத்தகையவன் என்று வரையறுத்துக் கூறமுடியாமலும் தம்முள் ஒன்றுபட்டு நிற்க முடியாமலும் தடுமாறுவதை நாம் காண்கிறோம். அதனால்தான் அருளாளர்கள் ஐய நின் தன்மை அளப்பரிது எமக்கே  (திருவாரூர் நான் மணி மாலை 29 குமரகுருபரர் ) என்று உரைத்தனர். தொன்மையான நூல்களே சுட்ட முடியாத பரம் பொருளைத் தான் மட்டிலும் எவ்வாறு சுட்ட முடியும் என்று கேட்கிறார் ஆசிரியர். அவ்வாறு சொல்ல முயன்றாலும் உலக இன்பத்தினால் ஈர்க்கப்பட்டுள்ள மாந்தர் செவியில் தன் சொல் ஏறுமோ என்றும் கேட்கிறார்.

இறைவனின் இயல்பு அவன் அருளே கண்ணாகக் காண்பார் அல்லது காண இயலாது என்பதனை இப்பாடலில் வலியுறுத்திக் கூறினார்.

82யாதேனும் காரணத்தால் எவ்வுலகில் எத்திறமும்
மாதேயும் பாகன் இலச்சினையே ஆதலினால்
பேதமே செய்வாய் அபேதமே செய்திடுவாய்
பேதா பேதஞ் செய்வாய் பின்.

இந்த உலகில் மட்டிலும் இன்றி எல்லா உலகங்களிலும் , அவற்றில் உள்ள எல்லாப் பொருள்களிலும் ஆராய்ந்து பார்க்கும் காலத்துச் சிவசத்தியுடன் கூடிய சிவபெருமானின்  எல்லையற்ற கருணையின் பதிவைக் காணுதல் கூடும். இறைவனின் கருணைத் திறன் உள்ளபடி தேடும் அடியவர்களுக்கு இன்னபடிஇன்ன வகை இக்காரணம் என்றில்லாமல் ஏதேனும் ஓர் முறையில் வெளிப்படலாம் . எனவே அம்மையப்பரை வழிபட்டு அடியார்களின் பெருமையை உணர்ந்து சைவ சமயத்துள் முப்பொருள் உண்மைகளை உணர்ந்து கொண்ட நீ பேதம் அபேதம் பேதா பேதம் என்ற முத்திறங்களுள் எதனைப் பின் பற்றினும் அதுவும் உன்னை நன்னெறியில் இட்டுச் செல்லும்.

எவ்வுலகில் என்று கூறியதனால் உலகங்கள் பல என்ற சைவ சித்தாந்தக் கொள்கையை ஆசிரியர் வலியுறுத்தினார். எனவே நாம் அறியாத உலகங்களில் வாழுகின்ற உயிரினங்களும் சிவபெருமான் படைப்பே. அவற்றுக்கும் உய்யும் நெறியைக் காட்டும் சமய ஒழுக்கங்களை சிவ பெருமான் வகுத்தருளியிருப்பான். அவை இன்ன வென்று நமக்குத் தெரியாவிடினும் அவையும் அந்தந்த உலகத்து உயிர்களை முத்திநிலைக்கு இட்டுச் செல்வனவே என்பதைக் குறிக்க எத்திறத்தும் என்றார். அவ்வாறு இறைவன் வகுத்தருளிய அந்தந்த உலகத்துக்குரிய நெறிகள் இறைவனால் வேறுபட அருளப் பெற்றிருப்பின் . அவை அவ்வாறு அருளப்பட்டிருப்பதன் காரணம் நமக்குத் தெரியவாராது. ஆதலால் யாதேனும் காரணத்தால் என்றும் குறிப்பிட்டார்.

இவ்வாறு கூறுவதன் மூலம் சமய ஒழுக்கங்களும் தத்துவ நெறிகளும் தமக்குள் மாறுபட்டிருந்தாலும் அவை யாவும் முழுமுதற் பொருளான சிவபெருமான், தன் எல்லையற்ற கருணையால் அவரவர் தகுதிக்கேற்ப வகுத்தனவே என்பதைக் காட்ட மாதேயும் பாகன் இலச் சினையே என்றுரைத்தார் இலச்சினை முத்திரை, அடையாளம். எல்லா உயிர்களும் அவை எவ்வுலகில் வாழ்ந்தாலும் சிவபெருமானின் அருளுக்கு உரியனவே என்பதனை இந்தப் பாடலின் முதலிரண்டு அடிகள் குறித்தன. விரிவிலா அறிவினார்கள் வேறு ஒரு சமயம் செய்து எரிவினால் சொன்னா ரேனும் எம்பிராற்கு ஏற்றதாகும்  என்றும், ஆறுசமயத்து அவரவரைத் தேற்றும் தகையன, தேறிய தொண்டரைச் செந்நெறிக்கே ஏற்றும் தகையன  இன்னம்பாரன் தன் இணையடியே  என்றும் திருநாவுக்கரசு நாயனார் அருளிய திருவாக்குகள் இங்கு நினையத்தகும் அது போலவே அப்பாலும் அடிச்சார்ந்தார் அடியார்க்கும் அடியேன் என்ற சுந்தர மூர்த்தி நாயனாரின் அருளுரையும் இங்குப் பொருந்தும். சந்தான குரவர்களுள் அருள் நந்தி சிவனார் யாதொரு தெய்வம் கொண்டீர் அத்தெய்வமாகிய ஆங்கே மாதொருபாகனார் தாம் வருவார் என்று அறிவுறுத்தியதும் இக்கருத்தே பற்றி என்க சமயாதீதப் பெருமையடைய சைவம் மற்றைச் சமயங்களைக் காழ்ப்பும் வெறுப்பும் இன்றி அணுகும் முறை இதிலிருந்து புலனாகும்.

எவ்வுலகும் எத்திறத்தும் மாதேயும் பாகன் இலச்சினையே என்று அறிவுறுத்திய ஆசிரியர்அதற்கு எடுத்துக் காட்டுத் தருவார் போல மூன்று கொள்கைளைப் பாடலின் பிற்பகுதியில் குறிப்பிடுகிறார். பேதம் என்பது இறைவனும் உயிரும் ஒளியும் இருளும் போல தம்முள் மாறு பட்டவை. என்ற கொள்கையுடைய தத்துவம். அபேதம் என்பது இறைவனும் உயிரும் பொன்னும் பொன்னால் செய்யப்பட்ட அணிகலன்களும் போலத் தமக்குள் மாறுபாடு இல்லாதவை என்ற ஒருமைக் கொள்கை. இது ஏகான்வாதம் எனவும் கூறப்படும். இறைவனும் உயிரும் சொல்லும் பொருளும் போல ஒரு வகையால் வேறுபட்டும் மற்றொரு வகையால் வேறுபடாமலும் விளங்குவன என்ற கருத்து பேதா பேதம் என்று கூறப்படும். இது விசிட்டாத் துவைதம் எனவும் பெயர் பெறும்.

சைவசித்தாந்தம் இம்மூன்றையும் தனித்தனியே கொள்ளாமல் பிறிவரும் அத்துவிதமாகக் கொள்ளும் என்பதை உமாபதிசிவம் சிவப் பிரகாசத்தில் ,
புறச்சமயத் தவர்க்கு இருளாய் அகச்சமயத்து ஒளியாய்ப்
   புகழ் அளவைக்கு அளவாகிப் பொன் பணிபோல் அபேதப்
 பிறப்பு இலதாய் இருள் வெளிபோல் பேதமும் சொற்பொருள்போல்
   பேதா பேதமும் இன்றிப் பெருநூல் சொன்ன
 அறத்தினால் விளைவதாய் உடல் உயிர் கண் அருக்கன்
   அறிவொளி போல் பிறிவு அரும் அத்துவிதம் ஆகும்
 சிறப்பினதாய் வேதாந்தத் தெளிவாம் சைவ
   சித்தாந்தத் திறன் இங்குத் தெரிக்கல் உற்றாம்
 என்ற திருப்பாடலில் எடுத்துரைக்கிறார்.

83 நின்றபடி நின்றவர்கட்கு அன்றி நிறம் தெரியா
மன்றினுள் நின்றாடல் மகிழ்ந்தானும் சென்றுடனே
எண்ணுறும் ஐம்பூதம் முதல்  எட்டுருவாய் நின்றானும்
பெண்ணுற நின்றாரடும் பிரான்.

இறைவன் திருவருள்  நெறியிலே தலைப்பட்டுத் தம்மை இழந்து அவன் அருளே கண்ணாகக் காணும் அடியவர்களுக்கு அல்லாமல் அவன் இயல்பு அறிய ஒண்ணாது. அத்தகைய பேரருளாளன் ஐம்பெரும் பூதங்களும் கதிரவனும் மதியும் ஆன்மாவும் ஆகிய அட்டமூர்த்தமாய் நின்று அருளுகிறான். அவனே திருவம்பலத்துள் சிவகாமி அம்மையுடன் நின்று திருக்கூத்து ஆடுகின்றான். அவனே ஊழிக் காலத்தில் தனது சத்தியையும் தன்னுள் அடக்கித் தான் ஒருவனே நின்று தனிக்கூத்தும் ஆடுகிறான்.

இறைவனின் இயல்பைக் கூற வந்த ஆசிரியர் அவனை நின்றபடி நின்றவர்க்கு அல்லாமல் நிறந்தெரியான் என்று குறிப்பிடுகின்றார். நிறம் என்பது இந்த இடத்தில் வடிவத்தை உணர்த்திற்று நிறங்களோர் ஐந்துடையாய் விண்ணோர்கள் ஏத்த மறைந்திருந்தாய் எம்பொருமான் என்ற மணிவாசகப் பெருமான் திருவாக்கு மனங்கொள்ளத்தக்கது. உலகத்துப் பொருள்கள் ஒவ்வொன்றும் ஒரு நிறத்தைக் கொண்டன ஆயினும் அவை நமது புறக்கண்ணுக்குப் புலப்படும். ஆகமக்கருத்துப்படி அடிப்படை நிறங்கள் ஐந்து. இறைவன் ஐந்து நிறங்களும் உடையவன். ஆயினும் நம் கண்ணுக்குப் புலப்படாதவன்.

நின்றபடி நிற்றல் என்பது இறைவன் திருவருளிலே ஒடுங்கித் தன் முனைப்பு இன்றி ஒழுகும் அடியார்களின் செயலைக் குறித்தது அத்தகைய மெய்யடியார்களுக்கு அன்றி இறைவனின் தன்மை பிறரால் அறிய வொண்ணாதது. இறைவன் அட்டமூர்த்தமாய் விளங்குகிறான் என்பது ஆகமங்களாலும் திருமுறைகளாலும் பன்முறை எடுத்து ஓதப்பட்ட கருத்து, அட்டமூர்த்தம் என்பது நிலம், நீர், காற்று, விண் ஆகிய ஐம்பூதங்களும் ஞாயிறும் திங்களும் இயமானன் என்று கூறப்படும் ஆன்மாவும் ஆகிய இவை எட்டிலும் நிறைந்து விளங்குகின்ற இறைவனது பெரு வடிவு. இதனை, எண்ணுறும் ஐம்பூதம் முதல் எட்டுருவாய் நின்றான் என்று இப்பாடலில் குறித்தார்.

தில்லைச் சிற்றம்பலத்தில் இறைவன் ஆடுகிற திருக்கூத்து ஆனந்தக்கூத்து என்று வழங்கப்பெறும். அத்திருக்கூத்தை அடியார் பலர் பலவகையாக ஏத்திப் பாடி அருளியுள்ளார்கள். அதன் உட்பொருளை உண்மை விளக்கம் முதலிய சாத்திர நூல்கள் தெளிவாக எடுத்துரைக்கின்றன. ஆனந்தக் கூத்தை ஆடுகின்றவனும் சிவ பெருமானே என்பதை மன்றினுள் நின்று ஆடல் மகிழ்ந்தானும் என்ற சொற்களால் குறிப்பிடுகின்றார். பேரூழிக் காலத்தில் சிவசக்தியையும் தன்னுள் அடக்கிக் கொண்டு சிவபெருமான் திருநடனம் புரிந்து அருள் கிறான் என்பது பெண்ணுற நின்றாடும் பிரான் என்பதனால் இப்பாடலில் குறிப்பிடப்பட்டது. பெண்ணுக்கும் ஒரு திறன் ஆகின்ற அவ்வுரு தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும் என்பது அம்மை திருவுருவையும் தன்னுட் கரந்து தான் தமியனாய் நின்றதனைக் குறிக்கும்.

84 சிவமே சிவமாக யான் நினைந்தாற் போலச்
சிவமாகிய இருத்தல் அன்றிச்  சிவமென்று
உணர்வாரும் அங்கே உணர்வழியச் சென்று
புணர்வாரும் உண்டோ புவி.

சிவ பரம் பொருள் ஒன்றே மெய்ப்பொருளாகவும் அதனுள் ஒடுங்கித் தன்னை இழந்து நிற்றலே உயர்நெறி என்றும் அதன் பயன் சிவமாம் தன்மையைப் பெறுதல் என்பதும் ஆகிய இவையே என் தியானத்தின் வழிகளாகவும், அவ்வாறே நீயும் நினைத்தாலன்றி வேறு எவ்வகையிலும் அப்பெருமானை அடைதல் இயலாது. ஏனெனில் உயிர் உணர்வினால் சிவபெருமானைச் சென்று அடைதலும் இல்லை. உயிரின் முயற்சியினால் அவனைச் சென்று கலத்தலும் இல்லை.

தத்துவ விவாதங்களும் தவ முயற்சிகளும் இறைவனிடத்தில் உயிரைக் கொண்டு சேர்க்கும் வல்லமையற்றன. தன் முனைப்புக் கெட்டு இறைவன் திருவருள் வழியிலே தம்மை முழுவதும் ஒப்படைத்துக் கொண்டவர்களே சிவமாம் தன்மை பெறும் திருவினர். ஆசிரியர் தாம் அவ்வின்பத்தினைப் பெற்றது போலத் தம் மாணவனும் பெற வேண்டும்  என்று இப்பாடலின் மூலம் அறிவுறுத்துகிறார்.

நானே உணர்வேன் என்று முயல்வார்க்கு அறிய பொருள் சிவம்  என்பதையும், சிவனருள் இல்லாமல் அவனைச் சென்று கலத்தல் இல்லம் என்பதனையும் இவை கைகூடத் திருவருளின் துணை வேண்டும் என்பதனையும் இப்பாடலில் அறிவுறுத்தினார்.

85 அதுஇது என்றும் அவன் நானே என்றும்
அதுநீயே ஆகின்றாய் என்றும்  அதுவானேன்
என்றும் தமையுணர்ந்தார் எல்லாம் இரண்டாக
ஒன்றாகச் சொல்லுவரோ உற்று.

பரம் பொருளாகிய ஒன்று, உயிராகிய மற்றொன்று என இரண்டு பொருள்கள் உள்ளன என்றும், பரம்பொருளே நான் என்று ஒன்றாகவும், அப்பரம் பொருள் நீ ஆகின்றாய் எனவும், நான் அப்பரம் பொருள் ஆனேன் என்றும் இவ்வாறு பல்வகையாகத் தவ முயற்சியுடைய பெரியோர் கூறியிருக்கின்றார்கள். இவற்றிலிருந்து சிவபரம் பொருளின் தன்மை வேறு உயிரின் தன்மை வேறு என்று பொருட்தன்மையால் இரண்டு என்பதன்றி மூன்றே என்று வாதிப்பவர்களும் உண்டோ? இல்லை என்க;

இந்தப் பாடலில் ஆசிரியர் பெரும் பெயர்க் கடவுளையும் உயிர்களையும் பற்றிக் தவ முதிர்ச்சி உடையவர்கள் கூறிய கூற்றுக்களை எடுத்துரைத்து அவற்றுக்குச் சைவ சித்தாந்த நெறியிலே பொருள்விரிவு காணுகின்றார்.

வேதங்கள் நான்கு. நான்கு வேதங்களுக்கும் இதயம் போல ஒவ்வொன்றுக்கும் ஒரு சொற்றொடர் அமைந்திருப்பதாகப் பெரியோர் கூறுவர். இந்த வடமொழிச் சொற்றொடர்களுக்கு மகா வாக்கியங்கள் என்று பெயர். சிவஞான போதத்திற்குப் பேருரை வகுத்தருளிய மாதவச் சிவஞான முனிவர் சிறப்புப் பாயிரத்துக்கு உரை வரைகின்ற போது,பெரும் பெயர் என்பதும் மகா வாக்கியம் என்பதும் ஒரு சொல் என்பதும் ஒரே பொருளைத் தருவன என்று சுட்டிச் செல்லுகின்றார்.

பிரக்ஞானம் பிரம்மம் என்ற சொற்றொடர் இருக்கு வேதத்தின் மகாவாக்கியம் என்று கூறுவர். ஒப்பற்ற அறிவே பிரமப் பொருள் என்பது இதன்  பொருள். அகம் பிரம்மாஸ்மி என்ற சொற்றொடர் யசுர் வேதத்துக்கு உரிய மகா வாக்கியம் என்பர். நான் பிரம்மம் ஆகின்றேன் என்பது இதன் பொருள் . சாம வேதத்துக்கு உரிய மகா வாக்கியமாக தத்துவமசி என்ற சொற்றொடர் கூறப்படும். நீ அது ஆகின்றாய் என்பது இதன் பொருள். இங்கு அது என்றது பிரம்ப் பொருளைக் குறித்தது. அதர்வண வேதத்திற்குரிய மகா வாக்கியமாக அயம் ஆத்மா பிரம்மம் என்ற சொற்றொடர் கூறப்படும், இதற்கு, அந்த ஆன்மாவே பிரமம் என்று பொருள்.

இந்த நான்கு மகா வாக்கியங்களும் அந்தந்த வேதத்தின் உயிர் நாடியாகக் கருதப்படுகின்றன. இவற்றின் அமைப்பு முறையைக் கூர்ந்து நோக்கினால் முதல் மகாவாக்யம் பொதுமையில் கூறப்பட்ட ஒன்றாகவும் இரண்டாவது தன்மை நிலையில் கூறப்பட்டதாகவும். மூன்றாவது முன்னிலைப் படுத்திப் பேசப்பட்டதாகவும் நான்காவது படர்க்கையில் வைத்து உரைக்கப்பட்டதாகவும் கொள்ள முடியும்.

இவற்றை உளத்துள் கொண்டே இந்தப் பாடலின் சொற்கிடக்கை முறை அமைந்திருப்பதை அறியலாம்.

இந்த மகா வாக்கியங்கள் யாவும் அத்துவிதக் கொள்கையை உணர்த்த எழுந்தவை. அத்துவிதக் கொள்கை பல்வேறு ஆசிரியர்களால் பல்வேறு முறைகளிலே விரித்துரைக்கப்பட்டது. எனினும் அத்துவித மெய்ம்மையை, மெய்கண்ட தேவநாயனாரே உள்ளபடி கண்டு உணர்த்தினார் என்பதனைத் தாயுமான அடிகள்,

 பொய் கண்டார் காணாப் புனிதமென்னும் அத்துவித
 மெய்கண்ட நாதன் அருள் மேவும் நாள் எந்நாளோ

என்று எடுத்துரைக்கின்றார். உண்மை விளக்கத்தில் திருவதிகை மன வாசகம் கடந்தார்,  பொய்காட்டிப் பொய் அகற்றிப் போதானந்தப் பொருளாம் மெய்காட்டும் மெய்கண்டாய் விண்ணப்பம்  என்று இக்கருத்தை முன்மொழிந்துள்ளார்.

அது இது என்பது அதுவேறு இது வேறு என்று பொருள் கொள்ள நிற்பதால் பேதவாதிகள் கொள்கையாகக் கொள்ளப்படும். அவன் நானே என்பது ஒருமை சுட்டுவதால் அபேதவாதிகளின் கூற்றாகக் கொள்ளப்படும் அது நீயே ஆகின்றாய், அது ஆனேன் என்பவை பேதா பேத வாதம் என்று கொள்ளுவர்.

இந்தப் பாடலின் சொல்லும் பொருளும் இந்நூல்க்குக் காலத்தால் பிற்பட்ட மெய்கண்ட தேவநாயனாரின் சிவஞான போதத்தில் பன்னிரண்டாம் நூற்பாவின்  நான்காம் அதிகரணத்தில் முதல் எடுத்துக் காட்டு வெண்பாவாகிய

அது இது என்றது அது அல்லலான் கண்டார்க்கு
அது இது என்றதையும் அல்லான் பொது அதனில்
அத்துவிதம் ஆதல் அகண்டமும் தைவமே
அத்துவிதி அன்பின் தொழு

என வரும் பாடலில் அமைந்துள்ளமையே அறிந்து மகிழலாம்.

அத்துவித நிலைபற்றிச் சைவசித்தாந்தம் கண்ட கொள்கை இந்த நூலின் எண்பத்து இரண்டாவது பாடலில் ஆசிரியரால் குறிப்பாக உணரர்த்தப்பட்டு. சிவமும் உயிரும் பொருள் தன்மை யால் வேறாகவும் கலப்பினால் ஒன்றாகவும், உயிர்க்கு உயிராதல் தன்மையால் உடனாகவும் நிற்கும் என்று முத்திறக் கொள்கையையும் தனக்குள்  அடக்கிக் கூறுவதே சைவ சித்தாந்தத்தின் நிலைப்பாடாகும் ஒன்றும். இது அருள் நந்தி சிவாச்சாரியரால்,  ஒன்றாகாமல் இரண்டாகாமல் ஒன்றும் இரண்டும் இன்றாகாமல்  என்று இருபா இருபஃது (20)நூலில் செறிவாகக் குறிக்கப் பட்டது.

86 ஈறாகி அங்கே முதலொன்றாய் ஈங்கு இரண்டாய்
மாறாத எண் வகையாய் மற்றிவற்றின் வேறாய்
உடனாய் இருக்கும் உருவுடைமை என்றும்
கடனாய் இருக்கின்றான் காண்.

யாவற்றையும் ஒடுக்குகின்ற முற்றழிப்புக் காலத்தில் தனது அருட்சத்தியையும் தன்னுள் கரந்து சிவம் ஒன்றேயாகியும் அதன் பின்னர் அண்டங்கள் அனைத்தையும் மீளத் தோற்று விக்கும் காலத்து சத்தியும் சிவமும் என இரண்டாகி நின்றும் ஐம்பெரும் பூதங்களும் கதிரவனும் மதியும் ஆன்மாவும் ஆகிய எட்டு உருவினன் ஆகி அவற்றுள் நிறைந்தும்  இவை யாவற்றுள்ளும் கலந்து நின்றும் அவற்றில் தோய்வறத் தன்னியல் பால் வேறாகியும் உயிருக்கு உயிராய் உள்நின்று இயக்கியும் காணும் உபகாரம் காட்டும் உபகாரம் ஆகியவற்றைப் புரிதலால் உடனாகியும் இருக்கின்ற இயல்பினை உடையவன் சிவபெருமான்.

திருமுறைகளின் பிழிவே சைவ சித்தாந்தம் என்று அறிஞர்கள் கொள்ளுவர், அதற்கு ஓர் அரிய எடுத்துக் காட்டாக இப்பாடல் அமைந்துள்ளது. திருவீழிமிழலையில் எம்பந்த வல்லினை நோய் தீர்த்திட்டு எமையாளும் சம்பந்த பெருமான் அருளிய திருப்பாடல் ;

ஈறாய் முதல் ஒன்றாய் இருபெண் ஆண் குணம் மூன்றாய்
மாறாமறை நான்காய் வரு பூதம் அவை ஐந்தாய்
ஆறார் சுவை ஏழு ஓசையோடு எட்டுத்திசை தானாய்
வேறாய் உடன் ஆனான் இடம் வீழிம்மிழலையே.  (1112)

அருமையான இத்தேவாரப் பாடலில் கூறப்பட்ட கருத்துக்கள் திருக்களிற்றுப்பபடியாரின் ஆசிரியரால் இந்தப் பாடலில் பொதிந்து வைக்கப்பட்டிருப்பதும் போற்றுதற்குரியதாகும்.

முற்றழிப்புக் காலம் சர்வ சங்கார காலம் என்று கூறப்படும். அப்போது தன்னிற் பிரிவிலாத் தனது அருட் சத்தியையும் தன்னுள்அடக்கிக் கரந்து சிவபெருமான் ஒருவனே தான் தனியனாக நிற்பான். இதன் முடிவில் உலகங்கள் அனைத்தையும் மீளத் தோற்றுவிக்கும் திருக்குறிப்பு அவன் திருவுள்ளத்தில் நிகழும் போது சிவமும் சத்தியுமாக ஈருருவாய் விளங்கித் தோன்றுவான் . உலகை மீளத் தோற்றுவித்தலை புனருற்பவம் என்று கூறுவர். அவ்வாறு தோற்றுவிக்கும் போது உலகத் தொகுதிகளும் உயிர்த்  தொகுதிகளும் ஆகிய யாவற்றுள்ளும்  சிவபெருமான் கலந்திருப்பான் ஐம்பெரும் பூதங்களும் ஞாயிறும்  திங்களும்  இயமானனும் (ஆன்மாவும்) ஆகிய இவை யாவற்றையும்  தனது வடிவாகக் கொண்டிருக்கும் நிலை அட்ட மூர்த்தம் என்று வழங்கப் பெறும்.

இவ்வாறு யாவற்றுள்ளும் எங்கும் கலந்து  நிறைந்திருந்தாலும் அவற்றின் தன்மை தனக்கு எய்தலின்றித் தான் தனித்து வேறாய் நிற்பன். உலகுயிர்க்ளுக்கும் ஆதாரமாகவும் உயிர்க்குயிராய் நிற்றலானும் இறைவன் உடனாயும் இருப்பான். இவ்வாறு முத்திறப்பட்டு நிற்றல் இறைவனது இயல்பு என்று எடுத்துரைத்தார் ஆசிரியர்.

87 உன் உதரத்தே கிடந்த கீடம் உறுவது எல்லாம்
உன்னுடையது எண்ணா நீ உற்றனையோ மன்னுயிர்கள்
அவ்வகையே காண் இங்கு அழிவதுவும் ஆவதுவும்
செவ்வகையே நின்ற சிவன் பால்.                  

மாணவனே, உன்னுடைய வயிற்றில் பற்பல சிறு புழுக்கள் உள்ளன. அவை பிறந்தும் வளர்ந்தும் முட்டைகள் இட்டும் இறந்தும் வருகின்றவேனும் அவற்றின் தோற்றக் கேடுகள் உனக்கு உரியன ஆகா. அதுபோலவே உலகு உயிர்த் தொகுதிகள் யாவற்றிலும் சிவபரம் பொருள் கலந்து நிற்பினும் வினைப் பயன்களால் உயிர்களுக்கு வரும் இன்பத் துன்பங்களும் சிவபெருமானைப் பற்றுவதில்லை. அப்பெருமான் எங்கும் நிறைந்து யாவற்றையும் கலந்து இருந்தாலும் தான் தூய்மையான செம் பொருளாய் அவற்றிலிருந்து வேறுபட்டுத் தன்னிலை மாறாமல் எப்போதும் ஒரு தன்மையனாய் விளங்குகிறான்.

இறைவன் உலகுயிர்களோடு கலந்து நிற்பான் என்பது முந்திய பாடலில் கூறப்பட்டது. அதனைக் கேட்ட மாணவனுக்கு ஓர் ஐயம் எழும். உலகமும் உயிர்த் தொகுதியும் பல்வேறு மாற்றங்களுக்கும் தோற்றக் கேடுகளுக்கும் துன்பங்களுக்கும் உள்ளாகின்றனவே இவற்றோடு கலந்து நிற்கும் இறைவனுக்கும் இம்மாறுபாடுகள் உண்டாகுமோ என்பது ஐயம். சிற்றுயிர்களின் இன்ப துன்பங்களோ உலகத்தில் நிகழும் மாற்றங்களோ இறைவனைப் பற்றுவதில்லை. அவன் இவற்றைக் கடந்த, தூய்மையான செம்பொருள் என்பது ஆசிரியர் எடுத்துரைக்கும் தெளிவு.

இதற்கு ஓர் உவமையைப் பயன்படுத்துகிறார். வலிமையுள்ள மாந்தர்களுக்கும் வயிற்றிலும் குடலிலும் சிறு சிறு புழுக்கள் தோன்றுவதுண்டு. வயிற்றுக்குள்ளேயே மடிவதும் உண்டு. அவற்றின் நுகர்ச்சிகள் அவை கிடக்கும் வயிறு உடையானை எவ்வகையிலும் பாதிப்பதில்லை. அது போலவே சிற்றுயிர்களின் இன்பத் துன்பங்களை இறைவனும் நுகர்வானல்லன் என்று உவமை காட்டி விளக்குகிறார். உதரம்வயிறு, கீடம்புழு, உறுவதுஅநுபவிப்பது

அவனே அவனி முதலாகி நின்றானும்
அவனே அறிவாய் நின்றானும் அவனே காண்
ஆணாகிப் பெண்ணாய் அலியாகி நின்றானும்
காணாமை நின்றானும் கண்டு.

இவ்வுலகங்களுக்கு எல்லாம் ஒப்பற்ற முதல்வனாய் நிமித்த காரணமாக விளங்குபவன் சிவபெருமானே. உயிர்களின் அறிவிற்குக் காரணமாகியும், அறிந்தும் அறிவித்தும் வருபவன் சிவபெருமானே. உயிர்கள் முன்னை வினைக்கு ஏற்பப் பல்வேறு பிறப்புகளில் சேருமாறு செய்து அவற்றின் பயனை அருந்தச் செய்து அவை உலகில் வாழும் காலத்துத் தோன்றாத் துணையாகி அவற்றுடன் கலந்து நிற்கும் போதும் அவ்வுயிர்களால் காண ஒண்ணாது, அவற்றின் அறிவுக்கு அப்பாற்பட்டு நிற்பவனும் சிவபெருமானே ஆவான்.

அவனிக்கு முதலாயினானும் அவனே. அறிவாய் நின்றானும் அவனே. ஆணாகிப் பெண்ணாகி அலியாகி நின்றானும் அவனே, காணாமை கண்டு நின்றானும் அவனே என்று கொண்டு கூட்டிப் பொருள் காண்க. அவன் என்பது எல்லாவற்றையும் கடந்து நிற்பவனாக விளங்குகின்ற சிவபெருமானைக் குறிப்பதனால் சேய்மைச் சுட்டுச் சொல்லால் உணர்த்தப்பட்டது. முதல் என்ற சொல் சிவபெருமானின் முதன்மையையும், தலைமையையும் உணர்த்தி அவன் நிமித்த காரணன் என்பதனை வலியுறுத்திற்று.

அவனே அறிவாய் நின்றான் என்று கூறியதனால் இறைவனின் அறிவு முற்றறிவு என்பதும், உயிர்கள் அவன் அறிவிக்கவே அறிவன என்பதும் உணர்த்தப் பெற்றன. எல்லாப் பொருளாய் அப்பொருட்களுக்கெல்லாம் அப்பாலாய் யாவற்றுள்ளும் கலந்து இருந்தும் உயிர்களால் காணப்படாத தன்மை உடையவன் இறைவன் என்பது பன்னிரண்டு அடிகளால் அறிவுறுத்தப்பட்டது. அம்மை திருவந்தாதியில் பன்னிரண்டு அடிகளால் அறிவுறுத்தப்பட்டது. அம்மை திருவந்தாதியில்

அறிவானும் தானே அறிவிப்பான் தானே
அறிவாய் அறிகின்றான் தானே அறிகின்ற
மெய்ப்பொருளும் தானே விரிசுடர் பார்ஆகாசம்
அப்பொருளும் தானே அவன் (அற்புதத் திருவந்தாதி 20)
எனவரும் திருப்பாடல் இதனுடன் இணைத்து நோக்கி மகிழத்தக்கது.

இன்றுதான் நீயென்னைக் கண்டிருந்துங் கண்டாயோ
அன்றித்தான் நானுன்னைக் கண்டேனோ என்றால்
அருமாயை ஈன்றவள்தன் பங்கனையார் காண்பார்
பெருமாயைச் சூழல் பிழைத்து

மாணவனே, இன்று நீ என்னை உன் ஊனக் கண்ணால் கண்டும் என் ஆன்மாவன் தன்னியல்பைக் கண்டாயோ? காணவில்லை. அன்றி நான்தான் உன் பருவுடம்பைக் கண்டிருந்தும் உன்னுடைய உயிர் இயல்பைக் கண்டேனோ? கண்டிலேன் மாந்தராகிய நாம் ஒருவரை ஒருவர் கண்ணால் கண்டும் முற்றிலும் கண்டிலோம் எனில், நுண்ணிய மாயையிலிருந்து இவ்வுலகங்களை எல்லாம் தோற்றுவித்து அருளும் சிவ சத்தியைத் தன்னுடைய ஒரு பாகத்திலே கொண்ட உமையொரு பாகனை மாயையுட்பட்ட யார்தான் காண இயலும்? ஒருவராலும் காண ஒண்ணாது.

மாயையை ஈன்றவள் என்பது மாயையிலிருந்தும் உடல்கருவி உலகு நுகர்ச்சிப் பொருள் ஆகிய யாவற்றையும் படைத்து உயிர்களுக்கு வழங்கிய சிவத்தியைக் குறித்தது. வேயுறு தோளி பங்கன் என்பது போல அவளைத் தன் பங்கிலே உடைய சிவபெருமான் பங்கன் என்ற சொல்லால் குறிக்கப்பெற்றார்.

மயக்கமும் செய்யும் மாயையினால் பிணிக்கப்பட்ட உயிர்கள் மாயச் சூழலை வென்று சிவபெருமானைக் காண்பதற்குரிய ஆற்றல் அற்றன என்பதனைப் பெருமாயைச் சூழல் பிழைத்துக் காண்பார் யார் என்று கூறினார். இறைவன் உயிரின் அறிவால் காண்பதற்கு அரியவன் என்பதை இப்பாடல் உணர்த்துகிறது.

கடல் அலைத்தே ஆடுதற்குக் கைவந்து நின்றும்
கடல் அளக்க வாராதாற் போலப் படியில்
அருத்திசெய்த அன்பரைவந்து ஆண்டதும் எல்லாம்
கருத்துக்குச் சேயனாய்க் காண்.

அலைமோதும் கடல் மக்கள் குளிப்பதற்கு இடம் தந்து அவர்களுக்கு எட்டுவதாய் இருக்கும். ஆயினும் கடலின் பரப்பையும் ஆழத்தையும் நினைக்கப் புகுங்கால் அதன் பெருமை அளக்க இயலாதது என்பது புரியும். அவ்வாறே அன்பே வடிவான மெய்யடியார்களுக்கு அருள் பாலிப்பதற்காக ஆசிரியத் திருமேனி தாங்கிச் சிவபெருமான் அவர்களை அணுகி வந்து ஆண்டுகொள்வான். எனினும் அவனுடைய இயல்புகள் யாவும் யாராலும் அறிய ஒண்ணாதன.

கடலில் குளிப்பவர்கள் கடற்கரையின் ஒரு துறையிலே மணற்பாங்கான பகுதியில் இறங்கிக் குளிப்பார்கள். அக்கடலும் தன் அலைக் கைகளை நீட்டி அவர்களை நீராட்டும். குளிப்பவர்களும் தாங்கள் கடலில் குளிப்பதாகவே கொள்ளுவார்கள். ஆனாலும் எல்லையற்று விரிந்து பரந்த ஆழம் காணமுடியாத பெருங்கடலின் ஏதோ ஒரு மூலையில் ஒரு மிகச் சிறு எல்லைக்குள்தான் அவர்கள் நீராடுகிறார்களே அன்றிக் கடல் முழுதும் அவர்கள் வசம் ஆவதில்லை. கடலில் குளித்தேன் என்று சொல்லும்போது பெருங்கடலின் மிகச்சிறு பகுதியில் குளித்தேன் என்றே பொருள்தரும் இவ்வுண்மை நுணுகி ஆராய்வார்கே புலனாகும்.

சிவபெருமான் தன் பெருங் கருணையால் பக்குவப்பட்ட உயிரை ஆண்டு கொள்ளுவதற்காக ஆசிரியத் திருமேனி தாங்கி எழுந்தருளுவான். உயிரை அணுகி அருள் பாலிக்கின்ற இறைவன் உயிரின் அறிவுக்கு மிகச் சேய்மையில் உள்ளான் என்பதை நுணுகி ஆராய்வார் உணர்ந்துகொள்ள முடியும். ஏனெனில் இறைவனின் கருணை எல்லையற்று விரிந்துகிடக்கும் அண்டங்களில் எல்லாம் பரந்து நிற்பது. உயிரின் சிற்றறிவு அவ் விரிவினை உணர்ந்துகொள்ள இயலாது.

இறைவன் எளிவந்தானாயினும் அவன் அருமை அளவிடற்கரியது என்பதை இப்பாடலால் கூறினார்.

சிவன் எனவே தேறினன் யான் என்றமையால் இன்றும்
சிவன் அவனி வந்தபடி செப்பில் அவனிதனில்
உப்பெனவே கூர்மை உருச்செய்யக் கண்டமையில்
அப்படியே கண்டாய் அவன்.

மாணிக்கவாசகர் திருவண்டப் பகுதியில் சிவன் என யாரும் தேறினன் காண்க என்று அருளியுள்ளார். இவ்வாறு அவர் அருளியது அவரை ஆட்கொள்ள வேண்டி ஞானாசிரியத் திருமேனி தாங்கிக் குருந்த மரத்தடியில் எழுந்தருளியிருந்த சிவபெருமானின் கருணைத் திறத்தினை, ஆதலால் சிவபெருமான் அவனியில் புகுந்து ஆட்கொண்டனன் என்பது விளக்கப்பட்டது. கடல் நீரில் ஒவ்வொரு துளியிலும் கலந்திருந்தும் கண்ணுக்குப் புலப்படாது நிற்கும் உப்பு உரிய காலத்தில் கூர்த்த நுனி கொண்ட உப்புக் கற்களாக மாறுவதைப் போல் வடிவம் குறியும் அற்ற பெருமான் அடியார்களை ஆட்கொள்ளும் பொருட்டுத் திருமேனி தரித்தருளுவான் என்பதனை உணர்க.

பாடலின் முதல் வரியில் சிவன் எனவே தேறினன் யான் என்றமையால் என்று ஆசிரியர் காட்டுகிற மேற்கோள் மணிவாசகப் பெருந்தகை அருளிச் செய்த திருவாசகத்தின் திருவண்டப் பகுதியில் வருகின்ற சொற்றொடர் ஆகும்

புவனியில் சேவடி தீண்டினன் காண்க
சிவனென யானுந் தேறினன் காண்க
அவனெனை யாட்கொண்ட டருளினன் காண்க.

என்பது அப்பகுதி, பாண்டிய மன்னனுக்காகப் பரி வாங்கச் சென்ற வாதவூர் அடிகள் குருந்த மரத்தினடியில் எழுந்தருளி வீற்றிருந்த ஞானாசிரியப் பெருந்தகையாகிய சிவபெருமானால் ஆட்கொள்ளப்பட்டார் என்பது அடிகளின் வரலாற்றால் அறியப்படுகின்ற அகச் சான்றுகளால் உறுதிப் படுத்தப்படுகிறது.

வான்பழித்து இம்மண் புகுந்து மனிதரை ஆட்கொண்ட வள்ளலாகிய சிவபெருமான் இங்கு நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளி அடியவர்களை ஆண்டுகொண்டு அருளுவான். அருபரத்து ஒருவன் அவனியில் வந்து குருபரனாகி அருளிய பெருமையைப் போற்றித் திரு அகவல் இயம்பி அருளுகிறது. குருவே சிவன் எனக் கூறினன் நந்தி என்று திருமந்திரம் அறிவுறுத்துகிறது.

92. அவன் இவனாய் நின்றது அவனருளால் அல்லது
எவன் அவனாய் நிற்கின்றது ஏழாய் அவனிதனில்
தோன்றும்மரப் புல்லூரி தொல்உலகில் அம்மரமாய்
ஈன்றிடுமோ சொல்லாய் இது.

வாக்கு மனம் கடந்த வான் கருணையாளனாகிய சிவபெருமான். தன் அடியார்களை ஆண்டுகொண்டு அவர்களைச் சிவமாக்கி அருள் பாலித்து பெருங் கருணைத் திறத்தினாலேயே அன்றி வேறன்று. சிவபெருமான் எளிவந்த தன்மையோடு ஆண்டிலனேல் இவ்வுயிர்கள் எவை தாம் அவனாய் நிற்கின்ற தன்மையைத் தாமாக அடைய முடியும் ? அறிவால் எளியவனே, உலகத்தில் கனிமரங்களைப் பற்றி உயிர் வாழ்கின்ற புல்லூரி அம்மரங்களோடு ஆண்டாண்டுக் காலம் பொருந்தி இருந்தாலும் அம் மரத்தின் கனியைத் தாம் தரவல்லதோ? வல்லதன்று. அது போன்றதே உயிர்களின் தன்மையும் .

பக்குவம் பெற்ற உயிர்கள் இறைவனது திருவருளால் சிவமாம் தன்மை எய்தும். அவ்வாறு எய்துவது சிவ பெருமான் திருவருளால் அல்லாமல் உயிர்களின் முயற்சியினால் அன்று. அது மட்டிலுமல்லாமல் அந்நிலை அடைந்த உயிர்கள் இறைவனுக்கு அடிமைகளாகவே இருக்கும். சிவ பெருமானுக்குரிய ஐந்தொழில் ஆற்றும் வல்லமையோ பிற இயல்புகளோ உயிர்களுக்கு வாய்க்காது. இதனையே மணிவாசகர் சிவமாக்கி எனை ஆண்ட் என்ற சொற்களால் குறித்தருளுகிறார். இந்தப் பகுதி சிவசமவாதக் கொள்கையை மறுத்து எழுந்த பகுதியாகும்.

இக் கொள்கையை மறுப்பதற்கு ஒரு அழகிய உவமையை ஆசிரியர் பயன்படுத்துகிறார். புல்லூரி என்பது ஒருவகை ஒட்டுண்ணித் தாவரம். இது மரங்களின் மேற்பட்டைகளில் ஒட்டிக் கொண்டு தனக்கு வேண்டிய உயிர்ச் சத்தை அந்த மரங்களிடமிருந்தே பெற்று உயிர் வாழ்வது .

இவ்வாறு ஒரு புல்லுருவி சுவைமிக்க கனி தரும் மாமரத்தில் பல்லாண்டுகளாக ஒட்டிக் கொண்டு உயிர் வாழ்கிறது என்று வைத்துக் கொள்ளுவோம். புல்லூரி தனக்கு வேண்டிய உயிர்ச் சத்தை மாமரத்திலிருந்தே நெடுங்காலமாகப் பெற்று வருகிறது. மாமரத்தின் உயிர்ச் சத்து பூங்கொத்தாய், காயாகிக் கனியாகப் பழுத்தும் பயன்தரவல்லது. ஆனால் புல்லூரி அதே உயிர்ச் சத்தை உண்டும் ஒரு நாளும் மாங்கனியைத் தருவதில்லை. இது போலவே எல்லையற்ற சிவபரம் பொருளோடு உயிர் ஒன்றி நின்றாலும் , சிவ பெருமான் அருட்கனி வழங்கும் வள்ளலாக விளங்குகிறான். அவைனச் சார்ந்த உயிர் புல்லூரியைப் போல ஒட்டுண்ணியாக வாழுமே தவிர அது பூப்பதுமில்லை. காய்ப்பதுமில்லை. கனி தருவதுமில்லை.

இப்பாடலின் மூலம் சிவனே பரம்பொருள் என்பதுவும் உயிர் அப் பரம்பொருளுக்கு மீளா அடிமை என்பதையும் அழகிய உவமை மூலம் ஆசிரியர் விளக்கினார்.

93 முத்தி  முதல் கொடிக்கோ மோகக் கொடி படர்ந்து
அத்தி பழுத்தது அருளென்னும் கத்தியினால் 
மோகக் கொடி அறுக்க  முத்திப் பழம் பழுக்கும்
ஏகக் கொடியெழும் காண் இன்று .

உயிர் என்னும் கொடி முறைப்படி வளர்ந்து முத்தி என்னும் கனியினைத் தருவதற்கு உரியது. ஆயின் அந்த முத்திக்  கொடியைச் சுற்றிலும் ஆணவ மலத்தின் காரியமாகிய மோகம் என்னும் கொடி பற்றிப் படர்ந்து மூடிற்று. இதன் விளைவாக முத்திக் கனி கனியாமல் அத்திப்பழம் பழுத்தது. திருவருளாகிய கத்தியின் துணை கொண்டு மோகக் கொடியை வேருடன் அறுத்து நீக்கினால் சிவானந்தப் பெருவாழ்வாகிய முத்திப் பழம் உயிர்க் கொடியிலே பழுக்கும். அப்போது உயிர் இறைவனோடு இரண்டறக் கலத்தலாகிய பேரின்பமும் விளையும்.

இப்பாடல் முற்றுருவமாக அமைந்துள்ளது. ஆன்மாவை முத்தி முதற் கொடி என்றார். ஏனெனில் பரம்பொருளாகிய சிவபெருமான் இயல்பாகவே பாசங்களின்  நீங்கியவன் என்பதால் அவனுக்கு விடுதலை என்ற ஒன்று பேசுவதற்கே இடமில்லை. பாசங்களோவென்னில் அவை யாவும் சடப் பொருள்கள் ஆதலால் அவற்றுக்கு வீடு பேறு என்ற ஒன்று இல்லை. இவ்வாறு முப்பொருள்களில் இரண்டு கழிக்கப்பட்ட பிறகு எஞ்சுவது அடைந்தும் உய்வதற்கு உடையது. எனவே முத்திக்கனி பழுப்பதே உயிர்க்கு உரிய குறிக்கோள் வாழ்வின்  பண்பும் பயனும் அதுவே

தோற்றமில் காலந் தொட்டே உயிரைப் பற்றி நின்ற ஆணவத்தினால் மோகம் என்னும் கொடி அடர்ந்து படர்ந்து உயிராகிய முத்திக் கொடியை முற்றிலும் மூடி விடுகிறது. இதன் பயனாக முத்திக்  கனி பழுக்காமல் அத்திப்பழம்பழுத்தது. அத்திப்பழம் என்பது இங்கு உரிய பயனுக்கு மாறாக மற்றொண்று விளைந்தது என்ற பொருளைத் தந்தது. அத்தி என்பது அருத்தி என்ற சொல்லின் இடைக் குறையாகக்  கொண்டு அவா என்னும் பொருளைத் தருவதாகக் கொள்வாரும் உண்டுகளை போலப் படர்ந்த மோகக் கொடியை அறவே நீக்கினாலன்றி முத்திப்பயன் விளையாது என்பதறிந்து திருவருளாகிய கத்தியைக் கொண்டு மோகக் கொடியை வேரோடு அறுத்து நீக்குதல் வேண்டும். இவ்வாறு நீக்கினால் முத்திந் பழம் விளையும் என்று ஆசிரியர் அறிவுறுத்துகிறார்.                                                                                                                                                               
மோகக் கொடி வேரோடு நீக்கப்பட்ட பிறகு முத்திப்பழம் பழக்கும் ஏகக் கொடி எழும் என்றார். பாசத்தின் கட்டுக்களைத் தகர்த்தெழுந்த உயிர் இறைவனோடு இரண்டற நிற்கும் தகுதியைப் பெற்றுச் சிவானந்தக் கனியைப் பெறும் என்று விளக்கிற்று இப்பாடல், கூர்த்த மெய்ஞ்ஞானம் இப்பாடலில் கத்தியாக உருவகம் செய்யப்பட்டது.

94 அகளத்தில் ஆனந்தத் தானந்தி யாயே
சகளத்தில் தையலுடன் தோன்றி  நிகளத்தைப்
போக்குவதும் செய்தான் தன் பொன்னடிஎன் புன்தலைமேல்
ஆக்குவதும் செய்தான் அவன்.          

அருவநிலையில் இன்பத்துக்குள் இன்பம் தரும் ஞானமே உருவாக விளங்குகின்ற இறைவன் தன் கருணையாகிய சத்தியோடு திருமேனி தாங்கி வந்து குருவடிவம் கொண்டு, தேற்றமில்  காலத்தொட்டே என்னைப் பிணித்திருந்த பாசமாகிய விலங்குகளை அறுத்து எறிந்தான் . தன்னுடைய பொன்னார் திருவடிகளை எனது புல்லிய தலைமீது வைத்து என்னை ஆட்கொண்டான்.

இறைவன் தன்னிலையில் நிற்கும் போது ஞானமே வடிவாகக் குறிகளும் அடையளமும் அற்று விளங்குவான் . அது அருவ நிலை அகளம் அருவம், அந்த நிலையிலும் அவன் ஒப்பற்ற பேரின்ப வடி வினனே , உயிர்களிடத்து வைத்த பேரன்பினால் தனது திருவருட் சத்தி யோடும்கூடத் திருமேனி தாங்கி இறைவன் உயிர்களை ஆட்கொள்ளும் வதற்காக ஞான ஆசிரியனாய் எழுந்தருளுவான் . அதனை அருள்நந்திசிவம்  சிவஞான சித்தியாரில் நம்தம் கருமேனி கழிக்கவந்த கருணையின் வடிவுகாணே (75) என்று அருளிச் செய்கிறார். இது சகள நிலை எனப்படும். (சகளம்உருவம்).

மாதொரு பாகனாக எழுந்தருளிவந்த இறைவன் உயிரைப் பற்றி யிருந்த பாசமாகிய விலங்குகளைத் தறித்துப் போக்குகிறான் . நிகளம் விலங்கு .ஆசா நிகளம் துகளாயின பின் பேசா அனுபூதி பிறந்ததுவே  என்பது அருணகிரிநாதர் திருவாக்கு. விலங்கினை ஒழித்ததுமின்றித் தன் பொன்னடிக் கமலங்களை என்தலை மீது சூட்டியதன் மூலம் எனக்குத் திருவருள் பாலித்தான் என்கிறார் ஆசிரியர்.

95 குற்றம் அறுத்து என்னை ஆட்கொண்டருளித் தொண்டனேன்
உற்ற தியானத்து உடன் உறைவன் முற்றவரின்
மாட்சியுமாய் நிற்பன்யான் மற்றொன்றைக் கண்டிடின் அக்
காட்சியுமாய் நிற்பன் கலந்து.

ஞானாசிரியனாக எழுந்தருளி வந்த சிவபெருமான் என்னைப் பற்றியிருந்த குற்றங்களாகிய மும்மலங்களையும் அறவே போக்கி என்னை ஆட்கொண்டு அருளினான். அவன் திருவருளால் என்னுடைய தியானத்தில் தாமும் நானும் என்ற வேற்றுமை அகன்று போக என்னோடு உடனாக உறைந்தான். தியானம்  முதிர அதன் மாட்சியுமாய்த் திகழ்ந்தான் வாதனையின் பயனாக என் நினைவு வேறு ஒரு பொருள் மேல் செல்ல நேர்ந்தாலும் அந்தக் காட்சியும் தானேயாய்க் கலந்து நின்றான்.

சித்த மலம் அறுவித்துச் சிவமாக்கி எனை ஆண்ட என்ற மாணிவாசகப் பெருந்தகையின் திருவாக்கிற்கு ஏற்ப ஞான வடிவாக வந்த சிவபெருமான் ஆசிரியரது மலப் பிணிப்புக்களை அறுத்தொழித்தான் என்கிறார். அந்நிலையே  தியானத்தில் அழுந்திய ஆசிரியர் தியானத்துக் குரிய பொருளாகிய சிவமும் தியானிப்பவராகிய ஆசிரியரும் தியானித்தல் என்ற நினைவும் மறைந்தகல இறைவன் அவரோடு இரண்டறக் கலந்து நின்றனன் என்கிறார். உலக வாதனை தாக்கும் பொழுது அந்தக் காட்சியுமே குறைவற்ற செல்வமாகிய சிவப் பேரின்பத்தையே நலகும் வகையில் கலந்து நின்றான் என்றுரைத்தார்.

96 ஆளுடையான் என்தரமும் ஆளுடையானே அறியும்
தாளுடையான் தொண்டர் தலைக்காவல் நாளும்
திருவிசலூர் ஆளுஞ் சிவயோகி இன்றென்
வருவிசையை மாற்றினான் மாற்றினாள் வந்து.

உலகையெல்லாம் ஆளுடைய பிரானாகிய சிவபெருமான் என் பொருட்டுத் திருவியலூரைத் தனக்கு இருப்பிடமாகக் கொண்ட சிவயோகி ஆகி ஆளுடைய தேவ நாயனார் என்னும் திருப்பெயர் தாங்கி எனக்கு ஆசிரியராக எழுந்தருளி என்னை ஆண்டு கொண்டார். முற்றறிவுடைய திருவருளால் நிரம்பப் பெற்ற அத் தலைவன் தன்னைச் சார்ந்தவர்களைக் காக்கும் இயல்புடைய முதல்வன் அவன் என்னை ஆண்டு கொண்டமையினால் என்னைப்பிறப்பு இறப்புகளுக்கு உட்படுத்தும் பாசப் பிணிப்புகள் தமது ஆற்றலை இழந்தன. நான் அவனது திருவடி நிழலிலே மாறாத பேரின்பத்தை நுகர்ந்திருக்கும் பேறு பெற்றேன்.

இப்பாடலில் முதலில் வருகிற ஆளுடையான் என்ற சொல் உலகனைத்தையும் தனக்கு உடைமையாகவும் உயிரனைத்தையும் தனக்கு அடிமையாகவும் கொண்ட சிவபெருமானைக் குறித்தது. இரண்டாவது வரும் ஆளுடையானே என்னும் சொல் திருவியலூர் உய்ய வந்த தேவ நாயனாரின் மாணவராகவும் திருக்கடவூர் உய்ய வந்த தேவ நாயனாருக்கு ஞானாசிரியராகவும் விளங்கிய ஆளுடைய தேவ நாயனாரைக் குறித்தது. அவர் சிவயோகியார் என்பதும் திருவியலூரைத் திருப்பதியாகக் கொண்டவர் என்பதும் பாடலின் பிற்பகுதியில் எடுத்துரைக்கப்பட்டன.  இப்பாடலின் இந்தப் பகுதி இந் நூலின் மூன்றாவது பாடலில் குறிப்பாகக் கூறப்பட்டமையும் காண்க.

இறைவன் திருவடி ஞானமே வடிவானது. அவையே உயிர்களின் பொருட்டு ஐந்தொழிலும் நிகழ்த்தி உயிர்களை முத்தி நிலையில்  சேர்ப்பன. எனவே திருத்தளை விதந்து கூறினார்.சாந்தாரைக் காத்தல் தலைவர் கடன் ஆதலினால் தொண்டரைக் காக்கும் இறைவன் திறத்தினை மனமுவந்து போற்றினார். மாறி மாறிப் பிறப்பதற்கு விசையாக அமைந்தது பாசப் பிணிப்பு ஆதலால்  அதை அறுப்பதன் மூலம் செயல் இழக்கச் செய்தான் என்று கூறுவார், விசையை மாற்றினான் என்றார். இத்தகைய பெருங் கருணையைத் தானாக வந்து வழங்கினான் என்பதை உணர்ந்த வந்து மாற்றினான் என்றும் கூறினார்.

97 தூலத்து அடுத்த பளிங்கின் துளக்கம் எனத்
தூலத்தே நின்று துலங்காமல் காலத்தால்
தாளைத்தந்து என் பிறவித்தாளை அற விழித்தார்க்கு
ஆளன்றி என் மாறு அதற்கு.

தனக்கென ஒரு நிறமற்ற படிகக்கல் தன் அருகில் உள்ள பிற பொருள்களின் வேறுபட்ட பல நிறங்கள் தன் மீது படிவதனால் பன்னிறம் காட்டும். அதனால் நொடிக்கு நொடி வேறுபட்டுத் தோன்றும். சார்ந்ததன் வண்ணமாம் தன்மை உடைய உயிராகிய நான் உலகத்துப் பொருள்களில் பிணிப்புண்டு கலங்காமல் மலபரிபாகமும் இருவினை ஒப்பும் சத்திநிபாதமும் நிகழ்ந்த காலத்தில் ஞானசிரியனாக எழுந்தருளி வந்து தன்னுடைய திருவடிப் பேற்றை வழங்கி என் பிறவியின் வேர் அறுமாறு திருக்கடைகண் பாலித்த  சிவ பெருமானுக்கு மீளா அடிமையாகித் தொண்டு செய்தலன்றி நான் வேறு என்ன கைம்மாறு செய்ய வல்லேன்?

பளிங்கு என்று இப்பாடலில் குறிக்கப்படுவது தனக்கென ஒரு நிறமற்ற படிகக்கல். படிகக்கல் தன் அருகில் உள்ள பொருளின் நிறத்தைப் பெற்று விளங்குவதன்றித் தனது இயல்பான நிறத்தை நுணுகிப் பார்ப்பவர்களுக்கன்றிக் காட்டுவதில்லை. முதலில் குறிப்பிடப்பட்ட தூலம் என்பது படிகத்தின் அருகில் உள்ள பருப்பொருளை. இப்பருப் பொருளின் இயல்புக்கேற்றவாறு படிகக்கல் பல்வேறு நிறங்களைக் காட்டி மாறுபட்டுத் தோன்றும். ஆன்மாவும் சார்ந்ததன் வண்ணமாம் தன்மை உடையது. ஆதலால் அது படிகக்கல்லைப் போன்றது.சகல நிலையில் உலகத்துப் பொருள்களில் ஆன்மா படிவதால் அவற்றிலே அழுத்தித் தன்னியல்பு விளங்காமல் கலக்கமுறும். இரண்டாவது வரியில் தூலத்தே நின்று துலங்காமல் என்று ஆசிரியர் குறித்தது உலகத்தப் பொருள்களில் அழுந்தி ஆன்மா கலங்காத வண்ணம் என்ற பொருளைத் தந்தது.

காலத்தால் என்பது உயிருக்கு பக்குவம் வந்துற்ற காலத்தில் என்று பொருள் தரும். பரிபக்குவ காலத்தைப் பற்றிக் குறிப்பிடும் குமரகுருபர முனிவர் தமது கந்தர் கலிவெண்பாவில் , நால் வகையாம் சத்திநிபாதம் தருதற்கு இருவினையும் ஒத்துவரும் காலம் உளவாகி  என்று அருளுதல் நினைவு கூரற்பாலது. உரிய காலத்தில் இறைவன் குரு வடிவு கொண்டு  எழுந்தருளி வந்து தனது திருவடியைத் தந்தருளுகிறான் என்பதனை ஆசிரியர் குறிப்பிடுகிறார். முதலில் வரும் தாள் என்பது இறைவன் திருவடியையும் அதன் பின்னர் வரும் பிறவித்தாள் என்பது பிறவியின் வேர் என்பதனையும் குறித்தன.

தன் திருக்கடைக்கண் பார்வையினால் இறைவன் பிறவியை வேரறுத்தான் என்பதைக் குறிக்க தாளை அற விழித்தான் என்று அருளினார், இப்பெருங் கருணைக்குக் கைம்மாறு இறைவனுடைய திருவடிக்கு மீளா அடிமையாய் ஆட்பட்டிருப்பதன்றி வேறு ஒன்றும் இல்லை என்பதையும் வலியுறுத்திக் கூறினார்.

98 இக்கணமே முத்தியினை எய்திடினும் யான் நினைந்த
அக்கணமே ஆனந்தம் தந்திடினும்  நற்கணத்தார்
நாயகர்க்கும் நாயகிக்கும் நந்திக்கும் யான் அடிமை
ஆயிருத்தல் அன்றியிலேன் யான்

இந்த வினாடியிலேயே இறைவன் திருவருளால் எனக்கு முத்தி நிலை வந்து கூடிடினும் பேரின்பப் பொருளாகிய சிவபெருமான் நான் நினைத்த வினாடியிலேயே எனக்கு மாறாத சிவானந்தத்தை வழங்கிடினும், நல்ல சிவனடியார்களுக்குத் தலைமை பூண்டு விளங்குகின்ற சிவபெருமானுக்கும் பிராட்டிக்கும் அடிமையாய் இருத்தலன்றி நான் பெறும் பேறு மற்றொன்று இலேன்.

மெய்த் தொண்டர்களின் நிலை இதுவெனக் காட்டும் திருப்பாடலாகும் இது. பெறுதற்கரிய முத்தி நிலை வந்தாலும் எல்லையற்ற பேரின்பத்தில் திளைத்திருந்தாலும் அம்மையப்பருக்கு ஆட்பட்டிருப்ப தன்றிச் சிந்தையும் செயலும் வேறு எதனையும் விழையாது திருத்தொண்டிலேயே உறைந்திருப்பர் சிவஞானிகள்.

99 என்னை உடையவன் வந்து என்னுடனாய் என்னளவில்
என்னையும் தன் ஆளாகக் கொள்ளுதலால் என்னை
அறியப் பெற்றேன் அறிந்த அன்பருக்கே ஆளாய்ச்
செறியப் பெற்றேன் குழுவில் சென்று.

என்னை ஆளுடைய சிவபெருமான் தோன்றாத் துணையாய் இருந்து அருள் பாலித்ததோடு அமையாமல் ஞானாசிரியத் திருமேனி கொண்டு எழுந்தருளி வந்து எளியேனாகிய என்னையும் ஆண்டு கொண்டதனால் அவனருளால் என் இயல்பை உள்ளவாறு அறியப் பெற்றேன். அவ்வாறு அறிந்த அன்பர்களுக்கு ஆட்பட்டேன். அவர்களின் திருக்கூட்டத்தில் நானும் ஒருவனாக இடம் பெற்றேன்.

சிவஞானச் செல்வர்கள் திருக் கூட்டத்தில் தாமும் ஒருவராகச் சென்று சேரும் பேறு பெற்றமையை வியந்து போற்றுகிறார் ஆசிரியர். இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே , வாழ்வின் ஒப்பற்ற போது என்பது மெய்யடியார்கள் கண்டு உணர்த்திய கருத்து. சிவஞான போதம் பன்னிரண்டாம் சூத்திரம் அன்பரோடு மருவுதலைச் சிறப்பித்துக் கூறும். திருஞானசம்பந்தர்
திருநாவுக்கரசர் நம்பியாரூரர் ஆகிய மூவரும் சிவனடியார்களோடு சேர்ந்திருக்க விழைந்து பாடி அருளிய திருப்பதிகங்கள் இதனை வலியுறுத்தும்.

100 சிந்தையிலும் என் தன் சிரத்தினிலும் சேரும் வண்ணம்
வந்தவனை மண்ணிடை நாம் வாராமல்  தந்தவனை
மாதினுடன் எத்திறமும் வாழ்ந்திருக்க என்பதலால்
ஏது சொலி வாழ்த்துவேன் யான்.

என் சிந்தையிலும் சிரத்தினிலும் சேர்ந்திருக்கும் வண்ணம் எளிவந்து அருளுகின்ற சிவபெருமானை, வினைவயப்பட்டு மண்ணுலகில் மீண்டும் பிறவாதவாறு என்னை ஆட்கொண்டு தன் பேரருளை வழங்கிய பெருமானை அம்மையப்பராக என்றென்றும் எழுந்தருளியிருந்து அருள் பாலிக்க வேண்டும் என்று போற்றுவதன்றி வேறு என்ன சொல்லி எவ்வாறு வாழ்த்துவேன்.

நன்றி: சி.சு.மணி

 
மேலும் திருக்களிற்றுப் படியார் »
மெய்கண்ட சாத்திரங்கள் பதினான்கனுள் திருவுந்தியாரை அடுத்துத் திருக்களிற்றுப்படியார் இடம் பெறுகிறது. ... மேலும்
 
31 பற்றினுட் பற்றைத் துடைப்பதொரு பற்றறிந்துபற்றிப் பரிந்திருந்து பார்க்கின்ற பற்றதனைப் பற்று விடில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar