பதிவு செய்த நாள்
23
ஏப்
2014
10:04
பழநி: பழநி மலைக்கோயில் படிக்கட்டு, யானைப்பாதையில், பக்தர்களுக்கு இடையூறாக இருந்த கடைகளை, எதிர்ப்பை சமாளித்து கோயில் நிர்வாகம் அகற்றியது. பழநி மலைக்கோயில் நடைபாதையை ஆக்கிர மித்து, கடைக்காரர்கள் பக்தர்களுக்கு இடையூறு செய்தனர். மேலும், கடை ஒன்றில் அசைவ சாப்பாடு, மதுபாட்டில் இருந்தது சில மாதங்களுக்கு முன் சர்ச்சையை கிளப்பியது. இதனால், படிப்பாதை, யானைப்பாதையில் அனுமதிக்கப்பட்ட 13 கடைகளையும் அகற்ற கோயில் நிர்வாகம் முடிவு செய்தது. இதை எதிர்த்த வழக்கில் ஏப்., 21 க்குள் உரிமையாளர்களே கடையை காலிசெய்யவேண்டும். கோயில் நிர்வாகம், கடைகளை அகற்றி ஏப்., 23 க்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும், என, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. நேற்று, இணை ஆணையர் (பொ) ராஜமாணிக்கம், ஆர்.டி.ஓ., சுந்தர் ராஜ், தாசில்தார் வரதராஜன் முன்னிலையில் கோயில் பாதுகாவலர்கள், பணியாளர்கள், போலீசார் உதவியுடன், கடைகளை அகற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடைக்காரர்கள் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் விரட்டும்போது, இரு தரப்பினருக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதன்பின், கடைகள் முழுமையாக அகற்றப்பட்டன.