செஞ்சி: மேல்மலையனூரில் நடந்த ஊஞ்சல் உற்சவத்தில் கொட்டும் மழையிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நேற்று இரவு அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதை முன்னிட்டு அன்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வெள்ளிக்காப்பு அலங்காரம் செய்தனர். மாலைக்கு பிறகு விட்டு, விட்டு மழை பெய்தது. இதனால் இரவு 12 மணிக்கு துவங்கும் ஊஞ்சல் உற்சவத்தை 11.10 மணிக்கு துவங்கினர். ஊஞ்சல் உற்சவம் நடந்து கொண்டிருந்த போது மழை கொட்டியது. இதையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திறந்த வெளியில் மழையில் நனைந்தபடி பக்தி பாடல்களை பாடினர். ஏராளமான பக்தர்கள் சாமி வந்து ஆடினர்.