பதிவு செய்த நாள்
23
ஏப்
2014
11:04
நார்கோவில் : கன்னியாகுமரி ரயில்நிலைய சந்திப்பில் குகநாதீஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் 11-வது வருஷாபிஷேக விழா மற்றும் ஸ்ரீகுகநாதீஸ்வரர்-ஸ்ரீபார்வதியம்மாள் திருக்கல்யாண விழா நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், 6 மணிக்கு கலசபூஜை. 7 மணிக்கு கன்னியாகுமரி நடுத்தெருவில் உள்ள பாலகிருஷ்ண சுவாமி கோயிலுக்கு பார்வதியம்மாள் தவசுக்கு எழுந்தருளல், காலை 9 மணிக்கு வருஷாபிஷேகம், அதைத்தொடர்ந்து கும்பாபிஷேகம் நடந்தது. பகல் 12 மணிக்கு அலங்கார தீபாரதனை, மதியம் அன்னதானம், மாலை 4 மணிக்கு சுவாமிரிஷப வாகனத்தில் எழுந்தருளி பெண் அøழ்கும் நிகழ்ச்சி நடந்தது. அதைத் தொடர்ந்து ஸ்ரீகுகநாதீஸ்வரர்-ஸ்ரீ பார்வதியம்மாள் ஆகியோருக்கு திருக்கல்யாணம் நடத்தி வைக்க கன்னியாகுமரி நடுத்தெருவில் உள்ள பாலகிருஷ்ண சுவாமி கோயிலில் இருந்து சீர்வரிசையுடன் குகநாதீஸ்வரர் கோயிலுக்கு அழைத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. இரவு குகநாதீஸ்வரர் கோயிலின் முகப்பு மண்டபத்தில் ஸ்ரீகுகநாதீஸ்வரர் சுவாமிக்கும், ஸ்ரீ பார்வதியம்மாளுக்கும் திருக்கல்யாணம் நடந்தது. அப்போது சுவாமிக்கும், அம்பாளுக்கும் திருமாங்கல்யதாரண்ய முகூர்த்தம் நடத்தி மாலை மாற்றி காட்சி கொடுத்து திருமாங்கல்யம் பூணும் நிகழ்ச்சி நடந்தது. சுவாமியும் அம்பாளும், மூஷிக வாகனத்தில் விநாயகரும், மயில் வாகனத்தில் முருகரும், குதிரை வாகனத்தில் பெருமாளும், சப்பர வாகனத்தில் சண்டிகேஸ்வரரும் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. அதை தொடர்ந்து பள்ளியறை பூஜை நடந்தது. பின்னர் திருக்கல்யாண பொதுவிருந்து நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் குகநாதீஸ்வரர் கோயில் பக்தர்கள் பேரவை தலைவர் கோபி, கிருஷ்ணபிள்ளை உட்பட திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.