பதிவு செய்த நாள்
25
ஏப்
2014
11:04
சிவகாசி: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள,இந்து அறநிலையத்துறை கோயில் கடைகளில், தரமற்ற பூஜை பொருட்களை,கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதால்,பக்தர்களை முகம் சுளிக்கும் நிலை தொடர்கிறது. மாவட்டத்தில், இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், 460 கோயில்கள் உள்ளன. இதில் பிரசித்தி பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில், இருக்கன்குடி மாரியம்மன் கோயில், திருத்தங்கல் நின்ற நாராயணப்பெருமாள் கோயில், வைத்தியநாத சுவாமி கோயில், சிவகாசி விஸ்வநாதசுவாமி விசாலாட்சி அம்மன் கோயில் என, 20க்கு மேற்பட்ட புராதன வரலாறு கொண்ட, பிரசித்த பெற்ற கோயில்களும் உள்ளன. இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். குறிப்பாக, இக் கோயில்களின் திருவிழா மற்றும் பிரதோஷம், பவுர்ணமி, சங்கட ஹர சதுர்த்தி போன்ற விஷேச நாட்களில், ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கூடுகின்றனர்.
கோயிலுக்கு வரும் பக்தர்கள், நிம்மதியாக சுவாமி தரிசனம் செய்து சந்தோஷமாக திரும்ப வேண்டும் என நினைத்து வருகிறார்கள். ஆனால், கோயில் வளாகத்தில் உள்ள கடைகளில், அபிஷேகம், அர்ச்சனை, விளக்கு மற்றும் பூஜை பொருட்களால், பக்தர்கள் ஏமாற்றப்படுவது வாடிக்கையாக நடக்கிறது. ரூ.2, ரூ.5க்கு விற்க வேண்டிய நெய் விளக்கு ரூ.10, ரூ.30, ரூ.50, ரூ.100 என்ற விலைகளில் விற்கப்படுகின்றன. ரூ.2க்கு விற்க வேண்டிய வில்வம் இலை பொட்டலம் ரூ.5க்கும், ரூ.2க்கு விற்க வேண்டிய குங்குமம் ரூ.5,க்கும், ரூ.5க்கு விற்க வேண்டிய எள் விளக்கு, வால்மிளகு விளக்கு போன்றவை ரூ.10க்கு விற்கப்படுகிறது. துளசி மாலை கூடுதல் விலையில் நோக்கம் போல் விற்கப்படுகிறது. கோயில் கடைகளில், நிர்வாகம், விலை பட்டியலை எழுதி வைத்திருந்தாலும், அவற்றின் மீது சுவாமிபடத்தை வைத்து மறைத்து விடுகின்றனர். இதனால் பக்தர்கள், பொருட்களின் விலையை அறிந்து கொள்ள முடிவது இல்லை. நியாயமான விலையில் பொருட்கள் வாங்க முடிவதில்லை. கடைக்காரர் என்ன விலை சொல்கிறாரோ, அந்த விலை கொடுத்து வாங்கி செல்ல நேரிடுகிறது.
ஏன் இந்த விலை உயர்வு என, பக்தர்கள் கேட்டால், நெய், எண்ணெய் விலை, பல மடங்கு உயர்ந்து விட்டது. ஆனால், விலை உயர்வுக்கு ஏற்ப கட்டணத்தை, இந்து அறநிலையதுறை அதிகரிக்க வில்லை. பல லட்சத்திற்கு கடை ஏலம் எடுத்துள்ளோம். கூடுதல் விலைக்கு விற்றால் தான், கட்டுபடியாகும். விருப்பம் இருந்தால் வாங்குங்கள் இல்லாவிட்டால், நடையை கட்டுங்கள். வியாபாரத்தை கெடுக்காதீர்கள் என, கறாராக கூறுகின்றனர். நிம்மதி தேடி வரும் பக்தர்கள், அநியாயத்தை தட்டி கேட்டால், இப்படி பதில் கிடைக்கிறதே என புலம்பியவாறு, கோயிலுக்குள் செல்கின்றனர். இதை, கோயில் நிர்வாகமும் கண்டு கொள்வது இல்லை. சொன்ன விலை கொடுத்து வாங்கும் இந்த பொருட்கள் ,கலப்படம் இல்லாமல் கிடைக்கிறதா என்றால், அதுவும் இல்லை. கடவுளுக்கு படைக்கும் பொருளில் கூட, கலப்படம் செய்து விற்கின்றனர். நெய்யுடன் டால்டா, தீப எண்ணெயில் பாமாயில் கலப்படம், இதுபோல் தரமில்லாத விபூதி, குங்குமம் விற்கப்படுகிறது.
கடை வியாபாரிகள் கூறுகையில்," ஆண்டுக்கு பல லட்சத்திற்கு ஏலம் எடுக்கிறோம். ஆனால், இந்து அறநிலைய துறை, விலைவாசிக்கு ஏற்ப பூஜை பொருட்களின் விலையை உயர்த்துவது இல்லை. ஒரு கிலோ வில்வம் இலை ரூ.440. அதிக விலை கொடுத்து வாங்கி ரூ.2க்கு எப்படி விற்க முடியும். அதனால், குறுக்குவழியை தேடுகிறோம், என்கின்றனர். அறநிலைய துறை, விலையை எவ்வளவுதான் அதிகரித்து கொடுத்தாலும், ஏலம் எடுத்தவர்கள் ,கூடுதல் லாப நோக்கில், மேலும் அதிக விலைக்குத்தான் விற்பார்கள். பட்டியல் படி விற்க மாட்டார்கள். இப் பிரச்னைக்கு தீர்வு, முக்கிய கோயில்களில் கோயில் நிர்வாகமே, சுத்தமான நெய், தீப எண்ணெய் மற்றும் பூஜை பொருட்களை, தரமாக வாங்கி நியாயமான விலைக்கு விற்கலாம். இதனால், பக்தர்கள் திருப்தியுடன் சுவாமி கும்பிட்டு செல்வார்கள். மதுரை மீனாட்சி அம்மன் கோயில், திருப்பரங்குன்றம், திருவண்ணாமலை உள்ளிட்ட பல கோயில்களில், கோயில் நிர்வாகமே, விற்பனை செய்கிறது. ஆனால், விருதுநகர் மாவட்டத்தில் ,இந்த நடைமுறையை அறநிலைய துறை அமல் படுத்தவில்லை. சில கோயில்களில், பணியாளர்கள் பல ஆயிரம் சம்பளமாக பெற்று, சில மணிநேரம் பகுதி வேலையாக இதை செல்கின்றனர். இதுபோன்ற பணியாளர்களை அடையாளம் கண்டு, பூஜை பொருள் விற்பனையை, கோயில் நிர்வாகம் நடத்த நடவடிக்கை எடுக்கலாமே. சிவகாசி கோபி,""இப் பிரச்னை குறித்து, பலமுறை புகார் செய்தும்,இதை தீர்க்க அறநிலைய துறை நடவடிக்கை எடுக்க வில்லை. வரும் பசலி ஆண்டிலாவது, கோயில் நிர்வாகம் ,பூஜை பொருள் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.