பதிவு செய்த நாள்
08
ஜூலை
2013
10:07
தஞ்சாவூர்: பெரியகோவிலில் வராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா, நேற்று வெகு விமர்சையாக துவங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். தஞ்சையில் ராஜராஜசோழன் கட்டிய, ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த பெரியகோவிலுக்கு வெளிநாடு, வெளிமாநில பக்தர்கள் அதிகளவில் வருகின்றனர். பெரிய கோவிலில், ஓராண்டில் குறிப்பிட்ட நாட்களில், ராஜராஜன் சதயவிழா, ஆஷாட நவராத்திரி விழா, பிரஹன் நாட்டியாஞ்சலி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் வெகுவிமரிசையாக நடத்தப்படுவது வழக்கம். அதன்படி வராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்தி விழா நேற்று வெகுவிமர்சையாக துவங்கியது.நேற்று காலை மஹாகணபதி ஹோமம், அபிஷேகம், மஹாவராகி அபிஷேகம் ஆகியவை நடந்தது. இதைத்தொடர்ந்து, வராஹி அம்மனுக்கு இனிப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மஞ்சள், குங்குமம், சந்தனம், தேங்காய் பூ, மாதுளை, நவதானியம், வெண்ணெய், கனிவகை, காய்கறி, புஷ்பம் ஆகிய அலங்காரங்களில் வராஹி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் வெளிமாநில, வெளிமாவட்ட மற்றும் உள்ளூர் பக்தர்கள் திரளாக பங்கேற்று, வராஹி அம்மனை வழிபட்டனர். இவ்விழாவையொட்டி, வரும், 17ம் தேதி வரை, தினமும் காலை, 8 மணி முதல், பத்து மணி வரை சிறப்பு வராஹி ஹோமம், காலை, பத்து மணி முதல், 11 மணி வரை சிறப்பு அபிஷேக ஆராதனைகள், மாலை, ஆறு மணிக்கு மேல் சிறப்பு அலங்கார தீபாராதனை, 6.30 மணிக்கு மேல் இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான ஏற்பாட்டை இந்து சமய அறநிலையத்துறையினர் செய்து வருகின்றனர்.