பதிவு செய்த நாள்
15
அக்
2013
10:10
நாமக்கல்: பவுத்திரம் அச்சப்பன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, சாட்டையால் அடித்து பேய் விரட்டும், "வினோத நிகழ்ச்சியில், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். நாமக்கல் மாவட்டம், பவுத்திரம் கிராமத்தில், அச்சப்பன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டு தோறும் ஆயுத பூஜை மறுநாளான விஜயதசமி அன்று, திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அதில், குரும்பா இன மக்கள் மட்டும் பங்கேற்பர். ஒரு நாள் மட்டும் நடக்கும் விழாவில், நாமக்கல் மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் வசிக்கும் பல ஆயிரக்கணக்கான குரும்பா இன மக்கள் பங்கேற்பர். விழாவின் முக்கிய நிகழ்வாக, சாட்டையால் அடித்து பேய் விரட்டும் நிகழ்ச்சியில், திருமணமாகாத பெண்கள், குழந்தை பாக்கியம் வேண்டுவோர், துஷ்ட ஆவி பிடித்தோர் பங்கேற்பர். அவ்வாறு நேர்த்திக் கடன் செலுத்துவோர் மண்டியிட்டபடி கைகளை மேலே தூக்கியிருப்பர். கைதூக்கியுள்ள பக்தர்களை, அச்சப்பன் கோவில் பூசாரி மற்றும் கோமாளி வேடம் தரித்த நபர், பிரம்மாண்ட சாட்டையை சுழற்றி நடனமாடியபடி அடிப்பது வழக்கம். அதன் மூலம், தங்களை பிடித்த துஷ்ட ஆவி உள்ளிட்டவை நீக்கும் என்பது, அம்மக்களின் ஐதீகம்.
இவ்வாண்டு அச்சப்பன் கோவில் திருவிழா, விஜயதசமியான நேற்று நடந்தது. சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த, ஆயிரக்கணக்கான குரும்பா இன மக்கள் குவிந்தனர். தொடர்ந்து, பக்தர்கள் நேர்த்திக் கடனாக ஆடு, கோழி உள்ளிட்டவற்றை பலியிட்டு ஸ்வாமியை வழிபட்டனர். மாலை, 3 மணிக்கு, பிரசித்தி பெற்ற பேய் விரட்டும் நிகழ்ச்சி துவங்கியது. நூற்றுக்கணக்கான ஆண், பெண் பக்தர்கள் வரிசையாக மண்டியிட்டு, கைகளை மேலே உயர்த்தியவாறு காத்திருந்தனர். கோவில் பூசாரி, கோமாளி வேடம் தரித்த நபரும், கைகளை மேலே உயர்த்தி மண்டியிருந்த பக்தர்களை சாட்டையை சுழற்றி விளாசினர். ஒரே அடியில் சிலர் எழுந்து சென்றனர். ஒரு சில பக்தர்கள் இரண்டு, மூன்று அடிகளுக்கு பின் எழுந்து சென்றனர். விழாவில் பங்கேற்ற குரும்பா இன மக்கள் கூறியதாவது: அச்சப்பன் கோவில் விழாவில், எங்கள் இன மக்கள் மட்டும் பங்கேற்பர். இவ்விழாவில், துஷ்ட ஆவி விலகுவதற்கு சாட்டையால் அடித்து பேய் விரட்டும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. திருமணம், குழந்தை பாக்கியம் போன்ற நேர்த்திக் கடன்களுக்காவும் பக்தர்கள் பங்கேற்பர். அவர்களை கோவில் பூசாரி, கோமாளி வேடம் தரித்த நபரும் சாட்டையால் அடிப்பர். பெரிய சாட்டையால் அடித்தாலும் காயம் ஏற்படாது. சாட்டை அடி விழுந்தவுடன துஷ்ட ஆவி விலகும். அதுபோல் நினைத்ததும் நடக்கும். சாட்டையடி பெறுவோர், கோவிலுக்கு சென்று தீர்த்தம், பிரசாதம் பெறுவர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பேய் விரட்டுதல் நிகழ்ச்சியில் பங்கேற்பர். இவ்வாறு அவர்கள் கூறினர்.