பதிவு செய்த நாள்
05
நவ
2013
02:11
நெற்றிக்கண்ணில் தோன்றிய தீப்பொறிகள் முருகனின் பிறப்புக்கு கருவாக அமைந்ததால் அவர் அக்னிகர்ப்பன் எனப்பட்டார். அப்பொறிகள் கங்கையில் தவழ்ந்ததால் காங்கேயன் என்ற பெயர் வந்தது. சரவணப்பொய்கையில் வளர்ந்ததால் சரவணபவன் எனப்பட்டார். இதுவே முருகனுக்கு மந்திரப்பெயராக விளங்குகிறது. பக்தர்கள் ஆறெழுத்து மந்திரமான ஓம் சரவணபவ என்று ஜெபிப்பர். குழந்தைவடிவில் இருந்த ஆறுகுழந்தைகளை வளர்க்கும் பணியில் கார்த்திகைப்பெண்கள் ஈடுபட்டனர். அவர்களின் பெயரால் முருகனுக்கு கார்த்திகேயன் என்ற பெயர் ஏற்பட்டது. பிள்ளையைக் காண வந்த பார்வதி அன்போடு குழந்தைகளை ஒன்று சேர்த்து அணைத்து மகிழ்ந்தாள். ஆறுமுகமும் ஒன்றாகி கந்தன் (ஒன்றுசேர்ந்தவன்) என பெயர் பெற்றார்.
குழந்தைகளுக்கு ஆயுதப்பெயர்: தெய்வங்களிடம் இருக்கும் ஆயுதங்களைக் குழந்தைகளுக்கு இடும் வழக்கம் இல்லை. சூலம், உடுக்கை, ஈட்டி என்று யாராவது பெயர் வைக்கிறார்களா? ஆனால், முருகனின் வெற்றி வேலைச் சிறப்பிக்கும் விதத்தில், வெற்றிவேல், கதிர்வேல், தங்கவேல், சக்திவேல்,வடிவேல், முத்துவேல், வேலாயுதம் என்று பெயரிடுகிறார்கள். கச்சியப்ப சிவாச்சாரி யார் கந்தபுராணத்தில் முருகனை வணங்கும்போது, திருக்கைவேல் போற்றி போற்றி! என்று ஒருமுறைக்கு இருமுறை போற்றுகிறார். முருகனுக்கு ஆறுமுகங்கள் இருப்பதைப் போல வேலுக்கும் ஆறு முகங்கள் உண்டு.
சித்திரப்பூக்கள்: முருகன் சிவந்தமேனியுடன், கையில் வேல் தாங்கியிருப்பார். வலதுபக்கம் வள்ளியும், இடப்புறம் தெய்வானையும் காட்சியளிப்பர். சூரியன் முருகனின் வலக்கண்ணாகவும், சந்திரன் இடக்கண்ணாகவும் உள்ளது. சூரியனைக் கண்டு தாமரை மலரும். சந்திரனைக் கண்டு நீலோத்பலம் என்னும் குமுதமலர் மலரும். அதனால், சித்திரம் தீட்டும்போது வலப்புறம் இருக்கும் வள்ளிக்கு தாமரையும், இடப்புறம் இருக்கும் தெய்வானைக்கு குமுத மலரும் வரைய வேண்டும். முருகனின் பார்வையால் இம்மலர்கள் மலர்வதைப் போல பக்தர்களின் வாழ்வும், எப்போதும் மலர்ந்திருக்கும்.
தமிழ்க்கடவுளுக்கு ஆந்திரப்பெண்: வள்ளிக்கொடியின் அடியில் கிடைத்த பெண் குழந்தையை, வேடர் தலைவன் நம்பிராஜன் எடுத்து வளர்த்தான். அக்குழந்தைக்கு அக்கொடியின் பெயரையே வைத்தான் என்ற கதையே வள்ளியின் பெயர்க்காரணமாக விளங்குகிறது. ஆனால், வாரியார் இந்தப் பெயருக்கு வேறொரு விளக்கம் தருகிறார். அரசன் மனைவி அரசி, பொன்னன் மனைவி பொன்னி ,அதுபோல வள்ளல் மனைவி வள்ளி ஆகிறாள். முருகன் பன்னிரு கைகளால் அடியார்களுக்கு அருளை வாரி வழங்குவதால் வள்ளல். அந்த வள்ளலின் மனைவியாக இருப்பதால் வள்ளி. வள்ளிக்கணவனான முருகனை வணங்கினால் வாழ்வு செழிக்கும். வள்ளிமணாளனாக முருகன் அருளும் தலம் திருத்தணி. இதனை அடுத்த ஆந்திராவில் அமைந்த சித்தூரே வள்ளி அவதரித்த ஊர். முன்பு தழிழ் பேசும் பகுதியில் இருந்தது. சிற்றூர் என்ற சொல்லே சித்தூர் என திரிந்தது. சின்ன ஊர் என்பது இதன் பொருள்.
நினைத்தாலே இனிக்கும்: தமிழ் எழுத்துகள் வல்லினம், மெல்லினம், இடையினம் என மூன்றாகும். மெல்லினம் மென்மையும், இனிமையும் மிக்கது. மெல்லினத்தை முதலில் வைத்து, இடையின, வல்லின எழுத்தை அதன் பின் அமைத்து உண்டான பெயர் முருகு. முருகா என்ற பெயருக்கு தெய்வத்தன்மை, அழகு, இளமை, மகிழ்ச்சி, மணம், இனிமை என்னும் ஆறுபொருள்கள் உண்டு. முருகனின் பெயர்களில் முருகன், குமரன், குகன் ஆகிய மூன்றும் சிறப்பு மிக்கவை. இதனை அருணகிரிநாதர், முருகன், குமரன், குகன் என்று மொழிந்து உருகும் செயல் தந்து உணர்வென்று அருள்வாய், என்று கந்தரநுபூதியில் குறிப்பிட்டுள்ளார். முருகா என்ற பெயரை மனதால் நினைத்தாலும், உள்ளம் உருகிச் சொன்னாலும்இனிமையான வாழ்வு அமையும்.
கிழவன் முருகன்: சிவபெருமானின் இளைய பிள்ளையான முருகனை குமரன் (இளைஞன்) என்று சொல்லி தான் கேள்விப்பட்டிருக்கிறோம். இப்பெருமானுக்கு குறிஞ்சிக்கிழவன் தமிழ்க்கிழவன் என்ற பெயர்கள் உண்டு. கிழவன் என்றால் உரிமை கொண்டவன் அல்லது தலைவன் என்று பொருள். தமிழ் மொழிக்கு உரியவன் என்பதால் தமிழ்க்கிழவன் என்றும், மலைக்கு உரிய தெய்வமாக விளங்குவதால் குறிஞ்சிக் கிழவன் என்றும் பெயர் பெற்றார்.