பதிவு செய்த நாள்
15
ஏப்
2014
10:04
பழநி : தமிழ் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு, பழநியில் நேற்று அதிகாலை 4 மணி முதலே பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. பழநியில் மலைக்கோயில், திருஆவினன்குடிகோயில், பெரியநாயகியம்மன் கோயில், பெரியாவுடையார் கோயில், பட்டத்துவிநாயகர் கோயில்கள், அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம், தீபாராதனை நடந்தது. உள்ளூர்,வெளியூரை சேர்ந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.பழநி மலைக்கோயிலில், பக்தர்கள் பால்குடங்கள், தீர்த்தகாவடி எடுத்தும், வெளிப்பிரகாரத்தை வலம் வந்து, தண்டாயுதசுவாமிக்கு நேர்த்திகடன் செலுத்தினர். ரோப்கார், வின்ச் ஸ்டேஷனில் ஒரு மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் மலைக்கோயிலுக்கு சென்றனர். மலைக்கோயிலில் பொதுதரிசனம் மற்றும் வி.ஐ.பி., கட்டணவழி உட்பட அனைத்து தரிசன வழிகளிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் மூன்று மணிநேரம் காத்திருந்து மூலவர் தண்டாயுதபாணியை தரிசனம் செய்தனர்.தாடிக்கொம்பு: தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பெருமாள்சுவாமிக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டது. சுவாமிக்கு சொர்ணாபிஷேகம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அபிஷேக நாணயம் வழங்கப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.பவுர்ணமியை முன்னிட்டு மாலை 7 மணியளவில் லட்சுமிநரசிம்ம பெருமாள் சுவாமிக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு, பால், சந்தனம், இளநீர், திருமஞ்சணம், பன்னீர் ஆகிய அபிஷேக ஆராதனைகள் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.கொடைக்கானல்: குறிஞ்சி ஆண்டவர் கோயிலில், தங்க கவசம் அணிந்து காட்சியளித்த முருகப்பெருமானை, திரளான பக்தர்கள் வழிபட்டனர். மூஞ்சிக்கல் மாரியம்மன் கோயிலிலும் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.