பதிவு செய்த நாள்
25
ஏப்
2014
11:04
புதுடில்லி: திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவில் நிர்வாகத்தை கவனிக்க, ஐந்து உறுப்பினர் குழுவை, சுப்ரீம் கோர்ட் நேற்று அமைத்துள்ளது. மேலும், கோவிலின் நகை இருப்பு விவரங்களை, முன்னாள் தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி வினோத் ராய் தணிக்கை செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
திருடப்பட்டிருக்கலாம்: கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில், பிரசித்தி பெற்ற பத்மநாபசுவாமி கோவில் என்ற பெருமாள் கோவில் உள்ளது. அப்பகுதியை முன் ஆண்ட, திருவாங்கூர் அரச குடும்பத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அந்த கோவிலின் பாதுகாப்பு அறைகளில், பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள், பொக்கிஷங்கள் இருப்பது சமீபத்தில் கண்டறியப்பட்டது. சுப்ரீம் கோர்ட் மேற்பார்வையில் அந்த கோவில் நகைகள் மற்றும் பொருட்கள் பட்டியலிடப்பட்டு வருகின்றன. இதில், ஏராளமான நகைகள் மற்றும் பொருட்கள், மன்னர் குடும்பத்தை சேர்ந்தவர்களால், பல காலங்களாக திருடப்பட்டிருக்கலாம் என்ற தகவல் வெளியானது. இதனால் சுப்ரீம் கோர்ட் கவலை அடைந்தது. இதையடுத்து, கோவில் நிர்வாகத்தை கவனிக்க, ஐந்து உறுப்பினர் குழுவை நேற்று நியமித்தது. மாவட்ட நீதிபதி தலைமையில், கோவிலின் தந்திரி என்றழைக்கப்படும் பூசாரி, கோவிலின் தலைமை காவலர் மற்றும் மாநில அரசின் பரிந்துரையில் நியமிக்கப்படும் இருவர் என, ஐந்து பேர் பொறுப்பில் கோவில் நிர்வாகம் ஒப்படைக்கப் பட்டது.
அம்பலப்படுத்தியவர்: மேலும், கோவிலின் கணக்குகள் மற்றும் நகைகளை தணிக்கை செய்ய, முன்னாள் சி.ஏ.ஜி., வினோத் ராய்க்கு, கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கணக்கு தணிக்கை தலைமை அதிகாரியாக பணியாற்றிய இவர், மத்திய அரசின் பல முறைகேடுகளை அம்பலப்படுத்தியவர். சமீபத்தில் ஓய்வுபெற்றுள்ள ராய், பத்மநாப சுவாமி கோவில் நகைகளை தணிக்கை செய்ய உள்ளது, பக்தர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது.