பதிவு செய்த நாள்
21
ஏப்
2014
11:04
ஆர்.கே.பேட்டை : திருமலை திருப்பதி கருட சேவை உற்சவம் போன்று, சந்தானவேணுகோபாலபுரம் பிரம்மோற்சவ கருட சேவை, கோலாட்டத்துடன் விமரிசையாக நடந்தது. திருத்தணி சுப்ரமணிய சுவாமி தேவஸ்தானத்தின் உப கோவிலான சந்தான வேணுகோபாலபுரம், வேணுகோபால சுவாமி பிரம்மோற்சவம், கடந்த வாரம் துவங்கியது. இதில், கருட சேவை நேற்று முன்தினம் இரவு நடந்தது. கருட சேவையை ஒட்டி, தும்பல்சேரி கண்டிகை கிராமத்தைச் சேர்ந்த, கோலாட்ட குழுவினர் சுவாமி ஊர்வலத்தில் பங்கேற்றனர். ஆண்டு தோறும் கருட சேவையின் போது, ஆன்மிக சேவை நோக்கில் இந்த குழுவினர் பங்கேற்று வருகின்றனர். இந்த குழுவில், ஐந்து வயது முதல், ௨௦ வயது வரையிலான ஆண்களும், பெண்களும் இடம் பெற்றுள்ளனர். அனைவரும் அடி தவறாமல், ஆடிய ஆட்டம், பக்தர்களை வெகுவாக கவர்ந்தது. இரவு 7.00 மணிக்கு புறப்பட்ட சுவாமி உலா, நள்ளிரவு 12.00 மணிக்கு கோவிலை வந்தடைந்தது. கருட வாகனத்தில் எழுந்தருளிய சந்தான வேணுகோபாலனை தரிசிக்க, வங்க னூர், எஸ்.பி.கண்டிகை, டி.சி.கண்டிகை, கே.ஜி.கண்டிகை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். நாளை, தேர் திருவிழா நடக்கிறது.