ஊத்துக்கோட்டை: சிவாலயங்களில் நேற்று பிரதோஷ விழாவை ஒட்டி, ஏராளமான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர். திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அடுத்த சுருட்டபள்ளி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீபள்ளிகொண்டேஸ்வரர் கோவிலில், நேற்று பிரதோஷ விழா கோலாகலமாக நடந்தது. மாலை, 4:30 மணிக்கு வால்மிகீஸ்வரர், நந்திக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. பின்னர் நந்திக்கு மலர் மாலைகள், அருகம்புல் ஆகியவற்றால் சிறப்பு அலங்காரம் செய்து, மகாதீபாராதனை நடந்தது. தொடர்ந்து உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் கோவிலை மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதேபோல், ஊத்துக்கோட்டை ஆனந்தவல்லி சமேத திருநீலகண்டேஸ்வரர், தாராட்சி ஸ்ரீலோகாம்பிகா உடனுறை ஸ்ரீபரதீஸ்வரர் கோவில், வடதில்லை ஸ்ரீபாபஹரேஸ்வரர் கோவில் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் பிரதோஷ விழா சிறப்பாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.