காஞ்சிபுரம்: சித்ரா பவுர்ணமியை ஒட்டி நடவாவி உற்சவத்தில், வரதராஜ பெருமாள் பாலாற்றில் எழுந்தருளினார். காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் சித்ரா பவுர்ணமிக்கு முதல் நாள் கோவிலிருந்து புறப்பட்டு, ஐயங்கார் குளம் சஞ்சீவராயர் கோவிலுக்கு சென்றார். அங்கு அவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. அதன் பின் அங்குள்ள நடவாவி கிணற்றில் வரதராஜ பெருமாள் எழுந்தருளினார். அங்கிருந்து இரவு 11:30 மணிக்கு புறப்பட்டு பாலாற்றங்கரையில் நள்ளிரவு 12:30 மணிக்கு எழுந்தருளினார். அங்கு திருஊரல் பத்தி உலாத்தல் உற்சவம் நடந்தது. அதன்பின் பெருமாளுக்கு திருமஞ்சனம் ஆராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர். பெருமாள் எழுந்தருளும் சித்திரை நடவாவி உற்சவத்தில் வழக்கமாக பாலாற்றில் மூன்று அடி தோண்டினாலே தண்ணீர் வரும். அப்போது பெருமாள் மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். ஆனால், இந்த ஆண்டு பத்தடிக்கு மேல் ஊரல் தோண்டியதால் களிமண்ணில் தண்ணீர் ஊற்று இருந்தது. களிமண் தண்ணீரில் பெருமாளை சுமந்து சுற்றி வர முடியாமல், ஒரு முறை மட்டும் சுற்றப்பட்டது. ஆற்றில் மணலும் இல்லை தண்ணீரும் இல்லை. எதிர் காலங்களில் இதுகூட இருக்குமா என்றபடி, பக்தர்கள் கவலையுடன் கலைந்து சென்றனர். நேற்று முன்தினம் இந்த உற்சவம் முடிந்த பின் நேற்று அதிகாலை 5:30 மணிக்கு காஞ்சிபுரம் கோவிலுக்கு திரும்பினார். நாளை தோட்ட உற்சவம் நடக்கிறது.