பதிவு செய்த நாள்
21
ஏப்
2014
10:04
நாகப்பட்டினம் : வேளாங்கண்ணி ஆரோக்கியமாதா தேவாலயத்தில், ஈஸ்டர் பண்டிகை சிறப்பு நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், மெழுகுவர்த்தி ஏந்தி பங்கேற்றனர். நாகையை அடுத்த வேளாங்கண்ணி ஆரோக்கியமாதா தேவாலயத்தில் ஈஸ்டர் பண்டிகையை யொட்டி, சிறப்பு கூட்டு பாடல் திருப்பலி நடந்தது. நேற்று முன்தினம் இரவு, 10:45 மணிக்கு, தேவாலய அதிபர் மைக்கேல் உள்ளிட்ட, 10 பாதிரியார்கள் பங்கேற்ற சிறப்பு பாடல் திருப்பலி, தேவாலய கலையரங்கில் நடந்தது. இரவு, 12:00 மணிக்கு, உயிர்த்தெழுந்த ஏசு கிறிஸ்து, பக்தர்களுக்கு காட்சி தரும் நிகழ்ச்சி, தத்ரூபமாக நடத்தி காட்டப்பட்டது. நள்ளிரவு, 1:45 மணி வரை நடந்த சிறப்பு திருப்பலியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், மெழுகுவர்த்தி ஏந்தி பங்கேற்றனர். தமிழ், மலையாளம், கொங்கணி, தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் தேவாலயத்தில், நேற்று திருப்பலிகள் நடைபெற்றன. மாலை, 6:45 மணிக்கு, உயிர்த்த இயேசு கிறிஸ்து தேர்பவனியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.