Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உண்மை விளக்கம் பகுதி - 3 உண்மை விளக்கம் பகுதி - 5
முதல் பக்கம் » உண்மை விளக்கம்
உண்மை விளக்கம் பகுதி - 4
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 நவ
2013
03:11

இனி, கன்மேந்திரியங்கள்

14. கண்ணுதல்நூல் ஓதியிடும் கன்மேந் திரியங்கள்
எண்ணும் வச னாதிக்கு இடமாக நண்ணியிடும்
வாக்குப் பா தம் பாணி மன்னு குதம் உபத்தம்
ஆக் கருதும் நாளும் அது

பதவுரை

கண்ணுதல் நூல்        சிவபெருமான் அருளிச் செய்த சிவாகம நூல்
ஓதியிடும்        சொல்லுகின்ற
கன்மேந்திரியங்கள்    தொழிற் பொறிகள்
எண்ணும்        வேறு வேறாய்க் கருதப்படும்
வசன ஆதிக்கு        பேச்சு முதலிய செயல்களை
இடமாக        தோற்றுவிப்பனவாக
நண்ணியிடும்        பொருந்தும்.

(அத் தொழிற்பொறிகள் யானை எனில்)

வாக்கு        வாய்
பாதம்        கால்
பாணி        கை
மன்னு குதம்        பொருந்திய எருவாய்
உபத்தம் ஆ(க)        கருவாய் என
அது        அச்சிவாகமம்
நாளும்        எப்போதும்
கருதும்        ஆராய்ந்துரைக்கும்

பொழிப்புரை

இறைவன் அருளிச்செய்த ஆகம நூலில் சொல்லப்பட்டுள்ள கன்மேந்திரியங்கள் பேசுதல், போக்கவரவு செய்தல், ஏற்றல் இடுதலைச் செய்தல், கழிவுப் பொருள்களை வெளியேற்றுதல், சிற்றின்பம் செய்தல் ஆகிய செயல்களைச் செய்யும், அக்கன்மேந்திரியங்களாவன வாய், கால், கை, எருவாய், கருவாய் என்பன. அவை வடமொழியில் வாக்கு, பாதம், பாணி, பாயு, உபத்தம் என்று கூறப்படும்.

கன்மேந்திரியங்கள் செயற்படும் முறை

15. வாக்கு ஆகா யம்இடமா வந்துவச னிக்கும் கால்
போக்காரும் காற்றிடமாய் புல்கி அனல் ஏற்கும்
இடும் கை குதம் நீர் இடமா மலாதி
விடும் பார் இடம் உபத்தம் விந்து

பதவுரை

வாக்கு        வாக்கு என்னும் இந்திரியம்
ஆகாயம் இடமா வந்து    (வாய் ஆகிய உறுப்பில் நிற்கும்) சத்த தன்மாத்திரையை இடமாகப் பற்றி நின்று
வசனிக்கும்        பேசுதலைச் செய்யும்
கால்        பாதம் என்னும் இந்திரியம்
காற்று இடமாய்        (கால் ஆகிய உறுப்பில் நிற்கும்) பரிச தன்மாத்திரையைப் பற்றி நின்று
போக்கு ஆரும்        போக்கு வரவினைச் செய்யும்
கை        பாணி என்னும் இந்திரியம்
அனல் புல்கி        (கை யாகிய உறுப்பில் நிற்கும்) உருவ தன்மாத்திரையைப் பற்றி நின்று
ஏற்கும் இடும்        ஏற்றல் இடுதலைச் செய்யும்
குதம்        பாயு என்னும் இந்திரியம்
நீர் இடமா        (எருவாய் ஆகிய உறுப்பில் நிற்கும்) இரத தன்மாத்திரையைப் பற்றி நின்று
மல ஆதி விடும்        மலம் முதலியவற்றை வெளிப்படுத்தும்
உபத்தம்        உபத்தம் என்னும் இந்திரியம்
பார் இடம்(ஆக)        (கருவாய் ஆகிய உறுப்பில் நிற்கும்) கந்த தன்மாத்திரையைப் பற்றி நின்று
விந்து(விடும்)        ஆடவர்க்குச் சுக்கிலமும் மகளிர்க்குச் சோணிதமும் வெளிப்படுத்தி இன்பஞ் செய்யும்

பொழிப்புரை

வாக்கு என்ற இந்திரியம் (வாய் ஆகிய உறுப்பில் நிற்கும்) சத்த தன்மாத்திரையைப் பற்றி நின்று பேசுதலைச் செய்யும். பாதம் என்ற இந்திரியம் (கால் ஆகிய உறுப்பில் நிற்கும்) பரிச தன்மாத்திரையைப் பற்றி நின்று போக்குவரவு செய்யும். பாணி என்ற இந்திரியம் (கை ஆகிய உறுப்பில் நிற்கும்) உருவ தன்மாத்திரையைப் பற்றி நின்று ஏற்றல் இடுதலைச் செய்யும். பாயு என்ற இந்திரியம்(எருவாய் ஆகிய உறுப்பில் நிற்கும்) இரத தன்மாத்திரையைப் பற்றி நின்று மலம் முதலியவற்றை வெளிப்படுத்தும். உபத்தம் என்ற இந்திரியம்(கருவாய் ஆகிய உறுப்பில் நிற்கும்) கந்த தன்மாத்திரையைப் பற்றி நின்று விந்தினை வெளிப்படுத்தி இன்பம் செய்யும்.

விளக்கம்

செய்யுளில் ஆகாயம், காற்று, அனல், நீர், பார் என்பன சூக்கும பூதங்களாகிய தன்மாத்திரைகளைக் குறிக்கும். வாக்கு, பாதம், பாணி, பாயு, உபத்தம் ஆகிய இந்திரியங்கள் புறத்தே காணப்படும் வாய் கால் கை எருவாய் கருவாய் ஆகிய உறுப்புகளில் நிற்கும் சத்தம் பரிசம் உருவம் இரதம் கந்தம் ஆகிய தன்மாத்திரைகளை இடமாகக் கொண்டு கந்தம் ஆகிய தன்மாத்திரைகளை இடமாகக் கொண்டு நின்று தம்தம் காரியத்தைச் செய்யும் என்பது கூறப்பட்டது. கன்மேந்திரியங்கள் செயற்படும் முறையைப் பின்வருமாறு அட்டவணைப்படுத்திக் காட்டலாம்.

இந்திரியம்    சார்பு/பற்றுக்கோடு    உறுப்பாகிய இடம்    செய்யும் தொழில்    
வாக்கு    சத்த தன்மாத்திரை    வாய்        பேசுதல்
பாதம்    பரிச தன்மாத்திரை    கால்        போக்கு வரவு செய்தல்
பாணி    உருவ தன்மாத்திரை    கை        ஏற்றல் இடுதல்
பாயு    இரத தன்மாத்திரை    எருவாய்        மலம் முதலியன வெளிப்படுத்தல்
உபத்தம்    கந்த தன்மாத்திரை    கருவாய்        சுக்கில சோணிதங்களை வெளிப்படுத்தல்

இனி, அந்தக்கரணங்கள்

ஞானேந்திரியங்களைப் பற்றிக் கூறிய இடத்தில் அவற்றால் முதலில் பொருள்களைப் பொதுவாக அறிவதாகிய நிருவிகற்பக் காட்சியே உண்டாகும். எனவும், அதன் பின்னர் அப்பொருள்களின் பெயர், குணம், தொழில், முதலியவற்றைச் சிறப்பாக அறிவதாகிய சவிகற்பக் காட்சி அந்தக் கரணங்களினால் உண்டாவதாகும் எனவும் குறிப்பிட்டோம். அவ்வந்தக்கரணங்கள் தொழிற்படும் முறையினை இச் செய்யுளில் எடுத்துரைக்கின்றார் ஆசிரியர்.

16. அந்தக்கரணம் அடைவே உரைக்கக் கேள்
அந்தமனம் புத்தியுடன் ஆங்காரம் சிந்தை இவை
பற்றியது நிச்சயித்துப் பல்கால் எழுந்திருந்து அங்கு
உற்றது சிந்திக்கும் உணர்

பதவுரை

அந்தக் கரணம்        அகக் கருவிகளை
அடைவே        வரிசைப்பட
உரைக்க        யாம் கூற
கேள்        கேட்பாயாக
அந்த மனம்        மனமும்
புத்தியுடன்        புத்தியோடு
ஆங்காரம்        அகங்காரமும்
சிந்தை        சித்தமும் ஆகியவை
இவை        இக்கருவிகளாம்
பற்றி        பொறிவழியாக வந்ததை மனம் பற்ற
அது நிச்சயித்து        மனம் பற்றியதனைப் புத்தி இஃது இன்னது என்று நிச்சயிக்க
பல்கால் எழுந்திருந்து    அகங்காரம் இச்செயல்களுக்கு அடி நிலையாக அமைந்து நான் இதனைச் செய்வேன் எனப் பலகாலும் முந்தி எழ
அங்கு உற்றது சிந்திக்கும்    அங்ஙனம் அறியப்பட்டதைச் சித்தம் மீள மீளச் சிந்திக்கும்
உணர்        அந்தக் கரணங்களின் செயல்களை இவ்வாறு உணர்ந்து கொள்.

பொழிப்புரை

அகக்கருவிகள் நான்கினையும் முறையே கூறுகிறோம். கேள், அவைமனம், புத்தி, அகங்காரம், சித்தம் என அழைக்கப்பெறும். புறத்தே உள்ள ஒரு புலனை அதற்குரிய பொறியானது கவர்ந்து தர, மனம் அதனைப் பற்றும், மனம் பற்றியதனை புத்தி இஃது இன்னது என்று நிச்சயிக்கும் அகங்காரம் இச்செயல்களுக்கு அடி நிலையாக அமைந்து முன்னும் பின்னும் யான் செய்வேன் என முந்தியெழும் சித்தம் உற்ற அப்பொருளைப் பற்றி மீள மீளச் சிந்திக்கும்.

விளக்கம்

ஆன்மா இந்நான்கு கருவிகளையும் பற்றி நின்று உலகப் பொருள்களைச் சிறப்பாக உணர்ந்து அவற்றில் அழுந்துகிறது.

மனம்

நிருவிகற்பக் காட்சியின் பின்னர் ஆன்மா மனத்தைப் பற்றி நின்று இஃது அதுவாகுமோ,  இதுவாகுமோ என்று பல வகையில் ஐயுறும். இங்ஙனம் ஐயுறுவதற்குக் கருவியாவது மனமாகும்.

புத்தி

பின் ஆன்மா புத்தியைப் பற்றி நின்று அப்பொருளின் பெயர், இனம், குணம், தொழில் முதலியவற்றை உணருமாற்றால் இஃது இன்னதே என்று துணியும். இவ்வாறு துணிவதற்குக் கருவியாவது புத்தியாகும்.

அகங்காரம்

இனி எச்செயலிலும் ஆன்மா முன்னர் முனைத்து எழுவதற்குக் கருவியாவது அகங்காரமாகும். அகங்காரம் என்பதற்கு யான் என்று எழுவது என்பது பொருள். இஃது ஆங்காரம் என்றும் வழங்கப் பெறும். எனவே மனம் நிருவிகற்பக் காட்சியைப் பற்றும் பொழுதும். புத்தி அதனை இன்னது என்று நிச்சயிக்கும் பொழுதும் ஆன்மா இடையிடையே அகங்காரத்தைப் பற்றி எழுதல் உண்டாகும் இது பற்றியே பல்கால் எழுந்திருந்து என்றார் ஆசிரியர். புத்தி நிச்சயித்த பின்பும் அகங்காரத்தின் செயற்பாடு வேண்டி உள்ளது. எவ்வாறெனில், நிச்சயித்தலின் பயன் அப்பொருளில் ஆன்மா அழுந்தி நுகர்வதுதான். அதற்கும் ஆன்மா யான் இதனை நுகர்வேன் என்று அகங்காரத்தைப் பற்றி முன்னர் எழ வேண்டும். இவ்வாறு நிச்சயித்த பின்பும் அகங்காரம் எழுதலின் நிச்சயித்துப் பல்கால் எழுந்திருந்து என நிச்சயித்தலின் பின்னர் அகங்காரத்தின் செயற்பாட்டை வைத்தார் ஆசிரியர்.

சித்தம்

இனி அழுந்தி அறிதலே அனுபவம் அல்லது நுகர்ச்சி எனப்படுகிறது. ஆன்மா தான் நிச்சயித்த பொருளின் தன்மைகளை எல்லாம் மீள மீளப் பலவாறு சிந்திக்கும் போதே அப்பொருளில் அழுந்தும் நிலை உண்டாகும். அவ்வாறு உற்று உற்றுச் சிந்திப்பதற்குக் கருவியாய் இருப்பது சித்தம் ஆம் இது பற்றியே உற்றது சிந்திக்கும் உணர் என்றார் ஆசிரியர். அனுபவமாகிய முடி நிலைக்குச் சித்தமே உதவியாய் இருத்தலின் சித்தத்தின் செயலை இறுதியில் வைத்து முடித்தார்.

கரணங்கள் நான்கும் சிந்தையே ஆக

சித்தத்தின் செயலை சுந்தரமூர்த்தி நாயனாரின் வாழ்க்கை நிகழ்ச்சி ஒன்றில் வைத்து விளக்கியுள்ளார் சேக்கிழார். சுந்தரமூர்த்திகள் தில்லை சென்று பொன்னம்பலத்தில் ஆனந்தக் கூத்தாடும் பெருமானை நேர் நின்று கண்டார். அத்திருக்கோலத்தில் ஈடுபட்டு மெய்ம்மறந்து நின்றார். அவரது மனம் வேறு எப்பொருளையும் பற்றவில்லை. புத்தி வேறு பொருளிடத்தில் செல்லவில்லை. அகங்காரம் வேறு பொருளை அறிய எழவில்லை. சித்தம் மட்டுமே செயற்பட்ட நிலை அது. அளப்பரும் கரணங்கள் நான்கும் சிந்தையே ஆக, அவர் இறைநினைவில் மீளமீள ஈடுபட்டு அழுந்தி நின்ற அனுபவ நிலையைச் சேக்கிழார் நுட்பமாக எடுத்துக்காட்டியுள்ளார்.

உற்றதை மீளமீளச் சிந்தித்தல்

இனி புதிதாக வரும் பொருள்களை மட்டுமே சித்தம் சிந்திக்கும் என்பதில்லை. முன்னரே புத்தி உணர்ந்து வைத்துள்ள பொருள்களையும் சித்தம் மீளப்பற்றி நின்று சிந்திக்கும்; நாம் முன்பு நிகழ்ந்தவற்றையெல்லாம் இப்பொழுது நினைத்து வருந்துகிறோம். அல்லது மகிழ்கிறோம். முன்பு நடந்த சில இனிய நிகழ்ச்சிகளை இப்பொழுது நிகழ்வது போல எண்ணிக் களிக்கிறோம். இப்படியெல்லாம் சிந்திப்பதற்குச் சித்தமே கருவியாக உள்ளது. முன்னரே உணர்ந்தவற்றை சித்தமானது மீளச் சிந்திக்கும் என்பதற்கு ஒரு சான்று தருவோம். பழங்காலத்தில் ஒரு புலவர் இருந்தார். முதுமையே அவரைக்கண்டு வெறுக்கும் அளவுக்கு நரையும் திரையுமாய் மூப்புற்று விளங்கினார். நடக்கும் வலிமையைக் கால்கள் இழந்து விட்டன கோல் ஊன்றியே நடக்க வேண்டும். உடலில் நடுக்கம் ஏற்பட்டிருந்தது. தொடர்ந்து அவரால் பேச முடியாது. இடையிடையே இருமல் வந்து தொல்லை கொடுத்தது.

அந்நிலையில் அவர் கடந்து போன வாழ்க்கையைத் திரும்ப நினைத்துப் பார்த்தார். இளமையில் நான் எப்படி இருந்தேன்! கவலை என்பதை அறியாத அப்பருவத்தில், ஒளிவு மறைவு என்பதை அறியாத இளம்பிள்ளைகளுடன் நான் எப்படியெல்லாம் ஆடித் திரிந்தேன்! ஒரு சமயம் நான் துணிச்சலான ஒரு செயலைச் செய்தேன். என் இளைய நண்பர்களுடன் ஒரு நீர் நிலைக்குச் சென்றேன். அது ஆழமான நீரை உடைய கேணி. அதன் கரையிலே ஒரு மரம். அதன் ஒரு கிளை வளைந்து தாழ்ந்து கேணியின் நீர்ப்பரப்பின் மேலாகச் சென்றது. அதைப் பார்த்ததும் நண்பர்களுக்கு என்னுடைய திறமையைக் காட்ட இது ஒரு வாய்ப்பு என்று கருதினேன். நான் அந்த மரத்தின் மீது ஏறி நீர்ப்பரப்புக்கு மேலாக இருந்த கொம்பினை அடைந்தேன். அங்கிருந்து துடும் என அந்த ஆழமான மடுவில் குதித்தேன். கீழே மூழ்கிச் சென்றேன். தரையைத் தொட்டேன். அது மட்டுமா! தரையில் உள்ள மணலில் ஒரு கைப்பிடியை எடுத்துக்கொண்டு மேலே நீர்ப்பரப்பிற்கு வந்தேன். கரையில் நின்றவரெல்லாம் வியந்து கைதட்டும் படியாக அம்மணலை அவர்களுக்குக் காட்டினேன். அவர்களிடையே அப்பொழுது ஒரு வீரனாகக் காட்சியளித்தேன் அந்த இளமை எங்கே போயிற்று? இப்பொழுது பொல்லாத முதுமை வந்து வாட்டுகிறது. தண்டினை ஊன்றித் தளர்ந்து இருமலிடையே சில சொற்களே பேசும் நிலைக்கு ஆளானேன். அந்தப் பழைய காலம் மீண்டும் வருமா? இப்படிக் கழிந்து போனவற்றை மீள எண்ணிஎண்ணி இரங்குகிறார் அப்புலவர்! அவர் மட்டுமா? நாமும் கூட அதைத்தான் செய்கிறோம். உற்றது சிந்திக்கும் உணர் என்ற ஆசிரியரின் வாக்கு எவ்வளவு உண்மையாக உள்ளது.

இனி, அசுத்த மாயையிலிருந்து தோன்றும் வித்தியா தத்துவங்கள் 7

பூதங்கள் தொடங்கி அந்தக்கரணங்கள் இறுதியாக உள்ள ஆன்மதத்துவங்கள் இருபத்து நான்கினையும் ஆசிரியர் விளக்கிய முறையில் இதுகாறும் அறிந்தோம். இக்கருவிகள் மட்டுமே ஆன்மாவிற்குப் போதியன அல்ல. இவற்றுக்கு மேலும் வேறு கருவிகள் தேவைப்படுகின்றன. இஃது ஏன்? என்று வினவலாம். அவ்வினாவிற்கு விடை கூறுவோம். ஒன்றினை அறிதல், அதனை விரும்புதல், அதற்காக முயலுதல் என்னும் முத்திறனும் உயிருக்கு இயல்பாக உள்ளது. உயிருக்கு அமைந்த இம்மூன்றனுள் அறியும் திறன் ஞானசத்தி எனப்படும் விழையும் திறன் இச்சா சத்தி எனப்படும். செயல் திறன் கிரியா சத்தி எனப்படும். இந்த ஞானம், இச்சை, கிரியை என்னும் மூன்றும் செயற்படும் போதே உயிருக்கு உலக போகமாகிய நுகர்ச்சிப் பொருள்களிடத்தில் நாட்டம் உண்டாகும். அவற்றை அனுபவிக்கப்புகும் முயற்சி உண்டாகும். ஆயின், இவை செயற்பட முடியாதபடி ஆணவ மலமாகிய தளை உயிரைப் பிணித்திருக்கின்றது. அம்மலப்பிணிப்பிலிருந்து விடுபட்டால் அன்றி உயிரின் ஞானம், இச்சை, கிரியைகள் செயற்பட இயலாது. அவை செயற்படாத போது உலக போகத்தில் நாட்டமும் நோக்கமும் நோக்கமும் உண்டாகாவிடில் உலக போகமாகிய நுகர்ச்சிப் பொருள்கள் இருந்து என்ன பயன்? இந்திரியங்கள், அந்தக்கரணங்கள் முதலிய கருவிகள் எல்லாம் இருந்து என்ன பயன்? சுருங்கக் கூறினால் ஆன்ம தத்துவங்களால் என்ன பயன்? ஆணவ மலத்திலிருந்து நீங்கி உயிரின் அறிவு, விழைவு, செயல்கள் நன்கு செயற்படும் நிலை வரும்பொழுதுதான் உயிரானது மேற்கூறிய ஆன்மதத்துவங்களாகிய அகக் கருவிகள் புறக் கருவிகளைக் கொண்டு உலகப் பொருள்களை அறிந்து அனுபவிக்க முடியும்.

ஆகவே உயிரினது அறிவு இச்சை செயல்களை ஆணவ மலப்பிணிப்பிலிருந்து விடுவித்து உலக நுகர்ச்சியில் ஈடுபடுத்துவதாகிய உதவியைச் செய்வதற்குச் சில கருவிகள் தேவைப்படுகின்றன. மேலும் உயிர் பெறும் இன்ப துன்ப நுகர்ச்சி காலத்திற்கு உட்பட்டது என்பதை அறிவோம். உரிய கால அளவிற்கு மேல் நாம் நுகரும் இன்பத்தை நீட்டித்துக் கொள்ளவும் முடியாது. உரிய கால அளவு முடிவதற்குள்ளே நாம் வெறுக்கும் துன்பத்தை விலக்கிக் கொள்ளவும் முடியாது என்பது அனுபவ உண்மை. ஆகவே காலம் என்ற கருவியும் வேண்டும் என்பது புலனாகும். இது காறும் கூறியவற்றால் ஆன்ம தத்துவங்கள் மட்டும் போதா அவற்றிற்கு அப்பாற்பட்டனவாய் வேறு கருவிகளும் தேவைப்படுகின்றன என்பது தெளிவாகும். முன்பு கூறிய இருபத்துநான்கு தத்துவங்களுக்கு மேல் உயிருக்கு உதவும் கருவிகளாக ஏழு தத்துவங்கள் கொள்ளப்படுகின்றன. அவை பிரகிருதியிலிருந்து தோன்றுவனவல்ல. பிரகிருதிக்கு மேலேயுள்ள அசுத்த மாயையிலிருந்து தோன்றுவனவாகும். அவை மாயை, காலம், நியதி, கலை, வித்தை, அராகம் புருடன் என்பன. இவை அசுத்த மாயை தத்துவங்கள் எனப்படும். இவை ஒவ்வொன்று பற்றியும் இனிக் காண்போம்.

மாயை

விரிவுடைய அசுத்த மாயையின் ஒரு சிறு பகுதியே மாயை என்னும் முதல் தத்துவமாகும். இந்த மாயை தத்துவத்திலிருந்தே காலம் முதலிய பிற தத்துவங்கள் தோன்றும். எனவே பிற அசுத்த தத்துவங்கள் தோன்றுவதற்கு ஏற்புடையதாகப் பதப்படுத்தப்பட்ட ஒரு பகுதியே மாயை எனக் கூறலாம். இதனை ஓர் உதாரணம் கொண்டு விளக்கலாம். இம்மண்ணுலகம் மிகப் பெரியது. இதன் ஒரு சிறு பகுதியே மண் எடுத்துக் குடம் முதலியன செய்வதற்குப் பயன்படுத்தப்படுகிறது. அதுபோல விரிவுடைய அசுத்த மாயையின் ஒரு சிறு பகுதியே பிற தத்துவங்கள் தோன்றுவதற்குரிய தகுதி உடையதாய், மாயை அல்லது மாயா தத்துவம் எனப்படுகிறது.

காலம்

இம்மாயா தத்துவத்திலிருந்து முதலில் காலம் என்னும் தத்துவம் தோன்றும். இக் காலத்தத்துவத்தைச் சிறிது விளக்குவோம். காலம் என்பது இன்றி எச்செயலும் நடவாது என்பதை அனுபவத்தில் நாம் அறியலாம். எதற்கும் காலம் நேரம் வரவேண்டும் என்று மக்கள் பேசிக்கொள்வது அன்றாட நிகழ்ச்சி. ஒரு பெற்றோருக்குத் திருமண வயதில் பெண் இருக்கிறாள். அக்குடும்பத்தில் செல்வத்துக்குக் குறைவில்லை. அப்பெண்ணின் அழகுக்குக் குறைவில்லை. அப்பெற்றோரின் முயற்சிக்கும் குறைவில்லை. ஆயினும் அப்பெண்ணுக்குத் திருமணம் கூடாமலே நாட்கள் செல்லுகின்றன. எல்லாருக்கும் ஒரே கவலை. ஒருநாள் எதிர்பாராத நிலையில் எதிர்பாராத இடத்திலிருந்து பெண் பார்க்க வருகிறார்கள். அடுத்த சில நாட்களிலேயே திருமணம் இனிதாக நடந்து முடிகிறது. இப்படி நடப்பதை வைத்துத்தான் காலம் வந்தால் எல்லாம் நல்ல படியாக நடக்கும் என்று சொல்லுகிறார்கள். இதனால் எல்லாம் இருப்பினும் செயல் நிகழ்தற்குக் காலம் வேண்டும் என்பது தெளிவாகிறது. மூதுரை என்னும் நீதி நூல் இக்கருத்தைப் பின்வருமாறு சொல்லுகிறது. பழ மரங்கள் எல்லாக்காலத்திலும் பூத்துக் காய்த்துக் கனிகளைத் தருவதில்லை. அவ்வக்காலம் வந்தால் மட்டுமே காய்த்துப் பழுத்துப் பயன் தருவதைக் காண்கிறோம். அதுபோல ஒருவர் எவ்வளவு தான் முயன்றாலும் அவர் ஈடுபடுகிற செயல் அவர் நினைத்த வண்ணமே நிறைவேறிவிடுவதில்லை. அதற்குரிய காலம் வரும்போது தான் அக்காரியம் நிறைவேறும்.

அடுத்து முயன்றாலும் ஆகும் நாள் அன்றி
எடுத்த கருமங்கள் ஆகா தொடுத்த
உருவத்தால் நீண்ட உயர் மரங்கள் எல்லாம்
பருவத்தால் அன்றிப் பழா

இதுவரை கூறியவற்றால் கால தத்துவத்தின் இன்றியமையாமை ஒருவாறு விளங்கும். காலம் இறந்தகாலம் என்றும், நிகழ்காலம் என்றும், எதிர்காலம் என்றும் மூன்று பகுதிப்பட்டு நிற்கும். இறந்த காலம் செயலை முடிக்கும். நிகழ்காலம் செயலை நிகழ்விக்கும் எதிர்காலம் செயலைத் தோற்றுவிக்கும். காலம் ஒவ்வொரு பொருளிலும் வேறுவேறாக உள்ளது. மேலும் அளவால் பெரிதும் சிறிதுமாய் உள்ளது. ஒருவர் உடம்பில் காலம் நெடியதாய் இருக்குமாயின் அவர் நீண்ட ஆயுளை உடையவராகிறார் அவ்வாறின்றி அவர் உடம்பில் உள்ள காலம் அளவால் சிறியதாய் இருக்குமாயின் அதற்கேற்ப அவர் குறுகிய ஆயுளை உடையவராகிறார். இவ்வாறு பொருள் தோறும் காலம் வெவ்வேறு அளவினதாய் அமைந்து செயலை நிகழ்விக்கின்றது. காலம் சடப்பொருளேயாதலின் அது தானே செயற்படாது என்பதையும், இறைவனது சத்தி செலுத்தவே அது தன் காரியத்தைச் செய்யும் என்பதையும் நினைவிற் கொள்ளுதல் வேண்டும்.

நியதி

காலத்தின் பின்னர் மாயா தத்துவத்தினின்றும் நியதி என்னும் தத்துவம் தோன்றும். நமது வாழ்வில் நாம் நினைத்தபடியெல்லாம் நடந்து விடுவதில்லை. ஒருவர் படிக்கின்ற காலத்தில் மருத்துவத்துறையில் எப்படியாவது சேர வேண்டும் என்று முயல்கிறார். ஆனால் அது முடியாமலே போய்விடுகிறது மற்றொருவர் ஒரு பெண்ணை உயிருக்கு உயிராக நேசித்தும் வேறொரு பெண்ணைக் கைப்பிடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விடுகிறது. இன்னொருவர் பதவி உயர்வு பெறுதற்குரிய தகுதி எல்லாம் பெற்றிருந்தும் அவருக்குக் கிட்டாமல் அவர்க்குக் கீழ்நிலையில் உள்ள மற்றொருவருக்கு அது கிடைத்து விடுகிறது. இவற்றுக்கெல்லாம் காரணமாய் இதனையே நுகர்க ஏனையவற்றை நுகரற்க என வரையறுத்து நிறுத்துவது நியதி தத்துவமாகும். நியதி தத்துவம் அவரவர் செய்த வினையின் பயன்களை அவரவரே அனபவிக்குமாறு நெறிப்படுத்தி நிற்பதாகும். இறைவனது சத்தியே இவ்வாறு நியமித்து நடத்தும் என்று கொள்ளலாம் அல்லவா? நியதி என்ற ஒரு கருவி எதற்கு? என வினவலாம். கட்டு நிலையில் இறைவனது சத்தி தானே நேராக எதனையும் செய்யாது ஏதேனும் ஒரு கருவியைக் கொண்டு அதன் வழியாகவே செய்யும். ஆதலால் இறைவனது சத்தி வினைகளை வரையறுக்கும் செயலுக்கு இந்நியதி தத்துவம் கருவியாய் நிற்கிறது எனலாம். நியதி தானே சுதந்திரமாகச் செயற்படாது. என்பதையும், இறைவனது சத்தியின் வழி நின்றே செயற்படும் என்பதையும் கருத்திற்கொள்ளுதல் வேண்டும். நியதி வினைப்பயன்களை அவ்வவ்வுயிர்களே நுகரும் படி செய்யும் எனவும், காலம் அந்நுகர்ச்சியின் அளவை வரையறுத்து நிற்கும் எனவும் அறிந்தோம். இனி உயிர்கள் நுகர்ச்சியில் ஈடுபட வேண்டுமாயின் அவற்றின் அறிவு இச்சை செயல்கள் ஆணவ மல மறைப்பிலிருந்து விடுபட்டுத் தொழிற்பட வேண்டும் எனச் சற்று முன்னே கூறினோம். அங்ஙனம் அவை தொழிற்படுவதற்கு உதவும் கருவிகள் கலை, வித்தை, அராகம் என்பனவாகும். அக்கருவிகள் தோன்றும் முறையை இனிப் பார்ப்போம்.

கலை

மாயாதத்துவத்தினின்றும் நியதி தத்துவம் தோன்றிய பின்னர், கலை என்ற தத்துவம் தோன்றும். இக்கருவி ஆணவ மலமறைப்பைச் சிறிது நீக்கி ஆன்மாவின் கிரியா சத்தியை முதலில் எழுப்பித் தொழிற்படச்செய்யும். இங்கு ஓர் ஐயம் எழலாம். அறிவுப் பொருளாகிய ஆன்மா ஆணவ மலத்தால் முற்றிலும் மறைக்கப்பட்டு, அறியுந்திறனை இழந்து அறிவற்ற சடப்பொருள் போலக் கிடக்கும் நிலையில் முதலில் அதன் அறிவாகிய ஞான சத்தியையல்லவா எழுப்புதல் வேண்டும். அதனை விடுத்துக் கிரியா சத்தியை முதலில் எழுப்புவது எதற்கு? என்பதே அவ்ஐயம். ஞானசத்தியை முதலில் எழுப்புவதாக வைத்துக் கொள்வோம். ஞானசக்தி ஆணவ மலப் பிணிப்பிலிருந்து சற்று விடுபட்டு எழுந்தாலும் அது தானே செயற்படாது. ஆன்மா அதனைத் தொழிற்படுத்த வேண்டும் அப்பொழுது தான் ஞானசத்தி தொழிற்படும். ஆன்மா அதனைத் தொழிற்படுத்த வேண்டுமானால் அதற்குக் கிரியா சத்தி வேண்டும். கிரியா சத்தியின்றி எச்செயலும் நிகழாது. கிரியா சத்தி விளங்கப் பெற்ற போதே ஆன்மா எச்செயலையும் செய்வோன் என்ற நிலையை அடைகிறது. ஆதலால் ஞான சத்தி தொழிற்படுவதற்கும் கிரியா சத்தி வேண்டப்படுகிறது. அது பற்றியே கிரியா சத்தியை முதலில் எழுப்பும் கலை என்ற கருவி தோன்றுவதாயிற்று. கலித்தல் என்ற சொல்லிலிருந்து கலை என்பது வந்தது. கலித்தல் என்பதற்கு நீக்குதல், செலுத்துதல் என்ற பொருள்கள் உண்டு. எனவே ஆணவ மலத்தை நீக்கி ஆன்மாவின் கிரியா சத்தியை எழுப்பிச் செலுத்துகிற கருவிக்குக் கலை என்று பெயரிட்டது பொருத்தமாகும்.

வித்தையும் அராகமும்

கலை தோன்றிய பின்னர் அக் கலையிலிருந்தே வித்தை என்னும் தத்துவம் தோன்றும். வித்தை என்ற அக்கருவி ஆணவ மல சத்தியைச் சிறிது அடக்கி ஆன்மாவின் ஞான சத்தியை எழுப்பும். வித்தை தோன்றி பின்னர் அதிலிருந்தே அராகம் என்னும் தத்துவம் தோன்றும். அராகம் என்ற அக்கருவி ஆன்மாவின் இச்சா சத்தியை எழுப்பும். முன்னே சொன்ன காலம், நியதி, கலை என்னும் மூன்றும் மாயையிலிருந்து நேரே தோன்ற, வித்தையும் அராகமும் ஆகிய இரண்டும் அங்ஙனம் மாயையிலிருந்து நேரே தோன்றாமல் கலையிலிருந்து வித்தையும் அவ்வித்தையிலிருந்து அராகமும் தோன்றுவது நோக்குதற்குரியது. இதற்கான காரணத்தைப் பின்வருமாறு கூறலாம்.

ஆன்மாவினது அறிவு ஒன்றே அறிதல் விழைதல் செய்தல் என்னும் செயல் பற்றி ஞான சத்தி, இச்சா சத்தி, கிரியா சத்தி என மூன்றாக வழங்கப்படுகிறது. எனவே இம் மூன்றும் தம்முள் வேறல்ல என்பதும். அறிவாகிய ஒன்றன் நிலை வேறபாடே என்பதும் விளங்கும். கிரியா சத்தியும் ஞான சத்தியும் தம்முள் மாறுபட்டனவல்ல ஆகையால் கிரியையை எழுப்புவதாகிய கலையிலிருந்தே ஞானத்தை எழுப்புவதாகிய வித்தை தோன்றுவதாயிற்று. இச்சா ஞானத்தின் நிலை வேறுபாடேயாகையால் ஞானத்தை எழுப்புவதாகிய வித்தையினின்றும் இச்சையை எழுப்புவதாகிய அராகம் தோன்றுவதாயிற்று.

கிரியையும் ஞானமும் இச்சையும் வேறுவேறல்லவாயின் கலையாகிய ஒரு கருவியே இம்மூன்றையும் எழுப்புதல் இயலாதோ? கலை, வித்தை, அராகம் என வேறு வேறு கருவிகள் எதற்கு? எனக் கேட்கலாம். இங்கே ஓர் உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு கருவி ஒரு நேரத்தில் ஒரு தொழிலைச் செய்யுமேயன்றிப் பல தொழில்களை ஒருங்கு செய்யமாட்டாது. ஆதலால் கிரியை, ஞானம், இச்சை ஆகிய மூன்றும் ஒருங்கே வேண்டப்படும்போது கலை என்ற கருவி கிரியையை எழுப்புதலாகிய ஒரு தொழிலை மட்டும் செய்யும் என்பதும், ஞானத்தையும் இச்சையையும் எழுப்புதலாகிய தொழிலைச் செய்வதற்கு வித்தையும் அராகமும் ஆகிய வேறு கருவிகள் வேண்டியுள்ளன என்பதும் தெளிவாகும்.

வித்தை என்னும் சொல் அறிவு எனப் பொருள்படும். ராகம் என்னும் வடசொல்லுக்கு விருப்பம் என்பது பொருள். அச்சொல்லே தமிழில் அராகம் என வந்துள்ளது.

இதுகாறும் வந்தவற்றுள் அராகம் ஆன்மாவின் இச்சா சத்தியையும் வித்தை ஞான சத்தியையும், கலை கிரியா சத்தியையும் விளக்கி ஆன்மாவை நுகர்ச்சியில் ஈடுபடச் செய்யும். நியதி இதனையே நுகர்க என வரையறுத்து நிறுத்தும். காலம் இந்த நுகர்ச்சியை இத்தனைக் காலம் நுகர்க என எல்லைப்படுத்தும். இவ்வைந்து கருவிகளும் ஆன்மாவுக்கு இன்றியமையாதனவாய். ஆன்மாவோடு எப்பொழுதும் நீங்காமல் சட்டை போல ஒன்றாய் ஒட்டியேயிருக்கும். அதனால் அவை பஞ்சகஞ்சுகம் என்னும் பெயர் பெறும். கஞ்சுகம்சட்டை.

புருடன்

இந்த ஐந்து சட்டைகளையும் அணிந்து நிற்கும் நிலையில் ஆன்மாபுருடன் எனப் பெயர் பெறும். போகத்தை நுகரும் தகுதியுடைமை பற்றி ஆன்மா புருடன் எனப்படுகிறது. இந்நிலையே புருடதத்துவம் எனச் சொல்லப்படுகின்றது. தத்துவம் என்று கூறப்படினும் இஃது ஏனையவை போல ஒரு தனித் தத்துவம் அன்று என்பது அறிதற்குரியது. பஞ்சகஞ்சுகத்துடன் கூடிப் புருடன் என நின்ற ஆன்மா பொதுவகையில் போகத்தை நுகரும் தகுதியைப் பெறும் பின்னர் பிரகிருதியோடு தொடர்பு கொள்ளும் போதே அத்தகுதியைச் சிறப்பு வகையாற்பெறும். பிரகிருதியே உலக அனுபவத்தைத் தருவது ஆதலால் அதனோடு பொருந்தும் போதே ஆன்மா புருடனாம் நிலையைச் சிறப்பாகப் பெறுகிறது. இதனால் காலம் முதலிய ஐந்தினாலே வரும் தகுதி பொதுத் தகுதி என்பதும், பிரகிருதியினாலே வரும் தகுதி சிறப்புத் தகுதி என்பதும் விளங்கும்.

பிரகிருதியைப் பற்றி முன்னே குறிப்பிட்டபோது அஃது அசுத்த மாயையிலிருந்து தோன்றும் காரியம் எனச் சொன்னோம். அது பொதுவாகச் சொன்ன கூற்றேயாகும். குறிப்பிட்டுச் சொல்வதானால், அது அசுத்த மாயையின் காரியங்களில் ஒன்றாகிய கலையிலிருந்து தோன்றுவதாகும். தோசை என்ற உணவுப் பண்டத்திற்கு மூலப் பொருள் எது என்று கேட்டால் மாவு என்றும் சொல்லலாம்; அரிசி என்றும் சொல்லலாம். மாவு நேரான மூலப்பொருள். அரிசி முடிவான மூலப்பொருள். அதுபோல, பிரகிருதிக்குக் கலை நேரான முதற்காரணம்; அசுத்த மாயை முடிந்த முதற்காரணம் என அறிதல் வேண்டும்.

கலை என்னும் தத்துவத்தினின்றும் வித்தை என்னும் தத்துவமும் அவ்வித்தையினின்றும் அராகம் என்னும் தத்துவமும் தோன்றும் எனக் கூறினோம். அவற்றின் பின்னர்க் கலையினின்றும் நேரே பிரகிருதி தோன்றும். ஆன்மா பிரகிருதியைப் பொருந்திய நிலையில் நுகர்வோன் என்னும் சிறப்புத் தகுதியைப் பெற்றுப் புருடனாய் நிற்கும் எனக் கண்டோம். காலம் முதலிய ஐந்தோடு புருடன் என்பதைச் சேர்க்கத் தத்துவங்கள் ஆறாகும். அவற்றோடு முதலிற் சொன்ன மாயா தத்துவம் என்பதைச் சேர்க்கத் தத்துவங்கள் ஏழாகும். இவ்வாறு காலம், நியதி, கலை, வித்தை, அராகம், புருடன், மாயை (மாயா தத்துவம்) ஆகிய இவ் ஏழும் அசுத்த மாயா தத்துவங்கள் ஆயின.

அசுத்த மாயை

1. மாயா தத்துவம் (மாயை) (காலம், நியதி, கலை(பிரகிருதி, வித்தை(அராகம்), புருடன்))

இவற்றுள் மாயையும் புருடனும் நீங்கலாக மற்றையவை பரிணாம முறையில் தோன்றுவனவாகும். மாயையின் ஒரு கூறு காலமாகப் பரிணமிக்கும். மற்றொரு கூறு நியதியாகப் பரிணமிக்கும். மற்றுமொரு கூறு கலையாகப் பரிணமிக்கும். கலையின் ஒரு கூறு வித்தையாகவும். வித்தையின் ஒரு கூறு அராகமாகவும் பரிணமிக்கும். கலையின் மற்றொரு கூறே பிரகிருதியாகப் பரிணாமம் அடையும் என்பது அறிதற்குரியது.

வித்தியா தத்துவம்  பெயர்க் காரணம்

அசுத்த மாயா தத்துவங்கள் ஏழும் வித்தியா தத்துவம் என்னும் பெயரைப் பெறும். பெயருக்கான காரணத்தை நோக்குவோம். இத்தத்துவங்கள் இறைவனது ஏவல் வழி நிற்கும் அனந்த தேவர் என்பவரால் தோற்றவும் ஒடுக்கவும்படுகின்றன. அவர் வித்தியேசுரருள் சிறந்தவர். எனவே அவர் பெயரால் இவை வித்தியா தத்துவங்கள் எனப்படுகின்றன. வித்தை இங்கு வித்தியேசுரரைக் குறிக்கும். இது மரபாகச் சொல்லி வரும் விளக்கம். இனி வித்தை என்பது அறிவாகும். எனவே ஆன்மாவின் அறிவு இச்சை செயல்களைத் தோற்றுவிக்கும் கருவிகளாதல் பற்றி வித்தியா தத்துவம் எனப்பட்டன என்று கூறுதலும் அமையும். இவ்வித்தியா தத்துவங்களுக்கு போசயித்திரு காண்டம் என்ற மற்றொரு பெயரும் உண்டு. இவை ஆன்மாவிடத்தில் நுகர்வோனாம் தன்மையை உண்டாக்குதலால் இப்பெயர் பெற்றன. போசயித்திரு  நுகர்வோன்; காண்டம்  தொகுதி. இனி ஆசிரியர் வழியில் நின்று வித்தியா தத்துவங்களைப் பற்றிய செய்யுட்களின் பொருளைக் காண்போம்.

வித்தியா தத்துவங்களைக் கூறத் தொடங்குதல்

17. ஓதியிடும் நாலாறும் உற்றான்ம தத்துவம் என்று
ஆதி அருள்நூல் அறையுங்காண்;  தீதறவே
வித்தியா தத்துவங்கள் தம்மை விளம்பக்கேள்
உத்தமனே நன்றா உனக்கு.

பதவுரை

ஓதியிடும்         இதுவரை சொன்ன
நால் ஆறும்         இருபத்து நான்கு தத்துவங்களும்
உற்ற         உயிர்க்கு நுகர்ச்சியாகப் பொருந்திய
ஆன்ம தத்துவம் என்று      ஆன்ம தத்துவம் என்று
ஆதி அருள் நூல்      சிவபிரான் அருளிச் செய்த ஆகம நூல்
அறையும்          கூறும்
தீது அறவே          இனி, உனது மயக்கம் நீங்கும் படியாக
வித்தியா தத்துவங்கள் தம்மை      வித்தியா தத்துவங்களின் இயல்பை
உனக்கு          உனக்கு
நன்றா          ஐயமற
விளம்ப          யாம் சொல்ல
உத்தமனே          நன்மாணாக்கனே,
கேள்          கேட்பாயாக.

பொழிப்புரை

இதுவரை யாம் விளக்கிக் கூறிய பூதங்கள் ஐந்து, தன்மாத்திரைகள் ஐந்து, ஞானேந்திரியங்கள் ஐந்து, கன்மேந்திரியங்கள் ஐந்து, அந்தக்கரணங்கள் நான்கு ஆகிய இருபத்து நான்கு தத்துவங்களையும் ஆன்ம தத்துவங்கள் என்று சிவாகமங்கள் குறிப்பிடும்.

நன்மாணாக்கனே! இனி, வித்தியா தத்துவங்களை உனக்கு உரைப்போம். கேட்பாயாக.

வித்தியா தத்துவங்களின் பெயர்

18. காலம்நியதி கருதும் கலை வித்தை
ஏல அராகம்புருடனே மாயை  மால் அறவே
சொன்னோம் அடைவாகச் சொன்ன இவை தம்உண்மை
உன்னி உரைக்கும் நாம் உற்று

பதவுரை

காலம்      காலமும்
நியதி     நியதியும்
கருதும் கலை     ஆராய்ந்து கொள்ளத்தக்க கலையும்
வித்தை     வித்தையும்
ஏல அராகம்     பொருந்திய அராகமும்
புருடன்     புருடனும்
மாயை     மாயையும் என

(வித்தியா தத்துவங்களை)

மால் அற     மயக்கம் நீங்க
அடைவாக     வரிசைப்படுத்தி
சொன்னோம்     கூறினோம்
சொன்ன     இவ்வாறு பெயர் அளவில் சொல்லிய
இவை தன் உண்மை இத்தத்துவங்களின் இயல்பை
நாம்     யாம்
உன்னி     (உனக்கு விளங்கச் சொல்லும் முறையை) நினைந்து
உற்று     அதனைக் கடைப்பிடித்து
உரைக்கும்     கூறுவோம்

பொழிப்புரை

காலம், நியதி, கலை, வித்தை, அராகம், புருடன், மாயை என்னும் ஏழும் வித்தியா தத்துவங்கள் ஆகும். இவற்றின் இயல்பை இனி உரைப்போம்.

வித்தியா தத்துவங்களின் தொழில்

19. எல்லைபலம் புதுமை எப்போதும் நிச்சயித்தல்
அல்லல் தரும் கிரியை ஆன்மாவுக்கு  ஒல்லை
அறிவு ஆசைஐம்புலனும் ஆரவரும் காலம்
குறியா மயக்குஎன்று கொள்.

பதவுரை (காலம் செய்யும் தொழிலாவது)

எல்லை     இறந்த காலமாய் நின்று, வினைகளை நுகர்ச்சியினால் கழியச் செய்தல்.
பலம்     நிகழ்காலமாய் நின்று, உயிரை வினைப்பயன்களோடு கூட்டி நுகரச் செய்தல்.
புதுமை     எதிர்காலமாய் நின்று, வினைப் பயன்களை உயிர் எதிர்நோக்குமாறு செய்தல்.

(நியதி செய்யும் தொழிலாவது)

எப்போதும் நிச்சயித்தல்  எப்போதும் வினைப்பயன் அதனைச் செய்த உயிரையே சாருமாறு நியமித்தல்.

(கலை செய்யும் தொழிலாவது)

ஆன்மாவுக்கு     உயிருக்கு
அல்லல் தரும்     வினைகளை ஈட்டித் துன்புறுதற்கு ஏதுவாகும்படி
கிரியை     அதன் கிரியாசத்தியாகிய செயலாற்றலைச் சிறிதே விளங்கச் செய்தல்.

(வித்தை செய்யும் தொழிலாவது)

ஒல்லை     விரைந்து
அறிவு     அதன் ஞானசத்தியாக அறிவாற்றலைச் சிறிதே விளங்கச் செய்தல்.

(அராகம் செய்யும் தொழிலாவது)

ஆசை      அதன் இச்சா சத்தியாகிய விழைவு ஆற்றலைச் சிறிதே விளங்கச் செய்தல்.

(புருடன் என்பது)

ஐம்புலனும்     (உயிர் மேற்கூறிய ஐந்தோடும் கூடி நின்று) ஐம்புலன்களையும்
ஆர வரும் காலம்  நுகர்தற்குத் தகுதி பெற்ற காலத்தில் அந்நிலையில் வழங்கும் பெயராகும்.

(மாயை என்பது)

குறியா மயக்கு     உயிரின் அறிவு இச்சை செயல் ஆகிய மூன்றும் பிரிந்து தோன்றுதல் இன்றி, ஒன்றையும் குறியாத, பொதுவான மயங்குநிலையை உயிருக்குத் தருவது
என்று கொள்      என்று இவ்வாறு உணர்ந்துகொள்.

பொழிப்புரை

உயிருக்கு வினைப் பயன்களை இத்துணைப் பொழுது என வரையறுப்பது காலம் அது இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என மூன்றாகி நிற்கும். அவற்றுள் இறந்தகாலம் வினைகளை நுகர்ச்சியினால் கழியச்செய்து உயிரை அவ்வினையினின்றும் பிரிக்கும். இதுவே எல்லை எனப்பட்டது. நிகழ்காலம் உயிரை வினைப்பயன்களோடு கூட்டி நுகர்விக்கும் இதுவே பலம் எனப்பட்டது. எதிர்காலம் வினைப் பயன்களை உயிர் எதிர்நோக்குமாறு செய்யும். இதுவே புதுமை எனப்பட்டது.

நியதி எப்போதும் வினைப்பயன் அதனைச் செய்த உயிரையே சாருமாறு நியமிக்கும். இதுவே நிச்சயித்தல் எனப்பட்டது. கலை, உயிரின் செயலாற்றலைச் சிறிதே விளங்கச் செய்யும்; வித்தை அறிவாற்றலைச் சிறிதே விளங்கச் செய்யும். அராகம் விழைவாற்றலைச் சிறிதே விளங்கச் செய்யும். உயிர் இவ்வைந்தோடும் கூடி நின்று விடயங்களை நுகரும் தகுதி பெற்ற காலத்தில் புருடன் எனப்பெயர் பெறும். மாயை மயக்குதலைச் செய்யும்.

விளக்கம்

முந்திய செய்யுளில் வித்தியா தத்துவங்களின் பெயர்களை வரிசைப்படக் கூறிய ஆசிரியர், இச்செய்யுளில் அவை செய்யும் தொழிலை அதே வரிசை முறையில் நிறுத்திக் கூறியுள்ளார். எனவே அவற்றைப் பின்வருமாறு அமைத்துக் கொண்டால் பொருள் எளிதில் விளங்கும்.

வித்தியாதத்துவம்    தொழில்
1. காலம்  இறந்தகாலம்     எல்லை
நிகழ்காலம்         பலம்
எதிர்காலம்         புதுமை
2. நியதி         எப்போதும் நிச்சயித்தல்
3. கலை         கிரியை விளங்கச் செய்தல்
4. வித்தை         அறிவு விளங்கச் செய்தல்
5. அராகம்         ஆசை விளங்கச் செய்தல்
6. புருடன்         ஐம்புலனும் ஆரவரும் காலம்
7. மாயை         மயக்குதல்

இனி, சுத்த மாயையிலிருந்து தோன்றும் சுத்த தத்துவங்கள்  5

வித்தியா தத்துவங்கள் ஏழினையும் ஆசிரியர் விளக்கிய முறையில் இதுகாறும் அறிந்தோம். அவை உயிரின் அறிவாற்றல், விழைவாற்றல், செயலாற்றல்களை மலத்தடையிலிருந்து நீங்கி எழுப்பி உயிரை உலக நுகர்ச்சியில் நோக்குடையதாகச் செய்யும் எனக் கண்டோம். ஆயின் அக்கருவிகள் தாமே சுதந்திரமாகச் செயற்படா. இறைவனது சத்தியே அவற்றைச் செலுத்தி நிற்கும்.

இறைவனது சத்தி பற்றி ஒன்றைச் சொல்ல வேண்டும். அது எதனையும் நேராகச் செய்யாது. ஒன்றை நிலைக்களமாகக் கொண்டு நின்றே செய்யும். நெருப்பு ஒரு பொருளில் தங்கி நின்று தன் தொழிலைச் செய்யுமேயன்றி அது தனித்து நிற்பதில்லை. அது விறகு, நெருப்புக்குச்சி முதலியவற்றுள் ஒன்றை ஆதாரமாகக் கொண்டு நிற்கிறது. அதுபோல இறைவனது சத்தி நின்று தொழிற்படுவதற்கு ஓர் ஆதாரம்  நிலைக்களம்  வேண்டும். அந்த நிலைக்களம் எது? தூய்மையற்ற அசுத்த மாயை தூயதாகிய இறைவனது சத்திக்கு நிலைக்களம் ஆகாது. எனவே சுத்த மாயையே அதற்கு நிலைக்களம் ஆவது என்பது விளங்கும்.

இறைவனது சத்தி சுத்த மாயையிற் பொருந்தி ஐந்து தத்துவங்களைத் தோற்றுவிக்கும். அவை சிவம், சத்தி, சதாசிவம், (அல்லது சாதாக்கியம்), ஈசுரம், சுத்தவித்தை என்பன. இவ்வைந்துமே இறைவனது சத்திக்கு நிலைக்களமாய் அமைவன இத்தத்துவங்கள் சுத்த மாயையில் தோன்றும் முறையைக் காண்போம்.

விருத்தி

பிரகிருதியிலும், அசுத்த மாயையிலும் தோன்றும் காரியங்கள் எல்லாம் பரிணாமமாய்த் தோன்றுவன என அறிந்தோம். ஆயின், சுத்த மாயையில் தோன்றும் தத்துவங்கள் அவ்வாறு பரிணமித்துத் தோன்றுவன அல்ல. அவை விருத்திப்பட்டுத் தோன்றுவனவாகும். விருத்தி என்றால் என்ன? என்பதை முதலில் விளங்கிக் கொள்வோம். சுருங்கி நிற்பது விரிவடைதல் விருத்தி எனப்படும். எடுத்துக் காட்டினால் இதனை விளக்கலாம். சர்க்கஸ் நடத்துவோர் அக் காட்சிக்கென்று பெரிய கூடாரங்களை அமைப்பர். மடித்து வைத்திருந்த முரட்டுத் துணிகளை விரித்துக் கால்களை நாட்டிக் கூடாரமாகச் செய்வர். முன்னே சுருங்கி நின்ற துணியே பின் விரிந்து கூடாரமாக மாறுகிறது. இம் மாற்றமே விருத்தி எனப்படும். சுத்த மாயையிலிருந்து இம்முறையில் விரிந்து தோன்றும் தத்துவங்கள் ஐந்து எனக் குறிப்பிட்டோம். அவை விரியும் முறை வருமாறு.

1. சிவதத்துவம்

முதலில் இறைவன் சுத்த மாயையில் ஒரு பகுதியைத் தனது ஞான சத்தியால் இது விரிவடையத் தக்கது எனப் பொதுவாக நோக்குவான். அவ்வாறு அவன் நோக்கிய அளவில் சுத்த மாயையின் ஒரு பகுதி காரியப்படுவதற்கு ஏற்ற பக்குவத்தைப் பெறும். பக்குவப்பட்ட அப்பகுதி சிவதத்துவம் என்றும் நாதம் என்றும் சொல்லப்பெறும். இது சுத்த மாயையின் முதல் விருத்தி. இறைவனது ஞானசத்தி மட்டும் செயற்படும் நிலை இது.

2. சத்திதத்துவம்

இறைவன் பின்னர் முதல் விருத்தியாகிய சிவ தத்துவத்தின் ஒரு பகுதியைத் தனது கிரியா சத்தியால் இது விரிவடைக எனப்பொதுவாகக் கருதுவான். அவ்வாறு அவன் கருதிய அளவில் அப்பகுதி இரண்டாம் விருத்திப்பட்டு சத்தி என்றும், விந்து என்றும் பெயர் பெறும். இறைவனது கிரியா சத்தி மட்டும் செயற்படும் நிலை இது.

3. சதாசிவ தத்துவம்

இறைவன் பின்னர் இரண்டாம் விரிவாகிய சத்தி தத்துவத்தின் ஒரு பகுதியைத் தனது ஞான சத்தியால் சிறப்பாக நோக்கியும், கிரியா சத்தியால் சிறப்பாகக் கருதியும் நிற்பான். இது இவ்வாறு விரிவடையத்தக்கது என்பது சிறப்பாக நோக்குதல். இது இவ்வாறு விரிவடைக என்பது சிறப்பாகக் கருதுதல். நோக்குதலும், கருதுதலும் சிறப்பாக நிகழும் இந்நிலையில் அப்பகுதி மூன்றாம் விருத்தியாக வளர்ச்சியடைந்து சதாசிவம் அல்லது சாதாக்கியம் எனப் பெயர் பெறும். இறைவனது ஞான சத்தியும், கிரியா சத்தியும் சமமாகச் செயற்படும் நிலை இது.

4. ஈசுர தத்துவம்

ஞான சத்தியையும் கிரியா சத்தியையும் சமமாகச் செலுத்தி நின்ற இறைவன் பின்னர் மூன்றாம் விருத்தியாகிய சதாசிவ தத்துவத்தின் ஒரு பகுதியைச் செயற்படுத்தற்குக் கிரியா சத்தியை மிகச் செலுத்தி இஃது இவ்வாறு ஆகுக எனக் கருதுவான் அப்பொழுது அம்மூன்றாம் விருத்தி நான்காம் விருத்தியாக வளர்ச்சி அடைந்து ஈசுரம் எனப் பெயர் பெறும். கிரியா சத்தி மிகுந்தும் ஞான சத்தி குறைந்தும் செயற்படும் நிலை இது.

5. சுத்த வித்தியா தத்துவம்

கிரியா சத்தியை மிகச் செலுத்தி நின்ற இறைவன் பின்னர் நான்காம் விருத்தியாகிய ஈசுர தத்துவத்தின் ஒரு பகுதியைச் செயற்படுத்தற்குத் தனது ஞான சத்தியை மிகச் செலுத்தி நிற்பான். அப்பொழுது அப்பகுதி ஐந்தாம் விருத்தியாக வளர்ச்சியடைந்து சுத்த வித்தை எனப் பெயர் பெறும். (அசுத்த மாயையின் காரியங்களுள் வித்தை என ஒன்று இருப்பதால் சுத்த மாயையின் காரியமாகிய இதனை அதிலிருந்து வேறுபடுத்தற்காகக் சுத்த வித்தை என்றனர்.) ஞான சத்தி மிகுந்தும் கிரியா சத்தி குறைந்தும் செயற்படும் நிலை இது. இறைவனது இச்சா சத்தி என்றும் ஒரு நிலையிலே நிற்க, ஏனைய ஞான சத்தியும் கிரியா சத்தியும் தனித்தனியாயும், தம்முள் ஒத்தும், ஒன்றின் ஒன்று மிகுந்தும் குறைந்தும் செயற்படுதலால் சிவம், சத்தி, சதாசிவம், ஈசுரம், சுத்தவித்தை என்னும் இவ்வைந்து தத்துவங்களும் சுத்த மாயையின் விரிவுகளாய்த் தோன்றலாயின எனச் சுருக்கமாகக் கூறலாம்.

சுத்த மாயை

(1. சிவம்(நாதம்) 2. சத்தி (விந்து) 3. சிதாசிவம் (சாதாக்கியம்) 4. ஈசுரம் 5. சுத்த வித்தை

இவற்றைச் சுத்த மாயையிலிருந்து சிவபெருமானே நேரே தோற்றி ஒடுக்குவதால் இவை சிவதத்துவங்கள் எனப்படுகின்றன. சுத்த மாயையினின்றும் தோன்றிச் சுத்தமாய் இருத்தல் பற்றி இவை சுத்த தத்துவங்கள் என்றும் சொல்லப்படும். முன்னே சொன்னபடி இறைவனது சத்தி, சுத்த தத்துவங்களாகிய இவற்றை நிலைக்களமாகப் பற்றி நின்று இவற்றின் வழியாகக் கீழேயுள்ள ஏனைத் தத்துவங்களைச் செலுத்தி நிற்கும். செலுத்தும் கருவியாதல் பற்றி இத்தத்துவத் தொகுதி பிரேரக காண்டம் என்றும் சொல்லப்பெறும் பிரேரகம்  செலுத்துவது.

சுத்த தத்துவங்களின் பெயர்

20. வித்தியா தத்துவங்கள் ஏழும் விளம்பினோம்
சுத்தமாம் தத்துவங்கள் சொல்லக்கேள்  நித்தமாம்
சுத்தவித்தை ஈசுரம்பின் சொல்லும் சதாசிவம் நல்
சத்திசிவம் காண் அவைகள் தாம்

பதவுரை

வித்தியா தத்துவங்கள்     அசுத்த மாயையின் காரியமாகிய வித்தியா தத்துவங்கள்
ஏழும்         ஏழினையும்
விளம்பினோம்         இதுவரையில் விளக்கினோம்.
சுத்தமாம் தத்துவங்கள்     இனி, சுத்த மாயையிலிருந்து தோன்றும் சுத்த தத்துவங்களின் இயல்பை
சொல்லக்கேள்         கூறுகிறோம். கேட்பாயாக.
அவைகள்         அத் தத்துவங்கள்
சுத்த வித்தை         சுத்த வித்தையும்
ஈசுரம்         ஈசுரமும்
பின் சொல்லும்         அவற்றின் மேலாகச் சொல்லப்படும்
சதாசிவம்         சிதாசிவமும்
நல்சத்தி         நல்ல சத்தியும்
சிவம்         சிவமும் என
காண்         அறிவாயாக.

பொழிப்புரை

அசுத்த மாயையிலிருந்து தோன்றும் வித்தியா தத்துவங்கள் ஏழினையும் விளக்கிச் சொன்னோம். இனி, சுத்த மாயையிலிருந்து தோன்றும் தத்துவங்களின் இயல்பை உனக்குக் கூறுகிறோம். அவை சுத்த தத்துவங்கள் எனப்படும். அவை சுத்தவித்தை, ஈசுரம், சதாசிவம், சத்தி, சிவம் என்னும் பெயரை உடையன. அவை நித்தமாக உள்ளன.

சுத்த தத்துவங்களின் நிலை

21. சுத்தவித்தை ஞானம்மிகும் தொன்மையாம் ஈசுரம் தான்
அத்தன் தொழில் அதிகம் ஆக்கியிடும்  ஒத்தவிவை
சாதாக்கியம் என்றும் சத்தி சிவம் கிரியை
ஆதார ஞானஉரு ஆம்

பதவுரை

சுத்த வித்தை     சுத்த வித்தை என்ற தத்துவம்
ஞானம் மிகும்     இறைவனது ஞானசத்தி மிகுந்து, கிரியா சத்தி குறைந்து நின்று தொழிற்படும் நிலைக்கு நிலைக்களமாய் இருப்பது.
தொன்மையாம்     பழமையாகிய
ஈசுரம்     ஈசுரதத்துவம்
அத்தன் தொழில்    இறைவனது கிரியா சத்தி
அதிகம் ஆக்கியிடும்  மேம்பட்டு நிற்க, ஞானசத்தி அடங்கி நிகழும் நிலைக்கு நிலைக்களமாய் இருப்பது.
ஓத்தலிவை      ஞானசத்தியும் கிரியாசத்தியும் ஆகிய இவை ஒத்து இணைந்து நிகழும் நிலைக்கு நிலைக்களமாய் உள்ளது.
சாதாக்கியம்     சதாசிவ தத்துவமாகும்.
என்றும்     எப்போதும்
சத்தி     சத்தி தத்துவம்
கிரியை ஆதார உரு  இறைவனது சத்தி கிரியை மட்டுமாய் நின்று தொழிற்படும் நிலைக்கு நிலைக்களமாய் உள்ளது.
சிவம்      சிவ தத்துவம்
ஞான ஆதார உருவாம்  இறைவனது சத்தி ஞானமேயாய் நின்று தொழிற்படும் நிலைக்கு நிலைக்களமாய் இருப்பது.

பொழிப்புரை

சிவசத்தி மூத்திறப்பட்டு விளங்கும். அவை இச்சா சத்தி, ஞானசத்தி, கிரியா சத்தி என்பன. இச்சை என்றும் ஒரே நிலையில் இருப்பது. ஏனைய ஞானமும் கிரியையும் ஆகியவற்றின் தொழிற்பாட்டில்தான் வேறுபாடு உள்ளது. ஞான சத்தி மிகுந்து, கிரியா சத்தி குறைந்து நின்று தொழிற்படும் நிலை உண்டு. அவ்வாறு சிவசத்தி நிற்கும் நிலைக்கு நிலைக்களமாய் இருப்பது சுத்தவித்தை.

கிரியா சத்தி மிகுந்து, ஞான சத்தி குறைந்து நின்று தொழிற்படும் நிலை உண்டு. அவ்வாறு சிவசத்தி நிற்கும் நிலைக்கு நிலைக்களமாய் இருப்பது ஈசுரம். ஞான சத்தியும் கிரியா சத்தியும் சமமாய் நின்று தொழிற்படும் நிலை உண்டு. அவ்வாறு சிவசத்தி நிற்கும் நிலைக்கு நிலைக்களமாய் உள்ளது சதாசிவம். இனி, சிவசத்தி கிரியை மட்டுமாய் நின்று தொழிற்படும் நிலை உண்டு. அவ்வாறு கிரியையாய் நிற்கும் நிலைக்கு நிலைக்களமானது சத்தி தத்துவம். சிவசத்தி ஞானம் மட்டுமாய் நின்று தொழிற்படும் நிலை உண்டு. அவ்வாறு ஞானமேயாய் நிற்கும் நிலைக்கு நிலைக்களமானது சிவதத்துவம். இவ்வாறு சிவசத்திக்கு இடமாய் உள்ளவை இச் சுத்ததத்துவங்கள் ஆகும்.

இனி, பாசமாகிய ஆணவமும் வினையும்

22. அறாறு தத்துவமும் சொன்னோம் அடைவாக
மாறா மலம்இரண்டும் வாசொல்லக்  கூறில்
அறியாமை ஆணவம் நீயானசுக துக்கம்
குறியா வினைஎன்று கொள்.

பதவுரை

ஆறாறு தத்துவமும்      முப்பத்தாறு தத்துவங்களின் இயல்பையும்
அடைவாக         முறையாக
சொன்னோம்         விளக்கிக் கூறினோம்.
(ஆணவம், கன்மம், மாயை என்ற பாசம் மூன்றனுள் இதுவரை மாயை பற்றிக் கூறிமுடித்தோம். இனி, எஞ்சியுள்ள)
மாறா         உயிரை விட்டு நீங்காமல் தொடர்ந்து வரும்
மலம் இரண்டும்         ஏனைய இரண்டு மலங்களின் இயல்பையும்
சொல்ல, வா         யாம் கூறுவோம்; நீ கேட்க வருவாயாக.
கூறில்         அவற்றை எடுத்துச் சொல்லுமிடத்து
அறியாமை         அறியாமையைத் தருவது
ஆணவம்         ஆணவ மலமாகும்.
நீயான         உன்னில் வேறாகப் பிரித்தறிய முடியாமல், உன் இயல்பாகவே நீ கண்டுவருகின்ற
சுக துக்கம்         இன்பத் துன்பங்களைப் பயந்து நிற்பது
குறியா வினை         எதிர்பாராத வகையில் வந்து பொருந்துகின்ற கன்ம மலமாகும்
என்று கொள்         என்று அறிவாயாக.

பொழிப்புரை

இதுவரை முப்பத்தாறு தத்துவங்களையும் முறையாகக் கூறி முடித்தோம். இனி, உயிரை விட்டு நீங்காதிருக்கும் ஆணவம், வினை என்னும் இரண்டு மலங்களின் இயல்பினை உனக்கு உரைப்போம். உனது அறிவை மறைத்து அறியாமையைத் தருவது ஆணவம்; உனக்கு இன்ப துன்ப நுகர்ச்சிகளைத் தருவது நல்வினை தீவினை என இரு வகைப்படும் வினையாகும் என்று அறிவாயாக.

விளக்கம்
ஆணவம்

உயிர்களாகிய நாம் அறிவுப் பொருள். அறிவுப் பொருளாகிய நம்மிடத்தில் அறியாமையும் இருக்கிறது. எவ்வாறெனில் ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்ந்து வருகின்ற பிறப்பு இறப்புக்களில் அகப்பட்டுத் துன்புற்று வருகிறோம். ஆயினும், எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தோம் என்பதையோ பிறவி நமக்குத் துன்பம் தருவது என்பதையோ உணராதிருக்கின்றோம். நாம் செய்த வினை காரணமாகவே பிறவியும் துன்பங்களும் வருகின்றன என்பதையும் நாம் உணர்வதில்லை. இப்பிறவியிலிருந்து நம்மை எடுத்துக் காத்துப் பேரின்பத்துள் வைக்கவல்ல இறைவனது திருவருளையும் நாம் அறியாமல் அதனைப் பற்றிச் சிறிம் கவலை கொள்ளாமல் வாழ்கின்றோம். அறிவுப் பொருளாக இருந்தும் நாம் பிறவித்துயர், வினை, திருவருள் முதலியவற்றை அறியாதிருக்கிறோம். இவற்றை அறியாமல் இருப்பதற்கு என்ன காரணம்?

அகவிருள்

காணும் தன்மையுடைய கண் பொருள்களைக் காணவொட்டாதபடி இருள் என்ற பொருள் அக்கண்ணை மூடி மறைக்கின்றது. கண் பொருள்களை அறியாத தன்மை இருளால் உண்டாவது. கண்ணை மறைக்கின்ற புற இருள்போல உயிரோடு பொருந்தி அதனை மறைத்திருக்கின்ற அகவிருள் ஒன்று உள்ளது. அதுவே ஆணவமலம் எனப்படுவது. முன்னே கூறியபடி பிறவித்துயர். வினை, திருவருள் முதலிய அறியத்தக்க பல பொருள்களுள் ஒன்றையும் அறியவொட்டாதபடி செய்வது ஆணவ இருளேயாகும்.

அறியாமையே அறிவாகத் தோன்றுதல்

புறவிருள் வந்து கண்ணை மறைக்கும் போது கண் செயற்படாது போகிறது. உயிர் கண்ணுக்கு வேறாக இருப்பதனால் அக் கண் செயற்படாமையைக் கொண்டு அதனை மறைக்கக் கூடிய இருளாகிய பொருள் வந்துற்றது என்று உயிர் கருதி உணர்கிறது. இனி அகஇருளாகிய ஆணவமோ உயிரையே மறைத்து நிற்கிறது. அவ்வாறு மறைத்து நின்று அறியாமையை உண்டாக்குகிறது. உயிர் அவ்வறியாமையையே அறிவென்று நம்பி விடுகிறது. அதனாலேயே தன்னை ஒன்று மறைத்திருக்கிறது என்பதை எவ்வகையினாலும் உணர முடியாமற்போகிறது.

உலகில் இருள் வந்துற்றபோது அதனை உணர்ந்து அதனை நீக்கிக் கொள்ள வழி தேடுகிறோம். ஆணவ இருளினால் அறிவு மறைக்கப்படும் போது அம் மறைப்பினை நாம் உணர்வதில்லை. அதனால் ஏற்படும் அறியாமையையே அறிவு என்று நம்பி விடுகிறோம். அதனாலேயே அறியாமையைப் போக்கிக் கொள்ள வழி தேடாமல் இருக்கிறோம். ஓர் எடுத்துக்காட்டுக் கூறினால் இது விளங்கும். ஒரு குடும்பத்தலைவர் தமது மனைவி, மக்கள், உடன் பிறந்தார் பொருட்டு வாழ்நாளெல்லாம் பாடுபட்டுப் பொருள் ஈட்டினார். கடைசி காலத்தில் அவர்கள் தனக்குத் துணையாக இருப்பர் என்று உறுதியாக நம்பினார். ஆனால் நடந்தது என்ன? அவர் ஓய்வு பெற்ற பின்னர், அவருக்கு வருவாய் இல்லை என்று ஆன பின்னர், குடும்பத்தார் அவரிடம் நடந்து கொண்ட முறையில் அவர் வேறுபாட்டைக் கண்டார். தனக்கு உரிய மதிப்பினை அளிக்காமல் புறக்கணிக்கும் போக்கினைக் கண்டார். அவர்கள் கடைசி வரை தமக்குத் துணையாய் இருப்பர் என்று நம்பியது எவ்வளவு அறியாமை என்று எண்ணி வருந்தினார். இத்துணைக் காலமும் அவர் அறியாமையில் இருந்தார். ஆயினும் நாம் அறியாமையில் இருக்கிறோம் என்பதை அவர் உணரவில்லை அதற்குக் காரணம், அந்த அறியாமையே அவருக்கு அறிவாகத் தோன்றியதுதான்.

ஆணவம் செய்யும் முழுமறைப்பு

இனி அறியாமையிலே இரு நிலைகள் உள்ளன. ஒன்று பேரறியாமை; மற்றொன்று, ஓரளவில் அறியாமை பேரறியாமையாவது உயிர் யாதொன்றையும் அறியமாட்டாமல் முழுஅறியாமையில் மூழ்கியிருத்தல். அந்நிலையில் உயிர், தான் ஒரு பொருள் உண்டு எனத் தன் இருப்பையும் கூட அறியாது நிற்கும். நாம் உறங்குங் காலத்தில் இப்படிப்பட்ட பேரறியாமையே நமக்கு உண்டாகிறது அப்பொழுது ஐம்பொறி முதலிய கருவிகள் செயற்படாது போதலினால் அறிவு விளங்காமற் போகிறது. உயிர் அந்நிலையில் ஆணவமலத்தின் வயப்பட்டு விடுகிறது. இருள் வயப்பட்ட கண் ஒன்றையும் அறிய மாட்டால் திகைந்து நிற்பதுபோல உயிரும் உறக்கத்தில் ஆணவ மலத்தால் மறைக்கப்பட்டு முழு அறியாமை உடையதாய் நிற்கிறது. இப்படிப்பட்ட பேரறியாமை நிலை, கேவல நிலை எனப்படும். நாள்தோறும் நாம் இக் கேவல நிலையை அடைந்துவருகிறோம்.

ஆணவத்தால் உண்டாகும் மயக்கவுணர்வு

இனி ஓரளவில் உள்ள அறியாமை என்றால் என்ன? என்பதைக் கூறுவோம். எங்கும் செறிந்த இருளிடத்தில் ஒரு விளக்கை ஏற்றினால் அவ்விளக்கொளியில் இருள் சிறிது விலகுகிறது. ஆனால் அது முற்றிலும் நீங்கி விடவில்லை. நீங்காதிருக்கிற அந்த இருள் விளக்கொளியின் காரணமாக முன்பு போலப் பொருள்களை முற்றிலும் மறைக்க முடியவில்லை. ஆனால் அது வேறு ஒரு காரியத்தைச் செய்கிறது. விளக்கொளியானது பொருள்களைப் புலப்படுத்துகிற போது இருளானது அந்த ஒளியோடு கலந்து பொருள்களை மங்கலாகப் புலப்படும்படி செய்கிறது. தரையில் கிடக்கும் கயிற்றைப் பாம்பு என்று தவறாகக் கருதும்படி செய்கிறது. இவ்வாறு இருள் ஒளியோடு சேர்ந்து பொருளின் இயல்பை வேறுபடுத்திக் காட்டுகிறது.

இந்தப் புறவிருளின் செய்கை போல அக இருளாகிய ஆணவத்தின் செயலும் அமைகிறது. ஆணவம் இருள் என்றால் அதனை நீக்கும் விளக்குப் போன்றது மாயை. நமக்கு வாய்த்துள்ள ஐம்பொறிகளும், மனம் புத்தி போன்றவையும் மாயையினின்றும் தோன்றிய கருவிகளே என்பது நாம் அறிந்தது. இக்கருவிகளின் செயற்பாட்டினால் அஃதாவது, மாயாமலத்தின் சேர்க்கையால்  ஆணவ மலத்தின் சத்தி சிறிது விலகுகிறது. அறிவு விளங்குகிறது. மாயையின் காரணமாக ஆணவ இருள் முன்பு போல அறிவை முற்றிலும் மறைக்க முடியவில்லை. ஆனால் அது இப்பொழுது வேறு ஒரு காரியத்தைச் செய்கிறது. மாயா கருவிகளால் விளங்கும் அறிவை விபரீத அறிவாக மாற்றி விடுகிறது. அஃதாவது அற்பமான பொருளை உயர்வானது என்றும், நிலையில்லாத பொருளை நிலைத்தது என்றும் இவ்வாறு மாறி உணரும்படியாகச் செய்து விடுகிறது. இவ்வாறு ஆணவ இருள் மாயையோடு கூடிய நிலையில் உயிருக்கு மயக்க உணர்வை உண்டாக்குகிறது. நாமெல்லாம் நமக்கு வேறாகிய உடம்பையே நாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறோம். இது மயக்க உணர்வு தானே. நமக்கென்று என்ன உடைமை இருக்கிறது? நாம் பிறக்கும் போது எதையும் உடன் கொண்டு வரவில்லை. இறக்கும் போது எதையும் உடன் கொண்டு போவதும் இல்லை. அப்படியிருக்க எனது எனது என்று எண்ணி உடைமைகளைச் சேர்த்துக் கொண்டிருக்கிறோமே. இது மயக்கவுணர்வு தானே. இம்மயக்கவுணர்வே ஓரளவில் அறியாமை என்று முன்னே குறிப்பிடப்பட்டது.

ஆணவத்தின் தன்னியல்பும் பொதுவியல்பும்

இதுவரை கூறியவற்றால் ஆணவ மலத்தின் இயல்பு இரண்டு என்பது புலனாகும். ஒன்று மாயையோடு சேராத தனி நிலையில் ஆணவமலம் உயிருக்குப் பேரறியாமையைத் தருதல். மற்றொன்று, மாயையோடு கூடிய நிலையில் உயிருக்கு ஓரளவில் அறியாமையைத் தருதல். ஆணவம் தனித்துச் செயற்படும் நிலை கேவலநிலை என்று குறிப்பிட்டோம். மாயையோடு கூடிச் செயற்படும் நிலை சகல நிலை எனப்படும். ஆணவம் தனி நிலையில் பேரறியாமையைச் செய்தல் அதற்குத் தன்னியல்பு ஆகும். அது மாயையின் சேர்க்கையைப் பெற்றவிடத்து மயக்கவுணர்வைச் செய்தல் அதற்குப் பொதுவியல்பு ஆகும். எனவே தனி நிலையிலும், மாயையோடு கூடிய பொது நிலையிலும் ஆன்மாவுக்கு அறியாமையைத் தருதலே ஆணவத்தின் இயல்பாகும். இதுபற்றியே அறியாமை ஆணவம் என்று குறிப்பிட்டார் ஆசிரியர். இத்தொடரின் நடுவே தருவது என்ற ஒரு சொல்லை வருவித்து அறியாமையைத் தருவது ஆணவம் எனக்கொள்ள வேண்டும்.

வினை

ஆணவத்தின் காரணமாக உண்டாவது கன்மம் எனப்படும் வினையாகும். ஆணவத்தினால் வினை எப்படித் தோன்றுகிறது என்பதைக் காண்போம். உயிர் இறைவனைப் போல அறிவுப் பொருளேயாகும். ஆயினும் சுதந்திரமான அறிவுடையதல்ல. அறிவதற்குத் துணை ஒன்றே வேண்டாது தானே அறிவதே சுதந்திர அறிவாகும். அத்தகைய சுதந்திர அறிவு உயிருக்கு ஏது? பிறந்தது முதற்கொண்டு பெற்றோர், ஆசிரியர், நூல்கள் முதலிய துணையைக் கொண்டு தானே அறிவு விளங்குகிறது. மேலும் கண்டும் கேட்டும் உண்டும் உயிர்த்தும் உற்றும் அறிவதற்கு ஐம்பொறிகள் அல்லவா துணை செய்கின்றன? இவ்வாறு பொறிகளின் துணையில்லாமல் யாதொன்றையும் அறிய மாட்டாத உயிர்க்குச் சுதந்திர அறிவென்பது ஏது? உயிருக்குச் சுதந்திர அறிவு இல்லாமை போலவே சுதந்திரமான செயலும் இல்லை. சுதந்திரமான செயலாவது எத்தடையுமின்றி நினைத்ததை நினைத்தவாறே செய்து முடித்தலாகும். இத்தகைய செயல் உரிமை உயிருக்கு இருக்கிறதா?

ஒன்றை நினைக்கில் அது ஒழிந்திட்டு ஒன்றாகும்
அன்றி அதுவரினும் வந்தெய்தும்  ஒன்றை
நினையாத முன் வந்து நிற்கினும் நிற்கும்
எனையாளும் ஈசன் செயல்

எனவரும் அனுபவ வாக்கு உயிருக்குச் சுதந்திரமான செயல் இல்லை என்பதை உணர்த்தி நிற்கிறது.

பற்றுடன் செய்யும் முயற்சியே வினையாதல்

இறைவனையின்றி ஆன்மா எதனையும் தானே அறியவும்மாட்டாது; எதனையும் தானே செய்யவும் மாட்டாது. ஆயினும் ஆணவ மலம் உண்டாக்குகிற மயக்க உணர்வால் ஆன்மா எச்செயலுக்கும் தன்னையே வினைமுதலாகக் கருதி நான் நான் என்று முனைத்து எழும். அவ்வாறு எழுந்த ஆன்மா ஆணவ சத்தியின் தூண்டுதலால் உலகப் பொருள்களை நோக்கி அவற்றின் மேல் இச்சை கொள்ளும். அவ் இச்சையினால் தனது அல்லாத அப்பொருள்களை எனது எனது என்று சென்று பற்றும். எனது என்பது புறப்பற்றும், யான் என்பது அகப்பற்றும் ஆகும். இவ்விரு பற்றுக்களின் வழியே செய்யும் முயற்சியே வினை அல்லது கன்மம் எனப்படும்.

ஆணவ மலத்தின் வழிப்பட்டது வினை

ஆணவ மலமே உயிருக்கு யான் என்னும் உணர்வை உண்டாக்கி செய்வோனாம் தன்மையைத் தருகிறது; எனது என்னும் உணர்வை உண்டாக்கி நுகர்வோனாம் தன்மையைத் தருகிறது. செய்வோனாம் தன்மையும், நுகர்வோனாம் தன்மையுமே வினை உண்டாவதற்கு ஏதுவாகின்றன. சுருங்கக் கூறினால், ஆணவ மலத்தின் வழியாகவே வினை வந்து உயிரைப் பற்றுவதாகிறது.

வினையின் மூவகை நிலைகள்

ஆன்மா தனது செய்வோனாம் தன்மையினால் ஒரு செயலைச் செய்யுங்கால் நிகழ்வது தூல கன்மம். புலப்படுகிற வினை என்பது அதற்குப் பொருள். அச்செயல் முடிந்த பின் அது தூல நிலை நீங்கிச் சூக்கும நிலையை அடைந்து நிற்கும். அதனைப் புலப்படாத வினை எனலாம். புலப்படும் வினை நல்வினை, தீவினை என இரண்டு வகையாய் அமையும் பின் அவைகளே புலப்படாத வினையாய் நிற்குங்கால் புண்ணியம், பாவம் எனப் பெயர் பெறும். புலப்படாத வினைகளே தத்தமக்குரிய காலம் வந்தபோது இன்பமும் துன்பமும் ஆகிய தம் தம் பயன்களைத் தம்மைச் செய்த ஆன்மாக்களுக்குக் கொடுக்கும். புலப்படும் நிலையில் நிகழும் வினை ஆகாமியம் எனப்படும். ஆகாமியம் என்பதற்கு விரும்பிச் செய்யப்படுவது என்பது பொருள். அச்செயல் முடிந்தபின், புலப்படா நிலையை அடைந்து சூக்குமமாய் நிலைத்து நிற்குங்கால் சஞ்சிதம் எனப்படும். சஞ்சிதம் என்பதற்கு நன்கு பெறப்பட்டது என்பது பொருள். புலப்படாத நிலையினின்று பயனாய் வந்து இன்ப துன்பங்களைக் கொடுக்கும் போது பிராரத்தம் எனப்படும். பிராரத்தம் என்பதற்கு நேர்படுவது என்பது பொருள்.

இன்ப துன்பங்களுக்குக் காரணம்

இதனால், ஒருவர் நல்வினை செய்தால் அது புலப்படாத நிலையில் புண்ணியமாய் நிலைத்து நின்று பின் காலம் வந்தபோது இன்பமாகிய பயனைத் தன்னைச் செய்தவருக்குக் கொடுக்கும் என்பதும், ஒருவர் தீவினை செய்தால் அது பாவமாய் நிலைத்து நின்று பின் காலம் வந்த போது துன்பமாகிய பயனைத் தன்னைச் செய்தவருக்குக் கொடுக்கும் என்பதும் புலனாகும். எனவே இன்ப துன்பங்களுக்குக் காரணம் வினை என்பது விளங்கும்.

நீயான சுகதுக்கம்

இன்ப துன்பங்கள் நமது இயற்கையல்ல. இயற்கையென்றால் என்றும் ஒரு தன்மையாய் இருக்கவேண்டும் மாறுதல் அடைவது இயற்கையாகாது. நமக்கு வருகின்ற இன்ப துன்பங்கள் இயற்கை எனின் அவை நம்மை விட்டு எப்பொழுதும் நீங்காதிருத்தல் வேண்டும். ஆயின் அவை சிறிது காலம் இருந்து பின் நீங்கக் காண்கிறோம். ஆகையால் அவை நம்மோடு என்றும் இருக்கும் இயற்கையல்ல. வினை என்னும் காரணத்தினால் வந்து பொருந்துகிற செயற்கையேயாகும். அக்காரணம் உள்ள வரையில் அவையும் இருந்து, அது நீங்கியவுடன் அவையும் நீங்கி விடும். நாம் இவ்வுண்மையை உணர்வதில்லை. இன்ப துன்பங்களை நமக்கு வேறானவை எனப் பிரித்து உணராது, அவற்றை நம் இயல்பாகவே கண்டு வருகிறோம். யான் இன்பமாய் இருக்கிறேன், துன்பமாய் இருக்கிறேன் என்று நம் இயல்புகளாகச் சொல்லி வருகிறோம். இது பற்றியே நீயான சுகதுக்கம் என்றார் ஆசிரியர். இங்கேயும் தருவது என்ற ஒரு சொல்லை வருவித்து, சகதுக்கம் தருவது குறியாவினை என்று கொள்ளவேண்டும்.

குறியாவினை

சுக துக்கத்திற்குக் காரணம் இன்னது என்பதை மேலே அறிந்தோம். சுகமும் துக்கமும் வருவதும் போவதும் நம் கையில் இல்லை. அவை எவ்வழியாக வரும்? எத்தனை காலம் நிற்கும்?என்று யாரால் சொல்ல முடியும்? உலக வாழ்க்கையைப் போல் அறியமுடியாத விந்தை வேறொன்றுமில்லை. நீலவானம் மேகமேயில்லாமல் களங்கமற்று விளங்கி வருகிறது. திடீரென்று கருமேகங்கள் எங்கிருந்தோ திரண்டு வந்து, இடி இடித்து மின்னல் மின்னிப் பெருமழை கொட்டுகிறது. சில சமயம் காற்று என்பதே இல்லாமற் போய் விடுகிறது. மரங்களின் இலைகளும் அசையாமல் இருக்கின்றன. திடீரென்று எங்கிருந்தோ ஒரு சூறைக்காற்று வந்து சுழன்று அடிக்கிறது. அதன் வேகத்தில் பெரிய பெரிய மரங்களெல்லாம் வேருடன் பெயர்ந்து விழுகின்றன. சற்று முன்னால் கண்ணுக்குக் குளிர்ச்சியாகக் காட்சியளித்த பசுஞ்சோலை இப்பொழுது நிலைகுலைந்து தரைமட்டமாகி விடுகிறது.

வாழ்க்கையும் இதுபோலத்தான். சுகம் எப்படி வருகிறது? துக்கம் எப்படி வருகிறது? என்பதை நாம் அறிய முடியவில்லை. காலம் வருமளவும் நுண்ணியதாய் அடங்கியிருந்து, காலம் வந்தவிடத்து உருப்பட்டு வந்து பொருந்தி இன்ப துன்பங்களைப் பயப்பதாகிய வினையின் இயல்பு அறிதற்கு அரிது. அதனைக் குறியாவினை என அடைமொழி கொடுத்துக் கூறினார் உண்மை விளக்க ஆசிரியர். குறியாவினை என்பதன் பொருளை நன்கு விளங்கிக் கொள்ளச் சங்க இலக்கியமாகிய அகநானூற்றில் வரும் ஒருதொடர் துணை செய்வதாகும். அத்தொடரையும், அத்தொடர் பயன்படுத்தப்பட்ட சூழலையும் முதலில் அறிந்து கொள்வோம்.

ஒரு வளமான மலைச்சாரல். எங்கே பார்த்தாலும் அடர்த்தியான காடு. அங்கே எத்தனை வகையான மரங்கள்! செழிப்பாக வளர்ந்துள்ள வாழை மரங்களில் பெரிய பெரிய குலைகள். அவற்றை வெட்டுவார் இல்லை. அவ்வாழைக் குலைகள் முற்றி முதிர்ந்து தாமாகப் பழுத்து நிற்கின்றன. கீழே பாறையான தரையில் குழிவான இடத்தில் சிறிய சுனை இருக்கிறது. தாமே பழுத்து உதிர்ந்த வாழைக் கனிகள் அச்சுனை நீரில் கலக்கின்றன. அருகிலே பலா மரங்கள் உள்ளன. அவற்றில் கொத்துக் கொத்தாகப் பலாப் பழங்கள் காட்சியளிக்கின்றன. அவை நன்றாகக் கனிந்து வெடித்து, அவற்றின் சுளைகள் உதிர்ந்து கீழே பாறையிலுள்ள சுனை நீரில் கலக்கின்றன. இவ்வாறு வாழைக் கனிகளும் பலாப்பழச் சுளைகளும் விழுந்து கலந்து பல நாள் ஊறி ஊறி அந்தச் சுனைநீர் தேன்போல ஆகிவிட்டது. இனிமையான அந்த மலைச் சாரலில் மனிதர்களின் நடமாட்டம் இல்லை. ஆனால் வளமான மரங்கள் நிறைந்த இடத்திலே வானரங்கள் மிகுதியாக இருப்பது இயற்கை தானே. மரமேறும் குரங்குகளுக்கு மரங்கள்தான் வாழும் அரண்மனை; பசி தீர்க்கும் உணவுச்சாலை; தாவி விளையாடும் ஊசல்; துயிலும் தொட்டில்! இதோ ஓர் ஆண்குரங்கு. அதற்குப் பொறுக்கமுடியாத தாகம் போலும். அது பாறையிலே தேங்கியிருந்த சுனை நீரை ஓடிச் சென்று குடித்தது. அது வெறும் நீரா? புளித்த தேன் (கள்) அல்லவா? அதன் தன்மையறியாமல் நீர் என்றே கருதிப் பருகி விட்டது.

சுனையின் பக்கத்தில் ஒரு சந்தன மரம் ஓங்கி நிற்கிறது. கள் ஆகிய நீரைப் பருகிய குரங்குக்கு ஒரே மயக்கம். சந்தன மரத்தில் அது ஏற முயல்கிறது. சிறிது தூரம் ஏறுவதற்குள் மயக்கம் கண்ணைச் சுழற்றுகிறது. மேலே செல்ல முடியாமல் கீழே விழுகிறது. விழுந்த இடமோ பல வகையான மலர்கள் உதிர்ந்து மெத்தென்று இருக்கிறது. மென்மையான அந்த மலர்ப்படுக்கையிலே விழுந்ததும் குடி மயக்கத்தால் தன்னை மறந்து இன்ப உறக்கத்தில் ஆழ்ந்து விடுகிறது. இந்த இன்ப உறக்கம் முயற்சியும் நினைப்பும் இன்றி, எதிர்பாராதவகையில் அதற்குக் கிடைத்ததாகும். அதனால், குறியாஇன்பம் என அதனைக் குறிப்பிட்டார் புலவர் (அகநானூறு,2) குறியா  எதிர்பார்க்காத, நினைக்காத. இச்சங்க இலக்கியத் தொடரையொத்து அமைந்துள்ளது குறியா வினை என்ற உண்மை விளக்கத்தொடர், எதிர்பாராத வகையில், நாம் நினைக்காத முறையில், வந்து பொருந்தி இன்ப துன்பங்களைத் தருதலின் குறியா வினை எனப்பட்டது என்று கொள்ளலாம்.

 
மேலும் உண்மை விளக்கம் »
முன்னுரைசைவ சித்தாந்தம் என்றும் அழியா உண்மைப் பொருள்களாக மூன்று பொருள்களைக் கொள்ளும். ... மேலும்
 
சுத்த நிலைஇத்தடுமாற்றம் தீர்ந்து ஒரு நிலைப்பட்ட தன்மையை எய்த வேண்டுமாயின், உயிர் திருவருளைச் சேர்தல் ... மேலும்
 
தத்துவங்கள் ஆன்மாவிற்குக் கருவியாய் நின்று உதவுதல்தத்துவம் என்ற சொல்லுக்கு கருவி என்பது பொருள். ... மேலும்
 
பசுநான் யார்?23. ஆறாறு தத்துவமும் ஆணவமும் வல்வினையும்மாறா அருளால் வகுத்துரைத்தீர்  வேறுஆகாஎன்னை ... மேலும்
 
பதிஇறைவன் வேறாய் நிற்றல்27. குன்றா அருளாலே கூறினீர் என்வடிவுபொன்றாத நும் உருவம் போதியீர்  நின்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar