பதிவு செய்த நாள்
21
ஏப்
2014
10:04
ராமேஸ்வரம் கோவிலில், பக்தர்கள் நீராடும் தீர்த்த கிணறுகள், சுகாதாரமின்றி உள்ளதாக கிடைத்த புகாரையடுத்து, மதுரை ஐகோர்ட் குழுவினர் ஆய்வு செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில், 22 தீர்த்தங்கள் உள்ளன. இவற்றில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடுகின்றனர். அதற்காக முறையான வசதிகள் இல்லாததால், குளிக்கும் நீர் கிணறுகளுக்குள் செல்வதாகக் கூறப்படுகிறது. இதனால், புனித கிணறுகள் மாசடைந்து சுகாதாரமின்றி இருப்பதாகவும், நீராடும் பக்தர்களிடம், கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகவும் புகார் எழுந்தது. இதுதொடர்பாக, மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இக்கோவிலில், கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுத்து, தீர்த்த நீரை சிக்கனமாக பயன்படுத்தி, கோவிலுக்குள், சுகாதாரக்கேடு இன்றி பராமரிக்க, மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டது. இதுகுறித்து, கோவில் நிர்வாகம் அமல்படுத்திய பணிகள் குறித்து, ஐகோர்ட் ஆய்வு குழுவினர், இருமுறை பார்வையிட்டு, கோர்ட்டில் அறிக்கை சமர்ப்பித்தனர். இந்நிலையில், ஐகோர்ட் ஆய்வு குழு வழக்கறிஞர் எஸ்.எஸ்.சுந்தர், கோவில் வழக்கறிஞர் ரமேஷ் ஆகிய இருவரும், நேற்று, கோவிலில் உள்ள தீர்த்த கிணறுகள், பக்தர்கள் நீராடும் வழியில் சுகாதார பராமரிப்பு, சுவாமி, அம்மன் வீதி உலாவுக்கு பயன்படுத்தப்படும் தங்கம், வெள்ளி வாகனங்களை ஆய்வு செய்தனர்.