பதிவு செய்த நாள்
16
ஜன
2014
02:01
தைப்பூசம். பல ஆன்மிக அற்புதங்கள் நிறைந்த புண்ணிய தினம் இது. முதன்முதலாக நீரும், அதிலிருந்து உலகமும் தோன்றியது தைப்பூசத்தன்றுதான் என்கின்றன புராண நூல்கள்.
சூரபதுமனை அழிக்க ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பிரம்மவித்யா சொரூபமான வேலாயுதத்தை சக்திதேவி தந்ததும் இந்த நாளில்தான். பழநி முதலாக முருகன் திருத்தலங்கள் தைப்பூசம் வெகுவிசேஷம். தாமிரபரணியின் கரையில் தவமிருந்த ஸ்ரீகாந்திமதிக்கு நெல்லையப்பர் அருள்பாலித்த திருநாளும் இதுவே. தைப்பூசத்தன்று நெல்லைப்பர் கோயில் விழாக்கோலம் காணும்.
திருஞானசம்பந்தர் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் தைப்பூசத்தை குறிப்பிட்டு பதிகம் பாடியிருக்கிறார். இங்கு தைப்பூசத்தை ஒட்டிய பவுர்ணமியன்று நடக்கும் தெப்பத்திருவிழாவில் சிவபார்வதியுடன், சிங்காரவேலரும் எழுந்தருளுகின்றார். அன்று கபாலீஸ்வரருக்கு தேன் அபிஷேகம் செய்யப்படும்.தைப்பூச திருநாளில்தான் திருஞானசம்பந்தர் பதிகம் பாடி பூம்பாவையை உயிர்பித்ததாக விவரிக்கிறது மயிலாப்பூர் தலபுராணம்.
பூச நட்சத்தரத்தின் பிரதான தேவதை குரு பகவான். ஆகவே, தைப்பூசத்தன்று புனித தீர்த்தங்களில் நீராடி குருவை வழிபட கல்வி ஞானம் பெருகும்.
1872ல், தைப்பூசத்தன்று வள்ளலார் வடலூரில் ஜோதி தரிசனத்தை துவக்கினார். அன்றிலிருந்து தற்போது வரையில் இவ்விழா இங்கு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. வள்ளாலர் ஜோதியில் கலந்தும் ஒரு தைப்பூசத்தில்தான். தைப்பூசத்தன்று மட்டுமே ஞான சபையில் ஏழு திரைகள் விலகிய நிலையில், ஜோதி தரிசனம் காண முடியும். அன்று காலை 6.30 மணி, 10 மணி, மதியம் 1 மணி, இரவு 7 மற்றும் 10 மணி, மறுநாள் காலை 5.30 மணி என ஆறு நேரங்களில் ஏழு திரைகளும் நீக்கப்படும். மாத பூசம் நட்சத்திர நாட்களில் இரவு 8 மணிக்கு, ஆறுதிரைகளை மட்டும் விலக்கி, மூன்று முறை ஜோதி தரிசனம் காட்டுவர்.
தை பூசம் கொண்டாடும் ஒரே வைணவத்தலம்: தைப்பூசம் சிவபெருமானுக்கும் முருகப் பெருமானுக்கும் மிகவும் விசேஷமாக கொண்டாடப்பட்டாலும், ஒரு வைணவத் தலத்திலும் தைப்பூசம் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. அந்தத் தலம் 108 திவ்யதேசங்களில் ஒன்றான திருச்சேறை சாரநாதப்பெருமாள் கோயிலாகும். இத்தலம் கும்பகோணத்திலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் உள்ளது.
இங்கு காவேரி அன்னை மகாவிஷ்ணுவை நோக்கத் தவமிருக்கிறாள். தை மாதம் பூச நட்சத்திரத்தன்று தான் காவிரிக்கு நேரே காட்சி கொடுத்து வரம் அளித்தார். ஸ்ரீஹரி முதல் எட்டுநாட்கள் தினமும் காலையில் பல்லக்கிலும், மாலையில் எல்லா வாகனத்திலும், வேத திவ்யப்பிரபந்த கோஷ்டியுடன் உற்சவம் நடக்கும். தைப்பூசத்தன்று (ஒன்பதாவது நாள்) மிகச் சிறப்பாக பெரிய தேரில் ஊர்வலம் வருவார்.
தைப்பூசத்தின் பிற சிறப்புகள்: தை மாத பவுர்ணமியன்று பூச நட்சத்திரமும் சேர்ந்து வரும் நாளான தைப்பூசம் தமிழர்களால் மிகச் சிறந்த நாளாகக் கருதப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. தைப்பூசம் முருகனுக்கு உரியது என்றாலும், சைவர்கள் அனைவருக்குமே இது பொது விழாவாகும். அன்றைய தினம் அதிகாலையில் எழுந்து நீராடி திருநீறு, உருத்திராட்சம் அணிந்து தேவார திருவாசகப் பதிகங்கள் சொல்லி ஒருவேளை பால், பழங்கள் மட்டும் உண்டு மாலை கோயிலுக்குச் சென்று வழிபட்டால் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும்.
இந்த நாளில்தான் முருகன் தாரகாசுரனை அழித்தார். சிவனும் பார்வதியும் ஒரு முறை தனியாக பேசிக் கொண்டிருந்தபோது குழந்தை முருகன் அதை தெரியாமல் கேட்டுவிட்டார். இதனால் கோபமடைந்த பார்வதி முருகனை கோபித்து கொண்டார். பெற்றோரின் கோபம் தீர முருகன் திருப்பரங்குன்றத்தில் கடுந்தவம் இயற்றியதால் சிவன் பார்வதி மனமிரங்கி கோபம் தணிந்த நாளே தைப்பூசம் என்று சிலர் கூறுவர்.
தைப்பூச விழா தமிழகம் மட்டுமல்லாமல் சிங்கப்பூர், மலேசிய, மியான்மர், இலங்கை ஆகிய நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது.
இலங்கையில் தைப்பூசத்தன்று வீட்டை நன்கு சுத்தம் செய்து, வயலில் விளைந்த புது நெல்லைக் குத்தி அரிசியாக்கி அதனை சாதமாக வடித்து அதோடு பால், பழங்கள், சர்க்கரை சேர்த்து இறைவனுக்குப் படைத்து தாங்களும் உண்ணுகிறார்கள். இங்கு கொழும்பில் உள்ள நல்லூர் கந்தசாமி கோயிலில் தைப்பூச விழா மிகவும் சிறப்பாககொண்டாடப்படுகிறது. இவ்விழாவில் பங்கேற்கும் பக்தர்களில் கிறிஸ்துவர்களும் இஸ்லாமியர்களும் கூட உண்டு என்பது இதன் சிறப்பு.
மலேசியாவின் தலைநகரமான கோலாலம்பூருக்கு அருகில் இருக்கும் பத்து மலை எனும் பட்டு குகைகளில் தைப்பூச விழா மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது. பல லட்சக்ணக்கான பக்தர்கள் பங்கேற்கும் இந்த விழாவைக் கண்டுகளிக்கவே பல்லாயிரக்காணக்கில் சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். கோலாலம்பூரில் இருக்கும் மகாமாரியம்மன் கோயிலிலிருந்து ஊர்வலம் புறப்படுகிறது. பக்தர்கள் பலவகையான காவடிகளை ஏந்தி சுமார் 15 கிமீ நடந்து பட்டு குகையை அடைகிறார்கள். அங்கு நடப்பட்டிருக்கும் வேல்தான் மிக முக்கியமான வழிபாட்டுச் சின்னம் . பக்தர்கள் 272 படிகள் ஏறி வந்து கந்தனை தரிசித்து பக்திப் பெருக்கோடு வழிபட்டு இறை அருள் பெற்றுச் செல்கிறார்கள்.
சிங்கப்பூரில் தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தைப்பூசம் மிகவும் விசேஷம். இதன் சிறப்பம்சம் என்னவென்றால் தைப்பூசத்துக்கு முதல் நாள் முருகன் வெள்ளிரதத்தில் லயன்சித்தி விநாயகர் கோயிலுக்கு எழுந்தருளுகிறார். அன்றும் காவடிகள் எடுக்கப்படுகின்றன. இதை செட்டிப்பூசம் என்று அழைக்கிறார்கள்.
தைப்பூச விழா தமிழ்நாட்டில் அறுபடை வீடுகளிலும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டாலும் பழநியில் நடைபெறும் தைப்பூச விழாவே மிக விசேஷமானதாகக் கருதப்படுகிறது. காரணம் அகத்தியரின் சீடரான இடும்பனே காவடி எடுக்கும் வழிபாட்டினை முதலில் தொடங்கி வைத்தவன் என்றும். அவன் முருகனால் ஆட்கொள்ளப்பட்ட இடம் பழநியே என்றும் கூறுகிறது புராணம் . பழநியில் தைப்பூசம் பத்து நாள் திருவிழாவாக வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. முருகனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துபவர்கள் பெரும்பாலும் காவடி எடுப்பதாக வேண்டிக்கொள்கின்றனர்.
தைப்பூசத்திருநாளில் முருகனை வணங்குவோம்! நலம் பல பெறுவோம்!!