பதிவு செய்த நாள்
25
ஏப்
2014
12:04
திருத்தணி: திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா, நேற்று காலை, கொடியேற்றத்துடன் துவங்கியது. அடுத்த மாதம், 11ம் தேதி தீமிதி திருவிழா நடக்கிறது. திருத்தணி பழைய தர்மராஜ கோவில் தெருவில் அமைந்துள்ளது திரவுபதியம்மன் கோவில். இக்கோவிலில் இந்தாண்டிற்கான தீமிதி திருவிழா நேற்று காலை, 5:45 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. துவக்க விழாவை ஒட்டி, கோவில் வளாகத்தில், யாக சாலை அமைத்து சிறப்பு ஹோமம் நடத்தப்பட்டது. காலை, 10:00 மணிக்கு, மூலவர் அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலை, உற்சவர் அம்மன் இந்திர விமானத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, தினமும் காலையில் சந்தன காப்பும், மாலையில் உற்சவர் அம்மன் திருவீதியுலாவும், அடுத்த மாதம், 10ம் தேதி வரை நடக்கிறது. வரும், 30ம் தேதி திரவுபதியம்மன் திருக்கல்யாணமும், மே 2ம் தேதி சுபத்திரை திருமணம் நடக்கிறது. அன்று (2ம் தேதி) மாலை, 5:00 மணிக்கு திருவிளக்கு பூஜையும், இரவு, 8:30 மணிக்கு புஷ்ப பல்லக்கில் அம்மன் பவனி வருதல் போன்ற நிகழ்ச்சி நடக்கிறது. வரும், 5ம் தேதி அர்ச்சுனன் தபசும், 11ம் தேதி காலை துரியோதணன் படுகளம், மாலை, 6:00 மணிக்கு தீமிதி திருவிழாவும், 12ம் தேதி தருமர் பட்டாபிஷேகம் நடக்கிறது.