பதிவு செய்த நாள்
22
ஏப்
2014
10:04
பொன்னேரி : கரிகிருஷ்ண பெருமாள் கோவில் தேர் திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக பங்கேற்று, தேரின் வடம் பிடித்து இழுத்து வழிபட்டனர்.பொன்னேரி திருவாயற்பாடியில் உள்ள சவுந்தர்யவள்ளி தாயார் சமேத கரிகிருஷ்ண பெருமாள் கோவில் பிரம்மோற்சவ திருவிழாவின், ஏழாம் நாளான நேற்று, தேர் திருவிழா நடந்தது. பூக்கள் மற்றும் வண்ணமிகு ஆடைகளால் அலங்கரிக்கப்பட்ட, 36 அடி உயர மரத்தேரில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் உற்சவ பெருமான் வீற்றிருந்தார்.காலை, 9:45 மணிக்கு, நிலையிலிருந்து புறப்பட்ட தேர், புதிய தேரடி தெரு, தாயுமானவன் செட்டி தெரு, நீலி அப்பாதுரை தெரு, தண்டபாணி தெரு ஆகிய வீதிகளின் வழியாக வலம் வந்தது. பொன்னேரி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து பக்தர்கள், தேர் திருவிழாவில் பங்கேற்று, தேரின் வடம் பிடித்து இழுத்தனர்.பொன்னேரி அனைத்து வியாபாரிகள் சங்கம் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் சார்பாக அன்னதானம், குளிர்பானங்கள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டன. மாடவீதிகள் வழியாக, சுற்றி வந்த தேர் மாலையில், நிலைக்கு வந்தது. நிலையில், உள்ள நிழற்குடையில், பக்தர்கள் தேரின் மேற்புறம் சென்று உற்சவ பெருமானை வழிபட்டு சென்றனர்.