பதிவு செய்த நாள்
30
ஜூலை
2013
12:07
ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்றனர் முன்னோர். தினமும் ஆலயம் சென்று, கடவுளை வணங்கி வருவது ஒரு நல்ல பழக்கம் என்பதோடு, புண்ணியமும் கிடைக்கிறது. ஆலய பிரதட்சணத்துக்கு பெரிய புண்ணியம் உண்டு. ஏதோ ஒரு காரணத்துக்காக, ஆலயத்தை சுற்றி வர நேர்ந்தால் கூட, ஆலய பிரதட்சண பலன் கிடைத்து விடும். சந்தியா காலத்தை பிரதோஷ காலம் என்பர். இந்த பிரதோஷ காலத்தில் சிவ தரிசனம் செய்வோருக்கு கைலாசத்தில், ஒரு சீட் ரிசர்வ் செய்து வைக்கப்படுகிறதாம். காலை, பகல், இரவு வேளைகளில் சிவ தரிசனம் செய்வோருக்கு ஆயுள், ஆரோக்கியம், செல்வம், முக்தி என அனைத்தும் கிடைத்து விடுகிறது. அதனால் தான், ஆலய தரிசனம் அவசியம் என்று கூறுகின்றனர். என்ன சார்... கோவிலுக்கு வாங்களேன், சுவாமி தரிசனம் செய்து விட்டு வரலாம்... என்று கூப்பிட்டால், நான் தான் அடிக்கடி போயிட்டு வர்றேனே... நீங்க போயிட்டு வாங்க... என்று சொல்லி, திண்ணையில் உட்கார்ந்து விடுகிறார். தினமும், கோவிலுக்கு போவது, சுவாமி தரிசனம் செய்வது இவருக்கு அலுத்து விடுகிறதாம். தினமும் ஓட்டலுக்கு போய் இரண்டு இட்லி, வடை, வெங்காய சாம்பார் சாப்பிடுவார். அது, இவருக்கு அலுக்கவில்லை. இதுவே, தினமும் இவர்கள் கோவிலுக்கு போனால், அர்ச்சகர் தீர்த்தமும், பிரசாதமும் கொடுப்பர். இந்த தீர்த்தத்திலும், பிரசாதத்திலும் தெய்வீகம் உள்ளது. அதற்காகவாவது, கோவிலுக்கு போக வேண்டும். சில கோவில்களில், சுண்டல் கொடுப்பர். அந்த சுண்டலுக்காகவாவது கோவிலுக்கு போனால், புண்ணியம் கிடைக்கும். எப்படிப் பார்த்தாலும் கோவிலுக்கு போவது, தொழுவது எல்லாமே நம்முடைய நன்மைக்குத் தான். அதனால் தான், ஒரு நாளைக்கு ஒரு முறையாவது, ஆலய தரிசனம் செய்யச் சொன்னார்கள் முன்னோர்.