பதிவு செய்த நாள்
22
ஏப்
2014
10:04
ஆதிகேசவப் பெருமாள் மற்றும் காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவில் தேர் திருவிழா, வெகு சிறப்பாக நடந்தது. ஸ்ரீபெரும்புதூரில் ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவிலில், சித்திரை மாத ஆண்டு பிரம்மோற்சவம், கடந்த 15ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. ஏழாம் நாளான நேற்று, காலை 6:05 மணிக்கு, ஆதிகேசவப் பெருமாள், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் எழுந்தருளினார். அங்கு சிறப்பு பூஜைகளும், ஆராதனையும் நடந்தது. ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கச்சிப்பட்டு, பக்தவச்சலநகர், ராமாபுரம் கிராமங்களை சேர்ந்த மக்களை, கோவில் சார்பில் வரவேற்று, மரியாதை செலுத்தினர். பின்னர், காலை 8:30 மணிக்கு, தேரை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தேரடியிலிருந்து புறப்பட்டு காந்தி ரோடு, செட்டி தெரு, திருமங்கையாழ்வார் தெரு வழியாக, ஆதிகேசவப் பெருமாள் திருத்தேரில் உலா வந்தார். சாலையோரங்களில் காத்திருந்து, பக்தர்கள் தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி வழிபட்டனர். திருமஞ்சனம்: சின்ன காஞ்சிபுரம் புஷ்பவல்லி சமேத அஷ்டபுஜ பெருமாள் கோவில் ஆண்டு பிரம்மோற்சவத்தின், ஏழாம் நாளான நேற்று காலை 6:30மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத அஷ்டபுஜ பெருமாள் எழுந்தருளி, முக்கிய வீதிகளில் வீதியுலா சென்று, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.பின்னர், காலை 10:45 மணிக்கு தேர் மீண்டும் நிலைக்கு வந்தடைந்தது. மாலை 6:30 மணிக்கு கோவில் வளாகத்தில் சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.