திருநெல்வேலி: சிங்கம்பட்டி சொரிமுத்தையனார் கோயில் ஆடி அமாவசை விழா முன்னேற்பாடு பணிகள் குறித்த அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நெல்லையில் நடந்தது. சிங்கம்பட்டி சொரிமுத்தையனார் கோயில் ஆடி அமாவசை விழா பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் தலைமை வகித்து கலெக்டர் சமயமூர்த்தி பேசியதாவது: சொரிமுத்தையனார் கோயில் ஆடி அமாவசை விழாவில் பக்தர்கள் அதிக அளவில் வருவதையொட்டி சாலைகளை சீர் படுத்த வேண்டும். புதிதாக அமைக்கப்பட்ட முண்டன்துறை பால பகுதியில் வாகனங்களை ஒழுங்குபடுத்த வேண்டும். பாண தீர்த்தத்தில் படகில் குறிப்பிட்ட அளவு பக்தர்களை ஏற்றி சென்று வர வேண்டும். தீயணைப்பு துறையினர் போதுமான தீயணைப்பு பணி கருவிகளுடன் பாதுகாபபு பணிகளை மேற்கொள்ள வேண்டும். வரும் 5ம் தேதி முதல் 9ம் தேதி வரை போதுமான மருந்துகள் மற்றும் விஷக்கடி மருந்துகளுடன் நடமாடும் மருத்துவமனை தயார் நிலையில் வைக்க வேண்டும். அதிகாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை பஸ்களுக்கு அனுமதி, முட்செடிகளை அகற்றுவதோடு ஜெனரேட்டர் மூலம் மின்சார வசதி செய்ய வேண்டும். பக்தர்களுக்கு மின்சார வசதி, பாதுகாக்கப்பட்ட குடி தண்ணீர் வசதி உட்பட அனைத்து அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும். முழு அளவில் துப்புரவு பணிகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார். சேரன்மகாதேவி சப்-கலெக்டர் ரோகிணி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கருப்பசாமி, சிங்கம்பட்டி ஜமீன்தார் முருகதாஸ் தீர்த்தபதி, நகராட்சிகளின் மண்டல நிர்வாக இயக்குனர் மோகன், அறநிலையத் துறை உதவி கமிஷனர் கண்ணதாசன், பி.ஆர்.ஓ மாரியப்பன், டவுன் பஞ்., செயல் அலுவலர் தங்க பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.