பதிவு செய்த நாள்
17
ஏப்
2014
12:04
க.பரமத்தி: உப்புபாளையம் மாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டத்தில், 18 கிராம மக்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர். கரூர் மாவட்டம் க.பரமத்தி பஞ்.யூனியனுக்குட்பட்ட குப்பம் பஞ்சாயத்தில் உப்புபாளையம் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உப்புபாளையம், குப்பம், சாலிபாளையம், வேலாயுதம்பாளையம், ஆண்டிசங்கிலிபாளையம், காங்கேயம்பாளையம், தலையீத்துப்பட்டி, காளிபாளையம் உள்ளிட்ட, 18 குக்கிராம மக்கள் ஆண்டு தோறும் வழிபாடு செய்து வருகின்றனர். இந்த கோவிலின் திருவிழாவையொட்டி காப்பு கட்டுதல் மற்றும் கம்பம் நடுதல் நிகழ்ச்சி கடந்த மாதம், 16ம் தேதி தொடங்கியது. இதைத் தொடர்ந்து தினமும் அபிஷேகம், பூஜைகள் நடந்து வந்ததுடன், வீடு வீடாக சென்று படி பூஜை நடந்தது. மேலும், படி பூஜை விழாவையொட்டி அம்மனை அலங்கரித்து வீடு, வீடாக எடுத்துச் செல்வர். அங்கு பக்தர்களின் வீட்டு வாசல்களில் பூஜை செய்து சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு வந்தது. கோவில் தேரோட்ட விழாவுக்காக, கடந்த 13ம் தேதி பக்தர்களால் பொங்கல் வைத்து, படையலிட்டு வடிசோறு பூஜை நடந்தது. 14ம் தேதி கோவிலில் இருந்து புறப்பட்டு கொடுமுடி காவிரி ஆற்றுக்குச் சென்று புனித தீர்த்தம் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து அபிஷேகம், மாவிளக்கு, பூஜைகள் செய்யப்பட்டு வழிபாடு நடந்தது. நேற்று கிடாவெட்டு, ஸ்வாமிக்கு சிறப்பு பூஜை, ஆராதனை செய்யப்பட்டது. இதையடுத்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் அன்று மாலை, 5 மணிக்கு நடந்தது. கோவிலில் இருந்து கொட்டும் முழக்கத்துடன் புறப்பட்ட தேர், மாரியம்மன் கோவிலை சுற்றி வலம் வந்து மீண் டும் நிலையை வந்தடைந்தது. 18 கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். கம்பம் விடுதல் நிகழ்ச்சியுடன் இன்று விழா நிறைவு பெறுகிறது.