Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சிவஞானபோதம் பகுதி-5 சிவஞானபோதம் பகுதி-7
முதல் பக்கம் » சிவஞானபோதம்
சிவஞானபோதம் பகுதி-6
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 நவ
2013
02:11

எடுத்துக்காட்டு -2
வெண்பா

7. ஒன்று என்றது ஒன்றேகாண்; ஒன்றே பதி; பசுவாம்
ஒன்று என்ற நீ பாசத்தோடு உளைகாண்;- ஒன்றுஇன்றால்
அக்கரங்கள் இன்றாம் அகர வுயிர் இன்றேல்
இக்கிரமத்து என்னும் இருக்கு.

இதன் பொருள்:

பிரமம் ஏகம் என்பதில் உள்ள ஏகம் என்பதற்கு ஒன்று என்பதே பொருள். பிரமம் ஒன்று என்பதற்குப் பிரமம் ஒன்றே உள்ளது; அதைத் தவிர இரண்டாவது பொருளில்லை என்று  பொருள் கூறுவது பொருந்தாது. அத்தொடரின் உண்மைப் பொருள் கடவுட் பொருள் ஒன்றே; கடவுளாக இரண்டாவது பொருள் இல்லை என்பதேயாம்.

எனவே, பிரமத்தைத் தவிர வேறு பொருளில்லை எனத் தவறாகப் பொருள் கொண்டு, உயிராகிய நான் பிரமமே என நீ கருதுதல் குற்றமாகும்.

பிரமத்தைப் போல நீ அறிவுடைப் பொருளாயினும், நீ இயல்பாகவே அறியாமையிற் கட்டுண்டு கிடக்கின்றாய். அது பற்றியே பசு என்னும் பெயர் பெற்றாய். ஆதலால் நீ பிரமம் ஆகாய்.

இவ்வாறு ஆசிரியர் உணர்த்த, மாணவன் மேற்கொண்டு ஒரு வினாவை எழுப்புகிறான். பதியாகிய கடவுளுக்கு வேறாகப் பசுவாகிய உயிர் உண்டு எனில். பிரமம் இல்லையாயின் ஒரு பொருளும் இல்லை என வேதம் கூறுதல் ஏன்? என வினவுகிறான். வேதம் என்ன கருத்தினால் அவ்வாறு கூறிற்று என்பதைத் தெளிவுபடுத்துகிறார் ஆசிரியர்.

அகரமாகிய உயிரெழுத்து மற்ற எல்லா எழுத்துக்களோடும் பிரிப்பின்றிக் கலந்து நின்று அவற்றை இயக்குகிறது. அகர வுயிர் இல்லாமல் ஏனை யெழுத்துக்களுக்கு இயக்கம் இல்லை. இது பற்றியே அகரமாகிய உயிரெழுத்து இல்லையாயின் ஓரெழுத்தும் இல்லையாம் என்று கூறப்படுகிறது. இவ்வாறு கூறுதல் கொண்டு அகரமே எல்லா எழுத்துக்களாகவும் நிற்கிறது என்று முடிவு செய்தல் பொருந்துமோ? பொருந்தாது. அகர வுயிர் வேறு, ஏனை எழுத்துக்களும் வேறுதான். ஆயினும் அகரவுயிரின் இன்றியமையாமை கருதி அகர வுயிர் இன்றேல் அக்கரங்கள்  இல்லை என்று கூறப்படுகிறது. அதே முறையிலேயே பிரமம் இல்லையாயின் வேறொரு பொருளும் இல்லை என்று வேதம் கூறிற்று.

ஆதலால், பிரமத்திற்கு வேறாகப் பசுக்களாகிய உயிர்கள் உண்டு எனவும், பிரமம் அவற்றில் கலந்து வேறாக நின்று இயக்கும் எனவும், உயிர்களின் இயக்கத்திற்குப் பிரமப் பொருள் இன்றியமையாதது என்பது கருதியே பிரமம் இல்லையாயின் ஒரு பொருளும் இல்லை என வேதம் கூறிற்று எனவும் உணர்வாயாக.

பதவுரை:

இருக்கு - வேதம்

ஒன்று என்றது ஒன்றே - ஏகம் என்று கூறியதற்குப் பொருள் ஒன்று என்பதேயாம்.

பதி ஒன்றே - பிரமம்  ஏகம் தொடருக்குப் பதிப்பொருள் ஒன்றே;  இரண்டு இல்லை; என்பதே கருத்தாகும். (அத்தொடருக்கு இவ்வாறு பொருள் கொள்ளாமல், பதி ஒன்றே உள்ளது; அதைத் தவிர இரண்டாவது பொருள் எதுவும் இல்லை என்று பொருள் கூறுவது பொருந்தாது.)

ஒன்று என்ற நீ பசுவாம் - பிரம்மத்தைத் தவிர வேறு பொருளில்லை எனத் தவறாகப் பொருள் கொண்டு நான் பிரமம் என நீ கூறுதல் குற்றமாகும். நீ பதியின் வேறாகிய பசு என்னும் பொருள் ஆவாய்.

(பிரமத்தைப் போல நான் அறிவுடையவனாய் இருக்க, என்னைப் பசு என்று கூறுவதற்குக் காரணம் என்னை? எனில்)

பாசத்தோடு உளை - நீ பாசத்திற்  கட்டுண்டிருக்கிறாய்; ஆதலால் நீ பசு எனப்படுகிறாய். பதி காலத்திலும் பாசத்திற்படாது தனித்து நிற்பதாகும்.

காண் - அதனை நீ ஆராய்ந்து உணர்வாயாக.
(பிரமமாகிய ஒரு பொருள் அன்றிப் பசு என வேறு ஒரு பொருள் உள்ளதாக நீங்கள் கூறினால் பிரமம் இல்லையாயின் ஒரு பொருளும் இல்லை என்று வேதம் கூறுகின்ற÷தே. அதற்கு என்ன கருத்துக் கூறுவீர்கள் ? என்று நீ கேட்கின்றாய். வேதம் அவ்வாறு கூறுதல் ஏன் எனில்,)

அகர வுயிர் இன்றேல் அக்கரங்கள் இன்றாம் - அகரமாகிய உயிரெழுத்து இல்லையாயின் எழுத்துக்களே இல்லை என்று கூறுகிற

இக்கிரமத்து - இந்த முறையிலேதான்

ஒன்று இன்று என்னும் - பிரமம் இல்லையாயின் ஒரு பொருளும் இல்லை என்று வேதம் கூறும்.

விளக்கம்

இங்கு ஆசிரியர் வேதத்தில் வரும் தொடர்களுக்கு சித்தாந்த அடிப்படையில் விளக்கம் கண்டு உணர்த்தியிருக்கும் நுட்பம் நோக்குதற்குரியது.

இவ்வெடுத்துக்காட்டில் இறைவன் உயிர்களிடத்து வேறாய் நிற்றல் விளக்கப்பட்டது.

இறைவன் உலகத்தோடு கலப்பினால் ஒன்றாய் இருப்பினும் பொருள் தன்மையால் வேறாய் நிற்பன் என்பதனை,

விரிகதிர் ஞாயிறல்லர்; மதியல்லர்; வேத
விதியல்லர்; விண்ணும் நிலனும்
திரிதரு வாயுஅல்லர்; செறுதீயும் அல்லர்;
தெளிநீரும் அல்லர் (நான்காம் திருமுறை 8:2)
எனவும்,

மண் அல்லை; விண் அல்லை; வலயம் அல்லை;
மலை அல்லை; கடல் அல்லை; வாயு அல்லை;
எண் அல்லை; எழுத்து அல்லை; எரியும் அல்லை;
இரவு அல்லை; பகல் அல்லை; யாவும் அல்லை;
பெண் அல்லை; ஆண் அல்லை; பேடும் அல்லை;
பிறிது அல்லை; யானாயும் பெரியோய் நீயே. (ஆறாம் திருமுறை, 45-9)

எனவும் வரும் திருமுறைப் பகுதிகளால் தெளியலாம்.

ஒன்றும் நீ யல்லை; அன்றி ஒன்று இல்லை;
யார்உன்னை அறியகிற் பாரே  (கோயில் திருப்பதிகம்.7)

என்னும் திருவாசக அடியில், ஒன்றாதல் வேறாதல் ஆகிய இரண்டுமே ஒருங்கு கூறப்பட்டிருத்தல் காணலாம். ஒன்றும் நீ யல்லை என்பது வேறாதலையும், அன்றி ஒன்றில்லை என்பது ஒன்றாதலையும் உணர்த்துவனவாம்.

எடுத்துக்காட்டு -3

இவ்வெடுத்துக் காட்டில், இறைவன் உயிர்களோடு உடனாய் நிற்றலை உவமைகள் மூலம் உணர்த்துகின்றார் ஆசிரியர்.

வெண்பா

8. பண்ணையும் ஓசையும் போலப் பழமதுவும்
எண்ணும் சுவையும்போல் எங்குமாம் - அண்ணல்தாள்
அத்துவிதம் ஆதல் அருமறைகள் ஒன்று என்னாது
அத்துவிதம் என்று அறையும் ஆங்கு

இதன் பொருள்:

பண்ணும் ஓசையும் போலவும், பழமும் அதனில் நிறைந்து நிற்கும் சுவையும் போலவும் இறைவனது திருவருள் எல்லாப் பொருள்களிலும் நிறைந்து நிற்கிறது; பிரிப்பின்றி உடனாய் நிற்கிறது. ஒருவனாகிய இறைவன் இவ்வாறு பிற பொருள்களில் பிரிப்பின்றி நிற்றலை உணர்த்துதற் பொருட்டே வேதம் பிரமம் ஏகம் என்று கூறியதோடு நில்லாமல் பிரமம் அத்துவிதம் என்றும் உடன் கூறிற்று.

பதவுரை:

பண்ணும் ஓசையும் போல - பண்ணும் அதனின் வேறாகாத ஏழ் இசையும் போலவும்

பழமும் எண்ணும் சுவையும் போல - பழமும் அதனின் வேறாகாததாய் எண்ணப்படுகிற சுவையும் போலவும்

எங்கும் ஆம் அண்ணல்தாள் - எல்லாப் பொருள்களிலும் நிறைந்து நிற்கின்ற இறைவனது திருவருள்

அத்துவிதம் ஆதல் - உயிர்களிடத்திலும் பிறபொருள்களிடத்திலும் பிரிப்பின்றி நிற்றலால்

அருமறைகள் - அரிய வேதங்கள் (உபநிடதங்கள்)

ஒன்று என்னாது - பிரமம் ஏகம் என்று மட்டும் கூறிப் போகாமல்

அத்துவிதம் என்று ஆங்கு அறையும் - பிரமம் அத்துவிதம் என்றும் சில இடங்களிற் கூறும்.

விளக்கம்

இவ்வுவமைகளில் ஓசை என்பது குணம்; பண் என்பது அக்குணத்தை உடைய குணி. சுவை என்பது குணம். பழம் என்பது அக்குணத்தையுடைய  குணி.

இவ்வாறு குணியும் குணமுமாக உவமைகள் அமைந்திருப்பதனால் இறைவன் குணியும், உயிர் அதன் குணமும் போலும் என்ற ஐயம் ஏற்படலாம். அவ்வாறு எண்ணிவிடுதல் கூடாது.

இறைவனும் உயிரும் குணியும் குணமும் அல்ல. அவை தனித்தனிப் பொருள்கள். வெவ்வேறு குணிகள்.

இங்குக் கூறிய உவமைகள் இறைவன் வியாபகமும், பிற யாவும் அவனிடத்து வியாப்பியமும் ஆகின்றன என்னும் அளவிற்கே காட்டப்பட்டன.

இறைவன் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கின்ற வியாபகப் பொருள். வியாபகம் - பெருநிறைவு.

பிற பொருள்கள் யாவும் அதனிடத்தில் வியாப்பியமாய் அடங்கி நிற்பன. வியாப்பியம்- அடங்கிய நிறைவு.

இதுவரை ஒன்றாதல் முதலிய மூன்றையும் தனித்தனியே வெவ்வேறு உவமைகாட்டி விளக்கினார் ஆசிரியர்.

இனி அம் மூன்றினையும் ஓர் உவமையிலேயே வைத்துக் காட்டுவாராய் நான்காம் எடுத்துக்காட்டினை அமைக்கின்றார் ஆசிரியர்.

எடுத்துக்காட்டு - 4
வெண்பா

9. அரக்கொடு சேர்த்தி அணைத்த அக் கற்போல்
உருக்கி உடங்கு இயைந்து நின்று - பிரிப்பின்றித்
தானே உலகாம்; தமியேன் உளம்புகுதல்
யானே உலகுஎன்பன் இன்று.

இதன் பொருள்:

அரக்கை உருக்கி அதனோடு கற்பொடியைச் சேர்த்துச் சாணைக்கல் செய்வர், சாணைக் கல்லில் கற்பொடி அரக்கொடு இயைந்து ஒன்றாய் நிற்கும்; தன் தன்மை திரியாது வேறாயும் நிற்கும்; அரக்கொடு நீங்காது உடனாயும் நிற்கும். அதுபோல இறைவன் உலகத்தோடு ஒன்றாய் இயைந்து அவையேயாகி நிற்பான்; பொருள் தன்மையால் வேறாகித் தானேயாய் நிற்பான்; யாண்டும் நீங்காது உலகமும் தானுமாய் உடனாகியும் நிற்பான்.

இச்செய்யுளின் பிற்பகுதியில் உள்ள தமியேன் உளம் புகுதல் யானே உலகு என்பன் இன்று என்பதன் பொருள் வருமாறு:

பாசத் தொடர்பு நீங்கிய இம் முத்திக் காலத்தில் இறைவன் எனது அறிவில் புகுந்து யானேயாய் விளங்கி நிற்றலால் யானே உலகெலாம் ஆயினேன் என்று கூறுவேன்.

பதவுரை:

உருக்கி அரக்கொடு சேர்த்தி - அரக்கை உருக்கி அதனோடு சேர்த்து

அணைத்த - ஒன்றாக்கப்பட்ட

அக் கற்போல் - அந்தக் கற்பொடி அரக்கோடு ஒன்றாய் இயைந்து நீக்கமின்றி நிற்பது போல ( இறைவன்)

உடங்கு இயைந்து - உயிர்களோடு ஒன்றாய் இயைந்தும்

நின்று - அவற்றின் வேறாய்  நிலைபெற்றும்

பிரிப்பு இன்றி - அவற்றோடு நீங்காது உடனாகியும்

உலகு ஆம் - (இவ்வாறு) உயிர்களோடு கலப்பினால் அவையேயாய் நிற்பான்.

தானே ஆம் - பொருள் தன்மையால் வேறாய் நிற்பான்

உலகே தானே ஆம் - உயிர்க்கு உயிராதல் தன்மையால் உயிரும் தானுமாய் உடனாகி நிற்பான்

இன்று - இம் முத்திக் காலத்தில்

தமியேன் - பாசங்களின் நீங்கித் தனியாய் நிற்கின்ற எனது

உளம் புகுதல் - அறிவில் புகுந்து இறைவன் யானாகவே விளங்குதலால்

யானே உலகு என்பன் - யானே உலகெலாம் ஆயினேன் என்று கூறுவேன்.

விளக்கம்

பிறப்பு நிலையில் உயிர் பாசப் பொருள்களோடு கூடி அவையே தானாய் உணர்ந்து அவற்றோடு அத்துவிதமாகி நிற்கிறது. சான்றாக உயிர் உடம்போடு கூடி உடம்பே தானாய் இயைந்து நிற்றலைக் காணலாம். அது போலப் பாசப் பொருளின் தொடர்பு நீங்கிய முத்தி நிலையில் உயிர் இறைவனோடு கூடி அவனே தானாய், அவனோடு அத்துவிதமாகி நிற்கும். அவ் அத்துவித நிலையைப் பெற்றோர் அவனே நான் என உணர்ந்து நிற்பர்; அவ்வுணர்வால் யானே எல்லாம் ஆயினேன் எனக் கூறுவர். அவ்வாறு கூறினும் அதற்குப் பொருள் அவனே எல்லாம் ஆயினான்என்பதேயாம் . உயிர் அவ்வாறு ஆதல் இல்லை.

இரண்டாம் கூறு

முதல் கூறில், இறைவனுக்கு உலகத்தோடு உள்ள தொடர்பை விளக்கினார். இவ்விரண்டாம் கூறில் அவன் உலகத்தைச் செயற்படுத்துவதற்கு வகுத்துக் கொள்ளும் முறை இன்னது என்பதனை உணர்த்துகிறார்.

அம் முறையாவது, உயிர்கள் செய்யும் வினைகளை, நல்வினை, தீவினை என வகுத்து அவற்றிற்கேற்ப அவைகளைச் செலுத்துதலாகும். சுருங்கக் கூறின், வினைகளுக்கு ஈடாக இறைவன் செயற்படுகிறான் எனலாம். இறைவன் செயலுக்கு வினை ஒரு கருவியாய் அமைகிறது.

நாம் அனைத்துச் செயல்களையும் நம் கைகளினாற் செய்கிறோம். அதுபோல இறைவன் எல்லாவற்றையும் தன் சக்தியைக் கொண்டே செய்வான். நமக்குக் கருவியாய் இருப்பது நங்கை. (நம் கை): அவனுக்குக் கருவியாய் அமைவதும் நங்கை (துணைவி என்று சொல்லப் பெறும் சத்தி).

மேற்கூறியவற்றால் இறைவனுக்குக் கருவிகளாய் அமைவன அவனது சத்தியும், உயிர்களது வினையும் என்பது விளங்கும். கருவியைத் துணைக்காரணம் என்பர். சத்தியும் வினையும் ஆகிய துணைக் காரணங்களுள் வினையைத் தன் சத்தியைக் கொண்டு செலுத்துவான் இறைவன். ஆகவே சத்தியே இறைவனுக்கு நேர் துணைக்காரணமாய் அமையும் என்பதும், வினை அதன் வழிப்பட்டு அவனுக்குத் துணைக் காரணமாய் அமையும் என்பதும் அறிதற்குரியன.

நூற்பாவின் மூன்றாம் அடியிலுள்ள ஆணை என்பது சத்தியைக் குறிக்கும். அச்சத்தியினாலே வருவன இருவினையாதலின் முதலடியிலுள்ள இருவினை என்பதற்கு முன்னும் ஆணையின் என்பதனை எடுத்துச் சேர்த்து ஆணையின் இருவினையின் என அமைத்துக் கொள்ள வேண்டும்.

ஆணையின் இருவினையின் என்பதற்கு விளக்கமாக அமைவது இவ்விரண்டாம் கூறு. வினை பற்றி மாணவர்க்கு எழக்கூடிய ஐயங்களைப் போக்கித் தெளிவுபடுத்துதற்குப் பின் வருமாறு மேற்கோளும் ஏதுவும் கூறுகிறார் ஆசிரியர்.

மேற்கோள்

இனி, இவ்வான்மாக்கட்கு இருவினை முதல்வன் ஆணையின் வரும் என்றது.

மேற்கோள் விளக்கம்

மூவகை வினைகள் :

முற்பிறப்புகளில் செய்யப்பட்டுக் கிடக்கும் பழ வினைகளின் தொகுதி சஞ்சிதம் எனப்படும். அத்தொகுப்பிலிருந்து இப்பிறப்பிற்கென்று எடுத்துக் கொள்ளப்பட்டு வந்து பயன் கொடுக்கின்ற வினைகள் பிராரத்தம் எனப்படும். இப்பிறப்பில் அவ்வினைப் பயன்களை நுகரும்போதே மனம் மொழி மெய்களால் செய்யும் புது வினைகள் ஆகாமியம் எனப்படும். இம் மூவகை வினைகளுள் இங்கு இருவினை என்று குறிப்பிட்டது சஞ்சிதத்தையேயாகும்.

வினைகளும் இறைவன் ஆணையும்:

சஞ்சித வினை தாமாகத் தம்மைச் செய்தவரைச் சென்றடைந்து பயனைக் கொடுக்குமோ? அவ்வாறு கொடுக்குமாயின் வினைக்கு அன்றோ முதன்மை உண்டாகும்? இறைவன் முதல்வனாதல் எங்ஙனம்? என்றெல்லாம் மாணவர்க்கு எழும் ஐயங்களை இம் மேற்கோளினால் நீக்குகிறார் ஆசிரியர். வினை தானே சென்று உயிர்களைப் பற்றுவதில்லை. அஃது ஆன்மாக்களைப் பிணித்து நிற்றல் இறைவனாலேயாம். ஆகவே இறைவனே முதன்மை யுடையன் என விடையிறுக்கின்றார்.

வினைகள் நல்லன, தீயன என இருவகைப்பட்டு நிலைத்து நின்று பயன் தருதல் இறைவனது ஆணையினாலே ஆகும் என மேற்கோளில் கூறிய ஆசிரியர் அக்கருத்தை ஏதுக் காட்டி நிறுவுகிறார்.

ஏது

ஒரு நகரியைக் காப்பான் பாடிகாவல் இட்டாங்கு அவை
அவனது ஆக்கினை ஆகலான்

ஏது விளக்கம்

இவ்வுலகில் சிலர் எய்தற்கரிய செல்வமெல்லாம் எய்தி இன்புற்று வாழ்கிறார்கள்; சிலர் வாழவும் வழியுற்று வறுமையில் வாடுகிறார்கள். மாடி வீடுகள் எழுப்பி மகிழ்ச்சியில் மைந்துற்று வாழ்வோர் சிலர்; மண் குடிசையும் இன்றி நடைபாதையிற் கிடந்து நலிவோர் பலர். அனைத்தையும் ஆக்கி நடத்துபவன் இறைவன் என்றால் இவ்வாறு சிலரை வாழ்வித்தலும் சிலரைத் தாழ்வித்தலும் தகுமோ? அவன் நடுவு நிலைமையன் ஆவனோ? அருளாளன் என்று அவனை அழைத்தல் பொருந்துமோ? என்னும் ஐயத்தினை நீக்குவதற்கு அரசனது செயலை இங்கு உவமையாகக் கூறுகிறார்.

அரசன் செயல்:

ஒரு நகரத்தைக் காக்கும் அரசன் தன் கீழ் உள்ள மக்களை இடையூறு இன்றி இனிது வாழ்விக்கும் கடப்பாடு உடையன். அவன் தான் வகுத்தமைத்த நெறிமுறைக்கு ஏற்ப வாழ்வோர்க்குப் பொருட்செல்வம் முதலியவற்றை வழங்கிப் போற்றுகிறான்; அந்நெறி முறையில் நில்லாமல் குற்றம் செய்வோர்க்குச் சிறைக்காவல் முதலிய தண்டனைகளை வழங்குகிறான். அவ்வாறு சிறையில் இடுவதும் சீற்றத்தினால் அன்று; அவர்களைத் திருத்தும் நோக்கத்தினால் ஆகும்.

நல்லோரைப் பொருள் வழங்கிப் புரத்தலும், அல்லோரை ஒறுத்தலும் ஆகிய செயல்களை அரசன் தானே நேர் நின்று நிறைவேற்றுதல் இல்லை. தனது ஆணையை ஊர்க்காவலர் முதலிய ஏற்புடையாரிடத்து வைத்து அவரைக் கொண்டு செய்விப்பன்.

இவையெல்லாம் அரசன் செயல்கள். இனி இறைவன் செயலை நோக்குவோம்.

இறைவன் செயல்:

இறைவன் உயர்ந்தோர் வாயிலாக அற நூல்களையும் அருள் நூல்களையும் உலகிற்கு வழங்கி இந் நெறிமுறையில் ஒழுகுக என உணர்த்தியுள்ளான். அற நூல் வழியில் நின்று நல்வினை செய்வோர்க்கு இம்மை மறுமை யின்பங்களை வழங்குகிறான். அருள் நூல் வழியில் நின்று யான்  எனது என்பது அற்று ஒழுகுவார்க்கு மெய்யுணர்வு அளித்துத் தன்னிலைமையை அவர்க்குத் தருகின்றான்.

இனி, அறி நூல் வழியில் நில்லாது தீவினை செய்வார்க்கு நோய், வறுமை, நிரயம் முதலிய உடல் துன்பத்தையும், அருள் நூல் வழியில் நில்லாது தன் முனைப்போடு நிற்போர்க்குப் பிறவித் துன்பமாகிய உயிர்த் துன்பத்தையும் கூட்டுவிக்கிறான்.

இவ்வாறு ஒறுக்கின்ற இறைவனது செயல் கொடியது போலத் தோன்றினாலும் தீவினை செய்கின்ற உயிர்களைத் திருத்தித் திருத்திப் படிமுறையில் பக்குவப்படுத்தி முடிவில் தன்னைச் சார்ந்து இன்புறும்படி செய்வித்தலின், அவ் ஒறுப்பும் உண்மையில் இறைவனது கருணையாகவே முடியும்.

நலம் செய்தலும் ஒறுத்தலும் ஆகிய இச் செயல்களே இறைவனது ஆணை எனப்படும். இறைவன் தனது ஆணையை இருவினைகளின் மேல் வைத்து அவற்றைக் கொண்டு செய்விப்பன்.

அரசன் செய்தியாகிய உவமையைப் பொருளோடு பொருத்திப் பார்ப்போம்.

உவமை            பொருள்
அரசன்                இறைவன்
அரசனது ஆணை  இறைவனது ஆணை
பாடி காவலர்         இரு வினைகள்

சிலரை வாழ்வித்தலும் சிலரைத் தாழ்வித்தலும் ஆகிய செயல்கள் இறைவனது நடுவுநிலைமைக்கு ஏற்குமோ? என்னும் ஐயத்தினை இவ்வுவமையால் நீக்கியுள்ளமை காணலாம்.

சைவ சித்தாந்தம் வினை பற்றிய நான்கு அடிப்படைக் கருத்துக்களைக் கொள்ளும். அவை செய்வான், செய்வினை, சேர்பயன், சேர்ப்பவன் என்பன.

மேற்கோளிலும் ஏதுவிலும் உணர்த்தப்பெற்ற இவ்வடிப்படைகளை வலியுறுத்தி ஆசிரியர் செய்த எடுத்துக்காட்டுகளை இனிக் காண்போம்.

எடுத்துக்காட்டு -1
வெண்பா

10. உள்ளதே தோற்ற உயிர்அணையும் அவ்வுடலின்;
உள்ளதாம் முற்செய்வினை உள்ளடைவே;- வள்ளலவன்
செய்பவர் செய்திப் பயன்விளைக்கும் செய்யே போல்
செய்வன் செயல் அணையா சென்று.

இதன் பொருள்:

முன்பிறவிகளில் ஈட்டப்பட்டு உள்ளதாகிய சஞ்சித வினையே உயிர் நுகர்தற்குரிய இன்பமும் துன்பமும் ஆகிய பயன்களையும் அவற்றை நுகர்தற்கு இடமாகிய உடம்பையும் தோற்றுவிக்க, உயிர் அவ்வுடம்பைப் பொருத்தி அப்பயன்களை நுகரும்.

வினைப் பயன்களை நுகரும் முறையிலேயே புதிய வினைகள் தோன்றி அடுத்த பிறவிக்கு வித்தாய் அமையும்.

உழவர் செய்யும் உழவுத் தொழில்தானே அவர்க்குப் பயன் கொடுப்பதில்லை. நிலந்தான் அத்தொழிலை ஏற்று நின்று அதற்கு ஏற்ற பயனை உழவர்க்குக் கொடுக்கும். அதுபோல, உயிர்கள் செய்யும் நல்லனவும் தீயனவும் ஆகிய வினைகளை இறைவனே ஏற்று நின்று அச்செயல்களின் பயன்களை அவற்றைச் செய்த உயிர்களுக்குச் சேர்ப்பிப்பான்.

வினைகள் அறிவற்றவை யாதலின் அவை தாமே தம்மைச் செய்தவரை அறிந்து சென்று அடைய மாட்டா.

பதவுரை

உள்ளதே தோற்ற - முற்பிறவிகளில் ஈட்டப்பட்டு உள்ளதாகிய சஞ்சித வினையே இன்பமும் துன்பமும் ஆகிய பயன்களையும், அப்பயன்களை உயிர் நுகர்தற்கு இடமாகிய உடம்பையும் தோற்றுவிக்க

அவ்வுடலின் உயிர் அணையும் - அவ்வுடலின் கண் உயிர் தங்கி நின்று அப்பயன்களை நுகரும். (முற்பிறப்பிற் செய்த வினை நுகரப்பட்டு விடுமாயின், இனிவரும் பிறப்பிற்கு ஏதுவாக வினை உண்டாதல் எவ்வாறு? எனின்)

முற்செய்வினை - முற்பிறப்பிற் செய்த வினையின் பயனாகிய இன்பத் துன்பங்களை

உள் - விருப்பு வெறுப்புக்களோடு அனுபவிக்கின்ற (உள்ளுதல் என்பதற்கு, இங்கு அனுபவித்தல் என்று பொருள்)

அடைவே - முறைமையினாலே

உள்ளதாம் - புதிய வினை அடுத்த பிறப்பிற்கு ஏதுவாக உண்டாகும்.

செய்பவர் - உழவுத் தொழிலைச் செய்பவர்.

செய்திப் பயன் விளைக்கும் - செய்யும் செயல்களை ஏற்று நின்று அச்செயல்களுக்கு ஏற்ற பயனைக் கொடுக்கின்ற

செய்யே போல் - நிலம் போல

வள்ளல் அவன் செய்வன் - உயிர்களிடத்தில் கைம்மாறு கருதாத கருணையை வைத்துள்ள வள்ளலாகிய இறைவனே உயிர்கள் செய்யும் நல்லனவும் தீயனவும் ஆகிய செயல்களை ஏற்று நின்று அச்செயல்களுக்குத் தக்க பயனை அவ்வுயிர்களுக்குக் கூட்டுவிப்பான். (வினை தானே தன் பயனை உயிருக்குக் கொடுக்கும் என்று கூறினால் ஆகாதே? இறைவன் இடையில் நின்று உயிர் செய்த வினையை ஏற்று அதன் பயனை அவ்வுயிர்க்குக் கூட்டுவிப்பான் என்று கொள்ள வேண்டிய தேவை என்ன? என்று எழும் வினாவிற்கு இனி விடை கூறுகின்றார்.)

செயல் சென்று அணையா - வினை சடம் ஆதலின் அவை தம்மைச் செய்தவரை அறிந்து சென்று அடையமாட்டா.

(இதனால் எச்செயலும் தன் பயனைத் தானே தருதல் எங்கும் இல்லை என்பதும், இறைவனே அதனை ஏற்று அதன் பயனைத் தர வேண்டியுள்ளது என்பதும் விளங்கும்.)

விளக்கம்

புதிய வினைகள் தோன்றும் முறை:

வினைப் பயனை நுகரும் முறையிலேயே புதிய வினைகள் தோன்றுதல் எவ்வாறு எனில்,

நல்வினையின் பயனாய் இன்பம் வருங்காலை, நாம் அதன்பால் விருப்பம் கொள்கிறோம். அதனை நீங்க விடாமல் நிறுத்திக் கொள்வதற்குப் பல முயற்சிகளைச் செய்கிறோம். அதே போலத் தீவினையின் பயனாய் துன்பம் வரும் காலத்தில் அதன்பால் வெறுப்புக் கொள்கிறோம்; அதனைத் தடுக்க முற்படுகிறோம். தடுப்பினும் நில்லாது வரின் அதனை விரைந்து போக்க முயற்சி செய்கிறோம். அம்முயற்சிகள் நல்லனவாகவோ தீயனவாகவோ அமைகின்றன.

இவ்வாறு இன்பமும் துன்பமும் ஆகிய  வினைப்பயன்களை நுகரும்போது விருப்பும் வெறுப்பும் அவை வழியாக முயற்சியும் உண்டாகின்றன. முயற்சியின்றி விøப் பயனை அனுபவித்தல் இயலாது. அம்முயற்சியே புதிய வினையாய்ச் சேர்கிறது.

ஏதுவில் அரசனது செயலை உவமை காட்டி, இறைவனது செயலுக்கு இருவினை வேண்டப்படும் என்றார். இங்கு உழவுத் தொழிலை உவமை காட்டி, இரு வினை பயன் தருதற்கு இறைவன் வேண்டப்படுவான் என விளக்கினமை காணலாம்.

எடுத்துக்காட்டு -2

வினைகள் அறிவற்றவை ஆதலின் அவை தாமே தம்மைச் செய்தவரைச் சென்றடைந்து தம் பயனை அளிக்கமாட்டா என்பது பொருந்தும், ஆயின் உயிர்கள் அறிவுடையனவாதலின் அவை தாமே தம் செயலின் பயனை எடுத்துக் கொள்ளும் என்று கொண்டால் என்ன என்று மாணவர் ஐயுற்று வினவ, அதற்கு மறுமொழி கூறுகின்றார்.

வெண்பா

11. அவ்வினையைச் செய்வதனில் அவ்வினைஞர் தாம் சென்றங்கு
அவ்வினையைக் காந்த பசாசம் போல் - அவ் வினையைப்
பேராமல் ஊட்டும் பிரானின் நுகராரேல்
ஆர்தாம் அறிந்து அணைப்பார் ஆங்கு.

இதன் பொருள்:

வினையைச் செய்தற்கு இடமாகிய உடம்பில் பொருந்தி நின்று வினைகளைச் செய்தோர் அவ் வினைகளின் பயனை இறைவனே கூட்டுவிக்க அவற்றை  அநுபவிப்பர்.

இரும்பை ஒருவன் அருகில் கொண்டு வந்த பொழுதே காந்தம் அதனை ஈர்த்துக் கொள்ளும். அதுபோல, இறைவன் கொண்டு வந்து சேர்ப்பிக்கவே உயிர்கள் வினைப்பயனை எடுத்து நுகரும்.

எவ்வுயிர்க்கு எப்பயனை எவ்விடத்தில் எப்பொழுது சேர்ப்பிப்பது என்பதையறிந்து அவ்வுயிர்க்கு அப்பயனை அவ்விடத்தில் அப்பொழுதில் தப்பாமல் இறைவன் சேர்ப்பிக்கவில்லையென்றால், வினைப் பயன்களை உயிர்களோடு கூட்டுவிப்பதற்கு வேறு யாம் தாம் உளர்? ஒருவரும் இல்லை என்பதாம்.

பதவுரை:

அவ்வினைஞர் - வினைகளைச் செய்த ஆன்மாக்கள்

அவ்வினையைச் செய்வதனில் - வினையைச் செய்யும் இடமாகிய உடம்பில்

தாம்சென்று - தாம் பொருந்தி நின்று

அவ்வினையைப் பேராமல் ஊட்டும் பிரானின்  - அவ்வினைகளின் பயனைப் பிறழாமல் ஊட்டுகின்ற இறைவனது செயலால்,

காந்த பசாசம் போல் - ஒருவன் அருகில் கொண்டு வந்த இரும்பை ஈர்த்துக் கொள்ளும் காந்தம் போல

அவ்வினையை நுகராரேல் - அவ்வினையின் பயன்களை எடுத்து நுகர்வர். அவ்வாறு இறைவனால் வினைப்பயன்களை நுகராராயின்

ஆங்கு ஆர்தாம் அறிந்து அணைப்பார் - உயிர்களெல்லாம் பாசத்துள் பட்டு அறியும் செயலும் இழந்து நிற்கின்ற அப்பெத்த நிலையில், அவ்வினைப் பயன்களையும் அவற்றிற்கு உரிய உயிர்களையும் அறிந்து வேறு யார் தாம் கூட்டுவிப்பார்? (ஒருவரும் இலர் என்பதாம்)

விளக்கம்

பாரிசேடம்:

ஒரு வீட்டில் கணவன், மனைவி, மகன் என மூவரே உள்ளனர் எனக் கொள்வோம். அவ்வீட்டினுள்ளே தொலைக்காட்சிப் படம் ஓடிக் கொண்டிருப்பது தெரிகிறது. கணவன் அலுவலகத்திற்குச் சென்றுவிட்டான் என்பதும்,  அவன் மனைவி காய்கறி வாங்கச் சென்றவள் திரும்பவில்லை என்பதும் உறுதியாகத் தெரிந்தால், மூவரில் இருவர் போக எஞ்சியுள்ளவனாகிய மகனே படம் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்று துணியலாம் அல்லவா? இவ்வாறு துணியும்  முறையைப் பாரிசேடம் என்பர். தமிழில் ஒழிபு எனப்படும்.

வினை, உயிர், இறைவன் என்ற மூன்றில் வினை சடம் ஆதலின் அது தானே தன்னைச் செய்தவனைச் சென்றடையாது என்பது தெரிகிறது. உயிர் அறிவுடைய தாயினும் அதன் அறிவு அறியாமையால் மூடப் பெற்று விளங்காது கிடத்தலின் அதுவும் தான் செய்த வினையின் பயனை அறிந்து எடுத்துக் கொள்ள மாட்டாது என்பதும் தெரிகிறது. எனவே எஞ்சியுள்ளவனாகிய இறைவனே வினைகளின் பயனைக் கூட்டுவிப்பான் என்பது பாரிசேடத்தால் துணியப்படும்.

வினைப்பயனை ஊட்டுபவன்:

உயிர்கள் தாம் செய்த வினைகளின் பயனைத் தாமே எடுத்துக் கொள்ளும் வல்லமையைப் பெற்றிருந்தால் நிகழ்வதே வேறு! அவை நல்வினையின் பயனை மட்டுமே  விரும்பி எடுத்துக் கொள்ளும்; தீவினையின் பயனைக் கொள்ளாது விடுக்கும். மேலும், வலிய உயிர்கள் எளிய உயிர்களின் நல்வினைப் பயன்களையும் தட்டிப் பறித்து எடுத்துக் கொள்ளும் !

உயிர்கள் அவ்வாறெல்லாம் செய்யாதபடி அவ்வவ்வுயிரின் வினைப்பயனை அவ்வவ்வுயிர்களுக்கு மிகாமலும் குறையாமலும் ஒப்ப நாடி அதற்குத் தக வழங்குதல் இறைவன் கருணையாதலின் பேராமல் ஊட்டும் பிரான் என்றார். பிரான்  என்று சொல்லியிருப்பினும் அவ்வாறு ஊட்டுவது அவனது சத்தியாகிய திருவருளே என்பதை உணர்தல் வேண்டும்.

இவ்வாறு அவரவர் வினைக்கேற்ப நன்மை தீமைகளை இறைவனே வருவிக்கின்றான் என்பதை  உணராமல், நன்மை வருங்காலத்தில் அஃது என்னால் வந்தது என்று தன்னையே பெரிதாக எண்ணி மகிழ்ந்தும், தீமை வருங்காலத்தில் இதனைப் பிறர் செய்தார் என்று கருதி அவர்பால் சினந்தும் வினையைப் பெருக்கிக் கொள்ளுதல் பேதைமையாகும்.

காந்த பசாசம் போல் என்ற உவமையைப் பொருளோடு பின் வருமாறு பொருத்திக் கொள்ள வேண்டும்.

உவமை        பொருள்

காந்தம்        உயிர்
இரும்பு                வினைப்பயன்
அருகில் சேர்ப்பவன்     இறைவன்
ஈர்த்துக் கொள்ளுதல்     எடுத்து நுகர்தல்

எடுத்துக்காட்டு -3
வெண்பா

12. நெல்லிற்கு உமியும் நிகழ்செம்பி னிற் களிம்பும்
சொல்லிற் புதிதன்று தொன்மையே; - வல்லி
மல கன்மம் அன்று உளவாம்; வள்ளலால் பொன்வாள்
அலர் சோம் செய்  கமலத்து ஆம்.

இதன் பொருள்:

நெல்லில் உள்ள உமியாகிய குற்றமும், செம்பில் உள்ள களிம்பாகிய குற்றமும் புதியனவாய் வந்தன அல்ல; நெல்லும் செம்பும் உள்ள அன்றே அவையும் உள்ளன.

அதுபோல மாயை, ஆணவம், வினை ஆகிய மும்மலங்களும் அநாதியே உள்ளன.

ஆயினும், சூரியனது ஒளியால் மலர்தலும் குவிதலும் செய்கின்ற தாமரை மலரைப் போல அவை இறைவனது சத்தியாலே செயற்படுவனவாம்.

பதவுரை:

நெல்லிற்கு உமியும் - நெல்லில் உள்ள உமியாகிய குற்றமும்
செம்பினில் நிகழ் களிம்பும் - செம்பில் உள்ள களிம்பு ஆகிய குற்றமும்
சொல்லின் - அவற்றிற்கு எப்பொழுது உண்டாயின் என்று ஆராய்ந்து சொல்லப் புகுந்தால்
புதிது அன்று - அவை முன்பு இல்லாதிருந்து பின்பு ஒரு காலத்தில் புதியனவாக வந்து சேர்ந்தன அல்ல.
தொன்மையே - நெல்லும் செம்பும் உள்ள அன்றே அவையும் உள்ளனவாம் (அதுபோல)
வல்லி மலகன்மம் - மாயையும், ஆணவ மலமும், கன்ம மலமும்
அன்று உளவாம் - இடையில் வந்தன ஆகாமல், உயிர்கள் உள்ள அன்றே அவையும் உள்ளன. (எனவே மும்மலங்களும் அனாதியே உள்ளனவாம்)
பொன் - சூரியனது
வாள் - ஒளியால்
அலர்சோகம் - மலர்தலும் கூம்புதலும்
செய் கமலத்து - செய்கின்ற தாமரை மலர்போல
வள்ளலால் ஆம் - (அம் மும்மலங்களும்) இறைவனது சக்தியாலே செயற்படும்.

விளக்கம்

வினையினது தொன்மையைக் கூறவந்த ஆசிரியர் இயைபு பற்றியும், இனம் பற்றியும் ஏனைய இரு மலங்களையும் சேர்த்துக் கூறினார்.

வல்லி என்ற சொல்லுக்குப் பெண் என்பது பொருள். இங்கு அது மாயையைக் குறித்து நின்றது. இது பற்றிச் சிறிது விளக்குதல் வேண்டும்.

இறைவனது அறிவாகிய ஆற்றல் சிற்சத்தி எனப்படும். (சித்- அறிவு). இறைவனை நாயகன் என்றும், சிற்சத்தியை நங்கை என்றும் நூல்கள் கூறும். சிற்சத்தி இறைவனின் வேறாகாது, இறைவனைப் பிரியாது நீக்கமின்றியிருத்தலின் தாதான்மிய சத்தி எனப்படும்.

இனி, மாயை இறைவனுக்குப் பரிக்கிரக சத்தியாய் அமையும். பரிக்கிரக சத்தி தமிழில் வைப்பு ஆற்றல் எனப்படும். அஃதாவது ஊர்தி, படைக்கலம் முதலியவற்றை வேண்டுங் காலத்தில் எடுத்துப் பயன்படுத்துகிறோம்; வேண்டாதபோது உரிய இடத்தில் வைத்து விடுகிறோம். வங்கியில் வைத்த பணத்தைத் தேவையான நேரத்தில் எடுத்துப் பயன் கொள்வது யாவரும் அறிந்தது. அதுபோலவே இறைவன் படைத்தலை மேற்கொள்ளுங் காலத்தில் மாயையைப் பயன்படுத்துவான். தன்னிடத்தில் அடங்கியுள்ள மாயையை நோக்கி அதனை உலகமாக விரியச் செய்வான்; அழிப்புக் காலத்தில் அம் மாயையைத் தன் பால் ஒடுக்கி நிற்பான். இது பற்றியே மாயை அவனுக்குப் பரிக்கிரக சத்தி எனப்படுகிறது.

முன்னர்க் கூறிய சிற்சத்தி அறிவாய்  இருப்பது. மாயை சடமாய் இருப்பது. சிற்சத்தி இறைவனின் வேறாகாது நிற்பது. மாயை இறைவனுக்கு வேறாய், அவனுள் அடங்கி நிற்பது. சிற்சத்தி மாற்றம் அடையாதது. மாயை பல்வேறு காரியப் பொருள்களாய் விரிவடைந்து மாறுதலுக்கு உட்படுவது.

சிற்சத்தி          மாயை

1. அறிவு ஆற்றல் 1. சட ஆற்றல்
2. இறைவனின் வேறாகாமை 2. இறைவனின் வேறாதல்
3. தாதான்மிய சத்தி எனப் பெயர் பெறுதல் 3. பரிக்கிரக சத்தி எனப் பெயர் பெறுதல்
4. மாற்றம் அடையாதது 4. மாறுதல் அடைவது
5. உலகுக்குத் துணைக் காரணமாய் இருப்பது 5. உலகுக்கு முதற்காரணமாய் இருப்பது

இவ்விரு சத்திகளையும் பெண்ணாகக் கூறுவது வழக்கு. சிற்சத்தியை நங்கையாகக் கூறுதல் போல மாயையாகிய சடசத்தி இங்கு வல்லி எனப் பெண்பாலாகக் குறிக்கப்பட்டது.

மலங்களும் திரோதான சத்தியும்:

வல்லி மல கன்மம் அன்றுளவாம் என்றதனால் மும்மலங்களை இறைவன் தோற்றுவிக்கவில்லை என்பதும், அவை என்றும் உள்ளவை என்பதும் பெறப்படும். அவற்றிற்குத் தோற்றமில்லை எனவே அழிவும் இல்லையாம். ஆயினும் அவற்றின் காரியங்களுக்குத் தோற்ற அழிவுகள் உண்டு.

ஆணவ மலத்தின் காரியம் அறியாமை, கட்டு நிலையில் அவ்வறியாமை உயிரைப் பற்றியிருத்தலும், முத்தி நிலையில் நீங்குதலும் தெளிவு. கன்ம மலத்தின் காரியம் இன்பத் துன்பங்கள். அவை உயிருணர்வை வந்து பொருந்துதலும், அனுபவிக்கப்பட்டுப் பின் கழிதலும் காணலாம். மாயா மலத்தின் காரியம் உலகமும்  உலகப் பொருள்களும். அவை தோன்றி நின்று அழிதல் வெளிப்படை. இவ்வாறு மும்மலங்களின் காரியங்களும் ஆதியும் அந்தமும் உடையன என்பது புலனாகும்.

மும்மலங்களும் தத்தம் காரியத்தைச் செய்யும்படி அவற்றைச் செயல்படுத்துவது இறைவனது சிற்சத்தியேயாகும். அவ்வாறு செயற்படுத்துவதனால் அவை பின்வரும் காரியத்தைச் செய்கின்றன. ஆணவ மலம் உயிருணர்வைத் திரிபுபடுத்தி, இழிந்தனவாகிய உலகப் பொருள்களையே உயர்ந்தனவாக மதிக்கும்படி செய்கின்றது. கன்ம மலம் இன்பத் துன்பங்களைப் பயந்து, உயிருணர்வை அவற்றில் அழுந்தி நிற்கச் செய்து மயக்குகிறது. மாயாமலம் உலகப் பொருள்களாய் அமைந்து, உயிருணர்வை மயக்கித் தம்மையே பற்றும்படி செய்கின்றது. சுருங்கக் கூறின், இம் மும்மலங்களும் உயிருணர்வைக் கவர்ந்து, இறைவனை நோக்கவிடாது உலகத்தையே நோக்கும்படி செய்கின்றன எனலாம்.

இறைவனது சிற்சத்தி மும்மலங்களைச் செயல்படுத்தி இவ்வாறு உயிருணர்வை மறைக்கும்படி செய்விப்பதனால் திரோதான சத்தி எனும் பெயரைப் பெறும். திரோதானம் - மறைப்பு; திரோதான சத்தி மும்மலங்களின் வழியில் நின்று மறைத்தலைச் செய்வித்தலினால் அதனையும் ஒரு மலமாகச் சொல்லுவர்.

உயிரானது உலகத்தை நோக்கி நின்ற இந்நிலை மாறி இறைவனை நோக்கத் தலைப்படும் பக்குவ நிலையை எய்திய காலத்தில் திரோதான சத்தியே அந் நிலை நீங்கி அருட்சத்தியாய் உயிருணர்வில் பதியும். எனவே சிற்சத்தி ஒன்றே செயல்வகை பற்றி இவ்வாறு திரோதான சத்தி என்றும், அருட்சத்தி என்றும் கூறப்படுகிறது என்று அறியலாம்.


மூன்றாம் கூறு

நூற்பாவில் உள்ள போக்கு வரவு புரிய என்ற தொடருக்கு விளக்கமாக இப்பகுதி அமைகிறது.

இரண்டாம் கூறில், ஆன்மாக்களுக்கு அவை முற்பிறப்புக்களிற் செய்த வினையின் பயன்கள் இப்பிறப்பில் முதல்வன் கூட்டுவிக்க வரும் என்பது கூறப்பட்டது. இதனால் உயிர் பல பிறப்புக்களை எடுக்கும் என்ற கருத்துப் பெறப்பட்டது. ஆனால் இதற்கு மாறான ஒரு கொள்கையை ஒரு சாரார் கூறுவர். அஃதாவது குடம் உடைந்த போது அக்குடத்தினுள் இருந்த ஆகாயம் வெளி ஆகாயத்தோடு ஒன்றாய்க் கலந்து விடுதல் போல, உடம்பு நீங்கியவுடன் உயிர் பிரமத்தோடு சேர்ந்து பிரமமாகி விடும். ஆகவே இறந்தவுயிர் மீண்டும் பிறத்தல் இல்லை என்பதே அக்கொள்கை. அக் கொள்கை பற்றி மாணவர்க்குக் குழப்பம் உண்டாகி, இறந்தவுயிர் மீளப் பிறக்குமோ என ஐயுறுதல் இயல்பு. அவ் ஐயத்தைப் போக்கித் தெளிவித்தற்கு இறந்த வுயிர் மீளவும் பிறக்கும் என்பதனை மேற்கோளாக அமைத்து ஏதுக் காட்டி நிறுவுகிறார் ஆசிரியர்.

மேற்கோள்

இனி இவ்வான்மாக்கள் மாறிப் பிறந்து வரும் - என்றது.

மேற்கோளின் பொருள்

இதன் பொருள் உயிர்கள் இறந்துபின் மீளப் பிறந்து வரும் என்பதாகும். மாறுதல் -இறத்தல்.

ஏது

தோற்றமும் ஈறும் உள்ளதற்கல்லது உளதாதல் இன்மையான்.

ஏது விளக்கம்

உள்ளது தோன்றும் என்னும் சற்காரிய முறையின் அடிப்படையில் ஏது அமைந்துள்ளது.

இறந்த உயிர் மீளப் பிறக்கும்:

இறந்தவுயிர் இல்லா தொழிதல் இல்லை. இறத்தல் என்பது பருவுடம்பு நீங்கப் பெறுதலேயாம். எனவே இறந்த பின்னும் அவ்வுயிரே மீண்டும் பிறந்து தோன்றும். இதனால், தோற்றத்திற்கு முன்னும் உயிர் உள்ளது; இறப்பிற்குப் பின்னும் உயிர் உள்ளது என்பது பெறப்படும்.

பிறப்பும் இறப்பும், உள்ளதாகிய உயிருக்கன்றி உண்டாதல் இல்லை என்னும் இவ்வேதுவினால், இறந்தவுயிரே மீளப்பிறந்து வரும் என்னும் மேற்கோள் நிறுவப்பட்டதாம்.

உறங்குவது போலும் சாக்காடு; உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு

என்னும் திருக்குறள், ஓர் உயிரே மாறி மாறி இறந்தும் பிறந்தும் வரும் என்பதை வலியுறுத்தி நிற்றல் காணலாம்.

அவ்வாறாயின், இறந்த வுயிர் மற்றொரு பிறப்பின்கண் செல்லுதல் எவ்வாறு என்பதை அறியும் அவா மாணவர்க்கு எழும் அல்லவா? அவ் அவாவை நிரப்பும் வகையில் முதல் எடுத்துக் காட்டுக் கூறுகின்றார்.

 
மேலும் சிவஞானபோதம் »
temple news
நூல்முகம்: இவ்வுலகம், முதலில் சில பக்கங்களும் முடிவில் சில பக்கங்களும் இல்லாத நிலையில் கிடைத்த ஒரு ... மேலும்
 
இருவகை இயல்புகள்சைவ சித்தாந்தத்தில் பொருளுக்கு இரு வகையான இயல்புகள் சொல்லப்பெறும். அவை உண்மையியல்பு, ... மேலும்
 
முதல் நூற்பாமுதற் கடவுள் ஒருவர் உண்டு என்பதை நிறுவுவது முதல் நூற்பாவின் குறிக்கோள். காணப்பட்ட உலகைக் ... மேலும்
 
அம் முதல்வன் அழித்தற்  கடவுளே:இனி அம் முதல்வன் யாவன்? என்ற வினா இயல்பாக எழுகிறது. அதற்கு ... மேலும்
 
இரண்டாம் நூற்பாமுதல் நூற்பாவோடு இந்நூற்பா தொடர்புற்று நிற்கிறது. எவ்வாறெனில், முதல் நூற்பாவில் உலகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar