பதிவு செய்த நாள்
23
ஏப்
2014
10:04
கோவை : கோவை தண்டுமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, மாநகர பகுதியில் இன்று போக்குவரத்தில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கோவை தண்டுமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு இன்று(23ம் தேதி) பக்தர்களின் நேர்த்தி கடன் தீச்சட்டி ஊர்வலம் நடக்கிறது.பெரியகடை வீதி கோனியம்மன் கோவிலிலிருந்து காலை 6.00 மணிக்கு புறப்படும் ஊர்வலம், டவுன்ஹால், ஒப்பணக்கார வீதி, லிங்கப்பசெட்டி வீதி, பால் மார்க்கெட், சிரியன் சர்ச் ரோடு, புரூக்பாண்ட் ரோடு, அவிநாசி ரோடு மேம்பாலத்தின் கீழ்பகுதி, சோமசுந்தரம் மில் ரோடு வழியாக அனுப்பர்பாளையம், டாக்டர் நஞ்சப்பா ரோட்டை அடைந்து அவிநாசி மேம்பாலம் வழியாக தண்டுமாரியம்மன் கோவில் சென்றடைகிறது.இதனால், இன்று காலை 6.00 முதல் மதியம் ௧.௦௦ மணி வரை போக்குவரத்தில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.கோவை மாநகர போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கை:பாலக்காடு ரோட்டிலிருந்து நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் உக்கடம் சென்று, வாலாங்குளம் பைபாஸ் அல்லது பேரூர் பைபாஸ் ரோடு வழியாக பிற பகுதிகளுக்கு செல்லலாம்.மேட்டுப்பாளையம் ரோடு, தடாகம் ரோடு ஆகியவற்றிலிருந்து உக்கடம், பாலக்காடு, பொள்ளாச்சி செல்லும் வாகனங்கள் பொன்னையராஜபுரம், செல்வபுரம் ராமமூர்த்தி பாதை, சிவாலயா தியேட்டர் சந்திப்பு, பேரூர் பைபாஸ் ரோடு வழியாக உக்கடம் சென்று வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.பேரூரிலிருந்து நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும், பேரூர் பைபாஸ் ரோடு வழியாக உக்கடம் அடைந்து, வாலாங்குளம் பைபாஸ் ரோடு வழியாக வேண்டிய இடங்களுக்கு செல்லலாம் அல்லது சிவாலயா தியேட்டர், ராமமூர்த்தி பாதை, சொக்கம்புதூர், பொன்னையராஜபுரம், தடாகம் ரோடு வழியாக செல்ல வேண்டும்.அவிநாசி ரோட்டிலிருந்து மேம்பாலம் வழியாக செல்லக்கூடிய வாகனங்கள் அண்ணாசிலை சந்திப்பு அல்லது ஜே.எம்., பேக்கரி சந்திப்பில் இடப்புறம் திரும்பி ஓசூர் ரோடு, ரேஸ்கோர்ஸ் ரோடு அல்லது ரயில்நிலையம் வழியாக திருச்சி ரோட்டை அடைந்து வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.ஊர்வலத்தின் இறுதிப்பகுதி முக்கிய வீதிகளை கடக்கும்போது போக்குவரத்து வழக்கம்போல் செயல்படும். லாரி போக்குவரத்து தற்போது நடைமுறையில் உள்ளதுபோல் அல்லாமல் காலை 9.00 முதல் ஊர்வலம் முடியும் வரை அவிநாசி ரோடு மற்றும் ஊர்வலப் பாதை உள்ள பகுதியில் நுழைய தொடர்ந்து தடை உள்ளது.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.