பதிவு செய்த நாள்
10
ஜூலை
2013
10:07
வீரவநல்லூர்: திருப்புடைமருதூர் நாறும்புநாதசுவாமி கோயிலில் வருகிற 14ம் தேதி அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே உள்ள திருப்புடைமருதூர் நாறும்புநாத சுவாமி கோயிலில் வரும் 14ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. இதை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் வருகிற 11ம் தேதி முதல் ஆரம்பமாகிறது. அன்று காலை விக்னேஷ்வர பூஜை, சாந்தி ஹோமம், தசா ஹோமம், மூர்த்தி ஹோமம், மாலையில் ஆச்சார்யவர்ணம் கும்ப அலங்காரம், கடம்யாகசாலை பிரவேசம், முதற்காலயாகசாலை பூஜை, பூர்ணாகுதி, தீபாராதனையும் நடக்கிறது.இரண்டாம் நாளான 12ம் தேதி காலை விசேஷசாந்தி, 2ம் கால யாகசாலை பூஜை, திரவ்யாகுதி, பூர்ணாகுதி, தீபாராதனை, மாலை மூன்றாம் கால யாகசாலை பூஜை, பூர்ணாகுதி, பரிவார திருக்கோயில்கள் முதல் கால யாகசாலை பூஜை, பரிவாரதிருக் கோயில்கள் அஷ்டபந்தனமருந்து சாத்துதல் நடக்கிறது.மூன்றாம் நாளான 13ம் தேதி காலை நான்காம் கால யாகசாலை பூஜை, மாலை ஐந்தாம் கால யாகசாலை பூஜை, யந்திரஸ்தாபனம், பிரதான மூர்த்திகளுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நடக்கிறது. வரும் 14ம் தேதி அதிகாலை பரிவார திருக்கோயிலான சொக்கநாச்சிஅம்மன், முப்பிடாதி அம்மன், முத்தாரம்மன், அங்காளபரமேஸ்வரி அம்மன் ஆகிய கோயில்களில் கும்பாபிஷேகம் நடக்கிறது.பின்னர் ஆறாம் காலயாகசாலை பூஜைக்குப்பின் கடம் எழுந்தருளல் நடக்கிறது. தொடர்ந்து காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் கோமதி அம்பாள் உடனுறை நாறும்பூநாதர், மூலஸ்தானபரிவார விமானங்கள் மற்றும் ராஜகோபுரம் கும்பாபிஷேகம் நடக்கிறது. மூலஸ்தானம், பரிவாரமூர்த்திகள் மகா கும்பாபிஷேகமும், மகா அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து அன்னதானம் நடக்கிறது.யாகசாலை பூஜை நாட்களில் 80க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள், வேதவிற்பனர்கள், தேவாரா இன்னிசை குழுவினரும் கலந்து கொள்கிறார்கள். சமயசொற்பொழிவும் நடக்கிறது. கும்பாபிஷேக விழாவில், சிருங்கேரி சாரதா பீடாதிபதி பாரதி தீர்த்த சுவாமிகள், காஞ்சி பீடாதிபதிகள் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், திருவாடுதுறை ஆதீனம் அம்பலவாணதேசிக பரமாச்சாரிய சுவாமிகள், தருமபுரஆதீனம் சண்முகதேசிக ஞானசம்பந்தபரமாச்சாரிய சுவாமிகள், திருபனந்தபாள் முத்துக்குமாரசுவாமி தம்பிரான், செங்கோல் ஆதீனம் கல்யாணசுந்தரதேசிக சத்தியஞானதரிசினி சுவாமிகள், வேளாக்குறிச்சி சத்தியஞானமகாதேவ தேசிகபரமாச்சாரிய சுவாமிகள் கலந்து கொள்கின்றனர்.சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி ரத்தினவேல்பாண்டியன், ஐகோர்ட் நீதிபதி சுப்பையா உட்பட பலர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்கின்றனர்.கும்பாபிஷேக நாளன்று இரவு விக்னேஸ்வரபூஜை, திருக்கல்யாணம், வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதிஉலாவும் நடக்கிறது.ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி அஜீத் மற்றும் பணியாளர்கள் செய்துவருகின்றனர்.