பதிவு செய்த நாள்
15
ஏப்
2014
10:04
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, உற்சவ பெருமானுக்கு, 1,008 பால்குட அபிஷேகம் நடந்தது. இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு மூலவரை வழிபட்டனர். தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, திருத்தணி முருகன் கோவிலில், நேற்று, 1,008 பால்குட அபிஷேகம் மற்றும் திருவிளக்கு பூஜை நடந்தது.விழாவையொட்டி, நேற்று காலை, 9:30 மணிக்கு, நந்தி ஆற்றங்கரையோரம் உள்ள கோட்டா ஆறுமுக சுவாமி கோவில் வளாகத்திலிருந்து, 1,008 பால்குட ஊர்வலத்தை, கோவில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் புகழேந்தி ஆகியோர் துவக்கி வைத்தனர். தொடர்ந்து, பக்தர்கள் பால்குடங்களை தலையில் சுமந்தவாறு, நகரின் முக்கிய வீதிகளில் வந்து, மலைப்படிகள் வழியாக மலைக்கோவிலுக்கு சென்றனர். தொடர்ந்து, நண்பகல், 11:30 மணிக்கு, மலைக்கோவிலில் உள்ள காவடி மண்டபத்தில் உற்சவ பெருமானுக்கு, 1,008 பால்குட அபிஷேகம் நடந்தது. பின், வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது.
திருவிளக்கு பூஜை: மாலை, 6:00 மணிக்கு, மலைக்கோவில் வளாகத்தில் திருவிளக்கு பூஜை நடந்தது. இதில், திரளான பெண்கள் விளக்கு பூஜை செய்து வழிபட்டனர். முன்னதாக மூலவருக்கு, அதிகாலை, 4:45 மணிக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. நேற்று, புத்தாண்டு முன்னிட்டு, அதிகாலை முதல் இரவு 9:00 மணி வரை, தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள், மலைக்கோவிலுக்கு வந்து மூலவரை வழிபட்டனர்.