பதிவு செய்த நாள்
31
ஜூலை
2013
10:07
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், ஆடிக் கிருத்திகை திருவிழாவையொட்டி, நேற்று ஆடிப் பரணி விழாவில், ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் காவடிகள் எடுத்து வந்து, 10 மணி நேரம் காத்திருந்து மூலவரை வழிபட்டனர். திருத்தணி முருகன் கோவிலில் ஆடிக் கிருத்திகை திருவிழா, நேற்று முன்தினம் ஆடி அஸ்வினியுடன் துவங்கியது. நேற்று, ஆடி பரணியை முன்னிட்டு, தமிழகம், ஆந்திரா, கர்நாடகம் மற்றும் புதுச்சேரி உட்பட அண்டை மாநிலங்களில் இருந்து, பக்தர்கள் நேற்று முன்தினம் இரவே திருத்தணிக்கு வந்தனர். மலர், மயில், பால் மற்றும் அன்னக் காவடிகள் எடுத்து சிலம்பாட்டத்துடன் பக்தி பாடல்களை பாடியவாறு, மலையடிவாரத்தில் உள்ள சரவணப் பொய்கை குளத்தில் புனித நீராடி, காவடிகளுக்கு சிறப்பு பூஜை நடத்தினர். மீண்டும் சிலம்பாட்டத்துடன் அரோகரா, அரோகரா பக்தி கோஷம் மற்றும் பாடல்களை பாடிவாறு மலைக் கோவிலுக்குச் சென்றனர். சில பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற, உடல் முழுவதும் அலகு குத்தி மலை கோவிலுக்கு சென்று, தங்களது நேர்த்தி கடனை தீர்த்தனர். பக்தர்கள் மூலவரை தரிசிக்க பொதுவழியில், 10 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
பச்சை மரகத கல்: விழாவையொட்டி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், பச்சை மாணிக்க மரகத கல், தங்க கீரிடம், தங்க வேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடத்தப்பட்டது. அதே போல், உற்சவ பெருமானுக்கு காவடி மண்டபத்திலும், ஆறுமுக சுவாமி, ஆபத்சாகய விநாயகர் மற்றும் வள்ளி, தெய்வானை சன்னிதிகளும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. நேற்று நள்ளிரவு வரை, ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் காவடிகளுடன் வந்து, முருகப் பெருமானை தரிசித்தனர். பக்தர்கள் வசதிக்காக தேவஸ்தான குடில்களில் இருந்து, இரண்டு பேருந்துகள் மலைக் கோவிலுக்கு தேவஸ்தானம் சார்பில் விடப்பட்டன. சரவணப் பொய்கையில் பக்தர்கள் குளத்தில் இறங்கி குளிப்பதற்கு பதிலாக, குழாய்கள் மூலம் தண்ணீர் விடப்பட்டது.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கர் ஜெயசங்கர், இணை ஆணையர் (பொறுப்பு) திருமகள், மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர். இன்று ஆடிக் கிருத்திகை மற்றும் முதல் நாள் தெப்பத் திருவிழா நடக்கிறது.
கட்டண தரிசனத்திலும் கூட்டம்: பக்தர்களின் வசதிக்காக, மலைக்கோவில் வளாகத்தில், 150 ரூபாய் மற்றும் 50 ரூபாய் சிறப்பு நுழைவு கட்டண டிக்கெட் வினியோகம் செய்யப்பட்டது. 50 ரூபாய் டிக்கெட் பெற்ற பக்தர்கள், ஐந்து மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்தும், 150 ரூபாய் டிக்கெட் பெற்ற பக்தர்கள் இரண்டு மணி நேரமும் காத்திருந்து மூலவரை தரிசித்தனர்.