பதிவு செய்த நாள்
22
ஏப்
2014
10:04
அழகர்கோவில்: பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவது தான். இதற்காக, மே 12 ல், அழகர்கோவிலில் இருந்து அழகர் புறப்படுகிறார். மே 14 காலை 6:30 மணிக்கு, வைகை ஆற்றில் இறங்குகிறார். அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா, மே 10 ல் துவங்குகிறது. முதல் 2 நாட்கள் காலை, மாலையில் பல்லக்கில் பெருமாள் கோயிலை வலம் வருகிறார். மே 12 மாலை 5:30 க்கு கண்டாங்கி பட்டு உடுத்தி, கையில் வேல் கம்புடன், கள்ளழகர் வேடத்தில் தங்கப் பல்லக்கில் அழகர் மதுரை புறப்படுகிறார். அன்று இரவு பக்தர்கள் அமைக்கும் மண்டகப்படிகளில் எழுந்தருளுகிறார். எதிர்சேவை: மே 13 காலை 6:00 மணிக்கு மூன்றுமாவடியில் எதிர்சேவை நடக்கிறது. காலை 9:00 மணிக்கு புதூர், மாலை 6:00 மணிக்கு அவுட்போஸ்ட்டில் எதிர்சேவை நடக்கிறது. அன்றிரவு தல்லாகுளம் பெருமாள் கோயில் வரும் கள்ளழகருக்கு திருமஞ்சனம் நடக்கிறது. நள்ளிரவு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையை ஏற்று, தங்க குதிரை வாகனத்தில் புறப்படும் கள்ளழகர், அதிகாலை 3:00 மணிக்கு தல்லாகுளத்தில், ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருள்கிறார். ஆற்றில் இறங்குகிறார்: மே 14 ல், தங்கக் குதிரையில் புறப்படும் அவர், காலை 6:00 முதல் 6:30 க்குள் வைகை ஆற்றில் இறங்குகிறார். அங்கிருந்து காலை 10:00 மணிக்கு ராமராயர் மண்டபம் செல்கிறார். அங்கு அழகருக்கு, தீர்த்தவாரி நடக்கும். இரவு வண்டியூர் வீரராகவ பெருமாள் கோயிலை அடைகிறார். மே 15 காலை சேஷ வாகனத்தில் புறப்படும் கள்ளழகர், பகலில் வைகையில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளிக்கிறார். அன்று இரவு ராமராயர் மண்டபத்தில் தசாவதாரம் நடக்கிறது. மே 16 ல், காலை மோகன அவதாரத்தில் புறப்படும் கள்ளழகருக்கு, இரவு தல்லாகுளம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் பூப்பல்லக்கு நடக்கிறது. மே 18 ல், அழகர்கோவிலை சென்றடைகிறார். விழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாஜலம், துணை கமிஷனர் வரதராஜன் செய்து வருகின்றனர்.