நோயற்ற வாழ்வு வேண்டி.. வைத்தீஸ்வரன் கோயிலுக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஏப் 2014 02:04
மயிலாடுதுறை: நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன்கோயிலில் தேவார பாடல் பெற்ற தையல் நாயகி சமேத வைத்தியநாதர் சுவாமி கோயில் உள்ளது. நவகிரகங்களில் செவ்வாய் தலமான இங்கு வந்து சுவாமியை வழிபட்டால் நோயற்ற வாழ்வை பெறுவார்கள் என்பது ஐதீகம். தையல்நாயகி சமேத வைத்தியநாதர் சுவாமியை குலதெய்வமாக வழிபடும் ஒரு பிரிவினர் ஆண்டுதோறும் பங்குனி மாதம் விரதமிருந்து சித்திரை முதல் வாரம் பாதயாத்திரையாக புறப்பட்டு 2 வது வாரம் செவ்வாய் கிழமை அன்று வைத்தீஸ்வரன் கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். அதுபோல நேற்று இரவு திருச்சி, கரூர், சிவகங்கை, புதுக்கோட் டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் இருந்து வைத்தீஸ்வரன்கோவிலுக்கு வந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஊர் எல்லையில் தங்கினர். தொடர்ந்து செவ்வாய் கிழமையான இன்று காலை கோவிலுக்கு வந்த அவர்கள் தீர்த்த குளத்தில் நீராடி கோயிலை வலம் வந்து நேர்த்தி கடன் செலுத்தி சுவாமி, அம்பாள் மற்றும் அங்கஹாரனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்து வழிபட்டனர். பக்தர்களின் வசதிக்காக வைத்தீஸ்வரன் கோவிலிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. சீர்காழி டி.எஸ்.பி.வெங்கடேசன் தலைமையல் போலீசார் மற்றும் ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.