பதிவு செய்த நாள்
13
ஜூலை
2013
10:07
தஞ்சாவூர்: தஞ்சையை அடுத்த திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில் வரும் 15ம் தேதி கும்பாபிஷேக விழா நடக்கிறது. இதையொட்டி, தஞ்சை மண்டல ஹிந்து அறநிலைத்துறை அதிகாரிகள், அலுவலர்கள் தீவிர முன்னேற்பாடு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.தஞ்சையை அடுத்த திட்டையில் சுகுந்த குந்தளாம்பிகை சமேத வசிஷ்டேஸ்வரர் ஸ்வாமி கோவில், மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் மூன்று சிறப்பையும் பெற்றுள்ளது. ராமரின் குலகுரு வசிஷ்டர், இங்கு தவம் இருந்து பூஜித்ததால் வசிஷ்டேஸ்வரர் என, அழைக்கப்படுகிறார். வசிஷ்டேஸ்வரர் கோவிலில் ஸ்வாமிக்கும், அம்பாளுக்கும் இடையில் ராஜகுருவாக, குருபகவான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பழமையான திட்டை கோவில் 17 ஆண்டுக்கு பின் புதுப்பிக்கப்பட்டு, வரும் 15ம் தேதி கும்பாபிஷேக விழா நடக்கிறது.இதையொட்டி, 14ம் தேதி (ஞாயிறு) காலை 8 மணிக்கு கோ பூஜை, அஸ்வ பூஜை, விசேஷ சந்தி, 9 மணிக்கு யாகசாலை பூஜை, சண்ணவதி ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனையுடன் இரண்டாம் கால யாகசாலை பூஜை நடக்கிறது.மாலை 4 மணிக்கு விசேஷ சந்தியுடன் யாகசாலை பூஜை துவங்குகிறது. 6 மணிக்கு கஜ பூஜை, சுவாசினி பூஜை, தீபலட்சுமி பூஜை, இரவு 8 மணிக்கு மூலிகை பொருட்கள், பழ வகைகளை கொண்டு மூலமந்திர ஹோமம், தீபாராதனை நடக்கிறது. இரவு 8 மணிக்கு நாகை நாகராஜ் தலைமையில் நகைச்சுவை பட்டிமன்றம் நடக்கிறது.கும்பாபிஷேக நாளில் (15ம் தேதி) காலை 5 மணிக்கு யாகசாலை பூஜை துவங்கும். 7:20 மணிக்கு உபசாரங்கள், தீபாராதனை, 9:05 மணிக்கு யாத்ராதானம் கடம் புறப்பாடு, 9:30 மணிக்கு ராஜகோபுரம், கட்ட கோபுரம், ஸ்வாமி அம்பாள் பரிவார விமானங்கள், மஹா கும்பாபிஷேகம், காலை 10 மணிக்கு மூலஸ்தான மஹா கும்பாபிஷேகம், விசேஷ அலங்கார தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து, மாலை 4 மணிக்கு மஹா அபிஷேகம், 6 மணிக்கு ஸ்வாமிக்கும், அம்பாளுக்கும் திருக்கல்யாண உற்ஸவமும் நடக்கிறது. இரவு 9 மணிக்கு பஞ்ச மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்துடன் வீதியுலா நடக்கிறது. இரவு 9 மணிக்கு திருப்பத்தூரான் சேவியர் கலைக்குழுவினரின் நாட்டுப்புற பல்சுவை நிகழ்ச்சி நடக்கிறது.இதற்கான முன்னேற்பாடு பணியில், தஞ்சை மண்டல ஹிந்து அறநிலையத்துறை இணை கமிஷனர் குமரதுரை, உதவி கமிஷனர் ஞானசேகரன் தலைமையில், கோவில் செயல் அலுவலர் கோவிந்தராஜூ, தக்கார் ஜெயபால், ஆய்வாளர் சுரேஷ், கணக்கர் மணிமாறன் மற்றும் பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.