பதிவு செய்த நாள்
18
ஏப்
2014
10:04
உடுமலை : பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடிக்க, ஓம் சக்தி கோஷத்துடன், உடுமலையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் தேரோட்டம், நகரின் முக்கிய வீதிகளின் வழியாக நேற்று கோலாகலமாக நடந்தது. திருப்பூர் மாவட்டம் உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா, கடந்த 1ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது; நேற்றுமுன்தினம் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
திருத்தேரோட்டம்: மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம், நேற்று மாலை நடந்தது. முன்னதாக, நேற்று காலை 6.30 மணிக்கு அம்மன் மஞ்சள் பட்டு உடுத்தி, சுவாமியுடன் திருத்தேருக்கு எழுந்தருளினார். பிற்பகல் 3.15 மணிக்கு பரிவட்டம் கட்டப்பட்டது. மாலை 4.15 மணிக்கு, மேள, தாளங்கள் முழங்க பக்தர்கள் பக்தி கோஷம் எழுப்ப, அம்மன் எழுந்தருளியிருந்த அலங்கார திருத்தேர் வடம் பிடிக்கப்பட்டது. தேரின் நான்கு புறங்களிலும் திரண்டிருந்த பக்தர்கள் மத்தியில், தேர் அசைந்து, அசைந்து சென்றது. தேரின் முன்பகுதியில் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க, பக்தர்களுக்கு உதவியாக பாலக்காடு பட்டாம்பி குருவாயூரப்பன் கோவில் யானை மணிகண்டன் தேரின் பின்பகுதியில் இருந்து தள்ளிச் சென்றது. உடுமலை - பொள்ளாச்சி ரோட்டில் உள்ள கோவில் வளாகத்தில் இருந்து புறப்பட்ட தேர், பழநிரோடு, தளி ரோடு, குட்டைத்திடல், தங்கம்மாள் ஓடை தல கொண்டம்மன் கோவில் வழியாக, மாலை 6.15 மணிக்கு, தேர் நிலையை அடைந்தது.
மக்கள் வெள்ளம்: கோவில் வளாகம் முதல், தேர் வலம் வந்த பாதைகளில் குவிந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், தேரில் பவனி வந்த அம்மனை வழிபட்டனர். திருத்தேர் தங்கம்மாள் ஓடை தலைகொண்டம்மன் கோவிலுக்கு வந்தபோது, அம்மனுக்கு வரவேற்பும், சிறப்பு பூஜைகளும் நடந்தது. தேரோட்டத்தை முன்னிட்டு, நேற்று பிற்பகல் முதல் போக்குவரத்தில் சிறிது நேரம் மாற்றம் செய்யப்பட்டது. நேற்று காலை முதலே கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. தேரோட்ட வீதிகள் மற்றும் நகருக்குள் வருவதற்கான பாதைகளில் நூற்றுக்கணக்கான நீர்மோர், தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.