ஆற்றுகால் பொங்கல் விழா: ஏராளமான பெண்கள் பங்கேற்பு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17பிப் 2014 10:02
நாகர்கோவில்: திருவனந்தபுரம் ஆற்றுகால் பகவதி அம்மன்கோயில் பொங்கல் விழாவில் ஏராளமான பெண்கள் ஒரே நேரத்தில் பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர். மதுரையை எரித்த கண்ணகி கொடுங்கல்லூர் செல்லும் வழியில் திருவனந்தபுரம் அருகே கிள்ளியாற்றின் கரையில் தங்கியிருந்ததாகவும், இப்பகுதியை சேர்ந்த முதியவர் கனவில் வந்து தனக்கு கோயில் கட்ட கூறியதன் பேரில் இங்கு கோயில் கட்டப்பட்டு ஆற்றுகால் பகவதி அம்மன் கோயில் என பெயர் பெற்றதாகவும் வரலாறு கூறுகிறது. இங்கு மாசி மாதம் நடைபெறும் பொங்கல் விழாவின் போது கண்ணகி வரலாற்றை குறிக்கும் தோற்றம் பாட்டு பாடப்படுகிறது. இங்கு நடைபெறும் முக்கிய திருவிழா மாசி பொங்கல் விழா. ஒரே நாளில் லட்சக்கணக்கான பெண்கள் பொங்கலிடும் நிகழ்ச்சி கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது. இந்த ஆண்டுக்கான பொங்கல் விழா கடந்த 8-ம் தேதி அம்மனை காப்பு கட்டி குடியிருத்தும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடக்க விழாவையொட்டி 12 யானைகள் பங்கேற்ற கஜமேளா நடைபெற்றது. ஒன்பதாம் நாள் விழாவான நேற்று பிரசித்தி பெற்ற பொங்கல் விழா நடைபெற்றது. காலை 10.30 மணிக்கு கோயில் முன்புறம் அமைக்கப்பட்ட முக்கிய அடுப்பில் கோயில் மேல்சாந்தி தீமூட்டி பொங்கலிட்ட போது பக்தர்களும் அடுப்பில் தீ வளர்த்து பொங்கலிட்டனர். கோயிலை சுற்றி சுமார் எட்டு கிலோ மீட்டர் சுற்றளவில் ரோடுகளிலும், தோப்புகளிலும், வீடு முற்றங்களிலும், பஸ் ஸ்டாண்டுகளிலும் என ஏராளமான பெண்கள் பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர். விழாவையொட்டி பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தேவியை தரிசனம் செய்தனர். மாலை மூன்று மணிக்கு நூற்றுக்கணக்கான பூஜாரிகள் கையில் தீர்த்த நீருடன் சென்று பொங்கல் நிவேத்யத்தில் தெளித்து பக்தர்கள் போட்ட பொங்கலை தேவிக்கு நிவேத்யம் செய்தனர்.