உத்திரப்பிரதேச மாநிலத்திலுள்ள பவுரி - கார்வால் என்ற மூங்கில் காடுகள் நிறைந்த பள்ளத்தாக்குப் பகுதியில் ஓடும் மாலன் நதிக்கரையின் மேலுள்ள சிறிய குன்றில் கண்வரின் ஆஸ்ரமமும் கோயிலும் உள்ளது. இக்கோயிலில் கண்வர், சகுந்தலை, துஷ்யந்தன், இவர்களது மகன் பரதன் ஆகியோர் சிலைகளாக காட்சியளிக்கின்றனர். அருகிலேயே கண்வரின் சமாதியும் உள்ளது. மகரிஷி விஸ்வாமித்திரனின் தவத்தைக் கலைத்த மேனகை அவர் மூலம் தனக்குப் பிறந்த பெண் குழந்தையை காட்டில் விட்டாள். மயில்களால் பாதுகாக்கப்பட்ட அக் குழந்øயை கண்ட மகரிஷி கண்வர், அதற்கு சகுந்தலை என்று பெயரிட்டு வளர்த்து வந்தார். பின்னர் சகுந்தலை - துஷ்யந்தனை மணந்தது; அவன் அவளை மறந்தது; பிறகு இருவரும் இணைந்தது; அவர்களுக்கு பரதன் என்ற ஆண் குழந்தை பிறந்ததுவரை அனைவருக்கும் தெரியும். விஸ்வாமித்திரரை மேனகை மயக்கிய சம்பவமும் இங்குதான் நிகழ்ந்தது. அதற்கு அடையாளமாக இக் கோயில் நுழைவாயில் படிக்கட்டருகே மகரிஷி விஸ்வாமித்திரரும் சிலையாக காட்சியளிக்கிறார். இந்த ஆஸ்ரமத்தைச் சுற்றி ஏராளமான மயில்கள் வாழ்கின்றன. இங்கு வரும் பக்தர்கள் மாலன் நதியில் நீராடிவிட்டு கண்வர் கோயிலுக்கு வந்து வணங்குகிறார்கள். இவர்களை தரிசிப்பவர்களின் குடும்பத்தில் பிரச்னைகள் எதுவும் ஏற்படாமல் அமைதியான வாழ்க்கை நடப்பதாக கூறுகிறார்கள். இக் கோயிலுக்குச் செல்ல பிப்ரவரி, மார்ச் மற்றும் செப்டம்பர் ஆகியவையே உகந்த காலங்களாகும். டெல்லியிலிருந்து மீரட் மெயின் ரோடு வழியாக நிஜாமாபாத் ரோடு வந்து அங்கிருந்து கோத்வார் சென்று ஆலயத்தை அடையலாம்.