திருநெல்வேலி: தமிழகத்தில் சிவன் தாண்டவமாடிய ஐந்து சபைகள் சிதம்பரத்தில் பொற்சபை, மதுரையில் வெள்ளிசபை, திருவாலங்காட்டில் ரத்தினசபை, நெல்லையில் தாமிரசபை, குற்றாலத்தில் சித்திரசபையாகும். இதில் குற்றாலம் மெயின்அருவி கோயிலின் வடபகுதியில் சித்திரசபை அமைந்துள்ளது. மார்கழி திருவாதிரை, ஐப்பசி திருவிழா, சித்திரை விசு திருவிழா ஆகியன இங்கு சிறப்புபெற்றவை. சித்திரசபையின் பழமையையும், பல்வேறு புலவர்கள் பாடிய காலத்தை கொண்டு கி.பி.16-ஆம் நூற்றாண்டில் ஏற்படுத்தப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. சித்திரசபை பிரமிடுபோல் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேற்கூரை தாமிரத் தகடுகளால் வேயப்பட்டவை. இங்கு முழுக்க மூலிகைகளால் வரையப்பட்ட ஓவியங்கள் 600 ஆண்டுகளுக்கு முன்பு வரையப்பட்டவை இன்றளவும் நம் பாரம்பரியத்தை உணர்த்துவதாக உள்ளது. ஓவியங்களைப் புதுப்பிக்கும் பணி கடந்த ஐந்து ஆண்டுகளாக நடந்தது. கரூரை சேர்ந்த புரவலர் தங்கவேல் வழங்கிய ரூ.30 லட்சத்து 35 ஆயிரத்தை கொண்டு பணிகள் நடந்துள்ளது. சித்திரசபையின் கும்பாபிஷேகம் நேற்று காலையில் சிறப்பாக நடந்தது. விக்னேஷ்வர பூஜை, இரண்டாம் கால யாகசாலை பூஜை, தீபாராதனை நடந்தது. மூலவர் விமானத்திற்கு கும்பாபிஷேகம் மேற்கொள்ளப்பட்டது. இதில் வெளிமாவட்டங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.