பதிவு செய்த நாள்
06
ஆக
2013
10:08
வத்திராயிருப்பு: விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள சதுரகிரி மலையில், 3 நாட்கள் நடைபெறும் ஆடி அமாவாசை திருவிழா, ஆக., 3 ல் துவங்கியது. அன்று, ஏராளமான பக்தர்கள் சுயம்பு லிங்கமாக எழுந்தருளிய சிவபெருமானை, தரிசனம் செய்து திரும்பினர். நேற்று, மலைப்பாதையில், அத்தியூத்து ஏற்றம், கோணத் தலைவாசல், வழுக்குப் பாறை ஆகிய இடங்கள் குறுகலாக இருப்பதால், அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அந்த இடங்களை கடந்து செல்ல, ஒரு மணி நேரத்திற்கு மேல், பக்தர்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மதுரை, திருநெல்வேலி, கோவில்பட்டி, விருதுநகர், தேனி, உள்ளிட்ட நகரங்களிலிருந்து, மலையடிவாரமான தாணிப்பாறை வரை, சிறப்பு பஸ்கள் இயக்கப் படுகின்றன. அடிவாரத்தில் போதிய இடமில்லாததால், பஸ்கள் வந்து திரும்புவதில் இடநெருக்கடி ஏற்படுகிறது. இன்று காலை 6 மணிக்கு, மூலவர்களான சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம், சுந்தர மூர்த்தி சுவாமிகளுக்கு, ஒரே நேரத்தில் 18 வகை அபிஷேகம் நடைபெறுகிறது. அதன் பிறகு, 7 மணி முதல், சுவாமிகள் அமாவாசை சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
உஷார் படுத்திய "தினமலர்: மலையில் நிலவும் வறட்சியால், குடிநீர் பிரச்னை உள்ளதை, "தினமலர் நாளிதழ், ஏற்கனவே சுட்டிக்காட்டியது. இதன் எதிரொலியாக, பக்தர்கள் தண்ணீர் பாட்டிலுடன் வருகின்றனர். அவர்களில் சிலர் கூறுகையில், "தினமலர் செய்தியை பார்த்த பிறகே, ஆளுக்கொரு தண்ணீர் பாட்டிலுடன் செல்வது என, முடிவெடுத்தோம். இல்லாவிட்டால், தண்ணீருக்கே பெரும் தொகை செலவழிக்க வேண்டியிருக்கும், என்றனர்.
காரையார் சொரிமுத்து அய்யனார் கோயிலில் இன்று ஆடி அமாவாசை திருவிழா
விக்கிரமசிங்கபுரம்: காரையார் காணிக்குடியிருப்பு சொரிமுத்து அய்யனார் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா இன்று (6ம் தேதி) நடக் கிறது. காரையார் காணிக்குடியிருப்பு சொரிமுத்து அய்யனார் சாஸ்தாவாக காட்சியளித்து வருகிறார். தற்போது சொரிமுத்து அய்யனார் கோயில் இருக்கும் ஸ்தலத்தில் அகஸ்தியர் யோக நித்திரையில் இருக்கும்போது ஜோதி ஒன்று தோன்றியது. அப்போது அதை ஞான திருஷ்டியால் அகஸ்தியர் பார்த்தார். அப்போது லோகமாதாவாகிய பிரம்மரட்சஷி பரிவார மூர்த்திகளுடன் மகாலிங்கம் என்ற பெயர் தாங்கிய சிவபெருமானை பூஜித்து தியானம் செய்து கொண்டிருக்கும் காட்சி தெரிந்தது. அன்றைய தினம் ஆடி அமாவாசை தினமாக இருந்ததால் அந்த நாளில் இந்த ஸ்தலத்திற்கு வந்து வழிபாடு செய்பவர்களுக்கு அனைத்து கஷ்டங்களும் நீங்கி சுபிட்சமாக வாழ வேண்டுமென்று அகத்தியர் சிவபெருமானை வேண்டி கொண்டு வரம் வாங்கினார். அன்று மூலசாஸ்தாவானவர் சொரிமுத்து அய்யனார் என்று அழைக்கப்பட்டார். இதனால் ஆடி அமாவாசை திருவிழாவின் போது பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் இக்கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வருவர். இன்று நடக்கும் இக்கோயிலின் ஆடி அமாவாசை திருவிழாவில் பக்தர்கள் பொங்கலிட்டு சுவாமிக்கு சிறப்பு வழிபாடு செய்வர்.