பதிவு செய்த நாள்
14
நவ
2013
10:11
பாட்னா: பீகாரின் புத்தகயாவில் உள்ள, மகாபோதி கோவில் விதானத்தை, தங்கத் தகடால் மூடும் பணிக்காக, 300 கிலோ தங்கம், கோவில் வளாகத்தில் வந்திறங்கியுள்ளது. அதை, தாய்லாந்தின் கமாண்டோ படை வீரர்கள், 24 பேர், இரவும், பகலும், இயந்திர துப்பாக்கி சகிதமாக, பாதுகாத்து வருகின்றனர். மகாபுத்தர், இந்தியாவில் பிறந்தவர். அவர், ஞானோதயம் அடைந்த இடம், பீகார் தலைநகர், பாட்னா அருகே உள்ள புத்தகயா என்ற இடத்தில் உள்ளது. போதி மரத்தின் கீழ் அமர்ந்து, புத்தர் ஞானம் பெற்றதால், அந்த இடம், மகாபோதி என, அழைக்கப்படுகிறது. இங்கு, கி.பி., 5ம் நூற்றாண்டில், பிரமாண்ட கோவில் கட்டப்பட்டது. உலகம் முழுவதும் இருந்து, ஏராளமான புத்தமதத்தினர், மகாபோதி கோவிலுக்கு வந்து, புத்தபிரானை வழிபட்டுச் செல்கின்றனர். தாய்லாந்து நாட்டில், பெரும்பாலானோர், புத்தமதத்தையே பின்பற்றுகின்றனர். அந்த நாட்டின் மன்னர், பூமிபோல் அதுல்யா, கடந்த ஆண்டு, மகாபோதி கோவிலுக்கு வந்திருந்த போது, அதன் பிரமாண்ட விதானங்களை, தங்கத் தகடால் மூடப் போவதாக அறிவித்திருந்தார். கோவிலை நிர்வகிக்கும், மத்திய அரசின் தொல்பொருள் ஆய்வுத்துறையிடம், அதற்கான அனுமதியை, தாய்லாந்து அரசு பெற்றுள்ளது. இதையடுத்து, தங்கத்தகடுகள் பொருத்தும் பணி, நாளை மறுநாள் துவங்குகிறது.
300 கிலோ தங்கம்: இதற்காக தேவைப்படும், 300 கிலோ தங்கம், இரண்டு நாட்களுக்கு முன், தாய்லாந்திலிருந்து, சிறப்பு விமானம் மூலம், 13 பெட்டிகளில், பாட்னா வந்தது. அங்கிருந்த, மிகுந்த பாதுகாப்புடன், மகாபோதி கோவிலை அடைந்துள்ளது. இந்த தங்கப் பெட்டிகளை, தாய்லாந்தின், சிறப்பு கமாண்டோ படை வீரர்கள், 24 பேர் பாதுகாக்கின்றனர். இயந்திர துப்பாக்கிகள் மற்றும் நவீன ஆயுதங்களுடன் வந்துள்ள அவர்கள், தங்கத் தகடு பொருத்தி முடிக்கும் வரை, பாதுகாப்பிற்காக, அங்கேயே தங்கி இருப்பர். இவர்களுடன், கைவினைக் கலைஞர்கள், 26 பேரும் வந்துள்ளனர்; அவர்கள், தங்கத்தை உருக்கி, தகடுகளாக மாற்றி, விதானத்தை மூடுவர்.
பக்தர்கள், பங்கேற்பு: நாளை மறுநாள் நடைபெறும், தங்கத்தகடு செய்யும் பணியை, மாநில முதல்வர், நிதிஷ்குமார் துவக்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில், தாய்லாந்திலிருந்து, 500க்கும் மேற்பட்ட பக்தர்கள், பங்கேற்க உள்ளனர். புத்தமதத்தினரால் வழிபடப்படும், மகாபோதி கோவிலில், ஜூலை மாதம், பயங்கர குண்டுகள் வெடித்தன; அந்த கொடுமையை செய்த பாதகர்கள், இன்னும் முழுமையாக கண்டறியப்படவில்லை.