பதிவு செய்த நாள்
23
ஏப்
2014
11:04
திருச்சி: திருச்சி இ.பி., ரோடு பூலோகநாத ஸ்வாமி கோவிலில் இன்று வாஸ்து ஹோமம் மற்றும் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. வீடு, மனை, நிலங்களில் வாஸ்து ரீதியாக குறைபாடு இருந்தால் அவற்றால் கெடு பலன்கள் ஏற்படும் என்றும், இதை நிவர்த்திக்க வாஸ்து பகவானுக்கு பரிகாரங்கள் செய்தால் குறைபாடு நீங்கி நற்பலன்கள் ஏற்படும் என்பது ஐதீகம். இந்த வாஸ்து பகவான் பெரும்பாலான நாட்களில் நிஷ்டையில்தான் இருப்பார், குறிப்பிட்ட சில நாட்களில் மட்டுமே விழித்திருப்பார் என்பது நம்பிக்கை, அவ்வாறு வாஸ்து பகவான் விழித்திருக்கும் நாட்கள் வாஸ்து நாட்கள் என்றும், இந்நாட்களில் வீடு, மனைகளில் புதிய கட்டுமானங்கள் துவக்குவது, வாஸ்து பகவானுக்கு பரிகார பூஜைகள் செய்வது சிறந்தது என்பது நம்பிக்கை. வீடு, மனை, நிலம் வாங்க விரும்புவோர் இந்நாளில் வாஸ்து பகவானை பிரார்த்தித்துக்கொண்டால் அவர்களின் விருப்பங்கள் விரைவில் நிறைவேறும். இன்று வாஸ்து நாள் என்பதால், திருச்சி இ.பி., ரோட்டில் உள்ள பூலோகநாத ஸ்வாமி கோவிலில் சிறப்பு ஹோமம் மற்றும் அபிஷேகம் நடக்கிறது.காலை எட்டு மணிக்கு ஜெகதாம்பிகை அம்மன், பூலோகநாத ஸ்வாமி சன்னதி எதிரில் சிறப்பு ஹோமமும், மதியம் 12 மணிக்கு பூர்ணாஹூதியும், தொடர்ந்து ஸ்வாமி மற்றும் அம்பாளுக்கு மகா அபிஷேகமும் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் அலுவலர்கள், பணியாளர்கள் செய்து வருகின்றனர்.