பதிவு செய்த நாள்
28
அக்
2013
10:10
சபரிமலை: சபரிமலை பாதுகாப்பு நடவடிக்கையின் ஒருபகுதியாக, 18-ம் படியின் இரண்டு பக்கங்களிலும், தேங்காய் உடைக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. சபரிமலை செயல் திட்ட உயர்மட்ட கமிட்டி தலைவர் ஜெயக்குமார் கூறியதாவது:சபரிமலை கோவிலின் கல்சுவரில், 18-ம் படியின் இரண்டு பக்கங்களிலும், தேங்காய் உடைப்பது இந்த சீசனில் மாற்றப்படும். பக்தர்கள், 18-ம் படியேற வரிசையில் நிற்கும் போது, பெரிய நடைப்பந்தல் அருகே தேங்காய் உடைக்க வசதி செய்யப்படும். சபரிமலையில் அமைக்கப்பட உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கான டெண்டர், இன்று உறுதி செய்யப்படும். இது, தினமும், 50 லட்சம் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிக்கும் திறன் கொண்டது. சபரிமலையில் எல்லா கழிப்பறைகளிலும் உள்ள கழிவுநீர் இங்கு கொண்டு வரப்பட்டு சுத்திகரிக்கப்படும். அடுத்த ஆண்டு சீசனுக்குள், இது செயல்பட துவங்கும். சபரிமலையில், பாதுகாப்புக்காக தனித்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு, மாநில அரசும் அங்கீகாரம் வழங்கியுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.