பதிவு செய்த நாள்
18
ஏப்
2014
02:04
ஊத்துக்கோட்டை: தாராட்சி பரதீஸ்வரர் கோவிலில் வள்ளி, மாணிக்கவாசகர் ஆகிய இரண்டு ஐம்பொன் சிலைகள் மற்றும் அம்மன் கழுத்தில் இருந்த தாலி திருடுபோனதை அடுத்து, கோவிலில் அலாரம் பொருத்துமாறு இந்து சமய அறநிலைய துறை அறிவுறுத்தி உள்ளது. மேலும், கோவிலில் பாதுகாப்பை பலப்படுத்துவதாக கிராமத்தினரும் உறுதி அளித்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டம் தாராட்சி கிராமத்தில் லோகாம்பிகா உடனுறை பரதீஸ்வரர் கோவில் உள்ளது. ஆரணி ஆற்றின் கரையோரம் பாழடைந்த நிலையில் காணப்பட்ட இக்கோவில் பொதுமக்கள் பங்களிப்புடன், புதுப்பிக்கப்பட்டு, கடந்த ஆண்டு மே மாதம், கும்பாபிஷேகம் நடந்தது. இங்கு கணபதி, வள்ளி, தெய்வானை உடனுறை முருகன், அய்யப்பன், நடராஜர், லோகாம்பிகை, பரதீஸ்வரர் என ஆறு முக்கிய சன்னிதிகள் உள்ளன. இதில் அய்யப்பன் சிலை ஐம்பொன்னால் ஆனது. மற்ற ஐந்தும் கற்சிலைகள். தட்சிணாமூர்த்தி, சூரியன், சந்திரன், பைரவர் உள்ளிட்ட கற்சிலைகளும் உள்ளன. நடராஜர், சிவகாமி, மாணிக்கவாசகர், வள்ளி, தெய்வானை, சுப்பிரமணியர், உற்சவர் சுவாமி, அம்பாள், பிரதோஷ மூர்த்தி என, மொத்தம் 11 ஐம்பொன் சிலைகள் அந்த கோவிலில் இருந்தன.இங்குள்ள கற்சிலை மற்றும் ஐம்பொன் சிலைகள் அனைத்தும் பக்தர்கள் காணிக்கையாக வழங்கியவை. தாராட்சி கிராமத்திற்கு சொந்தமான இந்த கோவிலை, அதே கிராமத்தைச் சேர்ந்த சிவஞானம்என்பவர் நிர்வாகம் செய்து வருகிறார்.
சிலைகள் கொள்ளை: கடந்த, 16ம் தேதி காலை, கோவில் அர்ச்சகர் சிவா, கோவிலை திறந்து உள்ளே சென்றபோது, நடராஜர் சன்னிதியில் வைக்கப் பட்டிருந்த இரண்டடி உயர வள்ளி, ஒரு அடி உயர மாணிக்கவாசகர் ஆகிய இரண்டு ஐம்பொன் சிலைகளும், அம்மன் கழுத்தில் இருந்த வெள்ளி சரடால் ஆன அரை சவரன் தாலி, மகாமேரு ஆகியவையும் கொள்ளை போனது தெரியவந்தது. இவற்றின் மொத்த மதிப்பு ஒன்றரை லட்சம் ரூபாய். ஊத்துக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். கோவில் அர்ச்சகர் கி÷ஷார்குமார் கூறியதாவது: ஆந்திர மாநிலம், நாகலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த நான், கடந்தாண்டு, ஜூன் மாதம் ஒன்றாம் தேதி முதல் அர்ச்சகராக உள்ளேன். காலை, 8:00 மணிக்கு கோவில் திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். மதியம், 12:00 மணிக்கு பூட்டி மாலை, 5:00 மணிக்கு திறக்கப்படும். இரவு, 8:00 மணிக்கு கோவில் பூட்டப்பட்டு, சாவி, கோவில் நிர்வாகி சிவஞானத்திடம் இருக்கும்.
சிலை திருடு போன அன்று எனது சொந்த வேலை காரணமாக சென்னை சென்றேன். எனக்கு பதிலாக கிராமத்தில் உள்ள ஜகதாம்பிகை கோவில் அர்ச்சகர் சிவா என்பவர் கோவிலை திறந்தார். மூலவர் சன்னிதியை திறக்க சென்றபோது, நடராஜர் சன்னிதி, லோகாம்பிகை சன்னிதி தாழ்ப்பாளை உடைத்து கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கோவில் நிர்வாகி சிவஞானம் கூறியதாவது: கோவில் கட்டும் பணி துவங்கியதில் இருந்து கோவில் நிர்வாகம் செய்து வருகிறேன். கும்பாபஷேகம் முடிந்த பின் தினமும் நான் இரவு நேரத்தில் கோவிலில் தான் உறங்குவேன். ஒவ்வொரு நாளும் கிராமத்தில் உள்ள ஒருவர், என் கூட துணைக்கு இருப்பார். அய்யப்ப மாலை அணிந்து கடந்த, 13ம் தேதி மாலை சபரிமலைக்கு யாத்திரை சென்றேன். கோவில் அர்ச்சகரிடம் கோவில் சாவியை ஒப்படைத்து விட்டு சென்றேன். பின் கடந்த, 16ம் தேதி காலை, 6:00 மணிக்கு நான் வீட்டிற்கு வந்தேன். வழக்கம்போல காலை கோவிலுக்குச் சென்றேன். அங்கு சென்றபோது தான் சாமி சிலைகள் கொள்ளை போனது தெரியவந்தது. இவ்வாறு அவர் தெரிவித்தார். அறநிலைய துறை அறிவுறுத்தல் மாவட்ட அறநிலைய துறை ஆய்வாளர் வனிதா, சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். கோவிலில் மீதமுள்ள ஐம்பொன் சிலைகளை பாதுகாப்பாக, திருத்தணியில் அரசு பொறுப்பில் உள்ள இடத்தில் வைக்குமாறு அறிவுறுத்தினார். ஆனால் ஊராட்சி தலைவர் சுந்தரி,கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள், இனி சிலைகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்வோம் என, எழுதி கொடுத்தனர். கோவிலில் அலாரம் வைக்கும்படியும் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.