பதிவு செய்த நாள்
10
ஜூலை
2013
10:07
அலமாதி: செங்காளம்மா பரமேஸ்வரி கோவிலில், பக்தர்கள் தீமிதித்து அம்மனை வழிபட்டனர். சென்னை, செங்குன்றம் அடுத்த, அலமாதி பகுதியில், அகிலாண்டகோடி, பிரமாண்ட நாயகி செங்காளம்மா பரமேஸ்வரி கோவில் உள்ளது. கோவிலின் 2ம் ஆண்டு, சம்வஸ்சராபிஷேக பெருஞ்சோதி பெருவிழா மற்றும் தீமிதி திருவிழா இம்மாதம், 3ம் தேதி, கொடியேற்றுதல், அம்மனுக்கு காப்பு கட்டுதல் மற்றும், 108 கலச அபிஷேகத்துடன் துவங்கியது. அதைத் தொடர்ந்து, எச்சாத்தம்மன் கோவிலில் இருந்து பக்தர்கள் மஞ்சள் நீர் கொண்டு, அம்மனுக்கு அபிஷேகம் செய்தல், பால்குடம் அபிஷேகம் செய்தல், அம்மன் திருவீதி உலா, அக்கினி கப்பரை கரத்தில் ஏந்திய வண்ணம் திருவீதி உலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தேறின. அம்மன் தீமிதி திருவிழா, 7ம் தேதி இரவு, 7:00 மணிக்கு கோவில் வளாகத்தில் நடந்தது. இதில், காளிவேடம் தரித்தும், தலையில் கரகம், வேப்பிலை ஏந்தியபடியும் பக்தர்கள் அம்மனை வேண்டிய படி தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். குழந்தைகளும், பக்தி பரவசத்துடன் தீமிதித்து, அம்மனை வழிபட்டனர். இந்நிகழ்ச்சியைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள், திரண்டிருந்தனர்.