திருச்சி - புதுக்கோட்டை நெடுஞ்சாலையில், திருச்சியிலிருந்து 16 கி.மீ. தொலைவில் உள்ள மண்டையூரில் சாலையிலேயே உள்ளது முருகன் ஆலயம். ஆலயம் மேற்கு திசை நோக்கி அமைந்திருக்கிறது. கருவறையில் முருகன் நின்ற கோலத்தில் வேலை ஏந்தியபடி புன்னகை மாறா முகத்துடன் அருள்பாலிக்கிறார். ஆறுமுகம் பன்னிருகை கொண்ட கந்தவேள், இங்கே ஒரு முகமும் இரு கரமும் கொண்டு காட்சியளிப்பதும், வாகனமான மயில் அருகே இல்லாமல் இருப்பதும் ஏன்? என்ற கேள்வி எழுகிறது! அதற்கு பச்சைமயில் ஏறும் வேலன் இங்கே பாலனாகக் காட்சி அளிப்பதுதான் காரணம் என்ற பதில் கிடைக்கிறது. அதை உறுதி செய்கிறது இங்கே ஆட்சி செய்யும் முருகனின் பால தண்டாயுதபாணி எனும் திருநாமம். குழந்தை உருவில் இருப்பதால் இவரை வழிபடுவோர்க்கு குழந்தை வரம் நிச்சயம். ஆலயத்தின் திருச்சுற்றில் வினாயகர், தட்சிணாமூர்த்தி, விஷ்ணு துர்க்கை அருள்பாலிக்கின்றனர். விஷ்ணு துர்க்கைக்கு ராகு காலத்தில் விளக்கேற்றி வணங்குகின்றனர் பெண்கள். அவர்கள் குறைகளைக் களைவதில் இந்த துர்க்கை வல்லவள் என்பது நம்பிக்கை. அடுத்து பக்த ஆஞ்சநேயர், நாகர் சன்னதிகளும் உள்ளன. அனுமனுக்கு வடைமாலை சாத்தி பக்தர்கள் பிரார்த்தனை செய்து பலன் பெறுகின்றனர். ஆலயத்தின் வடகிழக்கு மூலையில் நவகிரக நாயகர்கள் அருள்பாலிக்கின்றனர். தைமாதம் பூசத் திருவிழா அன்று முருகனுக்கு பதினாறு திரவியங்களைக் கொண்டு விசேஷ அபிஷேகமும் நடைபெறும். பல நூறு பக்தர்கள் இந்த அபிஷேக ஆராதனையில் கலந்துகொண்டு முருகப் பெருமானின் அருளைப் பெற்று முத்தான வாழ்வு பெறுகின்றனர்.