பதிவு செய்த நாள்
08
ஜன
2014
10:01
சபரிமலை: சபரிமலையில் ஐயப்பன் கோயில் மற்றும் மாளிகைப்புறம் கோயில் சுற்றுப்புறங்களை, வாஸ்து முறையில் மாற்றி அமைக்க, தேவசம்போர்டு முடிவு செய்துள்ளது. நடப்பு சீசன் முடிந்ததும், அதற்கான பணிகளை துவங்க திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த 100 ஆண்டுகளுக்கு பின் கோயிலின் சிறப்பை கருத்தில் கொண்டு, சபரிமலையில் அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ள மாஸ்டர் பிளான் தயாரிக்கப்பட்டுள்ளது. இதை செயல்படுத்த கேரள முன்னாள் தலைமை செயலாளர் ஜெயக்குமார் தலைமையில், ஒரு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.கோயில்களில் செய்ய வேண்டிய மாற்றங்களுக்கு, வாஸ்து முறையில் அங்கீகாரம் பெற, தேவசம்போர்டு முடிவு செய்தது. அதன்படி, காணிப்பையூர் நாராயணன் நம்பூதிரி தலைமையில், வாஸ்து நிபுணர்கள் சபரிமலை மற்றும் மாளிகைப்புறம் கோயில்களை பார்வையிட்டனர். அவர்களது பரிந்துரைப்படி, சன்னிதானம் , மாளிகைப்புறத்தில் மாற்றங்கள் செய்யப்படுகிறது.
சன்னிதானம்: கோயிலை சுற்றி பிரகாரமும், அதற்குள் கணபதி சன்னதி வரும் வகையிலும் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும். கோயிலை சுற்றியுள்ள திருமுற்றம் தற்போது முன்பக்கத்தில் உள்ளது போல் மற்ற 3 பக்கங்களும் 23 மீட்டர் வரும் வகையில், அளவு அதிகரிக்கப்படும். சுற்றுபிரகாரம் உருவாக்குவதற்காக, மேல்சாந்தி மற்றும் தந்திரியின் அறைகள் வட கிழக்கு பகுதிக்கு மாற்றப்படும். தற்போதுள்ள பிரசாத மண்டபமும் மாற்றப்படும். சன்னிதானத்தின் முன்புறம் உள்ள பெரிய நடைப்பந்தல் ஒன்று அல்லது 2 அடுக்கு கட்டடமாக ஆக்கலாம். ஆனால், சன்னிதானம் , கோயிலின் உயரத்தை விட அதிகரிக்கக் கூடாது. 18ம் படியேறும் போது தற்போது தேங்காய் உடைக்கும் இடம் மாற்றப்பட்டு, பெரிய நடைப்பந்தல் அருகே வசதி ஏற்படுத்தப்படும். தேங்காய் ஆழியில் இருந்து வெப்பம் வெளிவராமல் இருக்க, மாற்றி அமைக்கப்படும். சன்னிதானத்தில் சீவேலிப்புரையும், கோயில் காம்பவுண்டுக்குள் யாகசாலையும் அமைக்கப்படும். பஸ்மக்குளம், சன்னிதானத்தின் வடக்கு கிழக்கு பகுதிக்கு மாற்ற படும். கோயிலிலிருந்து 31 மீட்டர் தூரத்தில் மட்டுமே தங்கும் வசதி, கழிவறை வசதி ஏற்படுத்தப்படும்.
மாளிகைப்புறம்: மாளிகைப்புறம் கோயில் உள்ள அதே நிலமட்டத்தில், இதர சன்னதிகள் மாற்றி அமைக்கப்படும். கோயிலை சுற்றி 21 மீட்டர் அகலத்தில் சுற்றுச்சுவர் கட்டப்படும். நவக்கிரகங்கள் வடக்கு கிழக்கு பகுதியில் ஆலமரம் பக்கம் மாற்றப்படும். பிரதான கோபுரத்தின் 2 பக்கங்களிலும் புதிய கோபுரங்கள் கட்டப்படும். தெற்கு கோபுரம் வழியாக பக்தர்கள் சென்று, வடக்கு கோபுரம் வழியாக வெளியேற வேண்டும். தற்போது 8 டிகிரி சாய்வில் உள்ள மணி மண்டபம் மாற்றப்பட்டு, அங்கு புதிய கோபுரம் கட்டப்படும். மேல்சாந்தி அறை மற்றும் திடப்பள்ளி வேறு இடத்துக்கு மாற்றப்படும்.பிரதட்சண வழி, விளக்கு மாடம், சுற்றம்பலம், பலிக்கல், தேவபிரதிஷ்டை என பஞ்சவிதிகளின் படி, இங்கு மாற்றங்கள் ஏற்படுத்தப்படும். வாஸ்துநிபுணர்கள் ஒப்புதல் அளித்துள்ளதால், நடப்பு சீசன் முடிந்ததும், இந்த பணிகளை துவங்க திட்டமிடப்பட்டுள்ளது.